பதிவு செய்த நாள்
25
மே
2016
10:05
புதுச்சேரி: கோடை வெயில் சுட்டெரிப்பதால், மணக்குள விநாயகர் கோவில் யானை, தினமும் மூன்று வேளை, ஷவர் மூலம் குளிக்க வைக்கப்படுகிறது. கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை நல்ல முறையில் பராமரிக்கும் வகையில், தினமும் குளிக்க வைக்க வேண்டும்; நடைபயிற்சி அழைத்து செல்ல வேண்டும்; சத்தான உணவு வகைகளை கொடுக்க வேண்டும் என, வனத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள, மணக்குள விநாயகர் யானை லட்சுமி, தினமும் காலையில் குளிக்க வைக்கப்பட்டு, கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகிறது. யானை குளிப்பதற்கும், தங்குவதற்கும், ஈஸ்வரன் கோவில் தெருவில் ஷவர் பாத் வசதியுடன், இடம் உள்ளது. ஷவர் பாத்தில் லட்சுமி யானை தினமும் ஒருமுறை குளிக்க வைத்த நிலையில், கோடை வெயில் சுட்டெரிப்பதால், கடந்த ஒரு மாதமாக, நாள் ஒன்றுக்கு மூன்று முறை குளிக்க வைக்கப்படுகிறது. இதனால், யானை உற்சாகமாக வலம் வருகிறது.