பதிவு செய்த நாள்
08
பிப்
2016
12:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்த, லட்சுமி ஹயக்ரீவர் ஹோமத்தில், திரளான மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள, லட்சுமி நரசிம்மர் கோவிலில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை, 7:00 மணிக்கு ஹயக்ரீவர் ேஹாமம், அலங்காரம், நைவேத்தியம், தீர்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இவ்விழாவில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். குழந்தைகளின் கல்வி ஞானம் சிறந்து விளங்கவும், தேர்வில் முதன்மை பெறவும், வாழ்வில் வெற்றி பெறவும் இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டது, என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.