பதிவு செய்த நாள்
30
ஏப்
2016
11:04
அந்தியூர்: செம்முனீஸ்வரர் கோவிலில் நடந்த, குட்டிக்குடி திருவிழாவில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குட்டிகள் பலியிடப்பட்டன. அந்தியூரை அடுத்துள்ள பூனாச்சி அருகே பூசாரியூர் கிராமத்தில், செம்முனீஸ்வரர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, இக்கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கும். நடப்பாண்டு விழா கடந்த, 20ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடி திருவிழா நேற்று நடந்தது. பில்லி, சூன்யம், பேய், பிசாசு தொல்லையால் துன்பப்படுவோர் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களும் இங்கு அதிகம் வருகின்றனர்.
வேண்டுதல் நிறைவேறினால் ஆட்டுக்குட்டிகளை மட்டுமே பலி தர வேண்டும். பிறந்த குட்டி முதல், ஓராண்டு வரையிலான குட்டிகள் பலி தரப்படுகின்றன. இந்நிலையில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேற்று குவிந்தனர். குட்டிகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த வகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுக் குட்டிகள் பலியிடப்பட்டன. பலி தரப்பட்ட குட்டிகளின் ரத்தத்தை குடித்து, பூசாரிகள் ஆட்டம் ஆடினர். குழந்தை வரம் கேட்கும் பெண்கள், பலி தந்த குட்டிகளின் ரத்தத்தை, தங்களின் புடவைகளில் பூசிக்கொண்டனர். அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல் கோபி, சத்தி, ஈரோடு மற்றும் சேலம், கோவை, திருப்பூர் நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.