பதிவு செய்த நாள்
29
ஏப்
2016
11:04
உடுமலை: உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், நேற்று ÷ காலாகலமாக நடந்தது. உடுமலை உள்ள மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஏப்., 12ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது; ஏப்., 19ல் தி ருவிழா கம்பமும், 21ல் வாஸ்து சாந்தி, கிராம சாந்தியும், 22ல் விழா கொடியேற்றமும் நடந்தன. திருவிழாவையொட்டி, தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. உடுமலை நகர் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து, கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றியும், பூவோடு, மாவிளக்கு எடுத்தும் வழிபட்டு சென்றனர். நேற்று முன்தினம் சூலத்தேவருக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருத்தேரோட்டம்: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், நேற்று நடந்தது. முன்னதாக, காலை, 7:00 மணிக்கு, அம்மன் சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பிற்பகல், 3:15 மணிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, மேள, தாளங்கள் முழங்க, பக்தர்களின் பக்தி கோஷத்துடன், அம்மன் அமர்ந்திருந்த அலங்கார திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரின் நான்கு புறங்களிலும் திரண்டிருந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், தேர் அசைந்து, அசைந்து சென்றது. தேரின் முன்பகுதியில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பக்தர்களுக்கு உதவியாக கேரள மாநிலம், செர்புலசேரியை சேர்ந்த சேகரன், 52 என்ற யானை, தேரின் பின்பகுதியில் இருந்து தள்ளிச் சென்றது. உடுமலை – பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கோவில் வளாகத்தில் இருந்து மாலை, 4:15 மணிக்கு புறப்பட்ட தேர், பழநி ரோடு வழியாக சிறிது துாரம் சென்று, தளி ரோடு, குட்டைத்திடல், தங்கம்மாள் ஓடை தல கொண்டம்மன் கோவில் வழியாக, பொள்ளாச்சி ரோட்டை அடைந்து, அங்கிருந்து, மீண்டும் கோவில் தேர்நிலையை அடைந்தது.
மக்கள் வெள்ளம்: கோவில் வளாகம் முதல், தேர் வலம் வந்த பாதைகளில் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தேரில் பவனி வந்த அம்மனை வழிபட்டனர். திருத்தேர் தங்கம்மாள் ஓடை தலைகொண்டம்மன் கோவிலுக்கு வந்தபோது, அம்மனுக்கு வரவேற்பும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. திருவிழா முன்னிட்டு உடுமலை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தேரோட்ட வீதிகள் மற்றும் நகருக்குள் வருவதற்கான பாதைகளில் நுாற்றுக்கணக்கான நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைக்கப் பட்டிருந்தன. பல்வேறு அமைப்புகள் சார்பில், அன்னதானமும் வழங்கப்பட்டது. நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு, மதியம் முதல் தேர் நிலையை அடையும் வரை, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடுகளில் போக்குரவத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வாணவேடிக்கை நிகழ்ச்சி: உடுமலையில் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் இன்று காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவமும், இரவு, 8:00 மணிக்கு, பரிவேட்டையும், 10:00 மணிக்கு, குட்டைத்திடலில், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது.