பதிவு செய்த நாள்
08
பிப்
2016
12:02
பழநி: சென்னையில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சண்முகநதியில் நீராடி உடலில் 108 அலகு குத்தியும், காவடி, பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி தைப்பூச விழா முடிந்த பின்னரும் பல்வேறு மாநில, மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். சென்னையை சேர்ந்த “தென்பழநி திருப்பாதை யாத்திரைக் குழுவினர்” நேற்று பழநி சண்முகநதியில் நீராடினர். அதில் 54 பக்தர்கள் காவடி எடுத்தும், 4 பக்தர்கள் உடலில் 108 அலகுகுத்தியும், பாசிகள் அலங்காரத்துடன், பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக வந்தனர். இவர்கள் பெரியநாயகியம்மன் கோயிலில் காவடி ஆட்டமாடி கிரிவீதியை வலம்வந்து, மலைக்கோயில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். குருசாமி பன்னீர்செல்வம் கூறுகையில்,“ சென்னை அருகே வண்ணாரபேட்டை, ராயபுரத்திலிருந்து 30 ஆண்டுகளாக 480கி.மீ., துாரம் பாதயாத்திரையாக பழநிக்கு வருகிறோம். கடந்த ஜன.,21ல் சென்னையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், உளுந்துார்பேட்டை, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் வழியாக வந்தோம். மலைக்கோயிலில் சுவாமிதரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கு கிறோம், என்றார்.