பதிவு செய்த நாள்
10
பிப்
2016
05:02
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் திவ்யதேசங்கள் 108ல் நாராயண பெருமாள், குடமாட கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளி கொண்டபெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருளாள், குந்தநாதன், மாதவப் பெருமாள், திருமேனிகூடம் பார்த்தன் பள்ளி பார்த்த சாரதி பெருமாள் திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன.
இங்கு ஆண்டு தோறும் தை அம்மாவாசை மறுநாள் பிரசித்தி 11 கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வழக்கம். இவ்வாண்டு 122ம் ஆண்டு கருடசேவை உத்ஸவம் நேற்று இரவு நடைபெற்றது. கருடசேவையை முன்னிட்டு 11 பெருமாள்களும் தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு மேற்று மிலை மணிமாட கோயிலுக்கு வந்தனர். அவர்களை திருமங்கை ஆழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 11: 30 மணிக்கு மணிமாட கோயில் கோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், தங்க ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினர். தொடர்ந்து 11 பெருமாள்ககளும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று தீப ஆரத்தி எடுக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடி பெருமாள்களை சேவித்தனர். இதனை தொடர்ந்து இரவு 12: 30 மணிக்கு 11 பெருமாள்களின் வீதியுலா காட்சி நடைபெற்றது. கருடசேவை உத்ஸவத்தில் நாகை கலெக்டர் பழனிசாமி, கடலூர் கலெக்டர் சுரேஷ்குமார், புதுச்சேரி அமைச்சர் தியாகராஜன் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த 45 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு 11 பெருமாள்களையும் ஒரே இடத்தில் கண்டு சேவித்தனர். தொடர்ந்து 11 பெருமாள்களும் நான்கு வீதிகளையும் வலம் வந்து அதிகாலை 3 மணிக்கு மீண்டும் மணிமாட கோயிலில் எழுந்தருளினர். உத்ஸவத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருநாங்கூர் 11 கருடசேவை உத்ஸவ கமிட்டியினர் செய்திருந்தனர். இந்த உத்ஸவத்தை முன்னிட்டு சீர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாகை, மயிலாடுதுறை, சீர்காழியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.