மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: இரண்டாம் நாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2016 12:04
மதுரையின் பொலிவு மிக்க சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று அன்னை மீனாட்சி அன்ன வாகனத்திலும், சுவாமி பூத வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. பிரம்மாண்டமான இந்த உலகில் வசிக்கும் உயிர்களை இந்த பூதங்கள் ஆட்டிப் படைக்கின்றன. நிலம் திடீரென அசைந்து பூகம்பம் வருகிறது. தென்றலான காற்று, திடீரென சூறாவளியாய் மாறி அலைக்கழிக்கிறது. நெருப்பால் பிரச்னை, பெருவெள்ளத்தால் பிரச்னை, ஆகாய மண்டலத்தில் நம் அஜாக்கிரதையால் ஏற்படும் பிரச்னை என பெரும் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பூதங்கள் அனைத்தும் சுந்தரேஸ்வர பெருமானுக்கு கட்டுப்பட்டவையே. அவரே பூதகணங்களின் தலைவர். இதனால் தான் அவர் பூதத்தை அடக்கி அதன் மேல் அமர்ந்து பவனி வருகிறார். பஞ்ச பூதங்களும் நமக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் சிவனின் அருளை நாடிப் பெற வேண்டும்.
அன்னப்பறவைக்கு பாலில் இருந்து தண்ணீரை தனியே பிரிக்கும் சக்தி உண்டு. உலகில் நல்லதும் கெட்டதும் கலந்து கிடக்கிறது. கெட்டதைப் பிரித்து நல்லதைக் கொடுக்க நான் இருக்கிறேன் என்று அன்னை மீனாட்சி, அன்னத்தின் மேல் அமர்ந்து பவனி வருகிறாள். இன்று இரவு 7 மணிக்கு மாசிவீதிகளில் இவர்களது அருட்கோலத்தைக் காணலாம். அவர்களிடம் நாம் நல்லதைக் கேட்போம். இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பை வேண்டுவோம்.