பதிவு செய்த நாள்
05
செப்
2011
11:09
ராசிபுரம்: அத்தனூர் அம்மன் கோவிலில், மூலவர் வாசற்கால் வைக்கும் விழா கோலாகலமாக நடந்தது. சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், இந்து அறநிலையத்துறை உதவியுடன், கோவில் திருப்பணி சங்கம் மற்றும் பக்தர்கள் சார்பில், ஐந்து கோடி ரூபாய் செலவில் திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பணி துவங்கியது. தற்போது, மூலவர் பீடம் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. மேலும், அர்த்த மண்டபம் உள்ளிட்ட சிற்ப வேலைபாடுகள் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மூலவர் மற்றும் அர்த்த மண்டபத்துக்கு வாசற்கால் வைக்கும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு வாஸ்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மன் ஸ்வாமிக்கு கலச பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது. திருப்பணி சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் கலச தீர்த்தம் மற்றும் பூஜை தட்டுகளுடன் கோவில் வளாகத்தை வலம் வந்தனர். மூலவர் மற்றும் அர்த்த மண்டபத்துக்கு வாசற்காலுக்கு தீர்த்தம், அபிஷேகம் மற்றும் வாஸ்து பூஜைகள் செய்து வாசற்கால் வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், திருப்பணிக்குழுவினர், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.