பதிவு செய்த நாள்
13
பிப்
2016
12:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா (பிப்.,12) கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிப்.,22 ல் தேரோட்டம் நடக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயலில் ஆவணி, மாசித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன் தினம் (பிப்.,12) மாலை கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில்,யானை அணிவகுப்புடன் வீதியுலா வந்தது. நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5.30 க்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கோயில் கொடி மரத்தில், வேத கோஷங்கள் முழங்க ஆனந்த விஸ்வநாத சிவாச்சாரியார் கொடியேற்றினார். கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.பின் மலர் அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடந்தது. மாலையில் அப்பர் சுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருகிறார். இரவில் ஸ்ரீபெலி நாயகர், அஸ்திரதேவர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதியுலா வருகின்றனர்.
பிப்.,17 ல் மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு சுவாமி சண்முகருக்கு குடவருவாயில் தீபாரதனை நடக்கிறது. பிப்.,18 ல் கோரதம், காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா, இரவு உருகு சட்ட சேவை நிகழ்ச்சியும் நடக்கிறது.தங்கசப்பரத்தில் சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பிப்., 20 ல் அதிகாலை பெரிய வெள்ளி சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். பகல் 11 மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளிக்கிறார். பிப்., 22 ல் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் ரத வீதிகள் வழியாக உலா வருகிறது. மாலை தெப்ப உற்சவம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.