பதிவு செய்த நாள்
12
பிப்
2016
05:02
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளம் அறிவியல், கணிதம், ஆன்மிகம், மற்றும் மனிதர்களின் பாவங்களை போக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. கும்பகோணம் மகாமக குளத்தில் குளித்தால், பாவங்கள் மறைந்து பெரும் புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். மகாமக திருவிழா நாளில் கும்பேச்வரர் முதலான சிவ மூர்த்திகள், திருகோவில் மண்டபங்களில் எழுந்தருளி புண்ணிய தீர்த்தத்தை அளிப்பார். ஒரு பிரமதீர்த்தம், எட்டு திக்கு பாவலர்கள் தீர்த்தம், நதியாகிய கன்னியர்கள் தீர்த்தம் ஒன்பதும் மற்றொரு தேவதீர்த்தங்கள், அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் கலந்த சிறப்பால், பாவங்கள் போக்கும் வண்ணம் என்பது ஆன்மிக சிறப்பு.
ராசிகளின் தீர்த்தங்கள்: மகாமக குளம் சிறந்த கணிதம், அறிவியல் முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்றார் போல, 30 டிகிரி கோண அளவு அமைப்பில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு என்ற சுற்று வடிவமைப்பில், 0 டிகிரி முதல் 180 டிகிரி வரையும் ஆக, 360 டிகிரி அளவுகளையும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுஉள்ளதால், ஒவ்வொரு ராசிக்கும் அமைகின்ற அந்த ராசிகளின் சிறப்பு பெறுகிறது. இதில், ரிஷப ராசிக்கு 2, மேஷ ராசிக்கு, 1, மிதுனம் ராசிக்கு, 1, கடக ராசிக்கு எதுவும் இல்லை, சிம்மம் ராசிக்கு, 1, கன்னி ராசிக்கு, 2, துலாம் ராசிக்கு, 3, விருச்சிக ராசிக்கு 2, தனுசு ராசிக்கு 2,மகரம் ராசிக்கு 1, கும்பம், 1, மீனம் ராசிக்கு, 3 என மொத்தம், 19 தீர்த்தங்கள் அமைப்பட்டுள்ளன. 19 தீர்த்த கிணறுகள், 360 டிகிரி கோணங்களும் அமைந்து இருப்பது என்பது முன்னோர்களின் அறிவியல் திறனுக்கு சான்றாக விளங்குகிறது.
கோவில், மண்டபங்களின் அமைப்பு: குளத்தின் நான்கு கரைகளிலும் அமைக்கப்பட்டுள்ள, 16 மண்டபங்களும் பல்வேறு கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீர்த்த பாலகர்கள் ஒவ்வொரு திசைகளை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வற்றில் எட்டு கோவில்கள் கிழக்கு மேற்காகவும், நான்கு கோவில்கள் தெற்கு வடக்காகவும், இரண்டு கோவில்கள் தென்மேற்கு வடகிழக்காகவும், வடகிழக்கு தென்மேற்கு, தென்கிழக்கு வடமேற்கு நோக்கி இரண்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. தெற்கு நோக்கி கோவில் அமைக்கப்படவில்லை. இக்கணித அமைப்பு முறையில் புனித நீராடுவோருக்கு அவரவர் நட்சத்திரத்திற்குரிய பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.