விட்டுக்கொடுக்கும் மனம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!
தற்போது குருபகவான் வக்கிரம் அடைந்தாலும் லாப ஸ்தான 11-ம் இடத்தில் சாதகமாக அமர்ந்திருக்கிறார். பொருளாதார வளம் மேம்படும். உங்க காட்டுல பணமழை என்று சொல்லும் விதத்தில் கையில் எப்போதும் பணம் புழங்கிக் கொண்டிருக்கும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. முயற்சிக்கேற்ப நல்ல முன்னேற்றம் வாழ்வில் காண்பீர்கள். சுப விஷயத்தில் இருந்த தடையனைத்தும் விலகும். இவர் 2016 ஆக.2க்குப் பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து குரு கன்னி ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் பொருள் விரயம் ஏற்படும். எதிரி தொல்லை உண்டாகும். குழப்பம், மனக்கவலை ஏற்படலாம். அடிக்கடி அலைச்சலுக்கு ஆளாவீர்கள். சனிபகவான் தற்போது ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. பொருள் களவு போக நேரிடும். இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இதனால் பணிச்சுமை ஏற்பட்டாலும் அதற்கான பணப்பலனைத் தர தயங்க மாட்டார். மேலும் சனியின் 10-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் நன்மை கிடைக்கும். ராகு ராசிக்கு 11-ம் இடத்தில் இருப்பது சிறப்பான இடமாகும்.
பொன், பொருள் சேரும். பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் நன்மை உண்டாகும். கேது 5-ம் இடத்தில் இருப்பதால் அரசாங்க வகையில் பிரச்னை குறுக்கிடலாம். திருட்டு பயமும் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பெண்கள் உதவிகரமாக இருப்பர். பண வரவுக்கு தகுந்தாற் போல் செலவும் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை சிறப்பாக இருக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபசெய்தி வீடு தேடி வரும். நல்லவர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். உடல் நலம் திருப்தியளிக்கும். பணியாளர்களுக்கு திறமைக்கேற்ப வருமானம் கிடைக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆக. 2 க்கு பிறகு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கை நிறைவேறுவது எளிதல்ல. இடமாற்றம் காரணமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். அரசாங்கப் பணியில் இருப்பவர்கள் விழிப்புடன் பணியாற்றுவது நல்லது.
தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். கடந்த கால முயற்சிக்கான நற்பலன் தற்போது கிடைக்கும். அதே நேரம் புதிய வியாபார முயற்சியில் ஈடுபட வேண்டாம். இருப்பதைக் கொண்டு திறம்பட செயல்படுவது நல்லது. ஆக. 2 க்குப் பிறகு சிலர் வியாபாரத்தை ஊர் விட்டு ஊர் மாற்றும் நிலை உருவாகலாம். எதிரியால் அவ்வப்போது இடையூறு ஏற்படலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். அரசாங்க வகையில் பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள், பொது நல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. அரசியல் ரீதியான வெளியூர்ப் பயணம் அடிக்கடி செல்வீர்கள்.
மாணவர்கள் ஒரளவு முன்னேற்றம் காண்பர். பின் தங்கிய நிலை படிப்படியாக மறையும். ஆக. 2 க்கு பிறகு முயற்சி எடுத்து படிப்பது அவசியம். ஆசிரியர்கள் ஆலோனைப்படி நடந்தால் கல்வி வளர்ச்சி உண்டாகும். படித்து முடித்தவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகார பிரச்னை சாதகமாக இருக்காது. நவீன உழவுக் கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர். புதிதாக நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பெண்கள் கணவரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
2017 ஜனவரி16 -ஏப்ரல்13 இந்த காலக்கட்டத்தில் சனி, குரு, கேது ஆகிய கிரகங்கள் சாதகமாக இல்லை. ஜன.16ல் துலாம் ராசிக்கு அதிசாரம் (முன்னோக்கி செல்லுதல்) அடையும் குரு மார்ச் 10 வரை அங்கேயே இருக்கிறார். அவரின் எல்லா பார்வைகளும் சாதகமாக உள்ளன. அதன் மூலம் தடை நீங்கி நன்மை அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறப்பதால் கையில் பெரும் பணம் புழங்கும். குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சற்று முயற்சி எடுத்தால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். பணி விஷயமாக வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர். சிலருக்கு பணி, இடமாற்றம் ஏற்பட்டாலும் நன்மையாகவே அமையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவர்.
தொழில், வியாபாரத்தில் தடைகள் அவ்வப்போது குறுக்கிடலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். தொழில் ரீதியான அலைச்சலைத் தவிர்க்க முடியாது. எதிரி தொல்லை, மறைமுகப் போட்டியைச் சாமர்த்தியமாக முறியடித்து விடுவீர்கள்.
கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். தொண்டர்களின் ஆதரவைப் பெற பணம் செலவழிக்க நேரிடும்.
மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. ஆசிரியர், பெற்றோர் அறிவுரையை ஏற்று நடப்பது அவசியம்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பெண்கள் கணவரின் அன்பையும் ஆதரவையும் பெறுவர். சகோதர வகையில் உதவி கிடைக்கும். குடும்பச் செலவிற்குத் தேவையான பணம் கிடைக்கும். அண்டை வீட்டார் ஒத்துழைப்பர். பிள்ளைகளின் வழியில் சுபச் செலவு ஏற்படும். தாய்வீட்டாரின் சீதனம் வந்து சேரும்.
பரிகாரம்: சிவனை வழிபடுங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். துர்க்கை வழிபாடு முன்னேற்றம் தரும். 2016 ஆக. 2 க்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். கொண்டைக்கடலை தானம் செய்வது நன்மைஅளிக்கும்.
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »