ஜெய்ப்பூர் அரண்மனையைப் போல் அற்புதமாகவும் அழகுடனும் அமைக்கப்பட்டுள்ளது லட்சுமிநாராயணர் திருக்கோயில். பிர்லா மந்திர் என அழைக்கப்படும் இந்த ஆலயம், பிர்லா குடும்பத்தாரால் உருவாக்கப்பட்ட ஒன்று! மோதி துங்ரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். மோதி துங்ரி என்றால் முத்து மலை என்று அர்த்தம். முழுக்க முழுக்கச் சலவைக் கற்களால் அமைக்கப்பட்ட ஆலயம் இது. கோயிலுக்குள் பிரதான சன்னிதானத்தில், பல வண்ண ஆடைகளை அணிந்தபடி மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் அழகுறக் காட்சி தருகின்றனர். இவர்களை வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த ஆலயத்தில், ஸ்ரீகணேஷ் என்ற திருநாமத்துடன் பிள்ளையாரும் தரிசனம் தருகிறார். இவர் சிறந்த வரப் பிரசாதி என்கிறார்கள். ஜெய்ப்பூர் மக்கள் கார், பைக் என எதை வாங்கினாலும், அதன் சாவியை இந்தப் பிள்ளையாரின் திருப்பாதத்தில் வைத்துப் பூஜித்துவிட்டுப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், திருமணம் போன்ற சுபகாரியங்களின்போதும் இவருக்குத்தான் முதல் மரியாதை. விநாயக சதுர்த்தி மற்றும் கிருஷ்ண ஜயந்தி திருநாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இங்கு விழா நடைபெறும். திருவிழா நாட்களில் ஏராளமான விளக்கொளியில் பிர்லா மந்திர் ஜொலிப்பதை காணக் கண்கோடி வேண்டும். இந்து மதக் கடவுளர் மட்டுமின்றி இயேசுகிறிஸ்து, புத்தர், கன்ஃபூஷியஸ், சாக்ரடீஸ் ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் இங்கே உள்ளதால், சர்வ மதப் பிரார்த்தனைக் கூடமாகவும் திகழ்கிறது இந்த ஆலயம்.