பதிவு செய்த நாள்
11
பிப்
2016
11:02
தஞ்சாவூர்: மகாமகத்திற்காக, தயாராகிவிட்ட கும்பகோணத்தில், நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 22ம் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.
இதை முன்னிட்டு, நாளை புதிய கண்ணாடி பல்லக்கில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து மகாமககுளத்தில் அமிர்ததீர்த்தம் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் மதியம், 12:00 1:00 மணிக்குள் கொடியேற்று விழா ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து தினமும், காலை, 8:00 மணிக்கு, வெள்ளிப் பல்லக்கு உலா நடைபெறுகிறது. 20ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு, விநாயகர் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், 8:00 9 :00 மணிக்குள், கும்பேஸ்வரர், அம்மன் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.இந்த தேரோட்டம், 48 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.
மகாமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, 22ம் தேதி நடைபெறுகிறது. அன்று மதியம், 12:06 மணிக்கு மேல் 1:00 மணிக்குள் மகாமக தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கொடியேற்றம் தொடங்கியது. முதல், 22ம் தேதி வரை பக்தர்கள் புனித நீராடலாம் என அறநிலைத்துறை, ஆன்மிகவாதிகளால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விழாவில், பொது மக்களும், பக்தர்களும், மாசில்லா மகாமகம் கொண்டாடும் வகையில் பாலிதீன் பயன்படுத்தாமல், 16 லட்சம் துணிப்பைகள் வினியோகிக்கப்படவுள்ளது. 137 மருத்துவ முகாம்கள், முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். உயர் சிகிச்சை முகாம்கள், 20 இடங்களிலும், 23 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
350 இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 26 ஆயிரம் போலீசார், 1,000 தீயணைப்புத்துறை பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்துடன், தகவல் கையேடு, வழிகாட்டி பலகைகள் அங்கங்கே அமைக்கப்பட்டுள்ளது. மகாமக சிறப்பு மலர்மகாமகம் குறித்து சரஸ்வதி மஹால் நுாலகம் சார்பில், மகாமகம் 2016 என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், ஓவியங்கள், துணுக்குகள் இடம்பெற்றுள்ளன. 260 பக்கங்கள் உள்ள இதன் விலை, 300 ரூபாய்.