பதிவு செய்த நாள்
07
மே
2016
11:05
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் சித்திரை அமாவாசை வழிபாடு கோலாகலமாக நடந்தது. கோடைவிடுமுறை காரணமாக வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்தனர்.
அடிவாரத்தில் தண்ணீர் வசதி செய்யாததால் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் நீரின்றி தவித்தனர். இங்கு சித்திரைமாத அமாவாசை வழிபாட்டிற்காக மே 4 முதல் மலைப்பாதை திறந்து விடப்பட்டது. அன்றுமுதல் தொடர்ந்து பக்தர்கள் மலைக்கு சென்று வந்தனர். அமாவாசையான நேற்று பல ஆயிரம் பக்தர்கள் மலையில் குவிந்தனர். மலையில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகள், பலாஅடி கருப்பசாமி, தாணிப்பாறை கருப்பசாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடந்தன. ராஜஅலங்காரத்தில் சுந்தர மகாலிங்கம், புஷ்ப அலங்காரத்தில் சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6 மணி முதல் அமாவாசை பூஜைகள் துவங்கின. சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகம், சிவபுராண பாராயணம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சங்கு ஒலி முழங்க சித்தர் வழிபாட்டு முறை பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அடிவாரம் மற்றும் மலையில் பக்தர்கள் முடி காணிக்கை, ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கோடை விடுமுறை காரணமாக வழக்கமாக அமாவாசை தரிசனத்திற்கு வரும் கூட்டத்தைவிட பலமடங்கு கூட்டம் அதிகம் இருந்தது. மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோடைவெயில் சுட்டெரிப்பதால் மலை முழுவதும் வறட்சி நிலவியது. ஓடைகளில் ஒருசில இடங்களில் மட்டுமே சிறிதளவு நீர் தேங்கி நின்றது.மலையில் பக்தர்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் போதிய தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அடிவாரமான தாணிப்பாறையில் பக்தர்களுக்கு தண்ணீருக்கு வசதி செய்யப்படாததால் பக்தர்கள் அவசரத்திற்கு கூட நீரின்றி தவித்தனர். 40 கழிப்பறைகள், குளியலறைகள் இருந்தும் அவைகள் பூட்டப்பட்டு இருந்தன. சமையல் செய்த பக்தர்கள் தண்ணீரின்றி தனியார் கிணறுகளுக்கு சென்று நீர் சேகரித்து வந்தனர்.