பதிவு செய்த நாள்
07
ஏப்
2016
03:04
பற்பல குற்றங்களுக்கும் (தோஷங்களுக்கும்) அவை எப்படி ஏற்படுகின்றன என்பதாக அதற்கான காரணங்களை விவரித்துச் சொல்லும் சாஸ்திர நூல்கள் அதற்கான நிவர்த்தியையும் பரிகாரங்களையும் சொல்லியிருக்கின்றன. வியாதி எவ்வாறு ஏற்படுகிறது என்று சொல்லும் மருத்துவம், அதற்கான மருந்தையும் சொல்கிறதல்லவா? அதைப்போல்தான் செய்த குற்றத்துக்காக அபராதம் செலுத்துவது போல் பரிகாரங்கள் அமைந்துள்ளன. ஆகவேதான், செய்த பாபங்களை எவ்வாறு போக்கிக் கொள்வது? என்னும் சீடனின் கேள்விக்கு பதிலளிக்கும் ஜோதிஷ சாஸ்திர நிபுணரான வராஹமிஹிரர் என்பவர், அனைவரும் தனது மனஸ், வாக், உடல் ஆகிய முக்கரணங்களாலும் அறிந்தே செய்த குற்றங்களுக்கான தண்டனைகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனாலும், அறியாமல் செய்த பாபங்களுக்கான துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமானால் அதற்காக சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.
அதாவது தத் சாந்தி ரௌஷதைர் தாநைர் ஜபஹோம ஸுரார்ச்சனை: பாபங்களுக்காக அனுபவிக்கும் துன்பங்களை 1. உரிய மருத்துவம் செய்து கொள்வதாலும், 2. சிற்சில பொருட்களை உரியவர்களுக்கு தானங்கள் செய்வதாலும், 3. சிற்சில மந்திரங்களை ஜபம் ஹோமம் செய்வதாலும், 4. அடியார்கள் அந்தணர்கள் பசு, தெய்வம் ஆகியவற்றை தேவையானவற்றைத் தந்து மகிழ்விப்பதாலும் போக்கிக் கொள்ளலாம் என்கிறார் வராஹமிஹிரர். ஆகவே, நம்பிக்கையுடன் செய்த தவறை (பாபத்தை) உணர்ந்து அதற்காக சாஸ்திரம் சொல்லிய பரிகாரத்தை முறையாகச் செய்தால் நிச்சயம் பாபம் விலகி துன்பம் குறையும், நன்மை கிட்டும். ஆனால், அறிந்தே செய்த பிராரப்தம் என்னும் பாவத்துக்கான துன்பத்தை, அதற்கான தண்டனையை அனுபவிப்பதால் மட்டுமே போக்கிக் கொள்ள முடியும். பரிகாரத்தால் போக்கடிக்க முடியாது.
பரிகாரத்தின் பலன் உடனடியாகக் கிடைக்குமா? அல்லது பலகாலம் கழித்துத்தான் கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காதா? என்றால், பரிகாரத்துக்கான பலன்கள், பரிகாரம் செய்யப்படும் முறைகள் பரிகாரத்தில் நம்பிக்கை போன்றவற்றைச் சார்ந்தவை. ஆனால், பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், பரிகாரங்களுக்கான பலன்கள் நான்கு எண்ணிக்கையில் கிடைக்கும். அதாவது, முப்பது வருஷம் அல்லது மூன்று நாள் அல்லது மூன்று மணி நேரம் ஆகிய காலங்களில் பலன் கிடைக்கும்.