சிம்லாவிலிருந்து 180 கிலோ மீட்டர் தூரத்திலும், டெல்லியிலிருந்து 550 கிலோ மீட்டர் தூரத்திலும் சரகன் நகரம் உள்ளது. இங்கு பீமாகாளிஜி கோயில் உள்ளது. இது, சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஊரின் நடுவே. கோயில் உள்ளது. இந்திய திபேத்திய கட்டடக்கலை பாணியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இரட்டைக் கோபுரங்கள், மேற்கூரை பகோடா பாணியில் அமைந்துள்ளது. துர்க்கையின் மற்றொரு வடிவம்தான் பீமாகாளி. ஒரு காலத்தில் கண்ணன் ஆண்ட பூமி இது. பிறகு அவன் வம்சாவழியில் மன்னர் பாலியின் குழந்தைகள் ஆண்டு வந்தனர். பிரிட்டிஷாரின் கண்பார்வை சிம்லா மீது விழுந்தபோது இது டம்மி ராஜ்ஜியமாக மாறிவிட்டது ! இருந்தும் மன்னர் உண்டு. அவர் பரம்பரையில் தற்போதுள்ள வாரிசுதான் வீரபத்ரசிங் ! இவர், இமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர். பீமாகாளி எட்டு புனித உலோகங்களால் ஆனது. வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டு கம்பீரமாய் காட்சியளிக்கிறாள் பீமாகாளி. விரைவில் தங்கக் கவசமும் சார்த்தவுள்ளனர். பழமையான கோயில். இந்தக் கோயிலின் மணி பெரியது. சப்தம் ஊருக்கே கேட்கும். இரண்டு விளக்கு ஸ்தம்பங்கள் கம்பீரமாய் நிற்கின்றன. அவை ஏற்றப்பட்டு, மாலையில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டு ஆரத்தி எடுக்கப்படும்போது அம்மனும், கோயிலும் ஜொலிக்கும். கோயிலின் மேல் பகுதியில் பீமா காளியும் கீழே பார்வதியும் உள்ளனர். இது தவிர பிரகாரத்தில் ரகுநாத்ஜி, நர சிங்கஜி மற்றும் சரகனின் காவல் தெய்வம் படல் பைரவ்ஜி ஆகியோருக்குத் தனிச் சன்னதிகளும் உள்ளன. இங்கு கிருஷ்ண ஜன்மாஷ்டமியும், தீபாவளியும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு இரு நவராத்திரிகளும் கொண்டாடப்படுகின்றன. இது சித்ரா மற்றும் அஸ்வினி மாதங்களில் (ஏப்ரல், அக்டோபர்) என இரு முறை விழா நடக்கிறது. துர்கா நவராத்திரி ஒன்பது நாட்களும் அஸ்வின் நவராத்திரி மூன்று நாட்களும் நடைபெறுகிறது. இந்த இடத்திற்கு ரயிலில் வர இயலாது. சிம்லாவிலிருந்து டாக்ஸி அல்லது ஜீப்பில் எளிதாக வரலாம். பஸ்களும் உண்டு.