பதிவு செய்த நாள்
11
ஏப்
2016
11:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா சுவாமி சன்னதி முன்புள்ள 58 அடி உயர தங்கக்கொடிமரத்தில் மார்ச்.,10 காலை 10.40 மணிக்கு ரிஷபக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலயம் பாடசாலை மாணவர்களின் தேவாரம், திருவாசகம் பாடல்களுடன் கொடியேற்ற நிகழ்ச்சி துவங்கியது. கோயில் சார்பில் சந்திரசேகரபட்டர் காப்பு கட்டினார். சர்வ அலங்காரத்தில் சிவப்பு பட்டுடுத்தி சுவாமி பிரியாவிடை, நீலநிறப்பட்டு உடுத்தி மீனாட்சி அம்மன் தங்கக்கொடிமரம் முன் காலை 9.40 மணிக்கு எழுந்தருளினர். விநாயகர், ஈஸ்வரர், சுப்பிரமணியரும் எழுந்திருளினர். ஸ்தானிக பட்டர்கள் முன் ரிஷபயாகம், கொடிபட்டம் பூஜை நடந்தது.
தங்கக்கொடிமரம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாதஸ்வரம், மங்கள மேளம், சங்கொலி முழங்க காலை 10.40 மணிக்கு தங்கக்கொடிமரத்தில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. மலர்கள் துாவப்பட்டன. யாக தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கோடி தீபம் ஆகி காலை 11.10 மணிக்கு அம்மன், சுவாமி பிரியாவிடையுடன், சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து குலாலர் மண்டகப்படியில் எழுந்தருளினர்.
இரவு 7.00 மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் சுவாமி பிரியாவிடை, சிம்மம் வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். பின் நான்கு மாசி வீதிகளில் வீதி உலா நடந்தது. இந்து அறநிலைய ஆட்சித்துறை கமிஷனர் வீரசண்முகமணி, டி.ஆர்.ஓ., வேலுச்சாமி பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
கண்காணிப்பில் தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்., 17 இரவு 7.35 முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,18 ல் மீனாட்சி அம்மன் திக்குவிஜயம், ஏப்.,19 ல் காலை 8.30 முதல் 8.54 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்.,20ல் காலை 6.00 மணிக்கு தேரோட்டம் கீழமாசிவீதியில் துவங்குகிறது.
விஷன் ஓ இந்தியா சார்பில் முதல் முறையாக தேர்களுக்கு முன்னும், பின்னும், பக்கவாட்டு பகுதியிலும் நவீன கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இதன் நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ், இந்த நவீன கேமரா தேர்களுக்குள் ஊடுருவி சுவாமி, அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் உள்ளிட்டவைகளை துல்லியமாக கண்காணிக்கும் திறன் படைத்தது. சேவையின் அடிப்படையில் இப்பணியை செய்கிறோம், என்றார்.