பதிவு செய்த நாள்
12
பிப்
2016
12:02
சிவகங்கை: தாயமங்கலத்தில் உள்ள கோயில் தெப்பக்குளம் பராமரிப்பில்லாததால் பக்தர்கள் வேதனைஅடைந்து வருகின்றனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வடக்கு பகுதியில் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இக்குளத்தின் நான்கு புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தெப்பக்குளத்தின் நடுப்பகுதி ஆழமாக இருக்கும் என்பதால், அதன் அனைத்து படிக்கட்டுகளுக்கும் கீழ் இரும்பு தடுப்பு கம்பி வேலி அமைத்து, இதை தாண்டி பக்தர்கள் யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்த இரும்பு தடுப்பு கம்பிகளின் இடைவெளி வழியாக சென்று விடாதபடி தடுக்க வலைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வலைகள் சேதமடைந்து, கிழிந்துள்ளது. குளத்திற்குள் எச்சரிக்கையை மீறி பக்தர்கள் பழைய துணிகளை போட் டுள்ளனர். குளத்தின் உள்ளே பாலிதீன்பை,குப்பை ஏராளமாக கிடக்கின்றன. குளத்தில் மேற்கு படிக்கட்டுகளை "குடிமக்கள் இரவு நேர "பார் ஆக பயன்படுத்துகின்றனர். குளத்தின் உள்ளேயும், வெளியேயும் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாக்கெட், பாலிதீன் டம்ளர்கள் குவிந்து கிடக்கின்றன. குளத்தின் வடக்குப்பகுதியில் செயல்படாத தண்ணீர் தொட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள "ஹைமாஸ் மின்கம்பத்தில் விளக்குகள் எரிவதில்லை. இதனால் தெப்பக்குளத்தின் கரை மற்றும் படிக்கட்டு பகுதிகள் இரவில் வெளிச்சமின்றி இருட்டாக உள்ளது.
சாத்தரசன் கோட்டை சக்திவேல் கூறுகையில்,"" இந்த கோயிலுக்கு மாதம் ஒரு முறையாவது வந்து விடுவேன். கோயில் தெப்பக்குளத்தை சுற்றி காலி மது பாட்டில்களும், தண்ணீர் பாக்கெட்டுகளும் கிடப்பதால், கோயிலுக்குள் செல்வதற்கு முன் கால் கழுவ குளத்திற்குள் இறங்க மனம் வரவில்லை. இங்குள்ள ஒரு சில மரங்களின் கீழ் நிழலுக்காக ஒதுங்கினால் உடைந்த மது பாட்டில்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. இந்த குளத்தை சீரமைத்து, குடிகாரர்களை இரவில் வரவிடாமல் தடுக்க, கோயில் நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
"பார் இல்லா மதுக்கடை தாயமங்கலம் கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் பின்புறம் "டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு வரும் "குடிமகன்கள் அமர்ந்து குடிப்பதற்கு "பார் வசதி கிடையாது. குடிக்க வருவோர், மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு, பகலிலும், இரவிலும் நேராக தெப்பக்குளத்திற்கு வந்து விடுவதால், மதுக்கடையில் "பார் வசதி அகற்றப்பட்டு விட்டது.