பதிவு செய்த நாள்
03
மே
2016
11:05
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலையை சுற்றி இரும்பு வேலி அமைத்து வருகிறது.திருமலைக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக, பல ஆண்டுகளாக மத்திய உளவுத்துறை, எச்சரித்து வருகிறது. அதனால், திருமலையில் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், திருமலையை சுற்றி இரும்பு வேலி அமைக்க, தேவஸ்தான அறங்காவலர் குழு அனுமதி அளித்தது. அதன்படி, திருமலையை சுற்றி, 12 கி.மீ., தொலைவு, இரும்பு வேலி அமைக்கும் பணி, 2014ல் துவங்கியது.முதற்கட்டமாக, திருமலையில் இருந்து திருப்பதி செல்லும் மலைப் பாதையில், 4.8 கி.மீ., தொலைவு, இரும்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: திருமலையை சுற்றி, இரும்பு வேலி அமைப்பதால், அலிபிரி சோதனைச்சாவடியை கடந்து மட்டுமே, எவராலும் திருமலைக்கு செல்ல முடியும். வன விலங்குகள், திருமலைக்குள் நுழைவதை தடுக்க முடியும். சந்தனக் கட்டை, செம்மரக் கட்டை, மூலிகைகள் கடத்தப்படுவது தடுக்கப்படும். இரும்பு வேலியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், பாதுகாப்பு மேலும் பலப்படும். இரும்பு வேலி அமைக்கும் பணி முடிந்த பின், அதை சுற்றி ரோந்து பாதை ஏற்படுத்தினால், 24 மணி நேரமும், வனத்துறையினரை, ரோந்து பணியில் ஈடுபடுத்த முடியும். இதன் மூலம், திருமலையின் பாதுகாப்பு முழு அளவில் பலப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.