பதிவு செய்த நாள்
11
பிப்
2016
12:02
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 24ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 8ம் தேதி, மஹா கணபதி வேள்வி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, லட்சுமி பூஜைகள் நடந்தன.அதைத்தொடர்ந்து, வாஸ்து சாந்தி, மீருத சங்கரஹணம் (மண் ஏற்றுக் கொள்ளுதல்), அங்குரார்ப்பணம் (நவதானியங்களை மண்ணிட்டு வளர்த்தல்) காப்பு கட்டுதல், யாகசாலை நுழைவு, முதல் கால வேள்வி வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் (9ம் தேதி), இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது.நேற்று காலை 5:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, பதினாறு வகை வழிபாடு, காலை 9:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு துவங்கியது. காலை 9:10 மணிக்கு விநாயகர், 10:05 மணிக்கு திரவுபதியம்மன், வரதராஜப் பெருமாள், பரிவார விமானங்கள், முருகர், வள்ளி தெய்வானை, கெங்கையம்மன், முத்தால்ராயர், போர்மன்னர், கொடிமரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தன்வந்திரி ஆரோக்கிய பீடம் முரளிதர சுவாமிகள், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, மின்துறை அமைச்சர் தியாகராஜன், சேர்மன்கள் பாண்டியன், பாஸ்கர், சுரேஷ், திருப்பணிக்குழு மற்றும் அறங்காவலர் குழுவினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.