சின்னாளபட்டி சித்திரை திருவிழா: பூப்பல்லக்கு உற்சவத்துடன் நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2016 11:04
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சித்திரை திருவிழா பூப்பல்லக்கு உற்சவத்துடன் நிறைவடைந்தது. சின்னாளபட்டி கீழக்கோட்டையில் ராம அழகர் சுவாமி தேவஸ்தானம் மற்றும் மேட்டுப்பட்டியில் சுந்தரராஜ பெருமாள் திருப்பணி நலச்சங்கம் சார்பில் சித்ரா பவுர்ணமி திருவிழாக்கள் நடந்தன. இதையொட்டி கடந்த ஏப்.7ல் இரு பகுதியிலும் கொடியேற்றம் நடந்தது. ஏப்.22ல் குதிரை வாகனத்தில் ஆரோகணித்து பச்சை பட்டுடுத்தி ராம அழகர் சுவாமி காந்திகிராமத்தில் உள்ள சஞ்சீவி ஆற்றிலும், சுந்தரராஜபெருமாள் சுவாமி சீவல்சரகில் உள்ள குடகனாற்றிலும் இறங்கினர். இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்வலம் சென்றனர். திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளினர்.
பொதுமக்களின் அபிஷேக ஆராதனைகளை ஏற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தினந்தோறும் இரவில் ராமஅழகர் சுவாமி கீழக்கோட்டை பொன்விழா மைதானத்தில் உள்ள காளைய கவுண்டர் வகையறா தசாவதார மண்டகப்படியில் தங்கினார். சுந்தரராஜ பெருமாள் சுவாமி மேட்டுப்பட்டி காந்திமைதானத்தில் உள்ள பிள்ளைமார் சமுதாய தசாவதார மண்டகப்படியில் தங்கினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலையில் கீழக்கோட்டையில் தெப்ப உற்சவமும், மேட்டுப்பட்டியில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தன. நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் நகர்வலம் வந்த ராம அழகர் சுவாமி பிருந்தாவன தோப்பில் உள்ள அழகர் கோயிலை அடைந்தார். சுந்தரராஜ பெருமாள் சுவாமி பூப்பல்லக்கில் நகர்வலம் வந்து மேட்டுப்பட்டியில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலை அடைந்தார். இருபகுதியிலும் நடந்த புட்டு திருவிழா நிகழ்வுடன் சித்திரை திருவிழாக்கள் நிறைவடைந்தன. கீழக்கோட்டை ராம அழகர் சுவாமி தேவஸ்தான கமிட்டி மற்றும் மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் திருப்பணி நலச்சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.