பதிவு செய்த நாள்
11
பிப்
2016
06:02
மனதிற்கு பிடித்த கணவனோ, மனைவியோ அமைய வேண்டுமென விரும்புபவர்கள் ஆத்ம சுத்தத்துடன் வழிபட வேண்டிய தலம் கும்பகோணம் சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயிலாகும்.
தல வரலாறு: இந்த கோயில் குறித்து மூன்று வகையான புராண வரலாறுகள் கூறப்படுகின்றன. உலகம் அழிந்த ஊழிக்காலத்தில் அமுதத்தை அடக்கிய கலசம் பிரம்மனால் வெள்ளத்தில் விடப்பட்டு இவ்வூரில் வந்து தங்கியது. எனவே இவ்வூர் கலயநல்லுõர் என அழைக்கப்பட்டது. மற்றொரு கதையின்படி தான் இழந்த படைப்புத்தொழிலை மீண்டும் பெறுவதற்காக சிவபெருமானை பிரம்மன் இங்கிருந்து பூஜித்து அருள்பெற்றான் என சொல்லப்படுகிறது. சாபத்தின் காரணமாக பூலோகத்திற்கு வந்த உமையம்மை சிவனையே மணம் முடிப்பது என்ற வைராக்கியத்துடன் இத்தலத்தில் தவமிருந்தாள். ஒற்றைக்கால் ஊன்றி, ஒரு காலை முழங்காலில் மடித்து வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தலைக்குமேல் கூப்பிக்கொண்டு பல்லாண்டுகாலம் அவள் தவம் இருந்தாள். இறைவன் அவளது தவத்தைக்கண்டு மனம் மகிழ்ந்து அன்னையை மணம் புரிந்துகொண்டார். அமிர்தம் வந்து தங்கிய இடம் என்பதால் சுவாமிக்கு அமிர்தகலச நாதர் என்றும், அம்பாளுக்கு அமிர்தவல்லி நாயகிஎன்றும் பெயர் ஏற்பட்டது.
சிறப்பம்சம்: இத்தலத்தில் அம்பாள் தபசு அம்பாள் என்ற பெயரில் ஒற்றைக்கால் ஊன்றி தவம் இருக்கும் சிலைமிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு வந்த காலத்தில் இப்பகுதி வளம் பொருந்தியவயல்கள் சூழ்ந்ததாக இருந்தது. மாளிகைகளும், கோட்டையும் இங்கு இருந்தன. எனவே இப்போதும் மக்கள் இக்கோயிலை கோட்டை சிவன் கோயில் என்றே அழைக்கின்றனர். ஊருக்கு சாக்கோட்டை என பெயர்சூட்டினர். நர்த்தன விநாயகர், பாலசுப்பிரமணியர், நால்வர், நவக்கிரகங்கள், தெட்சிணாமூர்த்தி, வாயுலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம், வள்ளி தெய்வானை சமேத முருகன், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர். ஒரு சன்னதியில் கஜலட்சுமியும், சப்த மாதாக்களும் வீற்றிருக்கின்றனர்.
விழாக்கள்: மகாமக நாளன்று இங்கிருந்து அமிர்தகலசநாதரும், அமிர்தவல்லியும் மகாமக குளத்திற்கு எழுந்தருள்கின்றனர்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் செல்லும் ரோட்டில் 5 கி.மீ. தொலைவில் இக்கோயில்உள்ளது.
தொடர்புடைய கோயில்கள் :