மகாமக யாத்திரை கிளம்பும்போதே ஏழை ஒருவருக்கு அன்னதானம் இட்டு அந்த நிறைவோடு கிளம்புவது நல்லது. திருக்குளத்தில் நீராடுவதற்கு முதல் நாளே திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கருப்பூர், தாராசுரம், சுவாமிமலை, முதலிய பஞ்ச குரோசத்தலங்களுக்குச் சென்று முறையாக வழிபடுதல் வேண்டும். மகாமக நாளில் நாம் விழித்து எழும்போதே, கும்பேசுவரரை மனதளவில் பிரார்த்தித்து வருதல் வேண்டும். நல்ல நேரம் பார்த்து துணிமணிகள் களையாமல் சுவாமியை நோக்கி குளத்திலே மூழ்க வேண்டும். மூழ்கி எழும் நேரத்தில் இறைவனைத் துதி பாடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையிலும் மனம் ஒப்பக்கூடாது.
குளத்தில் மூழ்கி எழுந்து நீராடலின் பலனை நிறைவாகப் பெற தீர்த்தக் கிணறுகளை நோக்கியும் கைகூப்பி வணங்க வேண்டும். முறையாக நீராடி தீர்த்தம் பெற்று அடுத்தபடியாய் பொற்றாமரைக் குளத்தை நோக்கி நடக்க வேண்டும். அப்போது, நாகேஸ்வரரையும், சோமேஸ்வரரையும் மனதளவில் பிரார்த்தித்தபடியே செல்ல வேண்டும். பொற்றாமரைக் குளத்தில் சுவாமி இருக்கும் திசையை நோக்கி முறையாக மூழ்கி எழ வேண்டும். எந்தக் குளத்திலுமே ஒருமுறை மூழ்கி எழுவதே போதுமானது, மூன்று முறையும் மூழ்கி எழலாம். பொற்றாமரைக் குள நீராடல் முடிந்து காவிரிக் கரை நோக்கி நடக்க வேண்டும். உடம்பிலுள்ள ஈரம் வடிய வடிய ஒட்டுமொத்த பாவங்களும் வடிவதாக உளமுருக எண்ணிடுதல் வேண்டும். காவிரியில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. மூழ்கி எழும் ஈரத்துடனேயே பெருமாள் கோயில்களின் தீர்த்தங்களைப் பெற்று வழிபட வேண்டும். ஒட்டுமொத்தப் பாவங்களும் நீங்கிட, இதுபோல் மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆகிய மூன்று நீர் நிலைகளிலும் முறையாக நீராடுதல் வேண்டும்.