பதிவு செய்த நாள்
06
மே
2016
11:05
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், மார்ச், 18ல் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவு விழா, நேற்று முன்தினம் இரவு, முதல்கால யாக பூஜையுடன் துவங்கியது. விஸ்வேஸ்வர சுவாமிக்கு, 108 வலம்புரி சங்குகள்; சுப்ரமணியருக்கு, 108 சங்கு பூஜை; அம்பாளுக்கு, 108 கலசங்கள் நிறுவப்பட்டு, யாக வேள்வி, நிறை வேள்வி நடைபெற்றது. வேத பாராயணம், பன்னிரு திருமுறை முழங்க, திருப் பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலயம் முதல்வர் ராஜாபட்டர் தலைமையில், சிவாச்சார்யார்கள் யாக பூஜை நடத்தினர். நேற்று காலை, 7:30க்கு, இரண்டாம் கால யாக வேள்வி துவங்கி, 10:00 மணிக்கு, நிறைவேள்வி நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர், சுப்ரமணியர், அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, கலச அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது. இதன் பின், மகா தீபாராதனை, அலங்காரம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன், தங்க கவச அலங்காரத்திலும்; சுப்ரமணியர், நவரத்தின அங்கி அலங்காரத்தி லும் அருள்பாலித்தனர். திருப்பணி நன்கொடையாளர்களுக்கு, கோவில் வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.