சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) மேலே இருக்கிற குரு பாத்துக்குவாரு!(70/100)
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2016 01:04
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறும் சிம்ம ராசி அன்பர்களே! (70/100)
இந்த ஆண்டு ஆகஸ்ட்2க்கு பிறகு மிகச்சிறப்பாக அமையும். இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். எந்த பிரச்னையையும் முறியடித்து முன்னேறும் வல்லமையை பெறுவீர்கள். அதுவரை குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. ராகு உங்கள் ராசியில் இருக்கிறார். இது சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். கேது 7-ம் இடத்தில் இருக்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. மனைவி வகையில் பிரச்னையையும், அலைச்சலையும் தரலாம். மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்னை வரத்தான் செய்யும். உடல் நலம் சுமாராக இருக்கும். சனிபகவான் தற்போது 4ம் இடத்தில் இருக்கிறார். இதுவும் அவ்வளவு சிறப்பான இடம் இல்லை.
பொதுவாக 4-ம் இடத்தில் இருக்கும் போது சனிபகவான் குடும்பத்தில் பிரச்னைகளைக் கிளறுவார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். இவை எல்லாம் பொதுவான பலன். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை மிகச்சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிக சாதகமான சூழ்நிலை. இதைப் பயன்படுத்தி காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். விருந்து, விழா என சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம். ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து போகவும். ஆக.2க்கு பிறகு குரு பகவானால் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். உங்களது ஆற்றல் மேம்படும். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடிக்கலாம். பணவரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் அடியோடு மறையும். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகலாம். தடைபட்ட திருமணம் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர்கள் வகையில் அனுகூலம் பிறக்கும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். குறைந்த முதலீட்டில் செப்டம்பர் மாதத்துக்குள் புதிய தொழில் தொடங்கலாம். நிறுவனத்தில் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. சிலர் ஆடம்பர செலவு மற்றும் சேர்க்கை சகவாசத்தால் பணத்தை வீணடிக்க வேண்டி வரலாம். ஆனாலும் ஜாதகத்தில் குரு பலம் உள்ளவர்கள் இவை அனைத்தையும் முறியடித்து வெற்றி பெறும் வல்லமையைப் பெறுவார்கள். வழக்கமான லாபத்துக்கு பாதிப்பு இருக்காது.
பணியாளர்கள் ஆக. 2 வரை அதிக பளுவை சுமக்க வேண்டியிருக்கும். பணி காரணமாக பல இடங்களுக்கு அலைச்சல் இருக்கும். சிலர் அலுவலகத்தில் மற்றவர்களுக்காக போராடி பொல்லாப்பை சந்திக்கலாம். இதை தவிர்க்க அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து விட்டுக் கொடுத்து போகவும். அதிக சிரத்தை எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும். ஆக. 2க்கு பிறகு வேலைப்பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். இடமாற்ற பீதி மறையும். போலீஸ் மற்றும் ராணுவ பணியில் இருப்பவர்கள் மிகவும் உன்னத நிலையை அடைவர்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மாணவர்கள்வருட ஆரம்பத்தில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.
ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். ஆக.2க்கு பிறகு முன்னேற்றத்திற்கு வழி உண்டு.
விவசாயம் சிறப்பாக நடக்கும். நெல், போதுமை, கொண்டைக்கடலை, கேழ்வரகு, எள் போன்ற தானியங்கள் சிறப்பான மகசூலை கொடுக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய நிலம் வாங்கலாம். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் சிறப்பு பெறுவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுவரை இருந்த மனக்குழப்பம், சுதந்திரமற்ற நிலை ஆகியவை ஆக.2க்கு பிறகு மறைந்து விடும்.
2017 ஜனவரி16-ஏப்ரல்13 குரு பகவானால் முன்பு போல் நன்மை தர இயலாது. மற்ற முக்கிய கிரகங்களும் இந்த காலக்கட்டத்தில் சாதகமாக காணப்படவில்லை. ஆனாலும் பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. வீண் விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. தீவிர முயற்சியின் பேரில் காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை வாழ்க்கைத் துணைவி அல்லது துணைவரிடம் ஒப்படைக்கவும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். சக தொழிலதிபர்கள் உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கலாம். எனவே நெருங்கியவர்களிடம் கூட எச்சரிக்கையாக இருக்கவும். அரசு உதவி கிடைப்பது அரிது.
பணியாளர்கள் கடந்த காலத்தை போல் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு காரணமாக மனஅழுத்தம் கூடும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்கள் அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும்.
விவசாயத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பெண்கள் தேவைகளைக் குறைத்து சிக்கனமாக இருப்பது சேமிப்புக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் உங்களைப் பிரதானப்படுத்தியே உறவினர்கள் செயல்களைச் செய்வர். உங்களால் குடும்பம் சிறப்படையும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். பொன், பொருள் சேர்க்கை ஓரளவுக்கு இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். விநாயகர் வழிபாடும், ஆஞ்சநேயர் வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஏழைகளுக்கு இயன்ற உதவியை செய்யவும். 2017 ஜனவரி முதல் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »