பதிவு செய்த நாள்
05
மே
2016
11:05
வேலூர்: சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயில் நேற்று துவங்கியது. இதையொட்டி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், சிவன் கோவில்களில், தாராபிஷேகம் துவங்கியது; 28ம் தேதி வரை நடத்தப்படும்.கொளுத்தும் வெயிலால் இறைவனின் திருமேனி பாதிக்கப்படாமல் இருக்கவும், குளிர்விக்கவும், அக்னி தோஷ நிவர்த்தியாக, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், சிவன் கோவில்களில் நேற்று தாராபிஷேகம் நடந்தது.ஒரு பாத்திரத்தில் சிறு துளையிட்டு, அதில் வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர் நிரப்பி, அதை கருவறையிலுள்ள இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் விழும் வகையில் செய்யும் அபிஷேகம் தான்,தாராபிஷேகம்.திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள நேர் அண்ணாமலை கோவிலில், நேற்று தாராபிஷேகம் நடந்தது. தினமும் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, 28ம் தேதி வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று தாராபிஷேகம் நடத்தப்பட்டது.