பதிவு செய்த நாள்
13
பிப்
2016
01:02
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, செம்பாக்கம், லலிதா திரிபுரசுந்தரி மூலிகையம்மன் கோவிலில் (பிப்.,12 ), மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.திருப்போரூர் அடுத்த, செம்பாக்கம் கிராமத்தில், லலிதா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில், கடந்த, 8ம் தேதி, கணபதி பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. கடந்த, 10ம் தேதி காலை, 6:00 மணிக்கு, முதல் கால யாக பூஜையும், மறுநாள் காலை, 2ம் கால யாக பூஜையும், அன்று மாலை, 6:00 மணி அளவில், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றன.
(பிப்.,12 )காலை, 4ம் கால யாக பூஜைகள் நிறைவுபெற்று, தீபாராதனை நடைபெற்றது. பின் காலை, 8:30 மணியளவில், திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு, 9:00 மணியளவில், அம்பாள் சன்னிதியின் சொர்ண விமானத்தில் உள்ள கலசங்களுக்கு, புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை, திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தலைமையேற்று நடத்தினார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.