நவபாஷாணத்தில் போலி அர்ச்சகர்கள்: பரிகார பூஜைகளுக்கு அடாவடி வசூல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2016 11:05
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷா ணத்தில் பரிகார பூஜைகள் செய்வதாக பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி அர்ச்சகர்களால் பக்தர்கள் பாதிப்படைகின்றனர். தேவிபட்டினம் நவ பாஷாணத்தில் பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கு பரிகார பூஜைகள் செய்கின்றனர். இங்கு பரிகார பூஜை செய்தால் உடனடி தீர்வு கிடைப்பதாக கூறப்படுவதால் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் நவபாஷாண பகுதியில் உள்ள போலி அர்ச்சர்கள் பரிகார பூஜை செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1000 முதல் 5000 வரை வசூல் செய்கின்றனர். வெளியூர் பக்தர்கள் என்பதால் இது குறித்து யாரிடமும் விசாரிக்க முடியாத நிலையில் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு பரிதாபமாக செல்கின்றனர். மேலும், நவபாஷாண கோயிலுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்காக வரும் பக்தர்களுக்கு பரிகார பூஜை கட்டணத்தை இந்து சமய அறநிலையத்துறையில் நிர்ணயம் செய்யாததால் போலி அர்ச்சகர்கள் பரிகார பூஜை என்ற பெயரில் அடாவடி வசூல் செய்து வருகின்றனர்.
இது குறித்து சுற்றுலாப் பயணி பானுப்பிரியா கூறுகையில், நவபாஷாண கடற்கரை பகுதிக்கு வந்தவுடன் சில புரோக்கர்கள் வருகின்றனர். அங்கு வருபவர்களைப் பற்றிய சுய விபரங்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப தொகையை வசூல் செய்து விடுகின்றனர். பரிகார பூஜைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படாததால் போலி அர்ச்சகர்கள் கேட்பதை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே கோயிலை நிர்வகித்து வரும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் பரிகார கட்டணங்களை நிர்ணயம் செய்தால் அதிக கட்டணம் வசூல் செய்வது தடுக்கப்படும், என்றார். இந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பரிகார பூஜைகளுக்கு போலி அர்ச்சகர்கள் அடாவடி வசூல் செய்வது குறித்து பரவலாக புகார்கள் வந்துள்ளன. இதனால், பரிகார பூஜைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம், என்றார்.