பதிவு செய்த நாள்
20
பிப்
2016
12:02
விக்கிரவாண்டி: தொரவி, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலின் புதிய கருவறையில், சுவாமி ஸ்தாபன பூஜை நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, தொரவி கிராமத்தில், பெரியநாயகி உடனுறை கைலாச நாதர் கோவில் கட்டுவதற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவில் அடித்தள பணிகள் முடிந்து, புதிய கருவறையில் மூலவர் கைலாசநாதரை ஸ்தாபனம் செய்யும் பூஜை நடந்தது. காலை 5:00 மணிக்கு, சிவனடியார்கள் கல்யாணியம்மாள், ஜெயசங்கர் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. 6:00 மணிக்கு பாலாயணம் செய்து வைக்கப்பட்டிருந்த, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, புதிய கருவறைக்கு கொண்டு வந்தனர். அங்கு முறைப்படி பூஜை செய்து, காலை 7:28 மணிக்கு, மூலவர் கைலாசநாதரை நிலை நிறுத்தி, சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை நடந்தது.
பூஜைகளை, புதுவை சிவனடியார் சரவணன் செய்திருந்தார். புதுச்சேரி மாநில காங்., தலைவர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட காங்., முன்னாள் தலைவர் கண்ணன், தொரவி தொழிலதிபர் சுப்பிரமணி, ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சங்கர், சோதிடர் கார்த்திகேயன், ஏனாதி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தனர். தொரவி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.