பதிவு செய்த நாள்
13
பிப்
2016
12:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவையொட்டி, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். எல்லோரையும் காக்கும் காவல் தெய்வமாக வணங்கப்படும் மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. கொடியேற்றத்திற்காக, சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து, 83 அடி உயர கொடிக்கம்பம் எடுத்து வரப்பட்டு, உப்பாற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த 8 ம் தேதி காலை 6:50 மணிக்கு 83 அடி உயர கொடிக்கம்பம் ஏற்றப்பட்டு விழா துவங்கியது. விழாவினைத்தொடர்ந்து, காலை மற்றும் மாலை நேரங்களில், மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
வரும் 21ம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபணம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது. 23ம் தேதி காலை, 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட பூஜைகளும் இடம் பெறுகின்றன.
வரும் 24ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடி இறக்குதல், காலை, 10:30 மணிக்கு மேல் மஞ்சள் நீராடல், இரவு, 8:00 மணிக்கு மகா முனி பூஜையும் நடக்கிறது. வரும் 26ம் தேதி பகல், 11:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.