திருநெல்வேலி: மறைந்த முன்னோர்கள் அமாவாசை தினத்தன்று தங்களது சந்ததியினரின் வேண்டுதல்கள், வழிபாடுகளை ஏற்க பூமிக்கு வருகிறார்கள் என்பது ஐதீகம். அதன் காரணமாக அமாவாசை தினத்தன்று மூதாதையர் வழிபாடு நடக்கிறது. இதில் தை அமாவாசை அன்று நடைபெறும் மூதாதையர் வழிபாடு சிறப்பானது. அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வருடம் முழுவதும் தர்ப்பணம் கொடுத்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிரபரணி ஆற்றுப்படுகைகளிலும், கடற்கரைகளிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அங்கு இன்று அதிகாலையில் குவிந்த மக்கள் அற்றிலும், கடலிலும் புனித நீராடினர். பின்னர் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பை புல் வைத்து பித்ருக்களுக்கு எள்ளும், நீரும் அளித்து தர்ப்பணம் செய்தனர். பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கரை மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். குற்றாலம் அருவிக் கரையில் இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அங்கு அருவிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அதே போன்று நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், வண்ணார் பேட்டை பேராச்சி அம்மன்கோவில் ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.