பதிவு செய்த நாள்
13
பிப்
2016
01:02
தார்: மத்திய பிரதேச மாநிலம், தார் நகரில் உள்ள, போஜ்சாலா கோவிலில், ஹிந்துக்களின்,
வசந்த பஞ்சமி விழா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று அமைதியாக நடந்தது.
மத்திய அரசின், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை, ஹிந்துக்களும்,
முஸ்லிம்களும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வசந்த பஞ்சமி விழா நேற்று, வெள்ளிக்கிழமை வந்தது. இந்த நாளில், முஸ்லிம்களுக்கு அங்கு தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பதற்றம் நிலவியது; அதை, பக்குவமாக நிர்வாகிகள் கையாண்டனர்.
சூரிய உதயத்தில் இருந்து, மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 3:30 மணி முதல், சூரியன்
அஸ்தமனம் வரையிலும் வசந்த பஞ்சமி விழாவை நடத்தலாம்; மதியம், 12:30 மணி முதல்,
மாலை, 3:00 மணி வரை, முஸ்லிம்கள் தொழுகை நடத்தலாம் என, அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு, சில ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், எவ்வித அசம்பாவித
சம்பவங்களும் இல்லாமல், அமைதியான முறையில், இரு மதத்தினரும் வழிபாடு நடத்தியதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் நிம்மதி அடைந்தனர்.
கோவில், மசூதி:
*போஜ்சாலா வளாகத்தில், சரஸ்வதி கோவில் இருப்பதாக ஹிந்துக்கள் வழிபட்டு வருகின்றனர்; கமல் மவுலா மசூதி உள்ளதாக முஸ்லிம்களும் வழிபடுகின்றனர்.
*வழக்கமாக, செவ்வாய் கிழமைகளில் ஹிந்துக்களும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களும் வழிபட அனுமதிக்கப்படுகிறது; மற்ற நாட்களில், அனைத்து சமூகத்தினரும்
அனுமதிக்கப்படுகின்றனர்
*ஹிந்துக்களின் முக்கிய விழாவான வசந்த பஞ்சமி, வெள்ளிக்கிழமைகளில் வரும் போது தான் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு முன், 2003, 2006, 2013ல், வெள்ளிக்கிழமைகளில், வசந்த பஞ்சமி வந்தது.