மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: இன்று திக்விஜயம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2016 11:04
சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் வீரத்தை நிலைநாட்ட படையெடுத்துச் செல்வது வழக்கம். பாண்டிய ராணியான மீனாட்சி பட்டம் சூட்டியதும் திக் விஜயம் (எட்டு திசைக்கும் செல்லுதல்) புறப்பட்டாள். மீனாட்சி பூலோகம் முழுவதையும் கைப்பற்றிய பின், அவளது பார்வை விண்ணுலகத்தின் மீது பட்டது. எண்திசை காவலர்களான அஷ்டதிக்கு பாலகர்களை வென்றாள். அதன் பின் சிவன் ஆட்சி புரியும் கைலாயத்தையே கைப்பற்ற கிளம்பினாள். நந்தி உள்ளிட்ட சிவகணங்கள் அவளை எதிர்க்க முடியாமல் திணறினர். சிவனே நேரில் வந்தார். அவரது ஞான ஒளி வீசும் நெற்றிக்கண்ணைக் கண்ட மீனாட்சி எதிர்கொள்ள முடியாமல் வெட்கப்பட்டாள். அப்போது, அம்பிகையின் மார்பில் இருந்த மூன்றாம் தனம் மறைந்தது. “கொன்றைவார் சடையனான இவரே உன்மணாளன் என்று அசரீரி வானில் ஒலித்தது. சிவனும், மீனாட்சியை மணம் செய்வதாக வாக்களித்தார். போரில் வெல்வது மட்டுமல்ல, இறைவனின் மனதை வென்று அதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே திக்விஜயம் உணர்த்தும் தத்துவம்.