பதிவு செய்த நாள்
04
மே
2016
11:05
வேலுார்: சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயில் இன்று துவங்குகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இன்று முதல், 28ம் தேதி வரை தாராபிஷேகம் நடக்கிறது.கோடை வெயிலின் பாதிப்பு, இதுவரை எப்போதும் இல்லாத அளவில், இந்த ஆண்டு மிக கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில், 110 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் தொட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயற்கையின் சமநிலையற்ற தன்மையால், எதிர்பாராத நேரத்தில் மிக கடுமையான மழையும், கோடையில் மிக அதிகமான வெப்பமும் ஏற்பட்டுள்ளது.அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கும் முன்பே, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சம், 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரித்தது.எனவே, அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் தாக்கம், மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
எதிர்பாராத நிலையில் கோடை மழை கைகொடுத்தால் மட்டுமே, வெயில் பாதிப்பில் இருந்து தப்ப முடியும். கத்திரி வெயிலின் துவக்கத்தில் அதிக வெயிலும், பின், அக்னி நட்சத்திர கடைசி நாட்களில், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருக்கும். இந்நிலையில், அக்னி நட்சத்திர வெயிலை முன்னிட்டு, இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி தோஷ நிவர்த்தியாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இன்று முதல், வரும் 28ம் தேதி வரை, தாராபிஷேகம் நடக்கிறது.இதையொட்டி, தினமும் காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, சுவாமி சன்னிதி கருவறையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கோவிலில் தாராபிஷேகம் நடைபெறுவதால், வழக்கமான வழிபாடுகளில், தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது, கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால், அக்னி நட்சத்திரம் நிறைவாக நடத்தப்படும் யாகம், இந்த ஆண்டு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.