பதிவு செய்த நாள்
10
பிப்
2016
11:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா பிப்., 13 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பிப்.,22 ல் தேரோட்டம் நடக்கிறது.முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளது. இங்கு ஆவணி, மாசித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு மாசித்திருவிழா பிப்., 13 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 க்கு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. மாலையில் அப்பர் சுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருகிறார். இரவில் ஸ்ரீபெலி நாயகர், அஸ்திரதேவர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதியுலா வருகின்றனர். பிப்.,17 ல் மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு சுவாமி சண்முகருக்கு குடவருவாயில் தீபாரதனை நடக்கிறது. பிப்.,18 ல் கோரதம், காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா, இரவு உருகு சட்ட சேவை நிகழ்ச்சியும் நடக்கிறது.தங்கசப்பரத்தில் சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.பிப்., 20 ல் அதிகாலை பெரிய வெள்ளி சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். பகல் 11 மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளிக்கிறார். பிப்., 22 ல் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் ரத வீதிகள் வழியாக உலா வருகிறது. மாலை தெப்ப உற்சவம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.