Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » இரண்டாம் திருமறை
இரண்டாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-3) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 செப்
2011
03:09

220 திருநனிபள்ளி (அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

908 காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை
படர்தொடரிகள்ளி கவினிச்
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடமர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதிவைகு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : காரை முள்செடிகள், கூகை, முல்லை, ஈகை, படரும் கள்ளிகள் சூழ்ந்துள்ள சுடுகாடு அமர்ந்த சிவபிரான் மேவிய சோலை சூழ்ந்த நகர், தேரைகள் சாய்ந்து துள்ளவும் வாளைகள் குதிக்கவும் நாரைகள் மீன்களை வாரிக் கொத்தவும் எருமைகள் வயல்களில் வைகும் நனிபள்ளி போலும்

909 சடையிடை புக்கொடுங்கி யுளதங்குவெள்ளம்
வளர்திங்கள் கண்ணியயலே
இடையிடை வைத்ததொக்கு மலர்தொத்து மாலை
இறைவன்னிடங்கொள் பதிதான்
மடையிடை வளைபாய முகிழ்வாய் நெரிந்து
மணநாறு நீல மலரும்
நடையுடைய யன்னம்வைகு புனலம் படப்பை
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : சடைமுடியில் புகுந்து ஒடுங்கிய கங்கையும் வளர்கின்ற சந்திரனும் விளங்க, இடையில் கொத்தாக விளங்கும் கொன்றை மாலையும் திகழச் சூடிய இறைவன் வீற்றிருக்கும் இடம் என்பது, வயல்களின் மடையில்  வாளை பாய நீலமலர்கள் நறுமணம் கமழ அன்னப் பறவைகள் நீர்நிலை விளங்கும் தோட்டங்களில் வைகி இருக்கும் நனிபள்ளி போலும்

910 பெறுமலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடிலாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை
யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
விடுபோது அலர்ந்த விரைசூழ்
நறுமலர்அல்லி புல்லி ஒலிவண்டுறங்கு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : பெறுதற்கு அரிய மலர்களைக் கொண்டு தொண்டர்கள் வழிபாடு செய்வது ஓய்வின்றி நடைபெறும் தன்மையில் ஈசன் திகழ, கரிய மலர் போன்ற கண்டம் எனவாகும் தன்மையில் விடமுண்ட நாதன் விரும்பி வீற்றிருக்கும் இடமானது, மலரில் உள்ள தேனை உறிஞ்சிய பிறகு அதனை விட்டு அகன்று செல்லும்போது அசைவுறும் மலர்க் கொம்பு பிறிதொன்றில் சார, அதனால் மலரும் பேதுகளும் கொண்டு விளங்க, வண்டுகள் உறங்கும் நனிபள்ளி போலும்

911 குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக
உடையான் உகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு கயில்பாடல்கேட்ட
பெடைவண்டு தானு முரல
நளிர்தரு சோலை மாலை நரைகுருகுவைகு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : குளிர்ச்சியான கங்கையைச் சடை முடியில் கொண்டு, தலைமாலையும் அணிந்து, ஒளிவிடும் சந்திரனைச் சூடி, உமாதேவியைப் பாகமாக உடைய ஈசன் உகந்த நகரானது, கொம்பன்ன கருவியின் இசையும், குயிலின் இசையும் கேட்ட வண்டு தானும் இசைத்துப் பழகும் சோலையில், வெண்மையான குருகுகள் மகிழ்ந்து விளங்கும் நனிபள்ளி போலும்

912 தோடொரு காதன் ஆகி யொருகாது இலங்கு
சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை
இடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று
வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுடன் ஆடு செம்மை ஒலிவெள்ளம்ஆரு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : ஒரு காதில் தோடு அணிந்து, மற்றொரு காதில் குழையும் புரள, சுடுகாட்டினை இடமாகக் கொண்டு கனலை ஏந்தி ஆடுகின்ற எம் தந்தை, மிக விருப்பத்துடன் தமது இடமாக வீற்றிருப்பது அந்தணர்கள் சுப காரியங்களைச் செய்து நித்திய வழிபாடு செய்யும் காலத்தில் கை விரல்களால் நீர் கொண்டு அர்க்கியம் செய்தலும், குடகு நாட்டிலிருந்து கொங்கு நாடு முதலாக செம்மையுடன் ஒலித்து வெள்ளப் பெருக்குடன் வரும் காவிரியின் நலம் சேர்தலும் உடைய நனிபள்ளி போலும்

913 மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து
மலையான் மடந்தை மணிபொன்
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை
பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடுமந்தி உகளும் சிலம்ப
அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல்வந்து அலைக்கு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : மேகத்தில் சஞ்சரிக்கும் சந்திரனை மலராக அணிந்து, மலையான் மடந்தையாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு நெருப்பினைக் கரத்தில் ஏந்தும் எந்தை பெருமான் வீற்றிருக்கும் நகரானது, குரங்குகள் குதித்து ஒலியெழுப்ப, அகிலும், பொன்னும், நாகமரங்களும் சந்தன மரங்களும் நீரலைகளால் உந்திக் கரையில் சேர விளங்குகின்ற நனிபள்ளி போலும்

914 தகைமலி தண்டுசூலம் அனலுமிழும்நாகம்
கொடுகொட்டி வீணைமுரல
வகைமலி வன்னி கொன்றை மதமத்தம் வைத்த
பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்த மாலை புனைவார்கள் பூசல்
பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ்கிடக்கை
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : தண்டு, சூலம், அனல் உமிழும் கொடிய விடங்கொண்ட நாகம் ஆகியவை கொண்டு வீணையொலி பரவ, கொடுகொட்டி என்னும் கூத்து ஆடி, வன்னிப்பத்திரம், கொன்றை மாலை, ஊமத்த மலர் ஆகியவற்றைச் சூடிய ஈசன் உகந்த மேவும் நகரானது, வேள்வித் தீயின் புகை பெருகவும், மாலை புனைந்து பணி செய்பவர்கள் ஒலிக்கவும், பாடலால் தோத்திரம் செய்பவர்களும் விளங்க, முத்துக்கள் மணலில் விரவிக் கிடந்து வளம் காட்டும் நனிபள்ளி போலும்

915 வலமிகு வாளன் வேலன் வளைவாள்எயிற்று
மதியா அரக்கன் வலியோடு
உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த
பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழு மேலு நிகராதும் இல்லை
யெனநின்ற நீதி யதனை
நலமிகு தொண்டர் நாளும் அடிபரவல்செய்யு
நனி பள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : வல்லமை மிக்க வாட்படையும் சூலப்படையும் உடைய ஈசன், மதியாத இராவணனைத் தோள்கள் மெலியுமாறு விரலால் அடர்த்த பெருமான் ஆவார் அவர் உகந்த நகர் என்பது, இதற்கு நிகராக உள்ள நகரானது கீழுலகிலும் இல்லை மேலுலகிலும் இல்லை என நின்ற முறையினால், தொண்டர்கள் நாள்தோறும் திருவடியைப் பரவிப் போற்றும் நனிபள்ளி போலும்

916 நிறவுரு வொன்று தோன்றி யெரியொன்றி நின்ற
தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுறு வேத நாவன் அயனோடு மாலும்
அறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லை மௌவல் குளிர்பிண்டி புன்னை
புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச பொதுளி
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : நிறம், வடிவம் எனவாம் பேரொளியாய் நின்ற தன்மையினை நினையாதவர்களாகிய பிரமனும் திருமாலும் அறிய முடியாத அண்ணல், ஈசன் அப்பெருமான் வீற்றிருக்கும் நகர் என்பது, மலர்த் தோட்டங்களில் விரிந்து மேவும் முல்லை, மௌவல், புன்னை, கொன்றை முதலான மலர்கள் திகழ அவற்றின்தாதுக்களிலிருந்து தேன் பெருகும் சிறப்புடைய நனிபள்ளி போலும்

917 அனமிகு செல்கு சோறு கொணர்கென்று கையில்
இடவுண்டு பட்ட அமணும்
மனமிகுகஞ்சி மண்டை அதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேத நான்கும் விரிவித்த நாவின்
விடையானுகந்த நகர்தான்
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல்செய்யு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் தொண்டு செய் தன்மையில் மேவாது நிற்க, அதனைக் குணமாகக் கொள்ளாது, செயற்பாடு மிகுந்த நான்கு வேதங்களையும் விரித்த நாவன்மை மிக்கவனும், இடப வாகனத்தை உடையவனும் ஆகிய ஈசன் உகந்த நகரானது, தெளிவு மிக்க தொண்டர்கள் நாள்தோறும் திருவடியைப் போற்றித் துதிக்கும் நனிபள்ளி போலும்

918 கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல்
கமழ்காழி யென்று கருதப்
படுபொரும் ஆறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யென்ற அத்தர் பியன்மேலிருந்தின்
இசையால் உரைத்த பனுவல்
நடுஇருள் ஆடும் எந்தை நனிபள்ளிஉள்க
வினைகெடுதல் ஆணை நமதே

தெளிவுரை : கடலின் ஓதம் பெருகிய சோலைகள் சூழ்ந்த நறுமணம் விளங்கும் காழியில், நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் விரித்தவன் பரமன் அப்பதியில் விளங்கும் ஞானமுனிவனாகிய திருஞானசம்பந்தர் தமது தந்தையாரின் திருத்தோளின் மீது வீற்றிருந்து இசை விளங்க உரைத்த இத் திருப்பதிகத்தைக் கொண்டு நள்ளிருளில் நடம் புரியும் எந்தையாகிய ஈசன் வீற்றிருக்கும் நனிபள்ளியினை நினைத்துத் தியானிக்க வினை யாவும் கெடும் இது நமது ஆணையாகும்

திருச்சிற்றம்பலம்

221 பொது

திருச்சிற்றம்பலம்

919 வேயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம்வெள்ளி
சனிபாம்பி ரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

தெளிவுரை : மூங்கிலை ஒத்த மென்மையான தோள்களையுடைய உமாதேவியைப் பாகம் கொண்டுள்ள ஈசன், விடத்தை உண்டு, தேக்கிய கண்டத்தனாய், மிக நல்ல வீணையை மீட்டும் எழில் இசை காண்பவனாய், மாசில்லாத சந்திரனும் கங்கையும் முடியின் மீது அணிந்து எனது உள்ளத்தில் புகுந்துள்ளனன் அதனால் நவக்கிரகங்களாகிய சூரியன், சந்திரன் , அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றால் உண்டாகும் தீமைகள் இல்லை அவை குற்றமற்ற நல்ல பயன்களைத் தரவல்லன ஈசனின் அடியவர்களுக்கு அவை மிகுதியாக, விளங்கும் நல்லவையே தரக்கூடியவை ஆகும்

920 என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றோடு ஏழு பதினெட்டோடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : எலும்பு, பன்றிக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைச் சேர்த்து மார்பில் ஆரமாகத் திகழ இடப வாகனத்தில் ஏறி, உமா தேவியை உடனாகக் கொண்டு , பொன் போன்ற கொன்றை மாலையும், ஊமத்த மலரும், கங்கையும் சூடி, என் உள்ளத்தில் வந்து புகுந்தனன் ஈசன் அதனால், ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை மற்ற நாள்களாக உள்ள பரணி, கிருத்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி ஆகியனவும் அன்புடன் நல்லதாகி, அடியவர்களுக்கு மிகவும் நல்லதாக அமையும்

921 உருவளர்பவளமேனி ஒளிநீறு அணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைதூர்தி செயமாது பூமி
திசைதெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : பவளம் போன்ற அழகு திகழும் திருமேனியில் ஒளிரும் திருநீறு அணிந்து, உமாதேவி உடனாக விளங்க, வெண்மையான இடப வாகனத்தில் ஏறி, அழகிய கொன்றை மலரும் திங்களும் முடியின் மீது தரித்து, என் உள்ளத்தில் ஈசன் புகுந்தனன் அதனால், திருமகள், துர்க்கை, ஜெயமகள், அட்டதிக்குப் பாலகர்கள் மற்றும் பூமியை இயங்கச் செய்யும் அதிதேவதை  தெய்வங்கள், அரியதாகிய செல்வங்கள் யாவும் நன்மை செய்யவல்லன அடியவர்களுக்கு அவை மிக்க நன்மையாய் விளங்குவன

922 மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன் றைமாலை முடிமேல் அணிந்தேன்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : திருமுடியில் சந்திரனைச் சூடி, உமாதேவியை உடனாகக் கொண்டு , கல்லால மரத்தின்கீழ் இருந்து, சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள்களை உபதேசித்த எங்கள் பரமன், கங்கை தரித்துக் கொன்றை மாலையை முடியின்மேல் அணிந்து என் உள்ளத்தில் புகுந்தனன் அதனால் சினம் மிகுந்து உறுகின்ற காலன், அக்கினி, இயமன், இயமனுடைய தூதர்கள், கொடிய நோய்கள் முதலான பலவும் நற்குணத்தின் வயப்பட்டு நல்லனவாகும் அவை அடியவர்களுக்கு மிக்க நல்லனவாகும்

923 நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும்மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : நஞ்சினை அணிபோன்று கண்டத்தில் கொண்ட என் தந்தை உமாதேவியோடு இடப வாகனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பரமன் ஆவார் அப்பெருமான், கரும்பச்சை வண்ணத்தையுடைய வன்னி, கொன்றை மலர் ஆகியவற்றை முடியின் மீது அணிந்து என் உள்ளம் புகுந்தனன் அதனால், கொடிய சினத்தையுடைய அசுரர்களும், வறுமையாகிய இல்லாமை என்னும் கொடுமையும், மின்னல்போன்று தோன்றுட மிகைகொண்டு செய்யும் பூதங்களும் எமக்குத் தீயது செய்ய அஞ்சும்; அது நன்மையாக உள்ளவற்றைப் புரியும் அடியவர்களுக்கு அவை மிகவும் நன்மையாகும்

924 வாள்வரிய தளதாடை வரிகோவ ணத்தர்
மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல்
கொடு நாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : ஒளிமிக்க வரிகளையுடைய புலியின் தோலை ஆடையாகக் கொண்டு, வரித்த கோவணத்தை உடைய ஈசன், உமையவனைப் பாகங்கொண்டு, வன்னிப் பத்திரம், கொன்றை மலர், கங்கை ஆகியவற்றைத் தரித்து என் உள்ளத்தில் புகுந்தனன் அதனால், சிங்கம், புலி, கொலை யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியன யாவும் நெருக்கமாக உள்ள துணையாள் போன்று, நல்லதானவற்றைச் செய்யவல்லது அவை அடியவர்களுக்கு மிகுந்த நல்லவையாய விளங்கும்

925 செப்பிளமுலைநன் மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்புமுடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு இடப வாகனம் ஏறும் செல்வனாகிய ஈசன், அடைக்கலம் ஆகிய இளைய பிறைச் சந்திரனும் கங்கையும் முடியின் மீது அணிந்து என் உள்ளத்தில் புகுந்தனன் அதனால், வெம்மையுடைய குளிர், வாதம், பித்தம் முதலான நோய்களைத் தரும் வாத பித்த சிலேத்தும நாடிகள், தமது இயல்பிலிருந்து திரியாமல், அத்தகைய நன்மை விளைவிக்கும் அடியவர்களுக்கு அவை மிகுந்த நன்மையினைச் செய்யும்

926 வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : மன்மதனை நெற்றிக்கண்ணால் நோக்கி, இடப வாகனத்தில் உமாதேவியுடன் வீற்றிருந்து ஒளி மிக்க சந்திரனும் வன்னி, கொன்றை மலர் சூடி வந்து, ஈசன் என் உள்ளம் புகுந்தனன் அதனால், கடல் சூழ்ந்த இலங்கையின் வேந்தனாகிய இராவணனோடும் சூழ வரும் இடர் ஏதும், வந்து நலியுறச் செய்யாது ஆழ்கடலும் நல்லதாய் அமையும் அவை அடியறவர்களுக்கு மிகவும் நல்லதாகும்

927 பலபல வேட மாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனு மாலுமறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : பலவாகிய திருவடிவங்களில் தோன்றிய பரமன் உமாதேவியைப் பாகமாக உடையவன் அப்பெருமான் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பரமன் அவன் கங்கையினையும் எருக்கம் பூவினையும் முடியின்மேல் அணிந்து என் உள்ளம் புகுந்தனன் அதனால், தாமரை மலர் மீது விளங்கும் பிரமனும், திருமாலும், வேதங்களும், தேவர்களும் மற்றும் வருகின்ற காலங்கள் பலவும், அலை கொள்ளும் கடல், நிலைத்து மேவும் மேருமலை என யாவும், நல்லனவே ஆகும் அடியவர்களுக்கு அவை மிகவும் நன்மை உடையனவாகும்

928 கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : கொத்தாக விளங்கும் கூந்தலுடைய உமாதேவியுடனாகி வர, விசயனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கும் தன்மையில் வேடுவத் திருக்கோலம் பூண்ட விகிர்தனாகிய ஈசன், ஊமத்த மலர், பிறைச்சந்திரன், நாகம் ஆகியன முடியின் மீது அணிந்து, என் உள்ளம் புகுந்தனன் அதனால், புத்தர்களையும் சமணர்களையும் வாதிட்டு அழிக்கும் அண்ணலாகிய பரமனின் திருநீறு, செம்மை மிக்கதும் திடம் கொண்டதும் ஆகி, விளங்குகின்ற அத்தகைய நல்லதாகும் அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லவை யாகும்

929 தேனமர்பொழில் கொள் ஆலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளு நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே

தெளிவுரை : தேன் விளங்கும் பொழிலும், கரும்பாலையும், நெல் விளைச்சலும் வளரும் செம்பொன் பெருக, நான்முகனால் வழிபடப்பெற்ற ஆதியாகிய பிரமாபுரத்தில் விளங்கும், வேதஞானத்தில் வல்ல ஞான முனிவனாகிய திருஞானசம்பந்தர், சூரியன், சந்திரன், அங்காரகன் முதலான ஒன்பது கிரகங்களினாலும், அசுவினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு நட்சத்திரங்களாலாகிய நாளினாலும் அடியவர்கள் தீமையால் நலியாதவண்ணம் உரை செய்தனர் இத்தகைய இத் திருப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசாளும் பேறு பெறுவர் இது நமது ஆணை

திருச்சிற்றம்பலம்

222 திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

930 உரையினில்வந்த பாவம் உணர்நோய்களும்ம
செயல்தீங்கு குற்றம் உலகில்
வரையி னிலாமை செய்த அவைதீரும் வண்ண
மிக ஏத்தி நித்த நினைமின்
வரைசிலை யாக அன்று மதில்மூன்று எரித்து
வளர்கங் குல்நங்கை வெருவத்
திரைபொலி நஞ்சம் உண்ட சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : வாக்கால் தீமை பயக்கும் சொற்களைக் கூறி அதனால் வந்த பாவங்கள், மனத்தில் தோன்றுகின்ற தீய எண்ணங்களால் உண்டாகும் பாவங்கள், செயல் ஆற்றுதல் தொடர்பாகப் பிறர்க்குத் தீமை உண்டாகுமாறு செய்யும் குற்றங்கள் எல்லையின்றி செய்தல் என்பது மனிதரின் இயல்பாதலும் உண்டு அதனால் தீவினை பெருகுதல் ஆயின எனவே, மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் சேரும் வினைகள் தீரும் வண்ணம் ஈசனை ஏத்தி நித்தமும் நினைமின் மேரு மலையை வில்லாகக் கொண்டு, மூன்று மதில்களை எரித்து, உமாதேவி வெருவக் கடல் நஞ்சினை உட்கொண்ட சிவபெருமான், மேவி விளங்கும் செல்வச் சிறப்புடைய திருநாரையூரைக் கை தொழுது போற்றுமின்

931 ஊனடைகின்ற குற்றம் முதலாகி யுற்ற
பிணிநோய் ஒருங்கும் உயரும்
வானடை கின்ற வெள்ளை மதிசூடு சென்னி
விதியான வேத விகிர்தன்
கானிடை யாடி பூதப் படையான் இயங்கு
விடையான் இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : உயர்ந்த வானிடை விளங்குகின்ற திங்களைச் சூடியுள்ள வேத நாயகனாகிய விகிர்தன், மயானத்தில் நடம்புரிபவன்; பூதகணங்களைப் படையாக உடையவன்; இடப வாகனத்தில் விளங்குபவன்; அப்பெருமான், மலர்கள் சூடியுள்ள தன்மையில் வண்டுகள் பாடுகின்ற சடை முடியுடைய அண்ணல் வீற்றிருக்கும் திருநாரையூரைக் கைதொழுது போற்ற, மனிதப் பிறவியின் காரணமாக அழுக்கு தேகத்தின் வயத்தால் விளையும், பிணிகளும் வினைகளும் கெடும்

932 ஊரிடை நின்று வாழும் உயிர்செற்ற காலன்
துயருற்ற தீங்குவிரவிப்
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை
ஒழிவுற்ற வண்ணம் அகலும்
போரிடை யன்று மூன்று மதில்எய்த ஞான்று
புகழ்வானு ளோர்கள் புணரும்
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : பகைமை கொண்ட முப்புரங்களை எரிசெய்து சாம்பலாக்கிய காலத்தில், தேவர்கள் புகழுமாறு தேரின்மீது நின்ற எந்தை பெருமானாகிய ஈசன் இருந்த திருநாரையூர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்ற, ஊரில் நின்று வாழ்கின்ற உயிர்களைப் பகைத்துத் துன்புறுத்த நேரும் துயரும் பழியும் நீங்கும்

933 தீயுற வாய ஆக்கை யதுபற்றி வாழும்
வினை செற்ற வுற்ற உலகின்
தாயுறு தன்மை யாய தலைவன்தன்நாமம்
நிலையாக நின்று மருவும்
பேயுற வாய கானில் நடமாடி கோல
விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : பேய்கள் விளங்கி உறவு கொள்ளும் மயானத்தில் நடம் புரிந்து மேவும் நீலகண்டன், திருமுடியின் மீது பிறைச் சந்திரனை வைத்து உகந்தவன் சிவபெருமான் அப்பெருமான் மேவியுள்ள செல்வம் மிக்க திருநாரையூர் என்னும் பதியைத் தொழுது போற்ற, தீமையின் உறவாகிய தன்மையில் பற்றிய வினை கழியும்; இவ்வுலகிற்குத் தாயாய் விளங்கும் தலைவனாகிய அப்பரமன், திருநாமத்தை நிலையாகப் பற்றி மருவும்; சிறப்புறும்

934 வசையப ராதமாய உவரோத நீங்கும்
தவமாய தன்மை வரும்வான்
மிசையவர் ஆதியாய திருமார்பிலங்கு
விரிநூலர் விண்ணு நிலனும்
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி
அமையாத காதலொடு சேர்
திசையவர் போற்றநின்ற சிவன் மேயசெல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : வானவர்களின் ஆதிப்பிரான் ஆகியும், திருமார்பில் முப்புரிநூல் அணிந்தவர் ஆகியும், விண்ணுலகமும் பூவுலகமும் புகழ்ந்து போற்ற, தேவர்கள் ஏத்த அன்பின் பெருக்கத்தினால் எண்திசைகளில் உள்ளவர்களெல்லாம் போற்ற நின்று மேவும் சிவபெருமானை வீற்றிருக்கும் செல்வம் மிக்க திருநாரையூரைக் கைதொழுது போற்ற, தீவினையின் ஈட்டமாக உள்ள கடல் போன்ற குற்றமும் தவம் என்னும் செம்மையாக மருவி, வந்து துணை நிற்கும்

935 உறைவளர் ஊனிலாய உயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை உலகில்
குறைவுலவாகி நின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன் மாவின் உரிபோர்த்த மெய்யன்
அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர் தொண்டின் அருள்பேண நின்ற
திருநாரையூர் கை தொழவே

தெளிவுரை : வேதத்தை விரித்தோதிய திருநாவும், யானையின் தோலை உரித்துப் போர்த்திய திருமேனியும் கொண்டு, அரவத்தையுடைய அண்ணலாகியவர் சிவபெருமான் தேவர்கள் எல்லாம் பேணி நிற்கும் அப்பெருமான் வீற்றிருக்கும் திருநாரையூர்க் கை தொழுது போற்ற, இத்தேகத்தில் உறைவிடமாக மேவும் உயிர், நன்கு விளக்கும் அழகிய வடிவம் கொடுக்கும்; மெய்ம்மை உணராது நின்ற அஞ்ஞானத்தைப் போக்கி, மாய இருளை நீக்கும்; நெஞ்சில் நிறைவு  சேரும்; தேசத்தையும் அது வளர்க்கும்

936 தனம்வரும் நன்மையாகும் தகுதிக்குழந்து
வருதிக் குழன்ற உடலின்
இனம்வளர் ஐவர் செய்யும் வினயங்கள் செற்று
நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச்
சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : முப்புரங்கள் வெந்து சாம்பலாகுமாறு சரம் தொடுத்து அசுரர்களையும் அழித்த சிவபெருமான் மேவி விளங்குகின்ற செல்வம் மல்கும் திருநாரையூரினைத் தொழுது நிற்க, தனம் வரும்; நன்மை யாவும் கைகூடும்; பெருமை உண்டாகும்; உடலில் பதிந்து மேவும் ஐம்புலங்கள் செய்யும் நயம் அல்லாதவற்றை அடக்கி, ஒன்றிய சிந்தனை பெருகி இறையருளைச் சேர்விக்கும்

937 உருவரை கின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்ற
நனியஞ்சு மாதல்உற நீர்
மருமலர்தூவி யென்றும் வழிபாடு செய்ம்மின்
அழிபாடி லாத கடலின்
அருவரை சூழ்இலங்கை அரையன்றன் வீரம்
அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்து கந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : அழிதல் இல்லாத கடலும், அரிய மலைகளும் சூழ்ந்த இலங்கை வேந்தனின் வீரம் அழிய அவன் வலிமையான கைகளும் முடிகளும் நெரித்துத் திருப்பாத விரலால் கயிலை மலையை ஊன்றிய சிவபெருமான் மேவி விளங்கும் செல்வம் மல்கிய திருநாரையூரைத் தொழ, தேகமானது தளர்ந்து இருக்கும் காலத்திலும் கூற்றுவன் உயிரைக் கவர்ந்து செல்ல அச்சம் கொள்வான் எனவே, மலர் தூவி ஈசனை வழிபாடு செய்ம்மின்; அது நன்மை தரும் என்பதாம்

938 வேறுயர் வாழ்வு தன்மை வினைதுக்க மிக்க
பகைதீர்க்கு மேய உடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற
கரவைக் கரந்து திகழும்
சேறுயம் பூவின் மேய பெருமானும் மற்றைத்
திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகும் சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : தாமரை மலர்மீது திகழும் பிரமனும், திருமாலும் தேடியபோது சோதிப் பிழம்பாகத் தோன்றிய சிவபெருமான், மேவி விளங்கும் செல்வம் மல்கிய திருநாரையூரைத் தொழுது வணங்க, வேறாகி உயர்ந்து விளங்குகின்ற தன்மையில், பேரின்ப வாழ்வு அமையும்; தீவினையால் நேரும் துயரமும் பகையும் தீரும்; உடற் பிணி தீரும்; சிந்தை தெளிவுண்டாகும்; தெளிவு ஏற்படுவதை மறைக்கும் அஞ்ஞானம் நீங்கும்

939 மிடைபடு துன்பம் இன்பம் உளதாக்கும் உள்ளம்
வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்
ஒலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல்போர்த்துளோரும்
உரைமாயும் வண்ணம் அழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : ஒரு கரத்தில் சூலப் படை கொண்டு, கபாலம் ஏந்திப் பலிகொள்ளும் வண்ணம் பாடியும் ஆடியும் விளங்கி, சமணர் சாக்கியர்தம் வண்ணம் அழியுமாறு செய்த சிவபெருமான் மேவி விளங்குகின்ற செல்வம் மல்கிய திருநாரையூரைத் தொழ, இன்பமும் துன்பமும் கலந்து திகழும் உள்ளத்தை ஞானத்தின் வயமாய் முன்னின்று உணர வைக்கும்

940 எரியொரு வண்ணமாய உருவானை எந்தை
பெருமானை யுள்கி நினையார்
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
உரைமாலை பத்து மொழிவார்
திருவளர் செம்மையாகி அருள்பேறு மிக்க(து)
உளதென்பர் செம்மை யினரே

தெளிவுரை : தீப் பிழம்பாகிய வண்ணத்தில் மேவும் எந்தை பெருமான், நினைத்து வணங்கித் துதியாத முப்புர அசுரர்களைத் செற்ற சிவபெருமான் ஆவார் அப் பெருமான் மேவிய செல்வம் மல்கிய திருநாரையூரினைத் தொழும், புனல் சூழ்ந்த காழிப்பதியில் மேவும், மறைவல்ல ஞானசம்பந்தர் உரை செய்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பொருட் செல்வப் பேறும் அருள் பேறும் மிகுந்து, யாவும் உடையவர் என்னும் செம்மையில் நிலவுலகில் திகழ்வார்கள்

திருச்சிற்றம்பலம்

223 திருநரையூர்ச்சித்தீச்சரம் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

941 நேரியனாகுமல்லன் ஒருபாலு மேனி
அரியான் முனாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
உறுதீயும் ஆய நிமலன்
ஊரியல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த
நல்குண்டு பண்டு சுடலை
நாரியொர் பாகமாக நடமாட வல்ல
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : எல்லாம் பொருந்தி விளங்குபவனாகவும், அவ்வாறு இல்லாதவனாகவும் திருமேனியை ஒருபால் தோற்றப் பொலிவு செய்யாதவனாயும், பேரொளி உடையவனாயும், நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என ஐம்பூதங்களும் ஆகியவன் ஈசன் அப்பெருமான், நின்மலனாக விளங்குபவன்; ஊர் தோறும் சென்று பிச்சை ஏற்று உண்டு, உலகங்கள் போற்ற, உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, சுடலையில் நடனம் ஆட வல்லவன் அவன் நறையூரில் வீற்றிருக்கும் சிவனேயாவான்

942 இடமயில் அன்னசாயல் மடமங்கை தன்கை
எதிர்நாணி பூண வரையில்
கடுமயில் அம்பு கோத்து எயில்செற்றுகந்து
அமரர்க்கு அளித்த தலைவன்
மடமயில் ஊர்தி தாதை எனநின்று தொண்டர்
மனநின்ற மைந்தன் மருவும்
நடமயில் ஆலநீடு குயில்கூவு சோலை
நறையூரில் நம்பன் அவனே

தெளிவுரை : மயில் போன்ற சாயலையுடைய உமாதேவி இடப்பாகத்தில் பொருந்தி விளங்க, மேருமலையினை வில்லாகக் கொண்டு வாசுகி என்ற பாம்பினை நாணாகப் பூட்டி, கடுமையான கூரிய அம்பினைக் கோத்து, முப்புர அசுரர்களைச் செற்று அடர்த்துத் தேவர்களுக்கு நல்ல வாழ்க்கையினை அளித்த தலைவன், ஈசன் அவர், மயில் வாகனத்தை உடைய குமரவேளின் தந்தை திருத்தொண்டர் மனத்தில் மகிழ்ந்து மேவும் அழகர் அப்பெருமான் மயில்கள் அசைந்து நடம்புரியக் குயில்கள் கூவும் சோலை திகழும் நறையூரில் வீற்றிருக்கும் சிவனே

943 சூடக முன்கை மங்கை ஒருபாக மாக
அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மான நோக்கி யிடுபிச்சைகொண்டு
படுபிச்சன் என்று பரவத்
தோடக மாயொர் காதும் ஒருகாதிலங்கு
குழைதாழ வேழ உரியன்
நாடக மாக ஆடி மடவார்கள் பாடு
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : கையில் வளையல் அணிந்துள்ள உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குமாறு வரும் பெருமான், பெருமை மிக்க இல்லங்கள் தோறும் சென்று பிச்சை ஏற்றுப் பிட்சாடனர் எனப் பரவப் படுபவன்; ஒருகாதில் தோடும், மற்றொன்றில் குழையும் அணிந்தவன்; யானையின் தோலை உரித்தவன் அப்பெருமான், மகளிர் புகழ்ப் பாக்களைப் பாடியும் அதற்கேற்ப ஆடியும் விளங்கும் நறையூரில் வீற்றிருக்கும் சிவனே ஆவான்

944 சாயல்நல் மாதொர் பாகன் விதியாய சோதி
கதியாக நின்ற கடவுள்
ஆயகம் என்னுள் வந்த அருளாய செல்வன்
இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன்விரும்பு
மலையின்கண் வந்து தொழுவார்
நாயகன் என்றி றைஞ்சி மறையோர்கள் பேணு
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : நற்சாயல் கொண்ட உமாதேவியை பாகமாகக் கொண்டு, விதிக்கும் பரமனாகவும் கதி தரும் நாதனாகவும் விளங்கும் ஈசன், ஆயும் என் உள்ளத்துள் வந்து தங்கிய அருளாகிய செல்வன், நீல கண்டனாகிய அப்பெருமான், உலகத்தின் தாய் என மேவி மகிழும் தலைவன் அவன் விரும்பும் பதியன்கண் தொழுபவர்களுக்கு, நாயகனாய் நின்று நன்கு அருள்பாலிக்க, மறையவர்கள் பேணும் நறையூரில் வீற்றிருக்கும் ஈசன் அவனே

945 நெதிபடு மெய்யெம் ஐயன் நிறைசோலை சுற்றி
நிகழ்அம் பலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன்
எமர்கற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட வந்திவந்து வயல்வாளை பாயும்
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : தியானம் செய்யப்படும் எம் தலைவன், சோலை சூழ்ந்த அம்பலத்தில் திருநடனம் புரியும் தேவர் தலைவனாயும் எமக்குச் சுற்றமாகவும் விளங்கும் இறைவன் அப்பரமன், சந்திரனை, முடியில் ஒளிர்ந்து விளங்கும் சடை முடியில் பொருந்தி, இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து, பலி கொள்பவனாகி, வாளை பாயும் நீர் வளம் கொண்ட நறையூரில் வீற்றிருக்கும் சிவன் ஆவான்

946 கணிகையொர் சென்னி மன்னு மதுவன்னி கொன்றை
மலர்துன்று செஞ்சடையினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேத வோசை அகல்அங்கம் ஆறின்
பொருளான ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர்தூவி யேத்து
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : தலைமுடியில் கங்கையும், தேன் மணக்கும் கொன்றை மலர், வன்னி ஆகியவற்றை விளங்கும் வண்ணம் தரித்த சிவந்த சடையுடைய ஈசன், பணிந்து வணங்குபவர்கள் மகிழுமாறு காட்சி நல்குகின்ற பரமன் அவன் வேதங்களும் அவற்றி விரிவாக்கமாகிய ஆறு அங்கங்களும் புகலும் பொருளாகியும், ஆதியாகியும், அவ்வருள் வயத்தால் தொண்டர் கூடி மலர் தூவி ஏத்திப் பரவுதல் செய்யும் நறையூரில் வீற்றிருக்கும் சிவனே ஆவான்

947 ஒளிர்தரு கின்றமேனி உருவெங்கும் அங்கம்
அவைஆர ஆடல் அரவம்
மிளிர்தரு கையிலங்க அவல்ஏந்தி யாடும்
விகிர்தன் விடங்கொள் மிடறன்
துளிதரு சோலை யாலை தொழில்மேவ வேதம்
எழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேரு மாட மடவார்களாரும்
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : ஈசன் ஒளிர்ந்து மேவும் திருமேனியுடையவாகி விளங்க, அவ்அங்கத்தில் ஆரப் பொருந்திய அரவமானது தவழ விளங்குகின்றது அவ்வாறே ஒளி மிளிரும் திருக்கரத்தில், நெருப்பேந்தி ஆடல் புரியும் விகிர்தனாய், நஞ்சினைக் கண்டத்தில் கொண்டுள்ளவன் அப் பரமன் தேன்மணங்கமழும் சோலைகளும், கரும்பாலையின் தொழில்களும், வேதகீதங்கள் ஓதுதலும், யாவற்றிலும் இறையருள் பதிந்துள்ளதால் சேரும் எழில மிக்க வெற்றியும் கொண்டு விளங்க, திங்கள் ஒளி சேர் மாடங்களில் மகளிர்கள் கூடிமகிழும் நறையூரில் வீற்றிருப்பவன் சிவனே ஆவான்

948 அடல்எரு தேறுகந்த அதிரும் கழல்கள்
எதிரும் சிலம்பொரு இசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
முனிவுற்று இலங்கை அரையன்
உடலொடு தோளனைத்து முடிபத்து இறுத்தும்
இசைகேட்டு இரங்கி ஒருவாள்
நடலைகள் தீர்த்து நல்கி நமையாள வல்ல
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : வலிமை மிகுந்த இடபத்தை வாகனமாகக் கொண்டு ஒலித்து மேவும் கழலும் சிலம்பும் பொருந்திப் பாதங்களில் விளங்க, நஞ்சு உண்டு கருணாலயனாய்த் தேவர்களைக் காத்தருளிய நீலகண்டனாகிய ஈசன், சினங்கொண்ட இராவணனின் உடலும் தோளும் முடியும் துன்புறுமாறு செய்து, பின்னர் அவன் இசைத்துச் சாமவேதத்தால் போற்றி வணங்க, இரக்கம் உற்று ஒப்பற்ற மந்திர வாளை வழங்கித் துன்பம் தீர்த்தவன் அப் பரமன் நம்மை ஆட்கொண்டு அருளவல்ல நறையூரில் வீற்றிருக்கும் சிவன் ஆவார்

949 குலமார் மேவினானு மிகுமாயனாலும்
எதிர்கூடி நேடி நினைவுற்று
இலபல எய்தொணாமை எரியாய் உயர்ந்த
பெரியான் இலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைகள் பேச
வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் ஒருவர்க்கொருவர் இணைந்து தேடிச் சென்று காண இயலாது, பின்னர் ஏத்திப போற்ற, இன்னதென்று கூ முடியாதவாறு தீப் பிழம்பாய் உயர்ந்த பெரியோனாகியவன், சடை முடியுடைய ஈசன் அப் பெருமான், அணுக்கத் தொண்டர்களும் வழிபடும் தொண்டர்களும் பெருமை மிக்க புகழ் போற்றும் நெறியில் நிற்க, மேகங்களின் வாசம் மிகவாய் விளங்கும் வீதிகளை உடைய நறையூரில் வீற்றிருக்கும் சிவன் ஆவான்

950 துவருறு கின்றஆடை உடல்போர்த் துழன்ற
அவர்தாமும் அல்ல சமணும்
கவர்உறு சிந்தை யாளர் உரைநீத்துகந்த
பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்று கோயில் ஒளிபொன்செய் மாட
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : துவராடை பொலிய விளங்குகின்ற சாக்கியரும், சமணரும் சிதறிய மனத்தினராய் ஐயம் கொண்டு நல்லுரைகளை நீத்து நிற்க, ஈசன், ஒளிமிக்க சடையுடையவனாய், தவவேந்தர்களும், பக்தர்களும், சித்தர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் பேணி நிற்க, நெறிமுறையில் விளங்கி மேவும் மாதர்கள் புகழ்ப் பாடல்களைப் பாடிப் போற்ற நவமணிகளால் அலங்கரிக்கப்பட்ட கோயிலும் ஒளிமேவும் அழகிய மாடங்களும் உள்ள நறையூரில் வீற்றிருப்பவன் சிவபெருமான்

951 கானல்உலாவி யோதம் எதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தி யுணர
ஞானம் உலாவு சிந்தை யடிவைத்து கந்த
நறையூரின் நம்பன் அவனை
ஈனம்இலாத வண்ணம் இசையால் உரைத்த
தமிழ்மாலை பத்து நினைவார்
வானநி லாவ வல்லர் நிலமெங்கு நின்று
வழிபாடு செய்யு மிகவே

தெளிவுரை : கடற்கரைச் சோலையில் கடலின் ஓதம் மல்கும் காழியில் மேவும் ஞானசம்பந்தர், ஞானம் திகழும் சிந்தையால், நறையூரில் விளங்கும் சிவபெருமானை நண்ணி மகிழ்ந்து, குறைவு இல்லாதவாறு இசையால் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், இந்நிலவுலகில் எல்லா இடங்களையும் அடைந்து வழிபடும் சிறப்புப் பெறுவர்; மிக்க புகழுடன் விளங்குவர்

திருச்சிற்றம்பலம்

224 தென்திருமுல்லைவாயில் (அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

952 துளிமண்டியுண்டு நிறம்வந்தகண்டன்
நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி உம்பர் உலகம் கடந்த
உமைபங்கன் எங்கள் அரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த
கமலங்கள் தங்கு மதுவில்
தெளிமண்டியுண்டு சிறைவண்டு பாடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : நஞ்சினை உண்டு கரிய கண்டத்தை உடைய ஈசன், நடம் புரிபவன்; சூரியன் ஒளியையும் விஞ்சிய ஒளி விளங்க, தேவர் உலகத்தையும் கடந்தவன்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவன்; எங்கள் அரன் அப்பெருமானுடைய ஊரானது, மகிழ்வு தரும் சோலையும், கழனிகளில் சேர்ந்து மலரும் தாமரை மலர்களில் உள்ள தேனைத் தெளிவாக உண்டு மகிழும் சிறகுகளை உடைய வண்டுகள் பாடவும் திகழும் திருமுல்லைவாயில் ஆகும்

953 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
அயனைப் படைத்த பரமன்
அரவத் தொடுஅங்கம் அவைகட்டி எங்கும்
அரவிக்க நின்ற அரன்ஊர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி
அவை யோதமோத வெருவித்
தெருவத்தில் வந்து மெழுமுத் தலைக்கொள்
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உரிய காலத்தில் பயனையும் அதன் வழி அமையப் பெறும் பேரின்ப நிலையையும் தரும் ஈசன், பிரமனைப் படைத்த இறைவன் அப் பெருமான் அரவத்தைத் தமது அங்கத்தில் பதியுமாறு பொருந்தக் கட்டி நடம் புரியும் பேராரவாரம் கொண்டவன் அத்தகையவன் விளங்குகின்ற ஊரானது, பெரிய வடிவம் கொண்டு மேவும் சங்குகளும் முத்துக்களும் கடலின் ஓதத்தால் மோதிக் கரை வழியே தெருவில் வந்து செழுமையோடு விளங்கும் திருமுல்லைவாயில் ஆகும்

954 வாராத நாடன் வருவார்தம் வில்லின்
உருமெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன்
அருள்மேவி நின்ற அரன்ஊர்
பேராத சோதி பிரியாத மார்பின்
அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : மீண்டும் திரும்ப வருவதற்கு அமையாத பேரின்ப உலகின் நாயகனானவன் ஈசன் வானவில்லைப் போன்று தோன்றி மறையும் தன்மையும் நலிவும் உடையது இவ்வுடம்பு ஆயினும், ஆராத பக்தி பூண்டு, நாளும் கருதி அப் பெருமானைப் போற்றித் துதிக்க இன்பத்தை நல்குபவனாய், அன்பு கெழுமியவனாய், அருளுடன் திகழ்பவன் அவன் வீற்றிருக்கும் ஊரானது, நிரந்தரமாக ஒளி மேவி, திருமாலின் திருமார்பில் பிரியாது விளங்கும் திருமகளானவன், பெரு விருப்பத்துடன் செல்வச் செழிப்பினை நீடு வழங்கும் திருமுல்லைவாயில் என்பது ஆகும்

955 ஒன்றுஒன்றொடு ஒன்றும் ஒருநான்கொடு ஐந்தும்
இருமூன்றொடு ஏழும் உடனாய்
அன்றின்றொடு என்றும் அறிவான வர்க்கும்
அறியாமை நின்ற அரனூர்
குன்று ஒன்றொடு ஒன்று குலையொன்றொடு ஒன்று
கொடி யொன்றொடு ஒன்று குழுமிச்
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : 25 தத்துவங்கள் என்று சொல்லப்படும் தன்மையில் அன்று, இன்று, என்றும்  என, முக்காலத்திலும் அரனுடைய ஊரானது, குன்றொத்த மதில்களும், குலைகளை ஈனும் குமுகு தென்னை போன்ற மரங்களும், தோரணங்கள் உயர்ந்து மேவும் மாட மாளிகைகளும் அழகுடன் ஒன்றுக்கொன்று சிறப்புடன் திகழும் திருமுல்லைவாயில் என்னும்பதியாகும்

956 கொம்பன்ன மின்னின் இடையாளொர் கூறன்
விடைநாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறைநாவன் வானின்
மதியேறு சென்னி யரனூர்
அம்பன்ன வொண்கண் அவராட ரங்கின்
அணிகோபு ரங்கள் அழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : பூங்கொம்பு போன்ற மெல்லிய வடிவம், மின்னலைப் போன்ற இடையும் கொண்ட உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு, இடப வாகனத்தில் வீற்றிருக்கும் குழகன், சிவன், எமது அன்பன் அப்பெருமான், வேதம் விரித்த திருநாவை உடையவன்; வானில் விளங்கும் சந்திரனைத் திருமுடியில் தரித்த அரன் அப் பரமனுடைய ஊரானது, அம்பு போன்ற கூரிய நோக்குடைய ஒளி மிக்க கண்களை உடைய மகளிர் அரங்கில் ஆட, அணிமிக்க கோபுரங்கள், செம்பொன் போன்ற செவ்விடையுடைய மாடங்கள் திகழும் திருமுல்லைவாயில் ஆகும்

957 ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
ஒளியேறு கொண்ட ஒருவன்
ஆனேறது ஏறி அழகேறு நீறன்
அரவேறு பூணும் அரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து
குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறி யாடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : வேல் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒளி திகழும் பாகமாக உடைய ஒப்பற்றவனாகிய ஈசன், இடப வாகனத்தில் வீற்றிருப்பவன்; அழகிய தீரு நீற்று மேனியன்; அரவத்தை ஆபரணமாகப் பூணும் அரன் அப்பெருமானுடைய ஊரானது, கொல்லைப் புரத்தில் மான்கள் விளங்கவும், தேன் விளங்கும் பெருமை உடைய வளம் பெருக மேவும் திருமுல்லைவாயில் ஆகும் அழகேறு நீறன்; சுந்தரமாவது நீறு என்பதும் கவினைத் தருவது நீறு என்பதும் இத் திருப்பாட்டில் ஈசனாரின் பெருமைக்கு உரித்தாக்கி உணர்த்தப் பெறுதல் காண்க

958 நெஞ்சார நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
அனலாடு மேனி அரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
உளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர்சோறு அளிக்கொள்
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : நெஞ்சம் நெகிழ்ந்து, பெரிதும் நினைத்துத் துதிக்கின்ற அடியவர்களின் வினையானது கெட்டழியுமாறு அருள் புரிகின்ற நின்மலனாகிய ஈசன், பால், தயிர் முதலான பஞ்ச கவ்வியத்தால் அபிடேகம் கொள்பவன்; அரவத்தைக் கரத்தில் உடையவன்; நெருப்பினைக் கரத்தில் ஏந்தி ஆடல் புரிபவன்; தழல் போன்ற சிவந்த திருமேனியுடைய அரன் அத்தகைய பெருமானுடைய ஊரானது, மேகங்கள் தவழும் மாடங்களும், இல்லங்கள்தோறும் ஐயம் கேட்டுவரினும் செஞ்சாலி நெல்லின் வளம் மிக்க சோறு அளிக்கும் வள்ளல் தன்மை மிகுந்த திருமுல்லைவாயில் ஆகும்

959 வரைவந்து எடுத்த வலிவாள் அரக்கன்
முடிபத்தும் இற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்தமேனி
உமைபங்கன் எங்கள் அரனூர்
வரைவந்த சந்தொடு அகிலுந்தி வந்து
மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேற லாடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த வன்மையுடைய அரக்கனான இராவணனுடைய பத்துத் தலைகளும் துன்புற்று நலியுமாறு செய்த பரமன், நன்று உரை செய்யப்பட்ட பொன்போன்ற திருமேனியுடையவன்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவன் அத்தகைய அரனின் ஊரானது, மலையில் திகழும் சந்தனமும் அகிலும் வெள்ளத்தினால் உந்திக் கொண்டு வந்து மிளிர்கின்ற பொன்னி நதியின் வடபால் அலைகள் பெருகி வந்து தெளிந்த தேன் மணக்கச் செய்யும் திருமுல்லைவாயில் ஆகும்

960 மேலோடி நீடு விளையாடல் மேவு
விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி
யவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற
கதிரேறு செந்நெல்வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : திருமேனியில் தவழ்ந்து விளையாடலை மேவும் தன்மையுடைய முப்புரிநூல் அணிந்த மார்பினனாகிய ஈசன், வேதமுதல்வன்; பால் போன்ற வெண்மையான வண்ணம் கொண்ட பிரமனும், கார் வண்ணனாகிய திருமாலும் முனைந்து தேடிய பரமன்; அப் பெருமான் விளங்குகின்ற ஊரானது, காற்றி கருங்குவளை மலர்கள் ஆட, கதிர் முற்றியுள்ள செந்நெல் வயல்களில் சேல் ஓடித் திரியவும் வாளை குதித்துத் துள்ளவும் விளங்கும் திருமுல்லைவாயில் ஆகும்

961 பனைமல்கு திண்கை மதமா உரித்த
பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை யடையாத தேரர்
அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்கள் எங்கு
முகுளங்கள் எங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : பனை போன்ற உறுதியான துதிக்கை உடைய மதம் பொருந்திய யானையின் தோலை உரித்த பரமனாகிய ஈசன் திருவடியை நினைத்துச் சிந்தையில் கொள்ளாத சாக்கியர் சமணர் ஆகியோரை மாயுமாறு செய்து மேவும் அரனது ஊரானது, தாழை, மகிழ மரத்தின் மொட்டுகள் நெருங்கி விளங்கவும் புன்னை திகழவும் நறுமணம் கமழும் திருமுல்லைவாயில் ஆகும்

962 அணிகொண்ட கோதை யவள்நன்றும்ஏத்த
அருள்செய்த எந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி
திருமுல்லை வாயிலிதன் மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞானி
மிகுபந்தன் ஒண்த மிழ்களின்
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்
அகல்வாணம் ஆள்வர் மிகவே

தெளிவுரை : அணிகொண்டு விளங்கும் கோதையம்மை என்னும் திருப்பெயர் தாங்கி இத்திருத்தலத்தில் மேவும் உமாதேவி நன்கு வழிபட்டு ஏத்த அருள் செய்த எந்தை ஈசன், வலிமையான மூன்று புரங்களைக் கணைதொடுத்து எரித்த வில்லாளன் அவன் வீற்றிருக்கும் திருமுல்லைவாயிலின் மீது, தண்மை மிக்க சிந்தை உடையவராகிய காழியில் விளங்கும் ஞானசம்பந்தர் உரைத்த இத்திருப்பதிகத்தை, இசையுடன் பாடவல்லவர்கள், பரந்த வானுலகை அடைந்தவர்களாய் உரிமைமிகு ஆட்சி பெற்றவர்களாவர்

திருச்சிற்றம்பலம்

225 திருக்கொச்சைவயம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

963 அறையும் பூம்புன லோடும்
ஆடர வச்சடை தன்மேல்
பிறையும் சூடுவர் மார்பில்
பெண்ணொரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா
மந்திர வேள்வி யறாத
குறைவில் அந்தணர் வாழும்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : நீர் பெருகிப் பாயும் ஓசையுடைய கங்கையும், ஆடுகின்ற அரவமும், பிறைச் சந்திரனும் சடை முடியில் சூடி, உமாதேவியைத் திருமார்பில் பாகமாக வைத்து, விளங்குகின்றவர் ஈசன் அப்பெருமான், வேதத்தின் ஒலியும் வேள்வி புரியும் மந்திரத்தின் ஒலியும் எழக் குறைவற்ற அந்தணர்கள் வாழும் கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் அமர்ந்துள்ளவர்

964 கண்ணத்தர் தோலொடு நூல்சேர்
மார்பினர் துன்னிய பூத
கண்ணத்தர் வெங்கனல் ஏந்திக்
கங்குல்நின்று ஆடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி
அறாதவர் மால்எரி ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : ஈசன், திருநீறு அணிந்த திருமேனி உடையவர்; புலித்தோலை ஆடையாகக் கொண்டவர்; முப்புரிநூல் திகழும் மார்பினர்; பூத கணங்கள் சூழ்ந்து விளங்க, வெம்மை பெருகும் நெருப்பைக் கரத்தில் ஏந்தி, இருளில் நின்று நடம் புரிபவர் அப்பெருமான் எத்தகையோருக்கும் கேடு பயக்காத நெஞ்சினராய் வேதங்களை நன்கு கேட்டுக் கனிவுற்ற கேள்வி ஞானமும், நல்வேள்வி ஆற்றும் புனிதமும், பெருமை மிக்க எரியாகிய ஓமப்புகை ஓம்பும் அருள் தன்மையும் மேவி அழகுடன் பொலியும் அந்தணர்கள் வாழும் கொச்சை வயம் என்னும் பதியில் அமர்ந்திருப்பவர்

965 பாலை யன்னவெண் ணீறு
பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத
மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம்
வெண்திரை கரைமிசை விளங்கும்
கோல மாமணி சிந்தும்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : ஈசன், பால்போன்ற திருவெண்ணீறு பூசுபவர்; பல சடைகள் தாழ்ந்து பரவி, விளங்குமாறு இரவில் நடம்புரிபவர்; வேத கீதங்கள் பாடிப் போற்ற மகிழ்வு கொள்பவர் அப் பெருமான், கடலலைகளின் ஓதம் கரையின் மீது விளங்க, அழகிய முத்துக்களும் சங்கு மணிகளும் சிதறி வளம் கொழிக்கும் கொச்சை வயம் என்னும் பதியில் அமர்ந்திருப்பவர்

966 கடிகொள் கூவிள மத்தம்
கமழ்சடை நெடுமுடிக்கு அணிவர்
பொடிகள் பூசிய மார்பில்
புனைவர்நன் மங்கையொர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின்
ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிகள் ஓங்கிய மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : ஈசன், நறுமணம் கமழும் வில்வமும், ஊமத்த மலரும், வாசனை கமழும் நீண்ட முடியில் அணிபவர்; திருநீறு பூசிய திருமார்பில், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு திகழ்பவர் அப்பெருமான், மங்கல மணம் காட்டும் நெடிய சங்கின் ஒலியும் வேதத்தினை ஓதும் ஒலியும் கலந்து மேவி, வண்ணக் கொடிகளும் தோரணங்களும் ஓங்கிய மாட மாளிகைகள் திகழும் கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்திருப்பவர்

967 ஆடல் மாமதி யுடையார்
ஆயின பாரிடம் சூழ
வாடல் வெண்தலை யேந்தி
வையகம் இடுபலிக்கு உழல்வார்
ஆடல் மாமட மஞ்ஞை
அணிதிகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : பெருமையான சந்திரனையுடைய ஈசன், ஆடுகின்ற பூத கணங்கள் சூழ, பிரம கபாலத்தைக் கரத்தில் ஏந்தி, உலகத்தவர் இடுகின்ற பிச்சை ஏற்க உழல்பவர் அப்பெருமான், ஆடலில் வல்ல மயில் அணி திகழும் பெடையுடன் ஆடிக் குளிர்ச்சியான பொழில் சூழ்ந்து மேவும் கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்தவர்

968 மண்டு கங்கையும் அரவு
மல்கிய வளர்சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர்
தொல்வரை வில்லது வாக
விண்ட தானவர் அரணம்
வெவ் வழல் எரிகொள விடைமேல்
கொண்ட கோலமது உடையார்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : கங்கை தரித்து, அரவு மல்கிய சடை முடியின் மீது வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடியவர், ஈசன் அவர், தொன்மை வழங்கும் மேரு மலையை வில்லாகக் கொண்டு, பகைத்து எழுந்த முப்புர அசுரர்களின் மதில்கள் எரிந்து சாம்பல் ஆகுமாறு புரிந்து, இடபவாகனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலம் உடையவர் அப்பெருமான் கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்திருப்பவர்

969 அன்றவ் ஆல்நிழல் அமர்ந்து
அறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டில்
உண்பது பொருகடல் இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க
ஊன்றிய விரலினர் வான்தோய்
குன்றம் அன்னபொன் மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : கல்லால மரத்தின் நிழலில் தட்சிணாமூர்த்தியாகத் திருக்கோலம் தாங்கி வீற்றிருந்து, சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் உண்மையை அருள்செய்து, பிரம கபாலம் ஏந்திப் பிச்சை கொண்டு உண்டு, வெற்றியே உடைய இராவணனை நுடங்குமாறு திருவிரலால் ஊன்றியவர், ஈசன் அப்பெருமான், வானைப் பரவும் உயர்ந்த, குன்று போன்ற உறுதி மிக்க அழகிய மாட மாளிகையுடைய கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்தவர்

970 சீர்கொள் மாமல ரானும்
செங்கண்மால் என்றிவர் ஏத்த
ஏர்கொள் வெவ்வழல் ஆகி
எங்கும் உறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப்
பண்பினர் பால்மொழி யோடும்
கூர்கொள் வேல்வலன் ஏந்திக்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : சீர்மிக்க தாமரை மலர்மீது விளங்கும் பிரமனும் திருமாலும் ஆகிய இவர்கள் ஏத்துமாறு, பெருமையுற்று ஓங்கும் அழலாய் விளங்கி, எல்லா இடங்களிலும் பரவி வீற்று விளங்குபவர் ஈசன் அவர், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு, சூலப்படையைத் திருக்கரத்தில் ஏந்திக் கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்தவர்

971 குண்டர் வண்துவர் ஆடை
போர்த்ததொர் கொள்கையி னார்கள்
மிண்டர் பேசிய பேச்சு
மெய்யல மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும்
பண்பினர் ஒண்கொடி யோடும்
கொண்டல் சேர்மணி மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும், முறையற்ற தன்மையில் பேசுகின்ற சொற்கள் மெய்யல்ல கரிய கண்டத்தையுடைய ஈசன், பழைய வினையாகிய சஞ்சித கன்மத்தைத் தீர்த்து அருள் புரியும் கருணைப் பண்பு உடையவர் அப் பெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு மேகம் சூழ விளங்கும் மணி மாடங்களையுடைய கொச்சைவயம் என்னும் பதியின் கண் அமர்ந்தனர்

972 கொந்து அணிபொழில் சூழ்ந்த
கொச்சை வயநகர் மேய
அந்த ணன்அடி யேத்தும்
அருமறை ஞானசம் பந்தன்
சந்தம் ஆர்ந்துஅழ காய
தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும்
புகவலர் முனைகெட வினையே

தெளிவுரை : கொத்தாகப் பூக்கின்ற பொழில் சூழ்ந்த கொச்சைவயம் என்னும் நகரில் மேவிய ஈசன் திருவடி ஏத்துகின்ற, அருமறைவல்ல ஞானசம்பந்தர், சந்தம்பதிந்த அருளழகு மிளிர உரைத்த இத்தண்டமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வானுலகை அடைந்து நலங்கள் யாவும் முந்திப் பெறுவார்கள்; மற்றும் வினை யாவும் நீங்கப் பெற்றவராய் சிவப்பேற்றினையுறுவர்

திருச்சிற்றம்பலம்

226 நெல்வாயில் அரத்துறை (அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

973 எந்தை ஈசன்எம் பெருமான்
ஏறமர் கடவுள்என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால்
சென்றுகை கூடுவது அன்றால்
கந்த மாமலர் உந்திக்
கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : எந்தை ஈசன், எம்பெருமான்; இடப வாகனத்தில் வீற்றிருக்கும் கடவுள் என்று போற்றிச் சிந்தனை செய்து வணங்குபவர்களுக்க அல்லாது, ஏனையோருக்குக் கைகூடி நன்மை பயப்பது இல்லை மணம் மிக்க சிறப்பான மலர்களை உந்திக் கடுமையான வேகத்தில் பெருகி வரும் நீர் உடைய நிவா என்னும் ஆற்றின் கரைமேல் அழகிய குளிர்ச்சியான சோலை விளங்கும் நெல்வாயில்அரத்துறையில் வீற்றிருக்கும் ஈசன் அருளே அத்தகையவற்றைச் செய்விக்கவல்லது

974 ஈர வார்சடை தன்மேல்
இளம்பிறை அணிந்தஎம் பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச்
சிதடர்கள் தொழச்செல்வது அன்றால்
வாரி மாமலர் உந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆரும் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள் தம் அருளே

தெளிவுரை : கங்கை தரித்தமையால் தண்மை கொண்டு விளங்கும் ஈரமாக உள்ள சடையின்மீது பிறைச்சந்திரனை அணிந்த எம்பெருமானுடைய பெருமைமிக்க அருளைப் போற்றாத அறிவிலிகளுக்குக் கைகூடுவது யாதும் அன்று மலர்களை வாரிக் குவித்து உந்தி வரும் நீர் மிக்க நிவா என்னும் ஆற்றின் கரைமேல் பொருந்திய சோலை சூழ்ந்த நெல்வாயின் அரத்துறையில் விளங்கும் அடிகள் தம் திருவருளே கருணை பொழிய வல்லது

975 பிணிக லந்தபுன் சடைமேல்
பிறையணி சிவனெனப் பேணிப்
பணிக லந்துசெய் யாத
பாவிகள் தொழச் செல்வது அன்றால்
மணிக லந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணிக லந்தநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : பிணிக்கப்பட்டு மென்மையாக விளங்கும் சடை முடியின்மீது பிறைச் சந்திரனை அணிந்து விளங்கும் சிவபெருமானைப் பணியாதவர்கள், பாவம் மிக்கவர்களாய்த் தொழுது போற்றுபவர் அல்லர் மணியும் பொன்னும் உந்தி வரும் நீர் பெருகும் நிவா என்னும் ஆற்றின் கரைமேல் அணி கலந்து விளங்கும் நெல்வாயின் அரத்துறையில் வீற்றிருக்கும் ஈசன் அருளே யாவும செய்யவல்லது

976 துன்ன ஆடையொன்று உடுத்துத்
தூயவெண் ணீற்றினர் ஆகி
உன்னி நைபவர்க் கல்லார்
ஒன்றுங்கை கூடுவது அன்றால்
பொன்னு மாமணி யுந்திப்
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்னம் ஆருநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : தைக்கப்பெற்ற ஆடை உடுத்தித் தூயவெண்ணீறு அணிந்தவராய் விளங்குகின்ற ஈசனை, நினைத்து நைந்து, மனம் உருகி நிற்பவர்க்கு அல்லால், மற்றையோருக்குக் கைகூடுவது யாதும் இல்லை பொன்னும் மணியும் உந்திப் பெருகி வரும் நீர்மல்கும் நிவா என்னும் ஆற்றின் கரைமேல், அன்னப் பறவை திகழும் நெல்வாயில் என்னும் பதியில் மேவும் அரத்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் அருளே யாவும் நல்குவது ஆகும்

977 வெருகு உரிஞ்சுவெங் காட்டில்
ஆடிய விமலன்என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால்
ஒன்றும்கை கூடுவது அன்றால்
முருகு உரிஞ்சுபூஞ் சோலை
மொய்மலர் சுமந்திழி நிவாவந்து
அருகு உரிஞ்சுநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : காட்டுப் பூனை வாசம் புரியும் மயானத்தில் ஆடுகின்ற ஈசனை, மனத்தால் உருகி நினைப்பவர்களுக்கு அன்றி, ஏனையோருக்குக் கைகூடுதல் யாதும் இல்லை அழகு பொலியும் பூஞ்சோலையிலிருந்து மலர்கள் சிந்தி நிவா என்னும் ஆற்றில் வந்து அருகில் திகழும் நெல்வாயிலின்கண்  உள்ள அரத்துறையில் வீற்றிருக்கும் பெருமானின் அருளே யாவற்றையும் விளங்கச் செய்ய வல்லது ஆகும்

978 உரவு நீர்ச்சடைக் கரந்த
ஒருவன் என்று உள்குளிர்ந்து ஏத்திப்
பரவி நைபவர்க் கல்லால்
பரிந்துகை கூடுவது அன்றால்
குரவ நீடுயர் சோலைக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாறு நெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : கங்கையைச் சடையில் கரந்த ஒப்பற்ற ஈசனை உள்ளத்தால் குளிர்ந்து ஏத்திப் பரவிக் கசிந்து போற்றுபவர்க்கு அல்லாது, ஏனையோருக்குக் கை கூடுவது யாதும் இல்லை குரவமலர் நீண்டு விளங்கும் சோலை சூழ்ந்த, குளிர்ந்த நீர் பெருகும் நிவா என்னும் ஆற்றின் கரைமேல் ஒலித்து முழங்கும் நெல்வாயிலின் அரத்துறையில் வீற்றிருக்கும் பரமனின் அருளேயாண்டும் கைகூடும் வண்ணத்தைத் தரவல்லது

979 நீல மாமணி மிடற்று
நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லால்
சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமலர் உந்திக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆளும் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : நீலகண்டனாக விளங்குகின்ற, திருவெண்ணீறு அணிந்த சிவனே எனப் போற்றும் சீலம் மிக்க அடியவர்களுக்கு அன்ணி, ஏனையோருக்கு எப்பரிசும் சென்று அடைவது இல்லை பெருமை மிக்க மலர்களை உந்திக் கொண்டுவரும் நீர்மல்கிய நிவா என்னும் ஆற்றின் கரையில் ஆட்சி கொண்டு சிறப்பாக மேவும் சோலை சூழ்ந்து விளங்கும் நெல்வாயின் அரத்துறையில் வீற்றிருக்கும் பெருமானின் இனிய அருளேயாவற்றையும் சேர்க்க வல்லது

980 செழுந்தண் மால்வரை யெடுத்த
செருவலி இராவணன் அலற
அழுந்த வூன்றிய விரலான்
போற்றிஎன் பார்க்கல்லது அருளான்
கொழுங்க னிசுமந்து உந்திக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : பெருமை மிக்க கயிலை மலையை எடுத்த போர் செய்யும் வன்மையுடைய இராவணன் அலறிநையுமாறு அழுந்த ஊன்றிய திருப்பாத விரலுடைய தன்னைப் போற்றித் துதித்து வணங்குபவர்களுக்கு அல்லாது, ஏனையோர்க்கு அருள்புரியாத பெருமான், சிவன் பழுத்த கனிகளை, நீரில் கொண்டு சேர்க்கும் குளிர்ந்த புனல் மேவும் நிவா என்னும் ஆற்றின் கரையில் நன்கு விளங்கும் சோலை சூழ்ந்த நெல்வாயில் என்னும் பதியில் மேவும் அரத்துறையில் வீற்றிருக்கும் எம் இறைவனின் இனிய அருளே யாவும் நிகழச் செய்ய வல்லது ஆகும்

981 நுணங்கு நூலயன் மாலும்
இருவரு நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால்
வந்துதை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துø அடிகள்தம் அருளே

தெளிவுரை : நன்றாக  நுணுக்கமான வேதத்தைக் கற்ற பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும், நோக்குவதற்கு அரியவனாகிய ஈசனை, கசித்துருகித் தோத்திரம் செய்பவர்களுக்கு அன்றி, மற்றையோர்களுக்கு வந்து கூடப்பெறுதல் இல்லை மணங்கமழும் சிறப்பும் பொன்னை உந்தித் தள்ளும் வளமும் உடைய நிவா என்னும் ஆற்றங்கரையில், அண்மையாய் விளங்கும் சோலையுடைய நெல்வாயின்அரத்துறையில் மேவும் ஈசனின் அருளே யாவற்றையும் செய்விக்க வல்லது

982 சாக்கியப் படு வாரும்
சமண்படு வார்களு(ம்) மற்றும்
பாக்கியப் படகில்லாப்
பாவிகள் தொழச்  செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப்
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் பாக்கியம் அற்றவர்களாய், பாவத்தை உடையவர்களாய் ஈசனைத் தொழுவது இல்லை பூக்கள் கமழ்ந்து விளங்கும் நிவா என்னும் ஆற்றில் பென்னுந்தி வரச் சோலைகளும் ஆர்த்துமேவும் நெல்வாயின்அரத்துறையில் வீற்றிருக்கும் பெருமானே யாவும் திகழ, விளங்கப் புரிபவன்

983 கறையி னார்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த
அரத்துறை அடிகள்தம் மருளை
முறைமை யாற்சொன்ன பாடல்
மொழியு மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுற வில்லைப்
பாட்டிவை பத்தும்வல் லார்க்கே

தெளிவுரை : அடர்த்தியான பொழில் சூழ்ந்த காழியில் விளங்கும் ஞானசம்பந்தர், ஒலி மிகும் பூம்புனல் சிறப்பான தன்மையில் விளங்கும் அரத்துறை நாதனின் இனிய அருளை, முறையுடன் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தமது வினையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர்

திருச்சிற்றம்பலம்

227 திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

984 பொங்கு வெண்மணற் கானல்
பொருகடல் திரைதவழ் முத்தம்
கங்குல் ஆரிருள் போழும்
கலிமறைக் காடமர்ந் தார்தாம்
திங்கள் சூடின ரேனும்
திரிபுரம் எரித்தன ரேனும்
எங்கும் எங்கள் பிரானார்
புகழலது இகழ்பழி யிலரே

தெளிவுரை : வெண் மணலும், கடற்கரைச் சோலைகளும், பொங்கும் அலைகள் கரையைப் பெருது சேரும் கடலும், கரைகளில் ஒளிரும் முத்துக்களும் விளங்க, இரவின் இருளிலும் ஒலிக்கும் வேதங்களை ஓதும் மறைக்காட்டில் அமர்ந்து மேவும் ஈசன், சந்திரனைச் சூடியவராயினும், முப்புரங்களை எரித்தவராயினும், எல்லா இடங்களிலும் புகழுக்கு உரிய தலைவர் ஆவார் அவருக்கு இகழ்ச்சியோ பழியோ இல்லை

985 கூனி ளம்பிறை சூடிக்
கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிளர் ஐந்தும்
ஆடுவர் பூண்பதும் அரவம்
கான லங்கழி யோதம்
கரையோடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத்
திருமறைக் காடமர்ந் தாரே

தெளிவுரை : வளைந்த பிறைச் சந்திரனைச் சூடி, புலியின் தோலை உடுத்தும் ஆடையாகக் கொண்டு, பசுவிலிருந்து தோன்றும் பால் தயிர் முதலான பஞ்சகவ்வியத்தை அபிடேகப் பொருளாக ஏற்று மகிழ்ந்து ஆடுகின்ற ஈசன், ஆபரணமாகப் பூண்பது அரவம் ஆகும் அப்பெருமான், சோலைகளும், உப்பங்கழிகளும் கடல் ஓதத்தில் திகழவும், ஒளிதிகழும் மணிகளும், தேன் மணக்கும் சோலைகளும் மல்கும் திருமறைக்காடு என்னும் பதியில் வீற்றிருப்பவர்

986 நுண்ணி தாய்வெளி தாகி
நூல்கிடந்து இலங்குபொன் மார்பில்
பண்ணி யாழென முரலும்
பணிமொழி உமையொரு பாகன்
தண்ணி தாயவென் ளருவி
சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார்
கலிமறைக் காடமர்ந் தாரே

தெளிவுரை : மென்மையுடையதாகவும் வெண்மை உடையதாகவும் திகழும் முப்புரிநூல் அழகிய மார்வில் விளங்க, யாழின் இசையென மேவும் பண்மொழியுடைய உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர், ஈசன் அப்பெருமான், அருவியானது சலசல எனப் பாய்ந்து நீர்வளத்தைப் பெருகச் செய்ய, பிறைச் சந்திரனைத் தரித்து திருமறைக் காட்டில் வீற்றிருக்கின்றார்

987 ஏழை வெண்குருகு அயலே
இளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்கும்
தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை அங்கயல் ஒண்கண்
மலைமகள் கணவனது அடியின்
நீழ லேசர ணாக
நினைபவர் வினைநலிவு இலரே

தெளிவுரை : அறிவற்ற வெண் நாரையானது, தாழை மடலைத் தனது பெடையெனக் கருதி நாடும் குளிர்ச்சி மிக்க மறைக்காட்டில் வீற்றிருப்பவர், ஈசன் அப்பெருமான் இளமை மிக்க கயல்போன்ற கண்ணுடைய மலைமகளின் நாதன் அவர்தம் திருவடியைச் சரணம் கொண்டு ஏத்தி வழிபடுபவர்களுக்கு வினையால் நேரும் நலிவு இல்லை

988 அரவம் வீக்கிய அரையும்
அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாம் செய்த பாவம்
பறைதர அருளுவர் பதிதான்
மரவ நீடுயர் சோலை
மழலை வண்டு யாழ்செயு மறைகாட்டு
இரவும் எல்லியும் பகலும்
ஏத்துதல் குணமெனல் ஆமே

தெளிவுரை : அரவத்தை இடுப்பில் கட்டி, அதிரும் ஒலி தரும் கழல் திருப்பாதத்தில் அணிந்து மேவி நாம்  செய்த பாவங்களைத் தீர்த்து அருளும் ஈசன் வீற்றிருக்கும் பதியானது, குங்கும மரங்கள் நிறைந்த சோலைகளில் வண்டுகள் யாழிசை செய்யும் திருமறைக்காடு ஆகும் அப் பதியில் இரவும், காலை மாலை ஆகிய சந்திகளிலும், பகற்காலங்களிலும் ஈசனைப் போற்றி வணங்குதல் நற்குண வயம் ஆகும்

989 பல்லில் ஓடுகை யேந்திப்
பாடியும் ஆடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும்
அழகியது அறிவர்எம் அடிகள்
புல்லம் ஏறுவர் பூதம்
புடைசெல வழிதர்வர்க்கு இடமாம்
மல்கு வெண்திரை யோத
மாமறைக் காடது தானே

தெளிவுரை : மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பிச்சை ஏற்றுத் திரியும் அல்லல் மிக்க வாழ்க்கை உடையவராயினும், அழகிய ஒன்றாகக் கருதும் ஈசன், இடபத்தில் ஏறி வீற்றிருப்பவர் அப்பெருமான், பூதகணங்கள் புடைசூழப் போந்து விளங்கும் இடமாவது, கடலலைகளின் ஓதம் கொண்டு விளங்கும் பெருமை மிக்க மறைக்காடு ஆகும்

990 நாகந் தான் கயிறாக
நளிர்வரை அதற்கு மத் தாகப்
பாகந் தேவரொடு அசுரர்
படுகடல் அளறெழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே
வெருவொடும் இரிந்தெங்கும் ஓட
ஆகந் தன்னில் வைத் தமிர்தம்
ஆக்குவித் தான்மறைக் காடே

தெளிவுரை : வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் தேவரும் அசுரரும் சரி பாகமாகப் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சைக் கண்டு எல்லாரும் அஞ்சி ஓட, அதனைக் கண்டத்தில் வைத்து அமிர்தத்தை நல்கி அருள்புரிந்த ஈசன் மறைக்காட்டீசர் ஆவார்

991 தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்
தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை
எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன்திரு விரலால்
ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும் விட் டலறப்
பரிந்தவன் பதிமறைக் காடே

தெளிவுரை : ஈசன், தக்கனுடைய தீய வேள்வியைத் தகர்த்த பரமன் அப்பெருமையை எண்ணிப் பார்த்துத் துதிக்காது, மேற்சென்று கயிலை மலையை எடுத்து மலைமகளை வெருவுமாறு செய்த அரக்கனாகிய இராவணனை, வாய்விட்டு அலறி அழுமாறு திருப்பாத விரலால் ஊன்றிப் பின்னர் அருள் செய்தவன் ஈசன் அவன் விளங்குகின்ற பதி மறைக்காடு ஆகும்

992 விண்ட மாமல ரோனும்
விளங்கொளி அரவணை யானும்
பண்டும் காண்பரி தாய
பரிசினன் அவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதம்
கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை
மாமறைக் காடது தானே

தெளிவுரை : நன்று மலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், ஒளிமிக்க அரவத்தை அணையாகக் கொண்ட திருமாலும் காண்பதற்கு அரியவனாகிய ஈசன் உறைகின்ற பதியானது, தாழை மடல்கள் உப்பங்கழியின் ஓதம் விளங்கக் கரையில் ஒளி திகழும் சங்கு, முத்து மணிகள் விரவ வண்டுகள் மணம் மிகும் சோலையில் திகழ மேவும் மறைக்காடு ஆகும்

993 பெரிய வாகிய குடையும்
பீலியும் அவைவெயில் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக்
கல்லென வுழிதரும் கழுக்கள்
அரிய வாகவுண் டோதும்
அவர்திறம் ஒழிந்துநம் மடிகள்
பெரிய சீர்மறைக் காடே
பேணுமின் மனமுடை யீரே

தெளிவுரை : பெரி குடையும் மயிற் பீலியும் உடைய சமணர், சாக்கியர்தம் உரைகள் திறமற்றவையாகும் அவற்றைத் தவிர்த்து, நன்மனம் உடையவர்களே ! மறைக்காட்டில் விளங்கும் ஈசனைப் பேணிப் போற்றுவீராக

994 மையு லாம்பொழில் சூழ்ந்த
மாமறைக் காடமர்ந் தாரைக்
கையினாற் றொழு தொழுவான்
காழியுள் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்தும்
சிந்தையுள் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும்
புகவலர் கௌவலர் புகழே

தெளிவுரை : மேகம் திகழ்ந்து உலவுகின்ற பொழில் சூழ்ந்த பெருமை மிக்க மறைக்காட்டில் அமர்ந்த நாதரைக் கைகளால் கூப்பித் தொழுகின்ற, காழிப் பதியின் ஞானசம்பந்தன் செய்த இத் திருப்பதிகத்தைச் சிந்தையில் சேர்த்து ஓதவல்லவர்கள், பொய்ம்மையை நீத்த வானவருடன் திகழ வல்லவராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குவார்கள்

திருச்சிற்றம்பலம்

228 திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் (அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

995 பட்டம் பால்நிற மதியம்
படர்சடைச் சுடர்விடு பாணி
நட்ட நள்ளிருள் ஆடு
நாதன் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையொடு ஆடும்
பூம்புக லூர்த் தொண்டர் போற்றி
வட்டம் சூழ்ந்தடி பரவும்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : பட்டுப்போன்ற மென்மையும் பால் போன்ற வெண்மையும் கொண்டு விளங்கும் சந்திரனைப் படர்கின்ற சடை முடியில் சூடிச் சுடர் விட்டு ஒளிரும் செவ்வியாய், நள்ளிருளில் நடனம் ஆடுகின்ற நாதன் அருள் வழங்குகின்ற கோயிலானது, பறவை தன் பேடையுடன் மகிழ்ந்து ஆடும் பூம்புகலூர் ஆகும் ஆங்குத் தொண்டர்கள் குழுமித் திருவடியைப் போற்றிப் பரவத் திகழ்ந்து விளங்குபவர் வர்த்த மானீச்சரத்தார்

996 முயல்வ ளாவிய திங்கள்
வாள்முகத்து அரிவையின் தெரிவை
இயல்வ ளாவிய துடைய
இன்னமுது எந்தைஎம் பெருமான்
கயல்வ ளாவிய கழனிக்
கருநிறக் குவளைகண் மலரும்
வயல்வ ளாவிய புகலூர்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : முயல் வடிவம் காட்டும் நிழல் கொண்ட சந்திரன் போன்ற ஒளிமிக்க முகத்தை உடைய அரிவை மற்றும் தெரிவை ஆகிய இயல்புடைய உமாதேவியை உடனாகக் கொண்டு இனிய அமுதாக விளங்குபவர் எந்தை எம்பெருமான் அப்பெருமான் கயல் பெருகித் திகழும் கழனிகளில் கரிய நிறக் குவளைகள் மலரும் வயல் பரப்புகள் மிக்க புகலூரில் விளங்கும் வர்த்த மானீச்சரத்தார் ஆவார்

997 தொண்டர் தண்கய மூழ்கித்
துணையாலும் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டாடி பரவிக்
குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக்
களிபரந்து ஒளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : குளிர்ந்த தீர்த்தத்தில் நீராடி மாலை சந்தனம், புகை (தூபம்) முதலானவற்றைக் கொண்டு அடிபரவத் தொழுகின்ற முருகநாயனாரின் திருக்கோலத்தையும், திருத்தொண்டும் கண்டு மகிழ்ந்து விளங்குபவர், வண்டுகள் இசைபாடும் புகலூர் வர்த்த மானீச்சரத்தார்

998 பண்ண வண்ணத்த ராகிப்
பாடலொடு ஆடல்அ றாத
விண்ண வண்ணத்தர் ஆய
விரிபுக லூரர்ஓர் பாகம்
பெண்ண வண்ணத்தர் ஆகும்
பெற்றியோடு ஆண்இணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : பண்ணின் வண்ணத்தினராகவும் பாடலொடு ஆடலும் நிகழ்த்துபவராகவும் அட்ட மூர்த்தங்களில் ஆகாயமாகிய திருக்கோலமும், புகலூரில் உமையொரு கூறாக விளங்கும் அர்த்த நாரியெனும் ஆணும் பெண்ணும் இணையப்பெற்ற பெண் வண்ணம் உடை அம்மையப்பராகவும், கொண்ட வண்ணத்தினர் எம்பெருமானாகிய வர்த்தமானீச்சரத்தார் ஆவார்

999 ஈசன் ஏறமர் கடவுள்
இன்னமுது எந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர்
பொலிவுடைப் பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை
முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமலர் உடையார்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : ஈசன் இடப வாகனத்தில் அமரும் கடவுள்; இனிய அமுதம் போன்றவர்; எந்தையாகிய எம் பெருமான்; மாசில் வெண்ணீறு மேனியர்; முப்போதும் முருக நாயனாரால் கொன்றை மலரை முடிமேல் சூட்டப் பெற்றவர் அவர் வர்த்த மானீச்சரத்தார் ஆவார்

1000 தளிரி ளங்கொட்ட வளரத்
தண்கயம் இரியவண் டேறிக்
கிளரி ளம்முழை நுழையக்
கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரும்
ஒளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : மென்மையான கொடிகள் வளர்ந்து மேவி விளங்கக் குளிர்ந்த நீர் நிலைகளில் சூழ்ந்து வண்டுகள கிளர்ந்து சுற்ற, மான்குட்டிகள் நுழைந்து செல்லும் பொழில் விளங்கும் புகலூரில் விளங்கும் மெல்லிய சுனையின் ஒளி போன்று சடை முடியில் பிறைச் சந்திரனை உடையவர் வர்த்தமானீச்சரத்தார் ஆவார்

1001 தென்சொல் விஞ்சமர் வடசொல்
திசைமொழி எழில்நகரம் பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத்
தொழுதெழ தொல்புக லூரில்
அஞ்ச னம்பிதிர்ந் தனைய
அலைகடல் கடையஅன் றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : அழகிய தமிழ்ச் சொல்லால் விளங்கும் தோத்திரப் பாடலாலும், விஞ்சி விளங்கும் உயர்ந்த சொல்லாகிய வேதத்தினாலும், மற்றும் குறிப்பாகத் தெரிவிக்கப்படும் வட்டாரத்தில் வழங்கப்பெறும் சொற்களாலும் மனத்தின் இருளும் தீங்கும் நீங்குமாறு போற்றித் தொழும் தொன்மையான புகலூரில், மை போன்ற கரிய தன்மையுடன் பாற்கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் அணியாகக் கொண்டவர் வர்த்தமானீச்சரத்தில் கோயில் கொண்டுள்ள ஈசன் ஆவார்

1002 சாம வேதமொர் கீதம்
ஓதியத் தசமுகன் பரவும்
நாம தேயமது உடையார்
நன்குணர்ந்து அடிகள்என்று ஏத்தக்
காம தேவனை வேவக்
கனலெரி கொளுரிய கண்ணார்
வாமதேவர் தண் புகலூர்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : சாமவேதத்தை ஓதிய பத்துத் தலைகளை உடைய இராவணன் பரவும் திருநாமத்தை உடையவர், ஈசன் அவர் அடிகள் என்று நன்குணர்ந்து யாவராலும் ஏத்தப் பெறுபவர்; மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் எரித்தவர்; வாமதேவர் எனப் போற்றப்படுபவர் அப்பெருமான் குளிர்ச்சி மிக்க புகலூரில் வர்த்தமானீச்சரத்தில் வீற்றிருப்பவர்

1003 சீர ணங்குற நின்ற
செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத் தழிய
நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறும் உமையை
அஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும் காணாது கருத்தழிய நின்ற சடை முடியுடைய ஈசன், உமாதேவி வெருவுமாறு  யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர் அப்பெருமான் வர்த்தமானீச்சரத்தில் வீற்றிருப்பவர் ஆவார்

1004 கையில் உண்டுழல் வாரும்
கமழ்த்துவர் ஆடையி னால்தம்
மெய்யைப் போர்ததுழல் வாரும்
உரைப்பன மெய்யென விரும்பேல்
செய்யில் வாளைக ளோடு
செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைப்பன மெய்ம்மை என்று கொள்ளற்க வயல்களில் வாளைகளும் கயல்களும் குதித்து விளங்கும் புகலூரில் கரிய கண்டத்தையுடைய எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தில் மேவி விளங்குபவர் அவரைத் தொழுது போற்றுக

1005 பொங்கு தண்புனல் சூழ்ந்து
போதணி பொழில்புக லூரில்
மங்குல் மாமதி தவழும்
வர்த்தமா னீச்சரத் தாரைத்
தங்கு சீர்திகழ் ஞான
சம்பந்தன் தண்டமிழ் பத்தும்
எங்கும் ஏத்தவல் லார்கள்
எய்துவர் இமையவர் உலகே

தெளிவுரை : குளிர்ந்த நீரும், மலர்கள் விளங்கும் பொழில் உடைய புகலூரில், திங்கள் தவழும் வர்த்தமானீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனைச் சீர்திகழும் ஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இத் திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்கள், தேவர்களின் உலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள்

திருச்சிற்றம்பலம்

229 திருத்தெங்கூர் (அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தங்கூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1006 புரைசெய் வல்வினை தீர்க்கும்
புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை
உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய்து ஆரழல் ஊட்டி
உழல்பவர் இடுபலிக்கு எழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : குற்றத்தை உண்டாக்குகின்ற கொடிய வினையைத் தீர்க்கும் புண்ணியராக விளங்குபவர் சிவபெருமான் அப்பெருமான், தேவர்கள் எல்லாம் போற்றித் துதிக்கப் பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டவர்; பகைத்துத் திரிந்த முப்புரங்களை வெந்து சாம்பலாகுமாறு செய்தவர்; கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர் அவர் நறுமணம் கமழும் அழகிய பொழில் விளங்கும் தெங்கூரில் வெள்ளி மலை அமர்ந்தவர்

1007 சித்தந் தன்னடி நினைவார்
செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் தாழ்சடை முடிமேல்
கோள்எயிற்று அரவொடு பிறையன்
பத்தர் தாம்பணிந் தேத்தும்
பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : சித்தத்தைத் தன்பால் செலுத்தித் தொழுகின்ற அடியவர்களின் துன்பத்திற்குக் காரணமாகிய கொடிய வினைகளைத் தீர்க்கின்ற சிவபெருமான், சடைமுடியில், வளைந்த பல்லுடைய அரவத்தோடு, பிறைச்சந்திரனைக் கொண்டு விளங்குபவர்; பக்தர்கள் தொழுது போற்றும் பரமன்; கங்கை தரித்த ஈசன் அப்பெருமான் பொழில்சூழ் தெங்கூரில் விளங்கும் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர்

1008 அடையும் வல்வினை யகல
அருள்பவர் அனலுடை மழுவாள்
படையர் பாய்புலித் தோலர்
பைம்புனல் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித்
தார்மணி யணிதரு தருகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : மன்னுயிரை அடைந்து வருத்தும் கொடிய வினையானது அகலும்படி அருள் புரிபவர், சிவ பெருமான் அவர், கனன்று ஒளிதிகழ் மழுவாட் படை உடையவர்; புலியின் தோலை ஆடையாகக் கொண்டுள்ளவர்; கங்கை தரித்தவர்; கொன்றை மலர் சூடியவர்; படரும் சடை முடியில் வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடியவர்; வலிமை மிக்க இடபத்தை வாகனமாக உடையவர் அப் பெருமான், எழில் மிகுந்த தெங்கூரில் விளங்கும் வெள்ளி மலையில் வீற்றிருக்கும் நாதன் ஆவார்

1009 பண்டு நான்செய்த வினைகள்
பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக்
குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமலர் ஊதி
மதுஉண இதழ்மறி வெய்தி
விண்ட வார்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : முற்பிறவிகளில் செய்த வினைகள் யாவும் கெட்டு நீங்குமாறு நன்கு ஓர்ந்து தியானம் செய்து உய்கின்ற நெறியினை அருள்புரிபவர் சிவபெருமான் அவர், சந்திரனைச் சூடியவர்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நீலகண்டனாகத் திகழ்பவர் அப் பெருமான் வண்டுகள் தேன் உண்பதற்காக ஊத மலர் விரியும் பொழில் திகழும் தெங்கூரில் வெள்ளி மலையில் அமர்ந்து இருப்பவர்

1010 சுழித்த வார்புனல் கங்கை
சூடியொர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச்
செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலை யேந்திக்
காமனது உடல்பொடி யாக
விழித்த வர்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : நீர்ச்சுழிகள் மிக்க கங்கையைச் சடை முடியில் தரித்து, காலனைக் காலால் உதைத்து வானவர்களையும் அயர்ந்து நடுங்குமாறு செய்தவர், சிவபெருமான் அப் பெருமான், கபாலம் ஏந்தி, மன்மதனுடைய உடலைத் தனது நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி எரித்துச் சாம்பலாக்கியவர்அவர் திருத்தெங்கூர் வெள்ளிய்கிரியில் அமர்ந்தவர்

1011 தொல்லை வல்வினை தீர்ப்பார்
கடலைவெண் பொடியணி கவண்டர்
எல்லி சூடிநின்று ஆடும்
இறையவர் இமையவர் ஏத்தச்
சில்லை மால்விடை யேறித்
திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : தொல்வினையாகிய சஞ்சிதம், பிராரத்தம் ஆகிய வலிமை மிக்க வினையைத் தீர்த்து அருள் புரியும் சிவபெருமான், சுடலையில் விளங்கும் திருவெண்ணீறு அணிபவர்; சந்திரனைச் சூடி நின்று நடம்புரியும் இறைவர்; தேவர்கள் தொழுது ஏத்த இடப வாகனத்தில் ஏறித் திரிபுரங்களைத் தீயில் கருகிச் சாம்பலாகுமாறு செற்று மேரு மலையை வில்லாகக் கொண்டவர் அப்பெருமான் திருத்தெங்கூரில் உள்ள வெள்ளிமலையில் வீற்றிருப்பவர் ஆவார்

1012 நெறிகொள் சிந்தைய ராகி
நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொள் மேனிமுக் கண்ணர்
முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளரவு அணிந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : சிவநெறியில் சிந்தையுடையவராகி அவ்வழியில் நின்று ஒழுகி நினைத்துப் போற்றும் அடியவர்களின் வினை யாவையும் கெடுமாறு அருள் புரிபவர் மென்மையான திருமேனியும், முக்கண்ணனும் உடைய சிவபெருமான் அவர் இளம் பிறைச் சந்திரனும், நடுங்கும்படி படம் கொண்டு விளங்கும் அரவமும் அணிந்த புண்ணியர் அப்பெருமான், திருமேனியில் திருவெண்ணீறு திகழ, மணம் கமழும் பூம்பொழில் சூழ்ந்த தெங்கூரில் மேவும் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர்

1013 எண்ணி லாவிறல் அரக்கன்
எழில்திகழ் மால்வரை எடுக்கக்
கண்ணெ லாம்பொடிந் தலறக்
கால்விரல் ஊன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனல் கண்ணி
தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணு லாம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : எண்ணற்ற ஆற்றலையுடைய இராவணன், எழில் திகழும் பெருமை கொண்ட கயிலை மலையைப் பேர்த்து எடுக்க, கனன்று அவன் கலங்கிக் கசிந்து அலறும் தன்மையில் திருப்பாதவிரலை ஊன்றிய சிவபெருமான், தண்மை மிக்க, கங்கை தரித்த சடைமுடியுடைய சர்வ வல்லமையுடையவர் அவர் விண்ணை முட்டும் உயர்ந்த பொழில் உடைய தெங்கூரில் மேவும் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர்

1014 தேடித் தானயன் மாலும்
திருமுடி யடியினை காணார்
பாடத் தான் பல பூதப்
படையினர் சுடலையில் பலகால்
ஆடத் தான்மிக வல்லர்
அருச்சுனர்க் கருள்செயக் கருதும்
வேடத் தார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்மர்ந்தாரே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும், திருமுடியும் திருவடியும் காணாதவராகிய சிவபெருமான், பூதப் படைகள் பா, சுடலையில் பல்கால் ஆடுபவர் அவர், அர்ச்சுனருக்குப் பாசுபதம் என்னும் அத்திரத்தை அருள் செய்யக் கருதி, வேட்டுவ வடிவத்தைக் கொண்டு திருத்தெங்கூரில் மேவும் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர்

1015 சடங்கொள் சீவரப் போர்வைச்
சாக்கியர் சமணர்சொல் தவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும்
ஏத்துமின் இருமருப் பொருகைக்
கடங்கொள் மால்தளிற்று உரியர்
கடல்கடைந் திடக்கனன்று எழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : சமணர், சாக்கியர் கூறும் உரைகளைத் தவிர்மின் இப் பிறவியில் சேர்ந்து இடங்கொண்டு விளைவிக்கும் தீவினையைத் தீர்க்கும் ஈசன், மதம் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்தும், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அருந்தியும் விளங்கும் நீலகண்டர் அப்பெருமான் தெங்கூரில் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர் ஆவார்

1016 வெந்த நீற்றினர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்தம் ஆர்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞானசம் பந்தன்
சந்தம் ஆயின பாடல்
தண்டமிழ் பத்தும்வல் லார்மேல்
பந்த மாயின பாவம்
பாறுதல் தேறுதல் பயனே

தெளிவுரை : திருநீற்றுத் திருமேனியராகத் தெங்கூர் என்னும் பதியில் வெள்ளிமலையில் வீற்றிருக்கும் நாதரைப் போற்றி, நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தர் சந்தப் பாடல்களாகப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், தம்பால் பற்றியுள்ள பாவம் ஒழிய மேல் நிலையில் நற்பயனைக் கொள்வர்

திருச்சிற்றம்பலம்

230 திருவாழ்கொளிபுத்தூர் (அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1017 சாகை ஆயிரம் உடையார்
சாமமும் ஓதுவது உடையார்
ஈகை யார்கடை நோக்கி
இரப்பதும் பலபல உடையார்
தோகை மாமயில் அனைய
துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும்
வாழ்கொளிபுத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், வேத நூல் பகுதிகள் ஆயிரம் உடையவர்; சாமவேதம் ஓதுபவர்; கையில் கபாலம் பிச்சை கொள்பவர்; தோகை விரித்து ஆடும் சாயலையுடைய மயில் போன்ற உமாதேவியை ஒரு பாகம் கொண்டுள்ளவர் அப்பெருமான் வாகை மரத்தின் மணம் வீசும் வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1018 எண்ணில் ஈரமும் உடையார்
எத்தனை யோர்இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார்
மையுமொர் ஆயிரம் உடையார்
பெண்ணும் ஆயிரம் உடையார்
பெருமையொர் ஆயிரம் உடையார்
வண்ணம் ஆயிரம் உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், எண்ணத்தால் நினைத்து அறிய முடியாதவாறு அன்பு பூண்டு விளங்குபவர்; கணக்கற்ற அறநெறிகளை உடையவர்; ஆயிரம் கண்ணுடையவர் ஆயிரம் கரங்களுடன் விளங்குபவர்; ஆயிரம் சக்தியைக் கூறாகக் கொண்டு திகழ்பவர்; ஆயிரம் பெரும் புகழ்களை உடையவர்; ஆயிரம் வண்ணங்களை உடையவர் அவர் வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1019 நொடியொர் ஆயிரம் உடையார்
நுண்ணிய ராம்அவர் நோக்கும்
வடிவும் ஆயிரம் உடையார்
வண்ணமும் ஆயிரம் உடையார்
முடியும் ஆயிரம் உடையார்
மொய்குழ லாளையும் உடையார்
வடிவும் ஆயிரம் உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், ஆயிரம் துகள்களாக உடையவர்; நுண்ணிய நோக்குடையவர்; ஆயிரம் வடிவத்தை உடையவர்; ஆயிரம் வண்ணங்கள் உடையவர்; ஆயிரம் முடிகளை உடையவர்; உமாதேவியைப் பாகங் கொண்டு விளங்குபவர் அவர் வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1020 பஞ்சி நுண்துகில் அன்ன
பைங்கழல் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார்
கொந்தணி வேல்வலன் உடையார்
அஞ்சும் வென்றவர்க்கு அணியார்
ஆனையின் ஈருரி உடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையவர்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், பஞ்சின் துகில் போன்ற திருவடி உடையவர்; சடைமுடியில் கொத்தாக மலர் சூடி, விளங்கும் துகில் அணிந்து திகழ்பவர்; சூலப் படையுடையவர்; ஐம்புலன்களை வென்ற ஞானிகளுக்கு அண்மையானவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர்; வஞ்சிக் கொடிபோன்ற நுண்ணிய இடையுடைய உமாதேவியைப் பாகமாக உடையவர் அவர் வாழ்கொளி புத்தூரில் வீற்றிருப்பவர்

1021 பரவு வாரையும் உடையார்
பழித்திகழ் வாரையும் உடையார்
விரவு வாரையும் உடையார்
வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பதும் உடையார்
ஆயிரம் பேர்மிக உடையார்
வரமும் ஆயிரம் உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : பரவிப் போற்றும் தேவர்கள் திகழ விளங்கும் சிவபெருமான், பழித்து இகழ்ச்சியாகப் புகலும் தன்மையுடையவர்களையும் கொண்டுள்ளவர்; கலந்த மனத்துடையவர்களாய் அன்பு பூண்டு விளங்கும் மெய்யடியார்களை உடையவர்; திருநாமம் ஓராயிரம் உடைய அப்பெருமான், ஆயிரம் வரங்களைத் தருபவராய், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1022 தண்டும் தாளமும் சூழலும்
தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார்
கோலமும் பலபல உடையார்
கண்டு கோடலும் அரியார்
காட்சியும் அரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி யுடையார்
வாழ்கொளிபுத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், பூத கணங்கள் சூழ நடம்புரியும் செம்மையில், தண்டு, தாளம், குழல், தண்ணுமை முதலான கருவிகள் கொண்டுள்ளவர் திருக்கோலம் பல உடையவர்; கண்டு தரிசிப்பதற்கும் அரியவர்; திருக்காட்சிக்கு அரியதாகவும் தோற்றமும் கரத்தலும் கொண்டும் திகழ்பவர்; திருநீற்றுப் பச்சை என்னும் பத்திரத்தைக் கொண்டு விளங்கும் அப்பெருமான், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1023 மான வாழ்க்கையது உடையார்
மலைந்தவர் மதில்பரிசு அறுத்தார்
தான வாழ்க்கையது உடையார்
தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கையது உடையார்
நள்ளிருள் மகளிர்நின் றேத்த
வான வாழ்க்கையது உடையார்
வாழ்கொள் புத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், பெருமை மிக்க மனத்தில் விளங்கி வாசம் புரிபவர்; எதிர்த்துப் பகைகொண்டு மலைத்த முப்புர அசுரர்களை எரித்து அழித்தவர்; திருத்தலங்களில் வீற்றிருந்து வழிபடும் அடியவர்களுக்கு அருள் புரிபவர்; கரணத்தாலும் ஞானத்தாலும் ஆகிய தவ ஒழுக்கம் பூண்டு நாம் புகழ்ந்து ஏத்தி வழிபடப் பெறும் பெருஞானமாகத் திகழ்பவர்; தெய்வ மகளிர் ஏத்தச் சிறப்புடன் விளங்குபவர் அவர் வாழ்கொள்புத்தூரில் வீற்றிருப்பவர்

1024 ஏழு மூன்றுமொர் தலைகள்
உடையவன் இடர்பட அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி
விருப்பவர் பலபல உடையார்
கேழல் வெண்பிறை அன்ன
கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமும் உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : பத்துத் தலைகளையுடைய இராவணன் இடர் கொள்ளுமாறு திருப்பாத விரலால் அடர்த்த ஈசன், தக்கன் செய்த தீய வேள்வியை, விரும்பி அழித்தவர்; பலவிதமான விருப்பும் உடையவர்; பன்றியின் கொம்பும், வெண்பிறையும், நீலமணி மிடறும் கொண்டு விளங்குபவர் சாந்தம் எஞ்ஞான்றும் நிலவ விளங்கும் அப்பெருமான், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1025 வென்றி மாமல ரோனும்
விரிகடல் துயின்றவன் தானும்
என்றும் ஏத்துகை யுடையார்
இமையவர் துதிசெய விரும்பி
முன்றில் மாமலர் வாச
முதுமதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடலது உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : பெருமை திகழும் மலராகிய தாமரையில் விளங்கும் பிரமனும், பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலும் எக்காலத்திலும் ஏத்தும் சிறப்புடைய ஈசன், தேவர்களும் யோகிகளும் துதித்துப் போற்றி வழிபட வேண்டும் என்னும் விருப்பத்தை நிறைவு செய்யுமாறு, நறுமணமும் பூரண நிலவும் திகழ, பொழில் சூழ்ந்த தில்லையில் நடம்புரிதல் செய்தவர் அப் பெருமான் வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1026 மண்டை கொண்டுழல் தேரர்
மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக்
கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச்
கண்ணவெண் பொடியணிந்து எங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : தேரர்களும் சமணர்களும் பேசிய பேச்சுக்களைக் கொள்ளற்க ஒளி மிக்க வெண்திங்களைச் சூடித் திருவெண்ணீறு அணிந்து வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருக்கும் ஈசனைப் போற்றி உய்தி பெறுமின்

1027 நலங்கொள் பூம்பொழிற் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன்
வாழ்கொளி புத்தூர் உளானை
இலங்கு வெண்பிறை யானை
ஏத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி
நன்னெறி எய்துவர் தாமே

தெளிவுரை : குறைவற்ற மங்கலத்தைக் கொண்டு விளங்குகின்ற பூம்பொழில் சூழ்ந்த சீகாழியில் மேவும் நற்றமிழ் ஞானசம்பந்தர், வலிமை மிக்க மழுப்படை உடைய, வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருக்கும் சிவபெருமானை  இளம் பிறைச் சந்திரனைச் சூடி பரமனை, எத்திய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், குறைவற்ற மங்கலம் நிறைந்த சிந்தை உடையவராய், நன்னெறியாகிய சிவஞானத்தைப் பெறுவார்கள்

திருச்சிற்றம்பலம்

231 திருஅரசிலி (அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு, விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1028 பாடல் வண்டறை கொன்றை
பால்மதி பாய்புனல் கங்கை
கோடல் கூவிள மாலை
மத்தமும் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை
மருவிட வல்லியந் தோள்மேல்
ஆடல் மாகணம் அசைத்த
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : வண்டுகள் இசை மணக்க விளங்கும் கொன்றை மலரும், வெண்பிறைச் சந்திரனும், கங்கையும் வெண்காந்தள் மலரும், வில்வமாலையும், ஊமத்த மலரும் செஞ்சடையில் நிலவச் செய்து, மண்டையோடுகளை மாலையாகக் கொண்டு அணிந்து, உமாதேவியை உடனாகக் கொண்டு, பாம்பினை அரையில் அசைத்துக் கட்டிய ஈசன் வீற்றிருக்கும் இடம், அரசிலியாகும்

1029 ஏறு பேணிஅது ஏறி
இளமதக் களிற்றினை எற்றி
வேறு செய்ததன் உரிவை
வெண்புலால் கலக்கமெய் போர்த்த
ஊறு தேனவன் உம்பர்க்கு
ஒருவன்நல் ஒளிகொள்ஒண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : இடபத்தை மேன்மையாகக் கண்டு அதனை வாகனமாகக் கொண்டு, மதம் கொண்டு பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனியில் போர்த்துக் கொண்ட ஈசன், அன்பர்களுக்குத் தேன் போன்று இனிமையானவன்; தேவர்களுக்கு ஒப்பற்ற இறைவன்; நல்லொளியினை வழங்கும் ஒண்சுடரானவன்; திருமுடியில் கங்கை தரித்த பெருமான் அவர் வீற்றிருக்கும் இடம் அரசிலியாகும்

1030 கங்கை நீர்சடை மேலே
கதமிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாக(ம்)
மருவிய கொல்லைவெள் ளேற்றின்
சங்கை யாய்த்திரி யாமே
தன்னடி யார்க்கருள் செய்து
அங்கை யால்அனல் ஏந்தும்
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : சடை முடியில்மீது கங்கையைத் தரித்து, ஒளிதிகழும் அழகு மிக்க உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து, அடியவர்கள் மனத்திற்கு ஐயறவு நேராதவாறு எல்லாக் காலத்திலும் இனிய அருளைப் பொழிந்து, அழகிய திருக்கரத்தில் அனலை ஏந்தி விளங்குகின்ற ஈசனுக்கு இடமாக விளங்குவது, அரசிலி ஆகும்

1031 மிக்க காலனை வீட்டி
மெய்கடக் காமனை விழித்துப்
புக்க வூரிவு பிச்சை
உண்பது பொன்திகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில்
தவளவெண் ணீறணிந்து ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : காலனை வீழ்த்தி அடக்கி, மன்மதனை நெற்றிக் கண்ணால் விழித்துப் பொடியாக்கி, ஊர்களில் திரிந்து பிச்சை ஏற்று உண்டு, பொன் போன்ற கொன்றை மலர் தரித்துத் தகுந்த முப்புரி நூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீறு திகழ, ஆமையோடும் எலும்பு மாலையும் பூண்ட ஈசன் வீற்றிருக்கும் இடம், அரசிலியாகும்

1032 மானஞ் சும்மட நோக்கி
மலைமகள் பாகமு மருவித்
தானஞ் சாஅரண் மூன்றும்
தழல்எழச் சரமது துரந்து
வானஞ் சும்பெரு விடத்தை
உண்டவன் மாமறை யோதி
ஆனஞ் சாடிய சென்னி
அடிகளுக் கிடம்அர சிலியே

தெளிவுரை : மானின் விழிபோன்ற நோக்குடைய மலைமகளைப் பாகமாகக் கொண்டு, முப்புர அசுரர்களின் மாயைகளுக்கு அஞ்சாது அவற்றை நெருப்புக்கு இரையாக்கும் தன்மையில் அம்பு எய்தி, தேவர்கள் அஞ்சுமாறு தோன்றிய விடத்தை உண்ட சிவபெருமான், வேதங்களை விரித்துப் பசுவிலிருந்து உண்டாகும் பஞ்ச கவ்வியத்தைப் பூசனைப் பொருளாக ஏற்கின்றவர் அப் பெருமானுக்கு இடமாவது அரசிலி ஆகும்

1033 பரிய மாசுணம் கயிறாப்
பருப்பதம் அதற்குமத் தாகப்
பெரிய வேலையைக் கலங்கப்
பேணிய வானவர் கயைக்
கரிய நஞ்சது தோன்றக்
கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய ஆரமுது ஆக்கும்
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : பெரிய பாம்பாகிய வாசுகியைக் கயிறாகவும், மேருமலையை மத்தாகவும் பாற்கடலைக் கலங்கக் கடைந்த வானவர்கள், கொடிய நஞ்சு வெளிப்படக் கண்டு கலங்க, அதனை அரிய அமுதாகச் செய்விக்கும் பாங்கில் தான் அருந்தி உய்வித்த ஈசன், வீற்றிருப்பது அரசிலி ஆகும்

1034 வண்ண மால்வரை தன்னை
மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணும் தோளுதல் வாயு
நெரிதரக் கால்விரல் ஊன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பால்
பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாய்அருள் செய்த
அடிகளுக் கிடம்அர சிலியே

தெளிவுரை : வண்ணம் மிக்க  பெருமையுடைய கயிலை மலை குறுக்கிடுவதைக் கண்ட கொடிய அரக்கனாகிய இராவணனுடைய கண்ணும் தோளும் வாயும் நெரியுமாறு திருப்பாத விரல் ஊன்றிய சிவபெருமான், அவ்வரக்கனின் பண் மிக்க பாடலைக் கேட்டு அருள் செய்தவன் அப்பெருமான் வீற்றிருக்கும் இடம் அரசிலியாகும்

1035 குறிய மாணுரு வாகிக்
குவலயம் அளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே
விரும்பிய மெய்த்தவத் தோனும்
செணிவொ ணாவகை யெங்கும்
தேடியும் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம்
மடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : சிறிய வடிவாகிப் பின்னர் திரிவிக்கிரமனகி உலகத்தை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் பிரமனும் பொருந்தாத வகையில் எல்லா இடங்களிலும் தேடியும் காணப்பெறாத உருவத்தை உடைய அடிகளாகிய ஈசனுக்கு இடமாவது, அரசிலி ஆகும்

1036 குறுளை யெய்திய மடவார்
நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவரும்
தேரரும் சொல்லிய தேறல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம்
நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை யார்தர நல்கும்
அடிகளுக் கிடம்அர சிலியே

தெளிவுரை : சமணரும் தேரரும் சொல்லிய கருத்துக்கள் பொருந்துவன அல்ல அவற்றை ஏற்றுக் கொள்ளன்மின் மெய்ப்பொருளாய் விளங்கியும், பொய்ம்மை நீக்கியும் மெய்ம்மையாய்த் திகழும் ஈசனைப் போற்றி அப்பெருமான் திருவடியை வணங்குக அத்தகைய பெருமான் அருள்மிக்கு விளங்கும் அடிகள் ஆவார் அவருக்கு இடமாவது அரசிலியாகும்

1037 அல்லி நீள்வயல் சூழ்ந்த
அரசிலி யடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன்
நற்றமிழ் பத்திவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச்
சூழ்ந்தம ரர்தொழுது ஏத்த
வல்ல வானுலகு எய்தி
வைகலும் மகிழ்ந்திருப் பாரே

தெளிவுரை : நீண்ட வயல்களில் அல்லி மலர்கள் சூழ்ந்து விளங்க, அரசிலியில் வீற்றிருக்கும் ஈசனை, காழியில் விளக்கும் நல்ல ஞானசம்பந்தர் நற்றமிழால் ஏத்திய இத் திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்ல வல்லவர்கள் தம்மை வானவர்கள் தொழுது ஏத்த விளங்கி, பின்னர் வானுலகத்தினை அடைந்து எஞ்ஞான்றும் மகிழ்ந்திருப்பார்கள்

திருச்சிற்றம்பலம்

232 சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1038 பொங்கு வெண்புரி வளரும்
பொற்புடை மார்பன்எம் பெருமான்
செங்கண் ஆடரவு ஆட்டும்
செல்வன்எம் சிவன்உறை கோயில்
பங்கம் இல்பல மறைகள்
வல்லவர் பத்தர்கள் பரவும்
தங்கு வெண்திரைக் கானல்
தண்வயல் காழிநன் னகரே

தெளிவுரை : மிளிர்ந்து திகழும் வெண்மையான முப்புரி நூல் விளங்கும் திருமார்பினையுடைய எம்பெருமான், படம் கொண்டு ஆடுகின்ற நாகத்தைத் தரித்து மகிழும் செல்வன்; எமது சிவன் அப் பெருமான் உறையும் கோயில், வேதங்களில் வல்ல மறையவர்களும் பக்தர்களும் போற்றும், கடலலைகளும் குளிர்ச்சி மிக்க வயல்களும் திகழும் காழி என்னும் நல்ல நகரே ஆகும்

1039 தேவர் தானவர் பரந்து
திண்வரை மால்கடல் நிறுவி
நாவ தால்அமிர் துண்ண
நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ என்றரு நஞ்சம்
உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர்மதில் சூழ்ந்த
கடிபொழில் காழிநன் னகரே

தெளிவுரை : தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை, மேருமலை கொண்டு கடைந்து அமிர்தம் உண்டு நாவால் சுவைக்க வேண்டும் என்று விரும்பிய போது நஞ்சு தோன்ற, அஞ்சிச் சாய, அதனைக் கண்டு இரக்கம் கொண்டு அவ் அரிய நஞ்சினை உண்டு அபயம் நல்கிய சிவபெருமான் வீற்றிருக்கும் தொன்மை யான ஊரானது, காவலாய் நன்கு விளங்கும் மதில்களும் மணம் கமழும் பொழில்களும் சூழ்ந்து திகழும் காழி என்னும் நல்ல நகர் ஆகும்

1040 கரியின் மாமுகம் உடைய
கணபதி தாதைபல் பூதம்
திரிய இல்பலிக்கும் ஏகும்
செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கைநல் மாதர்
சதிபட மாநடம் ஆடி
உரிய நாமங்கள் ஏத்தும்
ஒலிபுனல் காழிநன் னகரே

தெளிவுரை : யானையின் பெருமை மிக்க முகத்தை உடைய கணபதியின் தந்தையாகிய சிவபெருமான், பூத கணங்கள் பல சூழ, இல்லந்தோறும் சென்று திரிந்து பிச்சை ஏற்று விளங்கும், ஒளி திகழும் தொன்மையான ஊரானது, மன் கையில் வளையல் அணிந்த மாதர் இசைத்துப் பாடத், திகழும் நடனம் ஆடி உரிய சிவநாமங்கள் மொழிந்து ஏத்தும், நீர்நிலைகளின் ஒலி மிக்க, காழி என்னும் நன்னகர் ஆகும்

1041 சங்க வெண்குழைச் செவியன்
தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூண்என உடைய
அப்பனுக்கு அழகிய ஊராம்
துங்க மாளிகை உயர்ந்த
தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாள்மதி தடவும்
அணிபொழில் காழிநன் னகரே

தெளிவுரை : ஈசன், சங்கால் ஆகிய வெண்மையான குழையணிந்த செவியுடையவன்; குளிர்ந்த சந்திரனைச் சூடிய சடை முடியுடையவன்; எலும்பு மாலையைப் பூணும் ஆபரணமாகக் கொண்டவன்; தந்தையாக விளங்குபவன் அத்தகைய ஈசனுக்கு இடமாகத் திகழும் அழகிய ஊரானது, நெடிய மாளிகைகளும், உயர்ந்த கொடிகளும், வானில் விளங்கும் வெண்மதியைக் தடவும் பொழிலும் மேவும் காழி என்னும் நல்ல நகராகும்

1042 மங்கை கூறமர் மெய்யான்
மான்மறி யேந்திய கையான்
எங்கள் ஈசன்என்று எழுவார்
இடர்வினை கெடுப்பவர்க்கு ஊராம்
சங்கை யின்றிநல் நியமம்
தாம்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி
மறையவர் காழி நன்னகரே

தெளிவுரை : உமாதேவியை ஒரு கூறாகத் கொண்டுள்ள திருமேனியுடைய ஈசன், இளமையான மானைக் கரத்தில் ஏந்திய பெருமான் எங்கள் ஈசனே என்று தொழுது போற்றுபவர்களுக்கு, இடர் தரும் வினையைத் தீர்த்து அருள்புரிபவர் அப்பெருமான் அவனது ஊரானது, நல்ல நியமங்களைக் கைக் கொண்டு, ஆசார சீலத்தில் கங்கை நதித் தீரம் வரை பரவும் புகழ்மிக்க மறையவர்கள் வாழும் காழி என்னும் நன்னகர் ஆகும்

1043 நாறு கூவிள மத்த
நாகமும் சூடிய நம்பன்
ஏறும் ஏறிய ஈசன்
இருந்தினிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர்
நெஞ்சினுள் வஞ்சமொன்று இன்றித்
தேறு வார்கள்சென்று ஏத்தும்
சீர்திகழ் காழிநன் னகரே

தெளிவுரை : மணம் மல்கும் வில்வம், ஊமத்தம், நாகம் ஆகியவற்றைச் சூடிய ஈசன், இடபவாகனத்தில் ஏறி வீற்றிருந்து காட்சி நல்குகின்ற தென்மையான ஊரானது, திருநீறு தரித்த வடிவத்தை உடையவராய், வஞ்சமற்ற நெஞ்சினராய்த் தெளிவு மிக்கவராய் விளங்கும் சான்றோர்கள் ஏத்தும் புகழ்மிக்க காழி என்னும் நன்னகர் ஆகும்

1044 நடமது ஆடிய நாதன்
நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம்
விரித்தறம் உரைத்தவற்கு ஊராம்
இடம தாமறை பயில்வார்
இருந்தவர் திருந்தியம் போதில்
குடம தார்மணி மாடம்
குலாவிய காழிநன் னகரே

தெளிவுரை : மயானத்தில் நடம் புரியும் நாதனாய் ஈசன், நந்திதேவர் முழவு வாசிக்க விளங்குபவர் அவர், விடத்தைத் தம் கண்டத்தில் இருக்கச் செய்து தேவர்களைக் காத்து, சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தவர் அப்பெருமானுக்கு உரிய ஊரானது, மறை பயில்வதற்கு ஏற்ற இடமாகக் கொண்டும், மாடமாளிகைகள் திகழவும் உள்ள காழி என்னும் நன்னகர் ஆகும்

1045 கார்கொள் மேனியவ் அரக்கன்
தன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச
எழில்மலை எடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலால்
செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினர் சூழ்ந்த
தண்வயல் காழிநன் னகரே

தெளிவுரை : கரிய மேனியுடைய அரக்கனாகிய இராவணனுடைய கடுமையான திறத்தைக் கருதி, சிறப்பு மிக்க உமாதேவியும் அஞ்சுமாறு, எழில் திகழும் கயிலை மலையை எடுத்தபோது, அவ் அரக்கன் நெரியுமாறு, திருப்பாத விரலால் ஊன்றிய சிவபெருமான் உறைகின்ற கோயிலானது, மலர் மாலைகளில் வண்டினங்கள் சூழ்ந்தும், குளிர்ச்சியான வயல்கள் உடையதும் ஆகிய, காழி என்னும் நன்னகர் ஆகும்

1046 மாலும் மாமல ரானு(ம்)
மருவி நின்று இகலிய மனத்தால்
பாலும் காண்பரி தாய
பரஞ்சுடர் தன்பதி யாகும்
சேலும் வாளையும் கயலும்
செறிந்துதன் கிளையொடு மேய
ஆலும் சாலிநற் கதிர்கள்
அணிவயல் காழிநன னகரே

தெளிவுரை : திருமாலும் பிரமனும் மாறுபாடு கொண்ட மனத்தினராய்த் தேட, அண்மைத்தாயினும் காண்பதற்கு அரிதாகிய பரஞ்சுடராக விளங்கும் சிவ பெருமானுடைய பதியாவது, சேலும், வாளையும், கயலும் திளைத்துத் தம் இனத்துடன் திகழ, சாலி எனப்பெறும் நெற்கதிர்கள் செழித்தோங்கும் காழி என்னும் நன்னகராகும்

1047 புத்தர் பொய்மிகு சமணர்
பொலிகழல் அடியிணை காணும்
சித்தம் அற்றவர்க் கிலாமைத்
திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க்கு ஊராம்
சித்த ரோடுநல் லமரர்
செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேஅருள் என்று
முறைமைசெய் காழிநன் னகரே

தெளிவுரை : புத்தரும் சமணரும் ஈசன் திருக்கழலைக் காண வேண்டும் என்னும் சித்தம் இல்லாதவர்கள் அத்தகையோருக்குத் தோன்றாதவராகிய செழுஞ்சுடர் அன்ன ஈசன் வீற்றிருக்கும் ஊரானது, சித்தர்களும் தேவர்களும் நன்கு திகழும் மலர்கொண்டு, முத்தி நலம் நல்கும் பெருமானே, அருள்வீராக ! என்று, முறையிட்டு ஏத்தும் காழி என்னும் நன்னகராகும்

1048 ஊளியானவை பலவும்
ஒழித்திடும் காலத்தில் ஓங்கு

(இப்பாட்டு முழுதும் கிடைக்கவில்லை)

திருச்சிற்றம்பலம்

233 சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1049 நம்பொருள் நம்மக்கள்என்று நச்சியிச்சை செய்துநீர்
அம்பரம் அடைந்துசால அல்லல்உய்ப்ப தன்முனம்
உம்பர்நாதன் உத்தமன் னொளிமிகுந்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே

தெளிவுரை : நம்முடைய பொருள் என்ற சொல்லப்படுவது, நமது மக்கள் என்று இச்சைகொண்டு விரும்பி அதன் வழி நின்று இறைவனைத் துதியாது, இவ்வுலகினின்று பூதஉடல் நீங்கிச் செல்லும் காலத்தில், நரகம் என்னும் அல்லல் தரும் துயருள் அழுந்தாத முன்னம், தேவர்களின் தலைவனாகிய உத்தமனும், ஒளிமிக்க செஞ்சடை கொண்டு மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்நகராகிய நலம் திகழும் காழியை அடைவீராக அது உய்யுமாறு செய்யும்

1050 பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ தன்முனம்இ சைந்துநீர்
தீபமாலை தூபமும்செ றிந்தகையர் ஆகிநம்
தேவதேவன் மன்னும்ஊர்தி ருந்துகாழி சேர்மினே

தெளிவுரை : பாவத்தை மேவும் நெஞ்சுடையவராய்ப் பக்தி இன்றி, நித்தமும் பழிக்கப் பெறும் துன்பத் தைச் செய்து இறப்பதற்கு முன்னம், மனம் இசையப் பெற்று ஈசனுக்கு மாலை சாற்றித் தூபங்களும் தீபங் களும் கொண்டு வழிபட்டுப் பொருந்திய தகைமையுடையவராகி விளங்குமின் தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்கும் சிவபெருமான் திகழும் ஊராகிய காழி நகரை அடைமின் அது நலம் தரும்

1051 சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்கு
ஏறுகற்றும் எள்கவே இடுக்கண்உய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே

தெளிவுரை : இம்மையில், வறுமையின் காரணமாக உண்ண உணவும் உடுக்க உடையும் குறைவுற்று, மனம் வருந்தி நெருங்கிய சுற்றத்தினரும் ஏளனம் செய்யும் தன்மையில் துன்பத்தை அடைதன் முன்னம், கங்கை தரித்த சடை கொண்டு விளங்குபவனாகிய ஆதிக் கடவுள், மதம் மிக்க யானையைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தியவனாய், மணம் கமழும் தேன் மலர்ப் பொழிலின் நலங்கொள்ளும் காழிப் பதியில் திகழும் அப் பெருமானை அடைமின் அது நலம் தரும்

1052 நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை யுணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே

தெளிவுரை : வறுமை காரணமாகப் பிறர் வாயிலின் கண் சென்று யாசிக்க, நாளை வா எனவும், உச்சிக் காலமாகிய மதியம் வா எனவும் உரை செய்ய, அதனைக் கேட்டு வருத்தம் கொள்வதன் முன்னர், பிட்சாடணராகவும், நஞ்சுடைய நாகத்தை யுடையவராகவும், பெருஞ் சோதியாகவும் விளங்கி, போற்றி வழிபடும் அடியவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்தருளும் எம்பிரானாகிய ஈசன் மேவும் எழில் மிக்க காழி நகரைச் சென்றடைவீராக அது நன்மை தரும்

1053 கண்கள்காண்பு ஒழிந்துமேனி கன்றியொன்ற லாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை உய்ந்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ்சு அமுதுசெய்
கண்கள்மூன்று உடையஎங் கருத்தர்காழி சேர்மினே

தெளிவுரை : கண்களில் பார்வை குறைந்து, தேகம் நலிந்து, நோய் பெருகி, உணவு கொள்வதற்கும் இயலாது, முதுமை வந்து உய்த்து அழிப்பதன் முன்னர், தேவர்கள் உய்யுமாறு நஞ்சினை அமுது செய்த மகாதேவராய், கண்கள் மூன்றுடைய எம் கருத்தில் பதிந்த பரமன் திகழும் காழி நகரைச் சென்றடைவீராக அது நலம் பயக்கும்

1054 அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடாது எழுமினோ
பல்லில்வெண் தலையினிற் பலிக்குஇயங்கு பான்மையால்
கொல்லையேறது ஏறுவான் கோலக்காழி சேர்மினே

தெளிவுரை : அல்லல் உடைய வாழ்க்கையினை நுகர்வதற்குத் துன்பத்தையுடைய பிறவியைக் கொண்டு, எல்லை யில்லாத பிணக்கில் கிடந்து இழிவு கொள்ளாது, விழித்து எழுமின் பிரமகபாலம் ஏந்திப் பிச்சை ஏற்கும் பாங்கில், இடப வாகனத்தில் ஏறிய ஈசன் அழகிய காழியில் வீற்றிருக்கும் நீவிர் சென்றடைமின் நுமது துன்பமும் பிணக்கும் தீரும்

1055பொய்மிகுந்த வாயாராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுந்த கண்டராய் அடுத்திரைப்ப தன்முனம்
மைமிகுந்த மேனிவாள் அரக்கனை நெரித்தவன்
பைமிகுந்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே

தெளிவுரை : பொய் கூறும் வாயால் பொறாமை கொண்டு புன்சொல் கூறுதலும், நெஞ்சில் கோழை மிகுந்து மூச்சு அடைத்தும், பெருமூச்சு கொண்டும் நலிவு கொள்வதற்கு முன், கரிய மேனியுடைய இராவணனை நெரித்துப் படம் கொண்டு விளங்கும் பாம்பை அரையில் கட்டிய பரமர் திகழும் காழிப் பதியைச் சென்றடைமின் அப்பெருமான் உய்தி பெறுமாறு அருள்புரிபவர்

1056 காலினோடு கைகளும் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே

தெளிவுரை : கால்களும் கைகளும் தளர்ச்சியடைந்து முதுமையைக் காட்டி நிற்க, அன்பொடு உபசாரம் மற்றும் சேவைகள் புரிந்து வந்த மகளிர் இகழ்ந்து உரைப்பதன் முன்னர், திருமாலும் பிரமனும் காண்கிலாத நீலகண்டனாகிய ஈசன் திகழ விளங்கும் காழிப்பதியைச் சென்றடைமின் நற்கதி உண்டாகும்

1057 நிலைவெறுத்த நெஞ்சமொடு நேசமில் புதல்வர்கள்
முலைவறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம்
தலைபறித்த கையர்தேரர் தாம்தரிப் பரியவன்
சிலைபிடித்து எயில்எய்தான் திருந்துகாழி சேர்மினே

தெளிவுரை : ஒரு காலத்தில் நல்ல தேக சுகத்துடன் விளங்கிய பெற்றோர்களுக்கு உறுதுணையாய் இருந்து, பின்னர் முதுமையாகித் தளர்ச்சி கொள்ளும் காலத்தில், அன்பில்லாத புதல்வர்கள் வெறுத்துக் சினந்து ஒதுக்குவதன் முன்னர், சமணர்களுக்கும் சாக்கியர்களுக்கும் ஏற்பதற்கு அரியவனாய், மேரு மலையை வில்லாகக் கொண்டு மூன்று மதில்களையும் எய்து எரித்த சிவபெருமான் பொருந்தி விளங்கும் காழி நகர் சென்று அடைமின் நன்மையாகும்

1058 தக்கனார் தலையரிந்த சங்கரன் தனதுஅரை
அக்கினோடு அரவுஅசைத்த அந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கஇன்பம் எய்திவீற் றிருந்து வாழ்தல் மெய்ம்மையே

தெளிவுரை : தீய வேள்வி செய்த தக்கனுடைய தலையை அரிந்த சங்கரனார், தனது அரையில் எலும்பும் அரவமும் அசைத்துக் கட்டிய செம்மேனியர் அப்பெருமான் திகழ்ந்து விளங்குகின்ற காழிப் பதியைச் சமமாக உரைத்த ஞானசம்பந்தரின் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இம்மையில் மிகுந்த மகிழ்வு எய்திப் பெருமையுடன் வீற்றிருந்து நல்ல வாழ்க்கையைப் பெற்று விளங்குவார்கள் என்பது மெயம்மையாகும்

திருச்சிற்றம்பலம்

234 திருத்துருத்தி (அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1059 வரைத்தலைப் பசும்பொனோடு அருங்கலன்கள் உந்திவந்து
இரைத்தலைச் சுமந்துகொண்டு எறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக்கு இருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக்கு உணர்த்துமாறு வல்லமே

தெளிவுரை : மலையின்கண் தோன்றும் பசும் பொன்னும் மணிகளும் அலைகள்வழி உந்திக் கொண்டும் சுமந்தும் கரையில் சேர்க்கும் காவரியின் கரையில் விளங்கும் துருத்தி என்னும் பதியைச் சார்ந்து மேவும் கருத்துடைய நாதனே ! உமது திருசேர் புகழை உணர்த்துமாறு சொல்ல வல்லது ஆகுமோ !

1060 அடுத்தடுத்து அகத்தியோடு வன்னிகொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாய்ஓர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினால் நிறுத்துதைத்த காரணம்
எடுத்தெடுத்து உரைக்குமாறு வல்லமாகி னல்லமே

தெளிவுரை : ஈசன், அடுத்தடுத்து அகத்தி, வன்னி, கொன்றை மலர், வில்வம் ஆகியவற்றைத் தொடுத்துச் சடையில் அணிந்த பெருமான் அப்பெருமான் துருத்தியில் விளங்கிக் காலனைச் சினந்து திருவடியின் புறமாகிய புறந்தாளால் உதைத்த காரணத்தை எடுத்துரைக்கும் வல்லமை உள்ளதா எனில், இல்லை என்றே சொல்லும் தன்மையதாம்

1061 கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூல்உருத்திரா துருத்திபுக்கு
எங்குநின் னிடங்களாஅடங்கி வாழ்வது என்கொலோ

தெளிவுரை : திங்களும் கங்கையும் செஞ்சடையில் தரித்துச் சங்கினால் ஆகிய வெண்குழையைக் காதில் அணிந்து, முப்புரி நூல் மார்பில் திகழ்ந்து விளங்க உருத்திரமூர்த்தியாய்த் திகழும் பெருமானே ! துருத்தி என்னும் தலத்தில் சார்ந்து எல்லா இடங்களிலும் திகழும் ஆற்றல் பொருந்தியவாறு வீற்றிருப்பது என் கொல்

1062 கருத்தினாலொர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியால்தம் அல்லல்சொல்லி ஐயம்ஏற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத்து உடம்புவிட்டி யோகியாய்
இருத்துநீ துருத்திபுக்கு இதென்னமாயம் என்பதே

தெளிவுரை : ஈசனே ! கருத்துடன் காட்டுபவர் இன்றி வளம் உடைய செல்வமும் இன்றி, அடியவர்தம் அன்பினால் அல்லலைச் சொல்லி பிச்சை ஏற்பதும் அல்லாது ஒருத்திபால் பொருந்துமாறு விளங்கிப் பின்னர் யோகியாய்த் துருத்தியில் புகுந்து விளங்குவது என்னே !

1063 துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமாறு இலாத என்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்டு
இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே

தெளிவுரை : துருத்தியில் வீற்றிருக்கும் நாதனே ! துறந்து பற்றற்றவனாகச் சொல்லப்படாமல் வீற்றிருக்கும் பெருமானே ! அடியேனை நின்பால் மறப்பிக்காது, மையல் கொண்டு இவ்வையகத்தில் பிறக்குமாறு காட்டி அருள் புரிந்தனை ! பிணி கொளும் இத் தேகமானது இறப்பதற்குச் செய்கின்றனை ! நான் செய்த இழுக்குதான் என்னே !

1064 வெயிற்குஎதிர்ந்து இடங்கெடாது அகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்குஎதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்திõயாய்
மயிற்குஎதிர்ந்து அணங்குசாயல் மாதொர்பாக மாகமூ
எயிற்குஎதிர்ந்து ஒருஅம்பினால் எரித்தவில்லி யல்லையே

தெளிவுரை : கதிரவனுடைய வெயிலுக்கு இடம் தராமல் குளிர்ந்த பைம்பொழிலில் புள்ளினங்கள் மல்கும் தண்மை விளங்கும் துருத்தியில் வீற்றிருக்கும் பெருமானே ! மயிலினை விஞ்சிய சாயலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்ந்து, மூன்று மதில்களை ஓர் அம்பினால் எரித்த மேருமலையை வில்லாகக் கொண்டு திகழ்பவர் நீரே அல்லவா !

1065 கணிச்சியம்ப டைச்செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க்கு அவாவுநல்
மணிப்படும்பைந் நாகநீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே

தெளிவுரை : கூரிய மழுப் படையுடைய பெருமானே ! மேலான செல்வமாக விளங்கும் இறைவனே ! கோடிக் கணக்கான பிரமர்கள் அழிய, தலை மாலையைக் கொண்டு விளங்கும் ஈசனே ! கரந்தையை உடையவனாய்த் துருத்தியில் வீற்றிருக்கும் நாதனே ! அழகிய பிறைச்சந்திரனின் குளிர்ந்த ஒளியை விரும்பும் மாணிக்கத்தையுடைய நாகத்தை நீ மகிழ்ந்து ஏற்ற அண்ணல் அல்லவா !

1066 சுடப்பொடிந்து உடம்பிழ்ந்து அநங்கனாய் மன்மதன்
இடர்ப்படக் கடந்துஇடம் துருத்தியாக எண்ணினாய்
கடற்படை யுடையஅக் கடல்இலங்கை மன்னனை
அடற்பட அடுக்கடலில் அடர்த்தஅண்ணல் அல்லையே

தெளிவுரை : நெற்றிக் கண்ணால் சுட்டு எரிக்கப்பட்டுச் சாம்பலாகி உடல் அற்றவனாக மன்மதனை இடர் கொள்ளுமாறு செய்து, துருத்தியை இடமாகக் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஈசனே ! கடல் துன்பறுமாறு கயிலை மலையின்கீழ் அடர்த்த அண்ணல் நீரே அல்லவா !

1067 களங்குளிர்ந்து இலங்கு போதுகாதலானு மாலுமாய்
வளங்கிளபொன் அங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலாம் உகந்துகந்து ரைப்பனே

தெளிவுரை : குளிர்ச்சி மிக்க தாமரையில் விளங்கும் பிரமனும், திருமாலும் வளம் மிகுந்து பொன் போன்ற அழகிய திருவடியை வணங்கி வந்து காண்கிலராய், இளம் பிறைச் சந்திரனைச் சூடி, துருத்தியில் வீற்றிருக்கும் பெருமானே ! உமது திருக்கழலை உள்ளம் குளிர்ந்து எல்லாக் காலத்திலும் மகிழ்ந்து போற்றுவேன்

1068 புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
உத்தமம் எனக்கொளாது உகந்துஎழுந்து வண்டினம்
துத்தநின்று பண்செயும் சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித்த னைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே

தெளிவுரை : புத்தர்களும் சமணர்களும் உரைத்த பொய்ம்மொழிகளை உத்தமம் எனக் கொள்ளாது, வண்டுகள் பண் செய்யும் பொழில் விளங்கும் துருத்தியில் வீற்றிருக்கும் எம் பித்தர் பித்தனை, உகந்து எழுந்து தொழுவீராக அது பிறப்பு என்னும் பெரிய பிணைப்பை அறுத்து நன்மை தரும்

1069 கற்றுமுற்றி னார்தொழும் கழுமலத்து அருந்தமிழ்
சுற்றுமுற்றும் ஆயினான் அவன்பகர்ந்த சொற்களால்
பெற்றம்ஒன்று உயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றுமுற்றும் இன்மையிற் குணங்களிவந்து கூடுமே5

தெளிவுரை : வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் தொழும் கழுமலத்தில், அருந்தமிழ் முற்றும் கற்று அறிந்த ஞானசம்பந்தர், இடபத்தில் உயர்ந்து விளங்கிய பெருமை மிக்க துருத்தியில் வீற்றிருக்கும் ஈசனைச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், குற்றம் யாவும் நீங்கியவராய் விளங்கி நற்குணங்கள் நாடப் பெற்றவர்களாவார்கள்

திருச்சிற்றம்பலம்

235 திருக்கோடிக்கா (அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1070 இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : இன்று மகிழ்ச்சிதரும் நாள் எனவும், நாளையும் மகிழ்ச்சி பெருகும் எனவும் விருப்பம் கொண்டு பொய்ம்மையாய்க் கழிக்கின்ற வாழ்க்கையை ஒழிமின் மின் போன்ற சோதியுடைய திருமேனியனாகி வெண்மையான பிறைச்சந்திரனும், கங்கையும், கொன்றை மலரும் சென்னியில் தரித்த சிவபெருமான், கோடிக்காவில் வீற்றிருக்கின்றான் அப்பெருமானைச் சென்றடைவீராக அதுவே மெய்யான நன்மை தரும்

1071 அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடமினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையொர் பாகமாம்
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : துன்பத்தைத் தருகின்ற வாழ்க்கையை விரும்பி நாடாது நல்ல நெறியின்கண் உம்மை ஈடு படுத்திக்கொள்வீராக வில்லை நிகர்த்த ஒளி மிக்க நெற்றியையும் வெண்மையான வளையலும் கொண்ட உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு வெள்ளை இடபத்தில் வீற்றிருக்கும் ஈசன் திகழும் கோடிக்கா சென்றடைவீராக அதுவே நலம் தரும்

1072 துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந்து அரைமிசை ஆறணிந்த சென்னிமேல்
கொக்கிறது அணிந்தவன் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : துக்கம் மிகுதியாக உள்ளதும், சோர்வு தரக் கூடியதும் ஆகிய வாழ்க்கையைத் துறுந்து, நீவிர், தகுந்த ஒரு நெறியினை, சார்ந்து புரிவதற்கு வருக எலும்பு அணிந்து, கங்கை தரித்த திருமுடியின்மீது கொக்கிறகு சூடிய ஈசன் வீற்றிருக்கும் கோடிக்கா சென்றடைவீராக அது துக்கத்தைத் தீர்க்கும்

1073 பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டுஉமக்கு உரைப்பனால் ஒல்லைநீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : முற்பிறவிகளில் செய்த கொடிய வினையின் பற்றுகள் யாவும், அற்று வீழும் வகையானது உலகில் உண்டு அதனை உமக்கு உரைகின்றனம் நீர் விரைவில் எழுமின் கங்கையைச் செஞ்சடையில் வைத்து, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு உகந்த திருமார்பினையுடைய ஈசன், கோடிக்காவில் வீற்றிருக்கின்றான் ஆங்கு சென்றடைந்து இறைவனைத் தொழ, வினை யாவும் கெட்டு நீங்கும்

1074 முன்னே நீர்செய் பாவத்தால் மூர்த்திபாதம் சிந்தியாது
இன்ன நீரிடும்பையில் மூழ்கிறீர் எழுமினோ
பொன்னை வென்ற கொன்றையான பூதம்பாட ஆடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : முற்பிறவிகளில் செய்த பாவத்தால், மூர்த்தியாக விளங்கும் ஈசனின் திருவடிக் கமலத்தைச் சிந்தனை செய்து போற்றத் துதிக்காது, இப் பிறவியில் நீவிர் துன்பத்தில் மூழ்குகின்றீர் இறைவனை வணங்காது இருக்கும் அஞ்ஞானத்திலிருந்து மீண்டு எழுமின் பொன்னை வெல்லும் ஒளிவண்ணம் உடைய கொன்றை மலரைச் சூடியுள்ள ஈசன், பூதகணங்கள் பாட, ஆடுதல் புரிபவன்; கொல்லும் ஆற்றலுடைய சூலப்படையுடையவன் அப்பெருமான் கோடிக்காவு என்னும் தலத்தில் வீற்றிருக்க, அப்பதியைச் சென்று நன்மை அடைவீராக

1075 ஏவமிக்க சிந்தையோடு இன்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையுநீர் செய்தொரு பயனிலைக்
காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான் கோடிக்கவு சேர்மினே

தெளிவுரை : ஈசனை வணங்கும் சிந்தையில்லாது இகழ்ச்சியைக் கொண்டு இன்பத்தை எய்துதல் இல்லை பாவம் செய்தமையால் இன்பத்தின் பயனை அடைதலும் ஆகாது மூன்று மதில்கள் கொண்டு காவல் பெற்ற முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த, நெற்றிக் கண்ணுடைய ஈசன் விளங்கும் கோடிக்காவு சென்றடைமின் அதுவே இன்பத்தை நல்கும்

1076 ஏணழிந்த வாழ்க்கையை யின்பமென்று இருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தல்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்திகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான் கோடிக்காவு சேர்மினே

தெளிவுரை : பெருமையில்லாத வாழ்க்கையை இன்பம் உடையதென்று கருதிச் சிறப்பு அழிந்து மூப்பினால் பின்னர் வருத்தம் அடையும் முன்னர் வம்மின் எலும்பு மாலையைப் பூண்டு, பொன் போன்று திகழும் சடை முடியில் வளைந்த வெண்பிறைச் சந்திரனைச் சூடிய ஈசன் கோடிக்கா என்னும் தலத்தில் வீற்றிருக்க ஆங்கு சென்றடைந்து நல்லின்பம் கொள்வீராக

1077 மற்றிவாழ்க்கை மெய்யெனும் மணத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந்து எழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : பொய் வாழ்க்கையைப் பெரிதாகக் கொண்டு, அதனையே மெய்யென்று கருதும் மனத்தை விடுத்து, ஈசனைப் பற்றி வாழ்வீராக அப்பெருமானின் செம்மை நல்கும் திருவடியைப் பணிந்து, அஞ்ஞானத்திலிருந்து மீண்டு எழுக வீரம் மிக்க இராவணனின் திறத்தை அழித்து விளங்கும் கயிலை மலையில்  வீற்றிருக்கும் ஈசன் திகழும் கோடிக்கா சென்றடைந்து, மெய்ம்மை கொள்வீராக; மகிழ்ச்சியுறுவீராக

1078 மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணம் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்தும் காண்கிலா
வெங்கண்மால் விடையுடைய வேதியன் விரும்பும்ஊர்
கொங்குலாம் வளம்பொழில் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : தேகத்தை மங்கச் செய்கின்ற நோயும் கொண்டு துன்புறும் தன்மையில், அதனை மாயச் செய்யும் வண்ணம் உரைப்பன் திருமாலும், பிரமனும் சென்று அளந்தும் காண்கிலாதவனாகி, பெருமை திகழும் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் வேத நாயகனாகிய பரமன், விரும்பி விளங்கும் ஊரானது தேன் விளங்கும் வளமையான பொழில் கொண்ட கோடிக்கா ஆகும் ஆங்கு சென்றடைந்து நலம் கொள்வீராக

1079 தட்டொடு தழைமயிற் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகும் மழுவொடும்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும சொற்கள் பயனற்றவை; சடைமுடி திகழ, முழவு, கொட்டு முதலான வாத்தியங்கள் முழங்க, ஆடல் புரியும் ஈசன் கோடிக்கா வீற்றிருந்து அருள் பாலிக்க, ஆங்கு சென்று அடைந்து நன்மையுறுவீராக

1080 கொந்தணி குளிர்பொழிற் கோடிக்காவு மேவிய
செந்தழல் உருவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே

தெளிவுரை : கொத்தாகப் பூக்கும் பூம்பொழில் விளங்கும் கோடிக்கா என்னும் பதியில் மேவிய செந்தழல் போன்ற வண்ணம் உடைய ஈசனை, சீர் மிகுந்த திறமையால் வேதம் வல்ல அந்தணர் விளங்கும் புகலியில் நற்கேள்விகளில் திகழும் ஞானசம்பந்தர் பாடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பாவம் யாவும் கெட்டழியும்

திருச்சிற்றம்பலம்

236 திருக்கோவலூர்வீரட்டம் (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1081 படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வார் எமக்கிலை எழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : மிகக் கூரிய படையுடைய கூற்றுவன் மெய்யினைப் பாசக் கயிற்றால் கட்டி உயிரைக் கொண்டு செல்லும்போது, இடையில் தடுத்து நிறுத்தும் வல்லமையுடையவர் எமக்கு யாரும் இல்லை ஆதலால் நெஞ்சமே ! விரைந்து எழுக ! வெண்கொறற்றக்குடையுடைய வேந்தனாகிய அன்பனாய்க் கோவலூரில் இடபக் கொடியுடையவனாய் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனைச் சார்ந்து விளங்குக அது பாதுகாப்பாகத் திகழும்

1082 கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறும் கால்நிமிர்ந்து
இரவலாழி நெஞ்சமே யினியதுஎய்து வேண்டில்நீ
குரவமேறி வண்டினம் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : நெஞ்சமே ! கரவு என்னும் குணத்தை உடையவர்கள் இல்லந்தோறும் சென்று கால் கடுக்க நின்று யாசிக்கும் தன்மை நீங்கி, இனிமை கொள்ள வேண்டுமானால், குரவ மலரின்கண் வண்டு யாழ் போன்று இனிய இசையெழுப்பி மகிழ்கின்ற கோவலூரில், மணம் கமழும் கொன்றை மாலை அணிந்து ஈசன் விளங்குகின்ற வீரட்டானம் சார்ந்து இருப்பாயாக அது இனிமை தரும்

1083உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவது அறிதிரேல்
அள்ளற் சேற்றிற காலிட்டிங்கு அவலத்துள் ளழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தால் குழகன்கோவ லூர்தனில்
வெள்ளத்தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : நல்ல உள்ளத்தை உடையவர்களே ! வாருங்கள் உறுதி பயப்பது யாதென அறிந்து கொள்வீராயின், நரகக் குழியில் கால் வைக்காது, அவலத்துள் அழுந்தாதவாறு, நன்றாகப் பாட்டிசைத்து, அன்பனாகிய ஈசன் திகழும் கோவலூரில் உள்ள வீரட்டானம் சென்றடைவீராக கங்கை தாங்கிய சடையுடைய அப் பெருமான் நன்கு காத்தருள்வான்

1084 கனைகொள்இருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனைய பலவு(ம்) மூப்பினோடு எய்திவந்து நலியாமுன்
பனைகள்உலவு பைம்பொழில் பழனம்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : கனைத்து வருத்தும் இருமல், சூலை, குளிர் சுரம், குன்மம் போன்ற பலவிதமான பிணிகளும் மூப்புடன் சேர்ந்து வந்து நலியாத முன்னர் பனை மரங்களும், பொழில்களும், வயல்களும் சூழ்ந்த கோவலூரில், நல்வினை, மற்றும் தீய வினைகளைக் கடந்தவனாகிய ஈசன் விளங்கும் வீரட்டானம் சார்ந்து, நன்னலம் பெறுக

1085 உளங்கொள்போகம் உய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாள்தொறும் துயரல்ஆழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றல் உடைய கடல் போல் பரந்து விளங்கும் நெஞ்சமே ! உடம்பு இழந்த பிறகு உள்ளத்தில் தோன்றும் போகத்தை உய்த்திடல் ஆகாது எனவே அசைவு கொண்டு துன்புறுதல் வேண்டாம் பெண்ணை ஆற்றின் வளம் கொழிக்கும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில், விளங்குகின்ற கோவண ஆடையடையவனாய்த் திகழும் ஈசன் வீற்றிருக்கும் வீரட்டானத்தைச் சார்ந்து நலம் கொள்க

1086 கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாள்தொறும்
ஆடுபோல நரைகளா யாக்கைபோக்கது அன்றியும்
கூடிநின்று பைம்பொழில் குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : துன்பம், முதுமை, மரணம் என யாவும் சூழ்ந்து வந்து நாள்தோறும் ஆடுகள்போலக் குழுமி நரைத்துச் சாரும் யாக்கையானது அழியக் கூடியது ஆகும் யாக்கையின் தன்மை இஃது அன்றி வேறு செம்மையன்ற எனவே, பசுமையான பொழில்களை உடைய கோவலூரில், முத்தியைக் காட்டும்நெறி உடையவனாய் ஈசன் வீற்றிருக்க, அப் பெருமானைச் சார்ந்து நற்கதியடைக

1087 உரையும்பாட்டும் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
நரையும் திரையும் கண்டெள்கி நகுவர் நமர்கள் ஆதலால்
வரைகொள் பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர் வெண்ணீற்றினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : பேசி மகிழ்தலும் பாடி மகிழ்தலும் உடல் தளர்வு எய்தி மூப்பு அடைந்த போதும், நரையும் திரையும் காணும் போதும், நம் போன்ற மக்களே நகை செய்து ஏளனம் புரிவார்கள் ஆதலால், பெண்ணை ஆறு பாயும் வழல்கள் சூழ்ந்த கோவலூரில், மணம் கமழும் திருவெண்ணீறு மேனியனாக வீற்றிருக்கும் வீரட்டானத்தைச் சேர்ந்து நற்கதி பெறுவீராக

1088 ஏதமிக்க மூப்பினோடு இருமல்ஈளை என்றிவை
ஊதலாக்கை யோம்புவீர் உறதியாவது அறிதிரேல்
போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
வேதமோது நெறியினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : தேகத்தில் குறையைத் தந்து துன்புறுத்தும் முதுமையோடு இருமல், ஈளை என்பன போன்ற நோயகளும், நீரும், வாயுவும் சேர்ந்து ஊதலையுடைய உடலை மெய்யென்று கருதுபவர்களே ! உறுதி பயப்பது யாதென்று அறியும் தன்மையற்று இருக்கின்றீர் மலரில் வண்டு இசைக்கும் குளிர்ச்சி மிக்க சோலையுடைய கோவலூரில் வேதம் விரித்தருளும் சீலனாகிய ஈசன் வீற்றிருக்கும் வீரட்டானம் சார்ந்து நற்கதி அடைமின்

1089 ஆறுபட்ட புன்சடை அழகன்ஆயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன் கோவ லூர்தனில்
நீறுபட்ட கோலத்தால் நீலகண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : கங்கை தரித்த சடையுடைய அழகன், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் அன்பனாய்க் கோவலூரில் திருநீறு பூசிய திருமேனியனாய், திருநீலகண்டனாய், திருமால் பிரமன் ஆகிய இருவருக்கும் சிந்தையால் வேறுபட்ட பரமனாய் வீரட்டானத்தில் வீற்றிருக்கின்றான் அப்பெருமானைச் சார்ந்து நற்கதி அடைமின்

1090 குறிகொள்ஆழி நெஞ்சமே கூறைதுவர்இட் டார்களும்
அறிவிலாத அமணர்சொல் லவத்தமாவது அறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவலூர்தனில்
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : நல்ல குறிக்கோளையுடைய நெஞ்சமே ! சமணர்களும் சாக்கியர்களும் பொய்ம்மொழியினைப் பகவர்வதனை அறிந்துகொள்வீராக குளிர்ச்சி மிக்க பூந்தோட்டங்கள் விளங்கும் கோவலூரில், கங்கை தரித்த ஈசன், வீரட்டானத்தில் வீற்றிருக்க, அப்பெருமானைச் சார்ந்து மெய்ந்நலம் பெற்று உய்வீராக

1091 கழியொடுலாவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண்டு ஏத்துமின் னந்தண்கோவலூர்தனில்
விளிகொள்பூதப் படையினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : உப்பங்கழிகளும் கடற்கரைச் சோலைகளும் சூழ்ந்த காழிப்பதியில் மேவும் ஞானசம்பந்தர் மக்கள் தன்மையின் குற்றங்கள் தீருமாறு சொல்லிய இச் சொற்கள் யாவும், பாவங்களை நாசம் செய்ய வல்லனவாகும் ஆதலால் அழிதல் இல்லாதவர்கள் ஆகிய நீவிர், இத் திருப்பதிகத்தை ஓதி உரைமின் குளிர்ச்சி மிக்க அழகிய கோவலூரில், நன்கு விழித்து நோக்கும் பூத கணங்களைப் படையாகக் கொண்டு விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் வீரட்டானம் சேர்ந்து வணங்குமின்

திருச்சிற்றம்பலம்

237 திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

1092 பருக்கையானை மதத்தகத்து அரிக்குலத்து உகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலம் நிராக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள் சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன் மண்ட லத்தணாவும் அந்தண் ஆரூர் என்பதே

தெளிவுரை : பருத்த துதிக்கையுடைய யானையைச் சிங்கத்தின் கூரிய நகங்கள்போன்று நெருக்கி மாய்த்து, முத்துக்கள் விரவும் நீண்ட மலையுடைய ஈசனுக்கு உரிய ஊர், அடர்த்தியான சோலைகளும் உயர்ந்த பெரிய மாட மாளிகைகளும், கொடிகள் சூரிய மண்டலத்தைத் தொடும் தன்மையுடையதும், குளிர்ச்சி மிக்கதும் ஆகிய ஆரூர் என்பதாகும்

1093 விண்டவெள் வெலுக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டை கொண்டசெஞ்சடை முடிச்சிவன் இருந்தஊர்
கெண்டைகொண்டு அலர்ந்தகண்ணி னார்கள்கீதவோசைபோய்
அண்டர் அண்டமூடறுக்கும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : வெள்ளெருக்க மலர், வன்னிப் பத்திரமலர், கொன்றை மலர், ஊமத்தம் பூ, இண்டை மலர் ஆகியவற்றைச் செஞ்சடையில் முடிந்து விளங்கும் சிவபெருமானது ஊர், கெண்டை போன்ற விழியுடைய மகளிர் இசைக்கும் கீதங்களின் ஓசை, மேலுலகத்தில் சென்று ஒலிக்கும் தன்மையில் நிலவும் அழகிய குளிர்ச்சி மிக்க ஆரூர் என்பதாகும்

1094 கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்
மறுத்தமாணி தன்றன்ஆகம் வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்தமண்டி யாவிபாயும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : கரிய நஞ்சை உண்டு கருமையான கண்டத்தினை உடையவராய், காலனுடைய உயிரை மாய்த்து மார்க்கண்டேயரின் தேகமானது நன்னிலையில் விளங்குமாறு செய்த ஈசனது ஊர், எருமையானது வெறிகொண்டு ஓடி வள்ளைக் கொடிகளை அறுத்துக் குளத்தில் பாய்ந்து ஆரூர் என்பதாகும்

1095 அஞ்சும் ஒன்றிஆறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சல்என்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார்அரங்கெடுக்கும் அந்தண் ஆரூர் என்பதே

தெளிவுரை : ஐம்புலன்களும் ஒன்றி நிற்கக் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் (பொறாமை) என்னும் ஆறு குற்றங்களையும் களைந்து, திருநீறு பூசி, தலையாரக் கும்பிட்டு வாயாரப் போற்றித் துதித்து வழிபட, அஞ்சற்க என்று அருள் புரியும் ஈசன் விளங்குகின்ற ஊர், பஞ்சு போன்ற மென்மையான பாதங்களும் நுண்ணிடையும் உடைய மகளிர் அரங்கத்தில் நடம் பயிலும் அழகிய தண்மை பொருந்திய ஆரூர் என்பது ஆகும்

1096 சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்து
அங்குலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : சங்கனைய வெண்திங்கள் சூடித் தன்னை நினைத்துப் போற்றுபவரின் மனத்தில் அழகுடன் மகிழ்ந்து விளங்கி நின்ற எங்கள் ஆதிதேவன் பெருமையுடன் திகழும் ஊர், தென்னை மரங்களும், சோலைகளும் தேன் துளிர்க்கும் செண்பகம் முதலான மலர்களில் நறுமணம் யாங்கணும் பரவக் குளிர்ச்சியுடன் திகழும் அழகிய ஆரூர் என்பதாகும்

1097 கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட்டு அருத்தியோடு
உள்ளம்ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்தவூர்
துள்ளிவானை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ள னாரை ஆரல்வாரும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : சூழ்ச்சியும் கபடமும் உள்ளதும் வஞ்சனை மிக்கதும் ஆகியவற்றை நெஞ்சிலிருந்து களைந்தும், உவகையுடைய வேட்கையால் உள்ளம் ஒன்றி நினைத்து வழிபடுபவரின் உள்ளத்தில் வீற்றிருக்கும் ஈசன் உகந்த ஊரானது, வாளை துள்ளி பாயும் வயல்களில் உள்ள நெய்தற் பூக்களில் வண்டுகள் சுழன்று ரீங்காரம் செய்ய, நாரையானது ஆரல் மீன்களை நோக்கும் தண்மை மிகுந்த ஆரூர் ஆகும்

1098 கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திருந்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தண் ஆரூர் என்பதே

தெளிவுரை : கங்கை தரித்த செஞ்சடையுடைய ஈசன் எல்லா இடங்களிலும் வியாபித்து விளங்கும் பெருமான் அவர், மன்மதனை நெற்றியில் விளங்குபவர்; அப் பெருமான் சிறப்புடன் திகழும் ஊரானது, தென்னை மரங்களின் ஊடே சென்று வாழை மரங்களைக் கடித்துச் சாய்த்து, மாமரங்களின் மீது மந்திகள் ஏறும் வளம் காட்டும் அந்தண் ஆரூர் என்பதாகும்

1099 வரைத்தலம் எடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
நிரைத்தமா ளிகைத்திருவி னேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடும்ஆரூர் என்பதே

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனுடைய பத்துத் தலைகளும் அவன் உரத்தொடும் நெரித்த சிவபெருமான், முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவன் அப்பெருமான் விளங்குகின்ற ஊரானது, நன்கு வரிசையுடைய மாளிகைகளில் திருமகளை நிகர்த்த வெண்பற்களும் சிவந்த மேனியும் உடைய மகளிர் நடம் புரியும் ஆரூர் என்பதாகும்

1100 இருந்தவன் கிடந்தவன் இடந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத வானவன் கிடந்தவூர்
செருந்தி ஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
அரும்பு சோலை வாசநாறும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : தாமரை மலரில் இருந்து விளங்கும் பிரமனும், பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், விண்ணில் பறந்தும், பூமியில் குடைந்து சென்றும் அளப்பதற்கு ஒண்ணாத நெடிது உயர்ந்தவனாகிய ஈசன் வீற்றிருக்கும் ஊரானது, செருந்தி, கொன்றை, புன்னை, வன்னி, செண்பகம், செழுமையான குரவம் ஆகிய மரங்களின் அரும்புகளும் சோலைகளும் வாசம் மணக்கக் குளிர்ச்சியுடன் மேவும் ஆரூர் என்பதாகும்

1101 பறித்தவெண்டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்
மறித்தமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்
அறுத்தவாய் அசும்புபாயும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் மெய்த்தவத்தைப் பேணாதவர் என்னும் தன்மையில் அதனைக் கருதாத ஈசன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டகண்டன் அப்பெருமான் மேவும் ஊர், வண்டல் மண் கலந்த நீர் விளங்கும் வயல்களில் செந்நெல் அறுத்த பின், வாய்மடை, நீர் கசிந்து பாயும் அழகிய தண்மை கொண்ட ஆரூர் என்பதாகும்

1102 வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லிமாது அமர்ந்திருந்த அந்தண்ஆரூர் ஆதியை
நல்லசொல்லு ஞானசம் பந்தனாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானம்ஆள வல்லர் வாய்மை யாகவே

தெளிவுரை : கொடிகள் நிறைந்தும் மாமரங்களும் சிறந்து விளங்கும் வீதிகளும் அல்லியங்கோதை அமர்ந்து விளங்கும் ஆரூரின் ஆதிப்பிரானாகிய ஈசனை, நல்ல சொல்லால் விளம்பும் ஞானசம்பந்தர், நாவின் மணம் கமழும் இன்னுரையாய்த் திகழவல்ல இத்திருப்பதிகத்தை ஓதவல்ல தொண்டவர்கள், வானுலகத்தை ஆள வல்லவர்களாவார்கள்

திருச்சிற்றம்பலம்

238 சிரபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1103 அன்ன மென்னடை அரிவையோடு இனிதுரை
அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
வைத்தவர் வேதாந்தம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே

தெளிவுரை : அன்னம் போன்ற மென்மையான நடை உடைய உமாதேவியோடு இனிது வேதப் பொருள் உரைக்கும், தேவர்களுடைய பெருமானாகிய ஈசன், மின்னும் செஞ்சடையின்மீது வெள்ளெருக்கம் மலர் சூடியவர்; வேதாந்தம் மொழியும் நல்ல பொருள்களைத் தந்தவர்; அகன்ற மதில்களையுடைய சிரபுரத்தில் வீற்றிருப்பவர் அப் பெருமானின் சிறப்பு மிக்க பொன்னின் மிக்க மாமலர் போன்ற திருவடியைத் தொழும் அடியவர்களுக்கு வினை இல்லை

1104 கோல மாகரி உரித்தவர் அரவொடும்
ஏனக் கொம்பிள ஆமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய
சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்கும் இன்பு அளிப்பவர்
பெருங்கடல் விடமுண்ட
நீலத் தார்மிடற்று அண்ணலார் சிரபுரந்
தொழவினை நில்லாவே

தெளிவுரை : பெரிய யானையின் தோலை உரித்து, அரவமும், பன்றியின் கொம்பும், ஆமையின் ஓடும் பொருந்த ஆபரணமாகப் பூண்டு, குளிர்ந்த சந்திரனைச் சூடிய சங்கரனார், தம்மைப் போன்றே தமது அடியவர்களுக்கும் பேரின்பத்தை அளிப்பவர் அவர், பாற்கடலில் தோன்றி விடத்தை உண்டு நீலகண்டராக விளங்கும் அண்ணல் அப் பெருமான் எழுந்தருளியிருக்கும் சிரபுரத்தைத் தொழ, வினையானது நிற்காது, கெட்டு அழிந்து விலகும்

1105 மானத்திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
தவங்கெட மதித்தன்று
கானத்தேதிரி வேடனாய் அமர்செயக்
கண்டருள் புரிந்தார் பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதரும்
சிரபுரத்து உறைஎங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை
குற்றங்கள் குறுகாவே

தெளிவுரை : பெருமை மிக்க உறுதியான காண்டீபம் என்னும் வில்லையுடைய பார்த்தனின் தவம் கெடுமாறு செய்து, காட்டில் திரிந்துலவும் வேடனாகத் திருக்கோலம் பூண்டு, போர் செய்யுமாறு ஆக்கிப் பின்னர் அருள் புரிந்தவராகிய சிவபெருமான், பூந்தேனைத் தேர்ந்து சேர்க்கும் வண்டுகள் திரியும் சிரபுரத்தில் வீற்றிருப்பவர் அப் பரமனைக் கும்பிடும் அடியவர்களை, கொடுமை செய்யும் வினையின் குற்றங்கள் அணுகாது

1106 மாணி தன்னுயிர் மதித்துண வந்தஅக்
காலனை உதைசெய் தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
பிணக்கறுத்து அருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
சிரபுரத்து அமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்கு
அருவினை அடையாவே

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கருதி மதித்துத் கொண்டு செல்ல வந்த காலனை உதைத்த ஈசன், தம்மைப் பேணி உள்ளத்தால் போற்றி விளங்கும் மெய்யடியார்கள் கொண்டுள்ள பெருந் துயரங்களும், அதனால் உண்டாகும் பிணக்குகளும் தீர்ந்து அருள்பவர் அவர் வெண்பிறைச் சந்திரனைச் சூடியவராய், மிகுந்த புகழ் கொண்டு விளங்கும் சிரபுரத்தில் வீற்றிருப்பவர் உயர்ந்த பொன் போன்று பெருமையாக விளங்கி மகிழ்ச்சியை நல்கும் அப்பெருமானை வணங்கும் அடியவர்களுக்கு, அருவினையானது அடையாது

1107 பாரு நீரொடு பல்கதிர் இரவியும்
பனிமதி யாகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
தலைவனு மாய்நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்திழி
செழும்புனல் கோட்டாறு
வாருந்த தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
அடியவர் வருந்தாரே

தெளிவுரை : சிவபெருமான், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், வேள்வித் தலைவன் என அட்டமூர்த்தமாய்த் திகழ்ந்து விளங்குபவர் அப்பெருமான், சந்தனம், அகில் கட்டைகள் ஆகியனவற்றை நீரில் அடித்துக்கொண்டு வளைந்து செல்லும் ஆறு சூழும் சிரபுரத்தில் வீற்றிருப்பவர் அப் பதியைத் தொழுது போற்றும் அடியவர்களுக்கு வருத்தம் என்பது இல்லை

1108 ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
வுலகங்கள் அவைமூட
ஆழி யெந்தையென்று அமரர்கள் சரண்புக
அந்தரத்து உயர்ந்தார்தாம்
யாழி னேர்மொழி யேழையோடு இனிதுறை
இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரம் தொழுதெழ
வல்வினை அடையாவே

தெளிவுரை : ஊழிக் காலத்தின் இறுதியில், அலையின் ஒலி கொண்டு எழும் கடலால் உலகங்கள் மூடப்பெற்று இருக்க, தேவர்களெல்லாம், எம் தந்தையே ! என்று சரணம் அடைந்து போற்ற, வானில் தோன்றி விளங்குபவம் சிவபெருமான் அவர் யாழ் போன்ற இனிய மொழியுடைய உமாதேவியோடு இனிது உறையும் இன்பனாகிய எமது பெருமான் ஆவார் அப்பெருமான் வாழ்கின்ற சிறப்புடைய நகர் சிரபுரம் அதனைத் தொழுது வணங்க வல்வினை அணுகாது

1109 பேய்கள் பாடப்பல பூதங்கள் துதிசெயப்
பிணமிடு சுடாகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
ஆடும்வித் தகனார்ஒண்
சாய்கள் தான்மிக உடையதண் மறையவர்
தகுசிர புரத்தார்தாம்
தாய்கள் ஆயினார் பல்லுயிர்க் கும்தமைத்
தொழுமவர் தளராரே

தெளிவுரை : பேய்க் கூட்டங்கள் பாடவும், பூத கணஙகள் போற்றித் துதிக்கவும் மயானத்தில் மூங்கில் போன்ற தோள்களையுடைய உமாதேவி நாணுமாறு பெரிழ நடம் ஆடும் வித்தகராகிய ஈசன், புகழ் மிக உடைய குளிர்ந்த மனத்துடைய அந்தணர் விளங்கும் சிரபுரத்தில் வீற்றிருப்பவர் அனைத்துயிர்களுக்கு அன்னையாழ் விளங்கும் அப் பெருமான், தம்மைத் தொழுது வணங்கும் அடடயவர்களுக்குத் தளர்ச்சி அடையாதவாறு தாங்குபவர் ஆவார்

1110 இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
எழில்கொள்வெற்பு எடுத்ததன்று
கலங்கச் செய்தலும் கண்டுதம் கழலடி
நெரியவைத்து அருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்
றதனிடைப் புகுந்தாரும்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழுது
எழவினை குறுகாவே

தெளிவுரை : மலை போன்ற உறுதியான தோள்களும், அகன்ற மார்பும் உடைய இராவணன், எழில் மிகுந்த கயிலை மலையை எடுத்தபோது, யாவரும் கல்ங்கி இருக்க, திருப்பாத விரலால் ஊன்றி அவ் அரக்கனை நெரியச் செய்து, பின்னர் அருள் செய்தவர் ஈசன் அப்பெருமான், வயல்களில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்து திகழத் தென்றல் வீசி நறுமணத்தைப் பரப்ப, நற்குலத்தினராகிய அந்தணர்கள் மரபு வழிப்பயிலும் வேதங்கள் ஓதித் தொழுது போற்றும் சிரபுரம் என்னும் பதியில் வீற்றிருப்பவன் அப்பதியைத் தொழுது போற்ற வினை அணுகாது

1111 வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
மாயன்என்று இவர்அன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோடு அன்னமாய்க்
கிளறியும் பறந்தும்தாம்
பண்டுகண்டது காணவே நீண்டஎம்
பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுதுஎழ
வினையவை கூடாவே

தெளிவுரை : மலர்மீது விளங்கும் நான்முகன், அன்னப் பறவையின் வடிவம் தாங்கி வான்வழிப் பறந்தும், மாயனாகிய திருமால், பன்றியின் வடிவம் தாங்கிப் பூமிக்குள் குடைந்தும் சென்று, காண அரியவனாகிய பசுபதியாகும் பரமேஸ்வரன் வீற்றிருக்கும் செல்வம் மிக்க சிரபுரத்தை தொழுது போற்ற, வினை நாடாது

1112 பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீரரத் தேரரும் தேர்கிலாத்
தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின்று ஆவியில்
மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயல் சிரபுரம் தொழவினை
விட்டிடு மிகத்தானே

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் தேர்ந்து அறிவதற்கு அரியவராகிய தேவர்களின் பெருமானாகிய சிவபெருமான், எருமைகள் கரும்புகளை முறித்துத் தின்று, குளங்களில் மூழ்கிக் கலக்கிட, வாளை மீன்கள் பாயும் வயல்களையுடைய சிரபுரத்தில் விளங்குபவன் அத் தலத்தை தொழுது போற்ற வினை யாவும் அகலும்

1113 பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்
பையர வோடுஅக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை
விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ்வல்லவர்
பரமனைப் பணிவாரே

தெளிவுரை : மழுப்படை தரித்தவராய், பத்தர்களின் இறைவனாய், பாம்பும் எலும்பும் வரிசையாய்ப் பூண்ட திருமார்பு உடைய நிமலனாய், முத்துக் குவியலாய் விளங்குகின்ற நறுமணம் கமழும் பூம் பொழில் உடைய சிரபுரத்து அண்ணலாகிய தேவர் பெருமானைப் பரவும் ஞானசம்பந்தர் செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பரமனைப் பணிந்து ஏத்திய சிறப்பினை அடைந்தவர் ஆவார்கள்

திருச்சிற்றம்பலம்

239 அம்பர்மாகாளம் (அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1114 புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
அல்லு நண்பக லும் தொழும் அடியவர்க்கு
அருவினை அடையாவே

தெளிவுரை : பொன்மயமாகிய சடையில் இளமையான சந்திரனைச் சூடித் தேன் விளங்கும் கொன்றை மலர் மாலை தரித்த ஈசன், அரிசில் ஆற்றி வடகரையில் விளங்கும் மாகாளத்தில் வீற்றிருப்பவர் அப்பெருமானை அல்லும் பகலும் தொழும் அடியவர்களுக்குத் துன்பம் தரும் வினையானது பற்றாது

1115 அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவை சரிதைகள்
இசைவன பலபூதம்
மரவம் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந்து ஏத்தவல் லார்அவர்
பயன்தலைப் படுவாரே

தெளிவுரை : அரவத்தை அணிந்து, புலித் தோலை உடுத்திப் பூதங்கள் இசைத்துப் போற்ற அழகிய கையில் நெருப்பேந்தி இரவில் ஆடுகின்ற எழில் மிக்க செயல்களை உடையவர் ஈசன் அவர் மரவம் என்னும் மரங்கள் தோயும் பொழில் திகழ அரிசில் ஆற்றின் வடகரையில் விளங்கும் மாகாளத்தில் வீற்றிருப்பவர் அப்பெருமானைப் பரவியும் பணிந்தும் ஏத்த வல்லவர்கள் எல்லாப் பயன்களையும் நனி வாய்க்கப் பெற்றவர்கள் ஆவார்கள்

1116 குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும்
குரைகழல் அடிசேரக
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும்
கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகைர
வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோடு அணையவல் லார்களை
வல்வினை அடையாவே

தெளிவுரை : ஈசனின் இனிய குணங்களைக் கூறித் துதித்துத் தமது குற்றங்களை எண்ணி வருந்தி, குரைகழல் போற்றி வாழ்த்த, அக் கருத்துக்களை நன்கு அறிந்த ஈசன் மேவி இருப்பது மாகாளம் ஆகும் அப்பெருமானை வணங்கும் உள்ளத்தோடு அத்திருத்தலத்தை நாடுபவர்களுக்கு வல்வினை நாடாது

1117 எங்கும் ஏதுமோர் பிணியிலர் கேடிலர்
இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும்
தாமகிழ்ந்த தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கங்கு லும்பக லும்தொழும் அடியவர்
காதன்மை யுடையாரே

தெளிவுரை : எத்தகைய பிணியும் இல்லாதவராய், கேடு இல்லாதவராய், நறுமணம் கமழும் கொன்றை மாலை சூடியவராய், எக் காலத்திலும் மகிழ்வுடன் விளங்குபவராய், மேகம் தோயும் பொழில் விளங்கும் அரிசிலின் வடகரையில் மேவும் மாகாளம் என்னும் தலத்தில், இரவும் பகலும் அடியவர்கள் தொழுது போற்ற விருப்பத்துடன் வீற்றிருப்பவர் ஈசன் ஆவார்

1118 நெதியம் என்னுள போகமற் றென்னுள
நிலமிசை நலமாய
கதியம் என்னுளவனவர் என்னுளர்
கருதியே பொருள்கூடில்
மதியம் தோழ்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்டு
ஏத்துதல் புரிந்தோர்க்கே

தெளிவுரை : சந்திரனைத் தொடுகின்ற நிலையில் உயர்ந்த பொழில்களையுடைய அரிசில் ஆற்றின் வடகரையில் விளங்கி, நீர்பெருகும் மாகாளம் தன்னில் வீற்றிருக்கும் ஈசனைப் புதிய பூக்கள் தூவி சந்தனமும் அகிற் புகையும் கொண்டு ஏத்தி வழிபடும் அடியவர்களுக்கு, வேறு பெறத்தக்க நிதியம் யாது உள்ளது ! போகம் மற்று என்ன உள்ளது ! நிலவுலகில் வேறு நலந்தரும் வாழ்க்கைதான் யாதும் உள்ளது ! யாவும் ஈசனே நன்கு அருள்புரிந்து இம்மை நலன் யாவையும் குறைவின்றி நல்குகின்றான் என்பது குறிப்பு

1119 கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
கனல்விடு சுடர்நாகம்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினைப்பு உடையவர் யாவரிவ்
உலகினில் உயிர் வாரே

தெளிவுரை : ஒளிர்ந்து மேவும் சடை முடியில் கனல் போன்ற நச்சுக் கலந்த சுடர்நாகம், சந்திரனோடு பொருந்துமாறு மண்டை ஓட்டினைத் திகழ வைத்துள்ள சிவபெருமான் மேவியிருப்பது, பொழில் திகழும் அரிசில் ஆற்றின் வடகரையில் உள்ள மாகாளம் ஆகும் அப்பெருமானை உள்ளார்ந்து நினைத்து மகிழ்கின்ற அடியவர்கள் யாவரோ, அவர்கள் இவ்வுலகில் உயர்ந்தவராய்த் திகழ்வார்கள்

1120 தூசு தானரைத் தோலுடைக் கண்ணியம்
சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவது அன்றியும்
புகழ்புரிந்த தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினில்
பெருமையைப் பெருவாரே

தெளிவுரை : புலியின் தோலை உடையாகக் கொண்டு நறுங்கொன்றை மலரைத் தரித்து, திருவெண்ணீறு திருமேனியில் பூசி விளங்கிப் புகழ் தருவதும் அஃதே எனக் கொண்டு மேவி, மாகாளம் என்னும் பதியில் பேசுகின்ற அன்பராய் விளங்குகின்றவர், ஈசன் அப் பெருமானைப் புகழ்ந்து போற்றும் அடியவர்கள் பெருமையடைவார்கள்

1121 பவ்வம் ஆர்கடல் இலங்கையர் கோன்றனைப்
பருவரைக் கீழ்ஊன்றி
எவ்வம் தீரஅன்றுஇமையவர்க்கு அருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வம் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கவ்வை யால்தொழும் அடியவர் மேல்வினை
கனலிடைச் செதிள் அன்றே

தெளிவுரை : இராவணனை, பெரிய கயிலை மலையின்கீழ், நெரியுமாறு ஊன்றி அடர்த்துத் தேவர்களின் துன்பம் தீர அருள்செய்த இறைவன் உறையும் கோயிலானது, பொழில் திகழும் அரிசில் ஆற்றின் வடகரையில் உள்ள மாகாளம் ஆகும் அப் பெருமானை உள்ளம் கசிந்து தொழும் அடியவர்களின் வினையானது கனலிடை உற்ற துரும்பு என அழியும்

1122 உய்யும் காரணம் உண்டென்று கருதுமின்
ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
பரவநின் றவர்மேய
மையுலாம் பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கையி னால்தொழுது அவலமும் பிணியும்தம்
கவலையும் களைவாரே

தெளிவுரை : உலகில் வினையின் வெம்மையால் வாடுதல் அடையாது, உய்யும் வழியொன்று உண்டென்று கருதுக பிரமனும், திருமாலும் போற்றிப் பரவும் பெருமானாகிய சிவபெருமான் மேவி விளங்குகின்ற தலம், பசுமையான பொழில் உடைய அரிசில் ஆற்றின் வடகரையில் உள்ள மாகாளம் ஆகும் அத்தலத்தக் கையினால் தொழுது அவலமும் பிணியும் கவலையும் களைவீராக

1123 பிண்டி பாலரு மண்டைகொள் தேரரும்
பீலிகொண்டு உழல்வாரும்
கண்ட நூலரும் கடுந்தோழி லாளரும்
கழறநின் றவரமேய
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பண்டு நாம்செய்த பாவங்கள் பற்றற்ப்
பரவுதல் செய்வோமே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பலவாறாகச் சொல்லி நிற்க, வண்டு உலவும் பொழில் உள்ள அரிசிலின் வடகரை வருகின்ற நீர் விளங்கும் மாகாளம் மேவிய ஈசனைப் பண்டு நம் செய்த பாவங்களின் பற்று அற்று நீங்குதல் பொருட்டுப் பரவித் தொழுவோமாக

1124 மாறுதன்னொடு மண்மிசை யில்லது
வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை
ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
பந்தன தமிழ்மாலை
கூறு வாரையும் கேட்கவல் லாரையும்
குற்றங்கள் குறுகாவே

தெளிவுரை : இப் பூவுலகில் ஒப்புமைக்கு வேறு கூறுவதற்கு இல்லாத சிறப்புடைய மாகாளத்தில் ஆதியும் அந்தமும் ஆகிய சோதியாக விளங்கி இடபத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை, காழியில் திகழும் ஞானசம்பந்தர் திருப்பதிகம் கொண்டு ஓதி உரைப்பவர்களும் குற்றம் அற்றவர்களாய் விளங்குவார்கள்

திருச்சிற்றம்பலம்

240 திருக்கடிக்குளம் (அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர்குளம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1125 பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
புலியுரி யதளாடை
கொடிகொள் ஏற்டனர் மணிகிணன் எனவரு
குரைகழல் சிலம் பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து
உறையும்கற் பகத்தைத் தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியாரை
முன்வினை மூடாவே

தெளிவுரை : ஈசன், திருநீறு பூசிய திருமேனி கொண்டு வெண்ணூல் அணிந்து விளங்குபவர்; யானைத் தோலைப் போர்த்தும், புலித்தோல் ஆடையும் கொண்டு விளக்குபவர்; இடபக் கொடி உடையவர்; குரைகழலில் உள்ள சிலம்பின் பரல்கள் கிணின் என ஒலிக்குமாறு, மணங்கமழும் பூம்பொழில் சூழ விளங்கும் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் ஆவார் வீழ்ந்து வணங்கும் அடியவர்களுக்கு முன்வினையானது தீமை செய்யாது

1126 விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலர்
விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித்து அன்பராய் இன்புறும்
வள்ளலை மருவித்தம்
கண்க ளார்தரக் கண்டுகம் கடிக்குளதது
உறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்
பழியிலர் புகழாமே

தெளிவுரை : சிவபெருமான், தேவர்கள் தொழுகின்ற சோதியானவர்; தளர்வு இல்லாத விகிர்தர்; பூவுலகத்தின் மக்களால் திருவிழாக்கள் செய்து துதிக்கப்படுபவர்; எல்லாருக்கும் அன்பராக விளங்கி இன்பத்தை நல்கும் வள்ளல் அப்பெருமான் கண்கள் ஆரத் தரிசனம் தந்து கடிக்குளத்தில் வீற்றிருக்கின்ற கற்பகநாதர் பண்கள் அமைத்து இசையுடன் அவரைப் பாடுபவர்கள் எவ்விதமான தீமைக்கும் ஆட்படாதவர்களாய்ப் பழிச்சொல் அடையாதவர்களாய்ப் புகழுடன் விளங்குவார்கள்

1127பொங்கு நற்கரி உரியது போர்ப்பது
புலியதள் அழல்நாகம்
தங்க மங்கையைப் பாகமது உடையவர்
தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து
உறைதரு கற்பகத்தை
எங்கும் ஏத்திநின்று இன்புறும் அடியாரை
இடும்பைவந்து அடையாவே

தெளிவுரை : ஈசன், சினம் பொங்கி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; புலியின் தோலும், அழல் போன்று விடம் கொண்ட நாகமும் திருமேனியில் திகழ்ந்து விளங்க, உமாதேவியைப் பாகமாக உடையவர்; தழல் போன்ற சிவந்த திருமேனியர்; கங்கை சேர்ந்து விளங்கும் சடைமுடியுடையவர்; கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் அப் பெருமானை ஏத்தி இன்புறும் அடியவர்களுக்குத் துன்பம் வந்து அடையாது

1128 நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்
தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப்
பசும்பொனை விசும்பாரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து
உறையும்கற் பகம்தன்னைச்
சீர்கொள் செல்வங்கள் ஏத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே

தெளிவுரை : ஈசன், கங்கை தரித்த நீண்ட சடை முடி உடையவர்; முத்துக் குவியல் போன்ற சிறப்புடையவர்; உலகமக்கள் தொழுகின்ற நிகரற்ற கருணையுடையவர்; பவளம் போன்ற திருமேனியர்; பசும் பொன் போன்ற பெருமையுடையவர் அவர் வானத்தில் விளங்குகின்ற மேகத்தைத் தொடும் பூம்பொழில் சூழ்ந்து விளங்கும் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் அப்பெருமானைச் சீர்மிக்க செல்வங்களாக ஏத்தவல்லவர்களின் வினையானது, தேய்ந்து அழியும் என்பது திண்ணம்

1129 கரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
துன்னிய தழல்நாகம்
அரும்பு தாதவிழ்ந்து அலர்ந்தன மலர்பல
கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடியிடை கடைக்குளத்து
உறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்டையோடு உளமகிழ்ந்து உரைப்பவர்
விதியுடை யவர்தாமே

தெளிவுரை : ஈசன், மலர்கள் சூடித் திகழும் சடைமுடியின்கண் வண்டுகள் சூழ இருப்பவர்; சந்திரனும் நாகமும் கொண்டு விளங்குபவர்; மகரந்தங்கள் உடைய மலர்கள் பல கொண்டு அடியவர்கள் போற்றித் துதி செய்ய, கரும்பும் கொடிகளும் திகழும் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் அப்பெருமானை விரும்பும் மனத்துடனும் உள்ளம் நெகிழ்ச்சியுற்றும் பேசிப் புகழும் அடியவர்களின், நீண்ட ஆயுற் உடையவர்கள் ஆவார்கள்

1130 மாது இங்கிய பாகத்தன் மதியமொடு
அலைபுனல் அழல்நாகம்
போது இலங்கிய கொன்றையும் மத்தமும்
புரிசடைக்கு அழகாகக்
காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து
உறைதரு கற்பகத்தின்
பாதம் கைதொழுது ஏத்தவல் லார்வினை
பற்றறக் கெடுமன்றே

தெளிவுரை : உமாதேவியைப் பாகம் கொண்டு, சந்திரனும் கங்கையும், நாகமும், கொன்றை, ஊமத்த மலர்களும் சடையின்கண் அழகுடன் பொருந்தச் சூடி, காதில் வெண்குழை அணிந்த பெருமான் கடிக் குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் ஆவார் அப் பெருமானுடைய திருப்பாதத்தைக் கை தொழுது ஏத்த வல்லவர்பால் பற்றியுள்ள வினையானது கெட்டழியும்

1131 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
குழாம்பல குளிர்கொய்கை
புலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்
பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து
உறையும் கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல்வினை
நிற்ககில்  லாதானே

தெளிவுரை : அழகுடன் விளங்கும் கொடிகளும், நெடிய மாட மாளிகைகளும், குளிர்ந்த பொய்கைகளும், பல வகைப் பறவைகளும் அன்னங்களும் திகழும் தன்மையில் நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு கடிக்குளத்தில் வீற்றிருக்கும் பெருமான் கற்பகநாதர் ஆவார் அவர் புகழைப் போற்றி ஏத்துபவர்களுக்கு வினையானது நின்று  துன்பத்தை நல்காது

1132 மடுத்த வாளரக் கன்னவன் மலைதன் மேல்
மதியிலா மையில்ஓடி
எடுத்த லும்முடி தோள்கர நெரிந்துஇற
இறையவன் விரல்ஊன்றக்
கடுத்து வாயொடு கையெடுத்து அலறிடக்
கடிக்குளம் தனில்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தினை யேத்துவார்
குணமுடை யவர்தாமே

தெளிவுரை : இராவணன், அடுத்து வந்து கயிலை மலையின்பால் ஓடி, அறிவிழந்து பேர்த்து எடுக்க, அவன் தலைமுடியும் தோளும் கரமும் நெரியுமாறும் முறியுமாறும் திருப்பாத விரலால் ஊன்றியவர் சிவபெருமான் அஞ்ஞான்று ஆற்றாது நைந்து கையால் தொழுது ஏத்துமாறு செய்து கடிக்குள் மேவி அவ் அரக்கனுக்கு அருள்புரிந்த திருவிளையாடலைப் போற்றும் அடியவர்கள், நற்குணத்தை உடையவர்கள் ஆவார்கள்

1133 நீரினார் கடல் துயின்றவன் அயனொடு
நிகழ்அடி முடிகாணார்
பாரி னார்விசும்பு உறப்பரந்து எழுந்ததோர்
பவளத்தின் படியாகிக்
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்து
உறையும்கற் பகத்தின்தன்
சீரி னார்கழல் ஏத்தவல் லார்களைத்
தீவினை அடையாவே

தெளிவுரை : நீர் மலியும் கடலில் அரிதுயில் கொள்ளும் திருமால், பிரமனோடு, அடியும் முடியும் காணப் பூமிக்கு அடியிலும் ஆகாயத்திலும் சென்று முயன்றும், பரந்து ஓங்கிய ஒப்பற்ற பவளத்தின் திருக்கோலமாகியவர் ஈசன் மேகத்தைத் தொடுகின்ற பொழில் சூழ்ந்து விளங்குகின்ற அப்பெருமான் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் ஆவார் அவர்தம் புகழ் பொருந்திய கழலை ஏத்த வல்லவர்களை, தீய வினைகள் அடையாது

1134 குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும்
குறியினில் நெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்
கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்து
உறைதரும் எம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
தூநெறி எளிதாமே

தெளிவுரை : சாக்கியர்களும் சமணர்களும் குறிக்கோளின் நெறியில் நில்லாது, பெருத்தமற்ற வார்த்தைகளைக் கூற, அவற்றை மெய்யெனக் கொள்ளன்மின் ஈசன், விடத்தை உண்டு கண்டத்தில் தங்குமாறு செய்தவர்; செம்மேனியர் அவர் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் எமது நாயகர் அப் பெருமானுடைய தொண்டர்க்குத் தொண்டராக விளங்கும் அடியவர்களைப் பணிந்து எழுமின் உமது அச்செயல், தூயதாகத் திகழும் சிவநெறியை எளிதாகச் சேர்த்து மகிழ்ச்சியை நல்கும்

1135 தனமலிபுகழ் தயங்குபூந் தராயவர்
மன்னனற் சம்பந்தன்
மனமலிபுகழ் வண்டமிழ் மாலைகள்
மாலதாய் மகிழ்வோடும்
கனமலி கடல் ஓதம் வந்துஉலவிய
கடிக்குளத் தமர்வானை
இனமலிந்திசை பாடவல் லார்கள்போய்
இறைவனோடு உறைவாரே

தெளிவுரை : செல்வத்தை விஞ்சும் புகழ்மிக்கு ஒளிரும் பூந்தராய் என்னும் பதியில் விளங்கும் சிறப்புடைய ஞானசம்பந்தர் மனத்திற் பெருகும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகக் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் நாதனைப் போற்றி உரைத்த இத்திருப்பதிகத்தை இசையுடன் ஓதுபவர்கள், அப் பரமனுடன் உறைவார்கள் இது சிவப் பேற்றினை அளிக்கும் என்பதாம்

திருச்சிற்றம்பலம்

241 கீழ்வேளூர் (அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1136 மின்னு லாவிய சடையினர் விடையினர்
மிளிர்தரும் அரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர்
கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
ஓடிட வீடாமே

தெளிவுரை : மின்னலைப் போன்று சிவந்த ஒளிமயமான சடையுடைய சிவபெருமான் இடப வாகனத்தை உடையவராய், மிளிரும் அரவமானது திருமேனியில் திகழ, வேதத்தை விரிசெய்யும் திருநாவினர் அப்பெருமான், நீலகண்டத்தின்ராய்ப் பொன்னின் நிகர்த்த கொன்றை மாலையுடையவர் அவர் வீற்றிருக்கும் புகழ் மிக்க கீழ்வேளூர் என்னும் திருத்தலத்தினை உள்ளத்தால் ஒன்றி நினைத்துப் பணியும் அடியவர்களுக்கு வினை யாவும் நீங்கப் பெற்று வீடுபேறு உண்டாகும்

1137 நீரு லாவிய சடையிடை அரவொடு
மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யாவளொடு
மணிசிலம்பு அவைஆர்க்க
ஏரு லாவிய இறைவனது உறைவிடம்
எழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தை செய்து அணைபவர்
பிணியொடு வினைபோமே

தெளிவுரை : கங்கை தரித்த சடையின் இடையில் அரவமும், சந்திரனும் தரித்து, வரிசையாகக் கோத்த தலைமாலையும் கொண்டு விளங்கும் ஈசன், வனமுலை நாயகி என்னும் தேவியோடு நவ மணிகளால் ஆன சிலம்பு ஒலிக்கப் பெருமையுடன் வீற்றிருக்கும் எழில் திகழும் கீழ்வேளூர் என்னும் தலத் தினைச் சிறப்புடன் கருதிச் சார்பவர்கள், பிணியும் வினையும் அற்றவர்கள் ஆவார்கள்

1138 வெண்ணி லாமிகு விரிசடை அரவொடு
வெள்ளெருக்கு அலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோடு ஆடலர்
பயில்வறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின்று உள்கிய சிந்தையார்
உலகினில் உள்ளாரே

தெளிவுரை : வெண்மையான பிறைச்சந்திரனும், விரிந்த சடைமுடியும், அரவமும், வெள்ளெருக்க மலரும், ஊமத்த மலரும் கொண்டு, பண்ணிலாவிய பாடலும் ஆடலும் உடையவராய்க் கீழ்வேளூர் என்னும் தலத்தில், உமாதேவியை பாகமாகப் பொருந்திப் பெருந் திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஈசனை, உள்ளத்தால் ஒன்றி நினைப்பவர் உலகில் மனிதராக உள்ள சிறப்புடன் திகழ்வார்கள்

1139 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
தொங்கவைத்து அழகாக
நாடு லாவிய பலிகொளு நாதனார்
நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
கோயிலுள் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
நிலைமிகப் பெறுவாரே

தெளிவுரை : பெருமையுடைய கங்கையைச் சடை முடியில் திகழ வைத்து, அழகுமிளிரப் பலியேற்கும் நாதன் நலம் மிகுந்து விளங்கும் கீழ்வேளூரில், சிறப்புடன் பொலியும் மாடக்கோயிலாகிய பெருந்திருக்கோயிலுள் வீற்றிருக்கின்றனர் அப் பெருமானைப் பணிபவர்கள் மேலான நிலை பெறுவார்கள்

1140 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவர் இனிதியல்
மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலில்
நிமலனை நினைவோடும்
சென்று லாவிநின்று ஏத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே

தெளிவுரை : நீண்ட சடையில் சுடர்மதி சூடி, கபாலம் ஏந்தி, தலைமாலைகளை வரிசையாகக் கோத்து அணிந்து, மன்றுள் ஆடும் பெருமானாய் இனிய இயல்பினில் நன்மணம் கமழும் கீழ்வேளூரில் விளங்கும் பெருந்திருக்கோயிலில் வீற்றிருக்கும் நிமலனை, ஒரு நிலைப்படுத்திய நெஞ்சினராய்ச் சென்றடைந்து ஏத்த வல்லவர்தம் வினை யாவும் தேய்ந்து அழிவது திண்ணம்

1141 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்
கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர்
தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய
பெருந்திருக் கோயில் மன்னு
முத்து லாவிய வித்தினை யேத்துமின்
முடுகிய இடர் போமே

தெளிவுரை : கொத்தாக விளங்கித் திகழும் சடைமுடி உடைய ஈசன், ஆடல் புரிபவர் முப்புரி நூல் அணிந்து ஏத்தும் அடியவர்களும், தொழுது போற்றும் கீழ்வேளூரில் உள்ள பெருந்திருக்கோயிலில் மன்னும் முத்து போன்ற அப்பரமனை ஏத்தி வணங்குமின் முனைந்து வந்து துன்புறுத்தும் இடரானது விலகிப் போகும்

1142  பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
வன்னியும் துன்னாரும்
கறைநி லாவிய கண்டர்எண் தோளினர்
காதல்செய் கீழ் வேளூர்
மறைநி லாவிய அந்தணர் மலிதரு
பெருந்திருக் கோயில் மன்னு
நிறைநிலாவிய ஈசனை நேசத்தால்
நினைபவர் வினைபோமே

தெளிவுரை : ஈசன், பிறைச் சந்திரன் நிலவும் சடையிடையில், பின்னிய வகையால் வன்னியும் கொண்டு, நீலகண்மும் உடையவராய் எட்டுத் தோள்களுடன் விளங்குபவர் அவர் விரும்புவது கீழ்வேளூர் அங்கு மறையோதும் அந்தணர்கள் நிறைவுடன் ஏத்தும் பெருந்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அப் பரமனைப் பக்தியுடன் வணங்குபவர்களுக்கு வினையேதும் இல்லை

1143 மலைநி லாவிய மைந்தனம் மலையினை
எடுத்தலும் அரக்கன்றன்
தலையெ லாநெரிந்து அலறிட ஊன்றினான்
உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர் காதல்செய்
பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினையவல் வினைபோமே

தெளிவுரை : மலைபோன்று உயர்ந்து விளங்கும் சிறப்புடையது பரமனின் கயிலை மலை அதனை எடுத்த இராவணனுடைய தலைகளை நெரித்து அலறுமாறு ஊன்றிய ஈசன் உறைவது கீழ்வேளூர் ஆகும் ஆங்கு, வேதம் வல்ல அந்தணர்கள், மறைகளை நன்கு ஓதி அன்புடன் ஏத்தும் பெருந்திருக் கோயிலுள், நிலைத்து மேவும் அப் பரமனைப் பக்தியுடன் வணங்கும் அடியவர்களுக்குக் கொடிய வினையானது இல்லை அதுதானே வீட்டு நீங்கும்

1144 மஞ்சு லாவிய கடற்கிடந்து தவனொடு
மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி
பாகனைப் பரிவொடும்
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்
மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
நடலைகள் நணுகாவே

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணவொண்ணாது விளங்குபவன் ஈசன் அப்பெருமான், பஞ்சு போன்ற மென்மையான பாதத்தையுடைய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டு, பரிவோடு, செம்மையான சொல்லாகிய வேதத்தால் பரவிய, புகழ்மிக்க கீழ்வேளூரில், நீலகண்டனாக மேவி வீற்றிருப்பவன் அவனை நண்ணி வணங்குமின் துன்பம் எதுவும் நண்ணாது

1145 சீறு லாவிய தலையினர் நிலையிலா
அமணர்கள் சீவரார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
கரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில்
பெருந்திருக் கோயில் மன்னு
பேறு லாவிய பெருமையன் திருவடி
பேணுமின் தவமாமே

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் கூறும் மொழிகள் உறுதியற்றவை அவற்றை விரும்பி ஏற்காதீர்கள் கீழ்வேளூரில் இடபக் கொடி உடையவன் குற்றமில்லாத பெருந்திருக் கோயிலில் வீற்றிருக்கின்றான் எல்லாப் பேறுகளும் நிலவும் பெருமையுடையவனாகிய அப்பெருமான் திருவடியைத் தொழுமின் அதுவே தவம் ஆகும்

1146 குருண்ட வார்குழற் சடையுடைக் குடிகனை
அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
கோயில்எம் பெருமானை
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடவல் லாரவர் சிவகதி
பெறுவது திடமாமே

தெளிவுரை : நீண்ட சடையுடைய, கீழ்வேளூரில் மறையவர்கள் தொழும் பெருந்திருக்கோயிலில் வீற்றிருக்கும் எம்பெருமானை, வயல்கள் மல்கும் புகலியில் மன்னும் ஞானசம்பந்தர் சொன்ன தெளிவான இத்திருப்பதிகத்ததை ஓதுபவர்களுக்கு சிவகதி உண்டாகும் இது உறுதி

திருச்சிற்றம்பலம்

242 திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1147 என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி யாதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே

தெளிவுரை : நெஞ்சமே ! நீ புண்ணியம் செய்தனை ! இவ்வுலகில் முற்பிறவிகளில் புரிந்த நல்வினைப் பயனால் மணிகளும் முத்துக்களும் கலந்து மன்னும் காவிரி சூழ்ந்து விளங்கும் திருவலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனை, வாயாரப் போற்றித் துதித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் பெருமை உற்றனை

1148 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழல் மங்கையொர் பங்கனை
வலஞ்சுழி இடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோடு
இனிதிருந் தமையாலே

தெளிவுரை : பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, வாழ்த்துகின்ற தேவர்களைக் காத்தருளிய இறைவன் உமாதேவியை ஒரு பாகமாக உடையவன் அப்பெருமான், வலஞ்சுழியை இடமாகக் கொண்டு மெய்த் தொண்டு புரியும் அடியவர்களோடு இருந்து அருள் புரிவதால், நமது வல்வினை யாவும் கெட்டு அழிந்தன

1149 திருந்த லார்புரம் தீயெழச் செறுவன
விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன
மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன் மந்திரம் ஆவன
வலஞ்சுழி இடமாக
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய
இணையடித் தலந்தானே

தெளிவுரை : திருந்தி நற்கதிக்கு முனையானது பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் மதில்களை எரித்துச் சாம்பலாக்கி, அடியவர்களை நன்கு பெருமை திகழப் பரிவுடன் காப்பதும், பக்தியில் அவர்களைத் திளைக்கச் செய்வதும், மயக்கம் தரும் பிணி முதலான நோயக்கு மருந்தாகி விளங்குவதும், யாவற்றுக்கும் மந்திரமாகி இருந்து பாதுகாப்பதும், தேவர்கள் ஏத்தி வலஞ்சுழியில் நாதனின் திருவடிக் கமலம் ஆகும்

1150 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தனர்
அறத்திற முனிவர்க்கு அன்று
இறைவ ரால்இடை நீழலில் இருந்துகந்து
இனிதருள் பெருமானார்
மறைகள் ஓதுவர் வருபுனல் வலஞ்சுழி
இடமகிழ்ந்து அருங்கானத்து
அறைகழல் சிலம்பு ஆர்க்கநின்று ஆடிய
அற்புதம் அறியோமே

தெளிவுரை : ஈசன், நீலகண்டத்தை உடையவர்; நன்கு காயும் சூரியனைப் போன்ற செம்மையான நிறத்தை உடையவர்; சனகாதி முனிவர்களுக்கு ஆல் நிழலில் இருந்து, தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் அறப்பொருள் உணர்த்தியவம்; வேதம் விரித்து ஓதுபவர் அப் பெருமான் வலஞ்சுழியில் வீற்றிருந்து ஒலிக்கும் கழலும் சிலம்பும் ஆர்க்க நின்று ஆடிய அற்புதத்தை யாரே அறிவார் !

1151 மண்ணர் நீரர்விண் காற்றினர் ஆற்றலாம்
எரியுரு வொரு பாகம்
பெண்ணர் ஆணெனத் தெரிவரும் வடிவினர்
பெருங்கடல் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
இணையடி தொழுவாரே

தெளிவுரை : ஈசன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களானவர்; ஆணும் ஆகிப் பெண்ணும் ஆகி அர்த்தநாரியாய் விளங்குபவர்; பவளம் போன்ற செந்நிற வண்ணம் உடையவர் அப் பெருமான் வலஞ்சுழியில் பிரியாது வீற்றிருப்பவர்; அன்போட விளங்கும் அடியவர்களின் எண்ணத்தில் புகுந்து இருப்பவராயினும் திருவடியைத் தொழும் பக்தர்கள் பலவாறு போற்றி இயம்பும் தன்மை உடையவர் ஆவார்

1152 ஒருவரால் உவமிப்பதை அரியதோர்
மேனியர் மடமாதர்
இருவர் ஆதரிப் பார்பல பூதமும்
பேய்களும் அடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்து
அகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி அடிகளே
வரிவளை கவர்ந் தாரே

தெளிவுரை : யாராவது ஒருவரை உவமை கூறவேண்டுமாயினும் அவ்வாறு இயலாத தன்மையில் அரியதோர் திருமேனியுடையவர் சிவபெருமான் அவர் கங்கை என்னும் நங்கையினையும், உமாதேவியையும் விழைந்திருப்பவர் பூதமும் பேய்க்கூட்டங்களும் அடையாளம் காணுமாறு, அருவம் அற்றண பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி, இல்லம்தோறும் சென்று பலி ஏற்று , ஒருவர் வருவர் என்றால், அவர் வலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார் அப் பெருமான் அழகிய வளையலைக் கவர்ந்தவர் ஆவார்

1153 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரம்
குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோம்என்றும் இயம்புவர்
இமையவர் பணிகேட்பார்
அன்றியூர் தமக்கு உள்ளன அறிகிலோம்
வலஞ்சுழி அரனார் பால்
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
சேயிழை தளர்வாமே

தெளிவுரை : குடமூக்கு, வலம்புரம், நெய்த்தானம் போன்ற ஊர்களில் விளங்கும் பெருமான் என்று போற்றித் தேவர்கள் முதலானோரால் வணங்கப் பெறும் ஈசன், அப்பிரான் இல்லாத ஊர் எதுவும் யாம் அறிகிலோம் உமாதேவியார், திருவலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசன்பால் சென்றணைந்தால், அப்பெருமான் விளங்கும் மற்ற தலங்களிலும் மேவுதல் கொள்ளலாம் என்னும் மாண்பு விரும்பி அடைந்தனர்

1154 குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித்து எடுத்தவன் கதிர்முடி
தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோடு அமர்ந்தவன்
வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்
அல்லவர் காணாரே

தெளிவுரை : உமாதேவி வெருவுமாறு பரந்து விளங்கும் கயிலை மலையைப் பிடித்து எடுத்த இராவணனுடைய முடிகளும், இருபது தோள்களும் நெரியுமாறு திருப்பாத விரலால் ஊன்றி, தேவியுடன் வீற்றிருக்கும் வலஞ்சுழி நாதனைப் போற்றி ஏத்த வல்லவர்கள் பரகதியைப் பெறுவர் ஏனையோர் அதனைப் பெறாதவர்

1155 அழலது ஓம்பிய அலர்மிசை அண்ணலும்
அரவணைத் துயின்றானும்
கழலும் சென்னியும் காண்பரி தாயவர்
மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினையதனொடு
துன்பங்கள் களைவாரே

தெளிவுரை : தீ வளர்த்து வேள்வியினை ஓம்பும் பிரமனும், பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும் முறையே திருமுடியும் திருவடியும் காண்பதற்கு அரிதாகிய மாண்பினையுடைய ஈசன், வீணை ஏந்தி விளங்குபவர் அப் பெருமான் வீற்றிருக்கும் திருவலஞ்சுழிலை வலம் வந்து வணங்கும் அடியவர்களுக்குச் சஞ்சித கன்மம் எனக் கொண்டுள்ள தொல்வினையும், பிராரத்த கன்மத்தினால் தோன்றும் துன்பங்களும் இல்லை

1156 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
தவம்புரிந்து அவம்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
மருவிய பெருமானைப்
பிறவி லாதவர் பெறுகதி பேசிடில்
அளவறுப்பு ஒண்ணாதே

தெளிவுரை : சமணரும் சாக்கியர்களும் தவம் புரிந்து அவம் செய்பவர்களாய் நன்னெறி பயவாத சொற்களைக் கூறுபவர்களாய் உள்ளனர் அவற்றைக் கைவிடுக மாறாக, மானைக் கரத்தில் ஏந்தி, அலைகள் கொண்டு திகழும் காவிரி வலமாக வரும், வலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனை மறவாது தியானம் செய்யும் அடியவர்கள் பெறுகின்ற நற்கதியைப் பேசுவதென்றால், அதன் அளவு வரையறுத்துக் கூறவொண்ணாத அளவு பெருகும் செம்மையுடையதாகும்

1157 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
நவிற்றிய தமிழ்மாலை
ஆதரித்து இசை கற்றவல் லார்சொலக்
கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
வருத்தம்வந்து அடையாவே

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாக உடையவன் ஆகிய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனை, வயல்கள் சூழ்ந்த காழியின் நாதனாய், வேதத்தில் வல்லவனாய் மேவும் ஞானசம்பந்தர் திருவாயால் நவிலப்பெற்ற இத் திருப்பதிகத்தை, மனதார இசைந்து ஓதுவா மூர்த்திகள் சொல்லக் கேட்டு மகிழ்ந்தவர்களுக்கு, வினையினால் உண்டாகும் துன்பம் எதுவும் இல்லை; இம்மையிலும் மறுமையிலும் வருத்தம் இல்லை

திருச்சிற்றம்பலம்

243 திருக்கேதீச்சரம் (அருள்மிகு கேத்தீஸ்வரர் திருக்கோயில், கேதீஸ்வரம், இலங்கை)

திருச்சிற்றம்பலம்

1158 விருது குன்றமா மேருவில் நாண்அரவா
அனல்எரி அம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்று
உரைபதி எந்நாளும்
கருது கின்றாவூர் கனைகடல் கடிகமழ்
பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரம் கைதொழக்
கடுவினை அடையாவே

தெளிவுரை : மலை போன்ற வெற்றிச் சின்னமாக விளங்கும் மகா மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பினை நாணாகவும், அக்கினையை எரிகின்ற அம்பாகவும் கொண்டு, மூன்று புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கிய ஈசன் உறைகின்ற பதியானது, கடலைகள் ஒலி செய்யவும், மணம் கமழும் பொழில் மிக்கதும் ஆகிய மாதோட்டம் தன்னுள் உள்ள கேதீச்சரம் ஆகும் ஆங்கு எந்நாளும் ஈசனைக் கைதொழுது போற்ற, கடுமையான வினை அணுகாது

1159 பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருது கைத்து அருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்சு
உண்டிருள் கண்டத்தர்
ஈடமாவது இருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரம் தொழுதுஎழக்
கெடும்இடர் வினைதானே

தெளிவுரை : ஈசன், வீணை மீட்டிப் பாடும் பாங்குடையவர்; பலவகைப்பட்ட நெறிமுறைகளை உடையவர்; இடப வாகனத்தைச் செலுத்தி வீற்றிருந்து நடம் புரிபவர்; தேவர்கள் துதித்து வணங்கி நிற்க நஞ்சினை உட்கொண்டு கரிய கண்டத்தினராய்க் காட்சி நல்கியவர் அப் பெருமானுக்கு இடமாவது, பெரிய கடற்கரையில் எழில் திகழ மேவும், மாதோட்ட நகரில் சிறப்புடன் விளங்குகின்ற கேதீச்சரம் ஆகும் அதனைத் தொழுது எழ, துன்பத்தைச் செய்யும் தீய வினைகெடும்

1160 பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்புஆர்க்கச்
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர்
அகந்தொறும் இடுபிச்சைக்கு
உண்ணல் ஆவதோர் இச்சையில் உழல்பவர்
உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்கு
அருவினை அடையாவே

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்பவர்; பிறைச் சந்திரன் தவழும் சடை முடியுடையவர்; ஒலிக்கும் கழலும் சிலம்பும் விளங்கத் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் திகழப் பூசுபவர்; பாடுபவர்; இல்லந்தோறும் இடுகின்ற பிச்சைகொண்டு உண்ணும் விருப்பத்தில் உழல்பவர் அப்பெருமான் உயர்ந்த மாண்பில் விளங்கும் மாதோட்டத்தின் அண்ணலாய் நண்ணும் கேதீச்சரத்தை அடைபவர்களுக்குத் துன்பம் தரும் வினை சாராது

1161 பொடிகொள் மேனியர் புலியதள் அரையினர்
விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத்து
அடிகள் ஆதரித்து இருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல்லார் தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே

தெளிவுரை : ஈசன், திருநீற்றுத் திருமேனியர்; புலியின் தோலை அரையில் கட்டி உள்ளவர்; நெடிய திருக்கரத்தில் அழகாக வடிக்கப்பெற்ற சூலத்தை ஏந்தியவர்; முப்புரி நூல் அணிந்த திருமார்பினர் அவர், கடல் சூழ்ந்த மாதோட்டத்தில் விளங்கும் அடிகளாய், விரும்பி மேவும் கேதீச்சரத்தில் திகழ்கின்றவர் அப்பெருமானை அன்பு கெழுமிய சிந்தையராய், தலையைத் தாழ்த்தி அட்டாங்கமாக வணங்கிப் போற்றும் அடியவர்பால் உள்ள வினை யாவும் நீங்கிச் செல்லும்

1162 நல்லர் ஆற்றவு(ம்) ஞானநன்கு உடையர்தம்
அடைந்தவர்க்கு அருள்ஈய
வல்லர் பார்மிசை வான்பிறப்பு இறப்பிலர்
மலிகடல் மாதோட்டத்து
எல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
இராப் பகல் நினைந் தேத்தி
அல்லல் ஆசுஅறுத்து அரனடி இணைதொழும்
அன்பராம் அடியாரே

தெளிவுரை : ஈசன், மிகவும் நல்லவர்; ஞானம் நன்கு கைவரப்பெற்ற சீலர்களுக்குள் அருள் வழங்க வல்லவர்; இப்பூவுலகில் அருள் புரிந்து நன்மை புரியும் காரணத்தினைத் திருக்குறிப்பாக்கினும், பிறப்பதும் இறப்பதும் ஆகிய நிலையினைக் கொள்ளாதவர்; கடல் விளங்கும் மாதோட்டத்தில், எல்லையில்லாத புகழ் மேவிய எந்தையாகிய அப்பெருமானை திகழும் கேதீச்சரத்தினை இரவும் பகலும் நினைத்து வழிபட்டுத் துன்பமும் குற்றமும் நீக்கி அன்புடையவர்களாய் விளங்குபவர்கள் அடியவர்கள் ஆவர்

1163 பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
பொருந்தவைத்து ஒருபாகம்
மாழை அங்கயற் கண்ணிபால் அருளிய
பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப்பு அணிந்த நீள் மார்பர்
கேதீச்சரம் பிரியாரே

தெளிவுரை : ஈசன், பெருமை மிக்க கங்கையைச் சடையில் பொருந்த வைத்து, ஒரு பாகத்தில் இளமை திகழும் அழகிய கயல் போன்ற கண்ணுடைய உமாதேவியை இருக்குமாறு அருள் செய்த ஒண்பொருளாகியவர் பன்றியின் கொம்பு அணிந்த அகன்ற திருமார்பினையுடைய அப் பரமன், வாழைத் தோட்டத்தில் களிப்புற வாழும் மந்திகள் மருவிடும் மாதோட்ட நகரத்தில் மேவும் கேதீச்சரத்தில் பிரியாது விளங்குபவர்

1164 பண்டு நால்வருக்கு அறமுரைத்து அருளிப்பல்
லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடம் கைதொழக்
காதலித்து உறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாள்தொறும் துதிசெய அருள்செய்கே
தீச்சரம் அதுதானே

தெளிவுரை : பண்டைய நாளில் சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு அறம் உணர்த்தி அருளிப் பல உலகங்களில் விளங்கும் உயிரினுள்ளம் கோயில் கொண்டு விளங்கி இயக்கும் ஈசன் கடல் பக்கம் யாவரும் தொழுமாறு நிற்க விரும்பி உறைகின்ற கோயில், வண்டு பண் செய்யும் மலர்ப் பொழிலில் மயிலானது நடம் புரியும் மாதோட்ட நகரில் தொண்டர்கள் நாள்தோறும் சென்று துதிசெய்து வணங்க அருள் செய்யும் கேதீச்சரம் ஆகும்

1165 தென்னிலங் கையர்குல பதிமலை நலிந்தெடுத்
தவன்முடி திண்டோள்
தன்னிலங் கெடவடர்த்து அவர்க்கருள் செய்த
தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்டத்து
உன்னிஅன்பொடும் அடியவர் இறைஞ்சுகே
தீச்சுரத்து உள்ளாரே

தெளிவுரை : தென்னிலங்கையர் தலைவனாகிய இராவணன் வலிந்து எடுத்த கயிலை மலையானது, அவன் முடிகளும் தோள்களும் தம் நிலையிலிருந்த கெடுமாறு அடர்த்து, பின்னர் அருள் செய்த தலைவராகிய சிவபெருமான், கடற்கரையில், பொன்னும் முத்தும் மற்றும் சிறப்பான மணிகளும் பொருந்தி விளங்கும் மாந்தோட்டத்தில், அடியவர்கள் அன்புடன் நினைத்துப் போற்றி வழிபடும் கேதீச்சரத்தில் வீற்றிருப்பவர்

1166 பூவு ளானும்அப் பொருகடல் வண்ணனும்
புவியிழந்து எழுந்தோடி
மேவி நாடிநின் னடியிணை காண்கிலா
வித்தகம் என்னாகும்
மாவும் பூகமும் கதலியு நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடும் திருந்துகே தீச்சரத்து
இருந்தஎம் பெருமானே

தெளிவுரை : பிரமனும், திருமாலும், வானில் பறந்து சென்று பூமியில் குடைந்து சென்றும் நும்மைக் காண்கிலா வித்தகம் புரிந்த பெருமானே ! மா, பாக்கு, வாழை மரங்கள் மிகுந்துள்ள மாதோட்ட நன்னகரில் சிறப்புடன் உமாதேவியோடு கேதீச்சரத்தில் வீற்றிருப்பவர் நீவிர் ஆவீர்

1167 புத்திராய்ச் சில புனைதுகில் உடையவர்
புறனுரைச் சமண்ஆதர்
எத்தர் ஆகிநின்று உண்பவர் இயம்பிய
ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து
போர்த்தவர் மாதோட்டத்து
அத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரம் அடைமின்னே

தெளிவுரை : புத்தரும் சமணரும் இயம்பும் சொற்கள் அறியாமையால் விளைவனவாகும் அவற்றைக் கொள்ள வேண்டாம் யானையை மாய்த்து, அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டு மாதோட்டத்தில் விளங்கும் ஈசன் மேவும் பாலாவி என்னும் ஆற்றின் கரையில் உள்ள கேதீச்சரத்தை அடைவீராக அவ்வாறு சென்று தொழுது போற்ற, அறியாமை நீங்கித் தெளிவு உண்டாகும் என்பது குறிப்பு

1168 மாடெ லாமண முரசெனக் கடலினது
ஒலிகவர் மாதோட்டத்து
ஆடல் ஏறுடை அண்ணல் கேதீச்சரத்து
அடிகளை அணிகாழி
நாடு ளார்க்கு இறை ஞானசம் பந்தன்சொல்
நவின்றெழு பாமாலைப்
பாடல் ஆயின பாடுமின் பத்தர்கள்
பரகதி பெறலாமே

தெளிவுரை : கடலின் ஒலியானது மணமுரசு என்று சொல்லுமாறு எல்லா இடங்களிலும் சூழ்ந்து மங்கலம் என ஒலிக்க, மாதோட்டத்தில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலாகிய கேதீச்சாத்தாரை, அணி திகழும் சீகாழிப் பதியை நாடும் அன்பர்களுக்குத் தலைவராகிய ஞானசம்பந்தர் சொற்களால் நவின்று எழுப்பிய பாமாலையாகிய இத் திருப்பதிகத்தைப் பக்தர்கள் பாடுவாராக அது பரகதியைத் தரும்

திருச்சிற்றம்பலம்

244 திருவிற்குடிவீரட்டம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1169 வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையம் சடையினர் கொடியினர்
உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மான்அமர்ந்து இனிதுறை
விற்குடி வீரட்டம்
அடியர் ஆகிநின்று ஏத்தவல் லார்தமை
அருவினை அடையாவே

தெளிவுரை : ஈசன், அழகிய திருமேனியுடையவர்; வானத்தில் மேவும் சந்திரனைச் சூடியவர்; கங்கை தரித்தவர்; கொன்றை மாலையணிந்த சடைமுடியுடையவர்; இடபக் கொடியுடையவர்; புலியின் தோலை உடையாகக் கொண்டு விளங்குபவர்; இடப வாகனத்தில் மேவும் எம்பெருமான் ஆவர் அப்பெருமான் இனிது வீற்றிருக்கும் விற்குடி வீரட்டத்தின் அடியவர்களாய் விளங்கி ஏத்தவல்லவர்களுக்கு தீமை தரும் வினை எதுவும் சாராது

1170 களங்கொள் கொன்றையும் கதிர்விரி மதியமும்
கடிகமழ் சடைக் கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மான்உறை
விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்
வருத்தமது அறியாரே

தெளிவுரை : öõõன்றை மலரும், சந்திரனும், மணம் கமழும் சடை முடியில் தரித்து, தன்னை நினைத்துப் போற்றுகின்ற பத்தர்களுக்கு அருள்புரியும் பெருமை உடையவராய், யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டு விளங்கும் திருமேனியராகிய எம்பெருமான் வீற்றிருக்கும் விற்குடியில் மேவும் வீரட்டத்தை, மாமலரால் ஏத்துபவர்கள் உலகில் எவ்விதமான துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்

1171 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்து
ஆடிய வேடத்தர்
விரியு மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோர்எனப்
பேணுவர் உலகத்தே

தெளிவுரை : ஈசன், நஞ்சினை உண்டமையால், விளைந்த கரிய கண்டத்தையுடையவர்; வெண்மையான திருநீறு பூசிய திருமார்பு உடையவர்; வலிமை மிக்க திருக்கரத்தில் நெருப்பு ஏந்தியவர்; புல்லிய சடையுடையவர்; சுடுகாட்டை இடமாகக் கொண்டு நடம்புரியும் திருக்கோலத்தையுடையவர், அப் பெருமான், மலர்கள் பூத்து விளங்கும் பொய்கை சூழ்ந்த விற்குடியில் மேவும் வீரட்டத்தில் யாண்டும் பிரியாது வீற்றிருந்து பெருந்தவத்துடன் விளங்குபவர் எனப் பேணத் தகுந்தவராய் உலகத்தினரால் புகழப் படுபவர் ஆவர்

1172 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணச் சிலம்பினர் கலம்பெறு
கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடை யானிடம்
விற்குடி வீரட்டம்
சேரும் நெஞ்சினார்க்கு அல்லதுண்டோ பிணி
தீவினை கெடுமாறே

தெளிவுரை : பூத கணங்கள் சேர்ந்து இசை பாடவும், ஆடவும் பொலிவு தரும் நலம் தரும் திருப்பாதத்தில் சிலம்பு அணிந்த சிவபெருமான், பாற்கடலில் தோன்றி நஞ்சினை உண்டவர் வேதம் விரிக்கும் திருநாவினராகிய அவர், வீற்றிருக்கும் இடமாகிய விற்குடி வீரட்டானத்தைச் சிந்திக்கும் அன்பர்களுக்கன்றிப் பிறர்க்குத் தீவினையும் பிணியும் கெடும் வழி உள்ளதோ !

1173 கடிய ஏற்றினர் கனலன மேனியர்
அனலெழ ஊர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்தனது
அடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பான்உறை
விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினால்
பற்றறும் அருநோயே

தெளிவுரை : விரைவுத் தன்மையுடைய இடப வாகனத்தையுடைய சிவபெருமான், கனல் போன்ற சிவந்த திருமேனியுடையவர் அவர் முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்குகின்ற அரிய செயலை முன்னிட்டு மேருமலையை வில்லாக வளைத்த பெருமான் அப் பரமன், தனது அடியவரின்மேல் பற்றியுள்ள கொடுமை மிக்க தீவினைகளை வீழ்த்துமாறு வீற்றிருக்கும் விற்குடி மேவும் வீரட்டத்தைப் படிந்து பரவித் தொழுமின் அவ்வாறு தொழுதால் துயர் விளைவிக்கும் நோய் யாவும் நீங்கும்

1174 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
கையினர் மெய்யார்ந்த
அண்ணல் அன்புசெய் வார்அவர்க்கு எளியவர்
அரியவர் அல்லார்க்கு
விண்ணில் ஆர்பொழில் மல்கிய மலர்விரி
விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்கு
இடர்கள் வந்து அடையாவே

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகம் கொண்டு விளங்குபவர்; பெருமை வாய்ந்தவர்; சிறிய மானைக் கையினில் கொள்டுள்ளவனர்; யாண்டும் மெய்ம்மையுடைய அண்ணல்; அன்பின் மிக்க தொண்டர்களுக்கு எளிமையாக விளங்கி நல்லருள் புரியும் கருணை வள்ளல்; அன்பில்லாதவர்களுக்கு அரியவர் எனவாகி விளங்குபவர் அப் பெருமான், விண்ணை முட்டும் பொழில் மல்கியும் மலர்கள் பெருகியும் திகழும் விற்குடியில் மேவும் வீரட்டத்தில் வீற்றிருப்பவர்; அப்பதியைச் சிந்தையால் எண்ணித் தொழுகின்ற அடியவர்களுக்கு எவ்விதமான இடரும் சாராது

1175 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
இகல்அழி தரஊன்று
திடங்கொள் மால்வரை யான்உரை யார்தரு
பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிடறு உடையவன் உறைபதி
விற்குடி வீரட்டம்
தொடங்குமாறு இசை பாடிடநின் றார்தமைத்
துன்பநோய் அடையாவே

தெளிவுரை : இராவணன் உள்ளத்தில் தோன்றிய பகைமை அழிவுற்று நீங்குமாறு திருப்பாத விரலால் ஊன்றிய உறுதியான கயிலை மலையின் நாதனாகிய ஈசன், உரைக்கப்படும் யாவற்றுக்கும் பொருளாக உடைய பெருமான் இருள் போன்ற கரிய கண்டத்தை உடைய அவன் உறையும் பதியாகிய விற்குடி வீரட்டத்தைப் போற்றி இசையால் பண்ணிசைத்துப் பாடும் அடியவர்களுக்குத் துன்பம் தரும் பிணி எதுவும் அடையாது

1176 செங்கண் மாலொடு நான்முகன் தேடியும்
திருவடி அறியாமை
எங்கும் ஆர்எரி யாகிய இறைவனை
அறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித்து உகந்தவன்
விற்குடி வீரட்டம்
தங்கை யால்தொழுது ஏத்தவல் லார்அவர்
தவமல்கு குணத்தாரே

தெளிவுரை : திருமாலும், பிரமனும் தேடியும் திருவடி அறியாத தன்மையில், மேலும் கீழுமாக யாங்கணும் பேரொளி காட்டும் நெருப்புப் பிழ்ம்பாகியவன் இறைவன் அப்பெருமான், கங்கையைச் சடைமுடியில் பெருந்த வைத்து, மலை போன்ற பெரிய யானையின் தோலை உரித்து உகந்தவர் விற்குடி வீரட்டத்தில் வீற்றிருக்கும் அப்பரமனைத் தமது கையால் தொழுது போற்று அடியவர்கள், தவத்தின் பயன் மிக்கவராய்த் திகழ்வார்கள்

1177 பிண்டம் உண்டுழல் வார்களும் பிரிதுவர்
ஆடையர் அவர் வார்த்தை
பண்டும் இன்றுமோர் பெருளெனக் கருதன்மின்
பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவன் இடம்எனில்
விற்குடி வீரட்டம்
கண்டு கொண்டடி காதல்செய் வார்அவர்
கருத்துறும் குணத்தாரே

தெளிவுரை : உணவிலும் மற்றும் உடையிலும் நாட்டம் கொண்டுள்ள புறச் சமயத்தினரின் வார்த்தைகளைப் பொருட்படுத்தும் கருத்தினைத் தவிர்க ஈசன்பால் அன்பு கொள்வீராக நன்கு மலர்ந்த பெருமையான மலர்களைச் சடையில் சூடிய இறைவனுடைய இடம் யாது எனில், அது விற்குடி வீரட்டம் ஆகும் அதனைக் கண்டு தரிசித்துத் திருவடித் தலத்தை விரும்பித் தொழுகின்றவர், நற்கருத்தினையும் நற்குணத்தினையும் வாய்க்கப் பெற்றவர் ஆவர்

1178 விலங்க லேசிலை யிடமென உடையவன்
விற்குடி வீரட்டத்து
இலங்கு சோதியை எம்பெரு மான்றனை
எழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வார்பொழில் காழியுள் ஞானசம்
பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
மற்றது வரம்ஆமே

தெளிவுரை : மலைகளில் சிறந்த மேருவை வில்லாகக் கொண்டு விளங்குபவன், ஈசன்; மலைகளில் சிறந்த கயிலை மலையை இருப்பிடமாக உடையவன் அப்பெருமான் அவன் விற்குடி வீரட்டத்தில் விளங்குகின்ற சோதியாகிய எம்பெருமான் ஆவார் எழில் திகழும் அப்பெருமானின் திருக்கழலைப் பணிந்து, நலம் யாவும் கொண்டு திகழும் நீண்ட பொழில் உடைய காழியுள் விளங்கும் ஞானசம்பந்தன் ஏத்திப் பரவிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை வலம் செய்து இசையுடன் பாடுமின் அவ்வாறு பாடல் இசைத்துப் போற்ற, அதுவே வரப் பிரசாதமாகும்

திருச்சிற்றம்பலம்

245 கோட்டூர் (அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1179 நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
கண்ணனே ஓற்றைவிடைச்
சூல மார்தரு கையனே துன்றுபைம்
பொழில்கள்சூழ்ந்த அழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
கொழுந்தே யென்று எழுவார்கள்
சால நீள்தலம் அதனடைப் புகழ்மிகத்
தாங்குவர் பாங்காவே

தெளிவுரை : நீலகண்டனாக விளங்கம் நாதனே ! நெற்றியில் கண்ணுடையே ஈசனே ! ஒற்றை இடபத்தில அமர்ந்து சூலத்தைக் கரத்தேந்தி விளங்குகின்ற பரமனே ! பசுமையான பொழில்கள் சூழ்ந்து நறுமணம் கமழும் அழகிய மலர்கள் விளங்கும் கோட்டூரில் மேவும் நற்கொழுந்தே ! என்று துதித்து எழுகின்ற தொண்டர்கள், நிலவுலகில் நீண்ட காலம் புகழ் மிகுந்து வாழ்பவர்கள் ஆவார்கள்

1180 பங்கயம்மலர்ச் சீறடிப்பஞ்சுறு
மெல்விரல் அரவல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
மிழற்றிய மொழியார்மென்
கொங்கை யார்குழாம் குணலைசெய் கோட்டூர்நற்
கொழுந் தேயென்று எழுவார்கள்
சங்கை ஒன்றில ராகிச்சங் கரன்திரு
வருள்பெறல் எளிதாமே

தெளிவுரை : தாமரை மலர் போன்று சிறிய கால்களையும் பஞ்சு போன்ற மென்மையான விரல்களும், அரவத்தை ஒத்த அல்குலும் உடைய மகளிர் பலர் மயில் போன்ற சாயலும், குயில் போன்ற குரல் இனிமையும், கிளி போன்ற சொல் நவிலும் பாங்கும் உடையவராய், மென்மையான மொழி பகர்ந்து நடனம் புரிபவராய் விளங்குகின்ற கோட்டூரில் மேவும் நற்கொழுந்தே என்று தொழுது போற்றுபவர் ஆயினர் இத் தன்மையானது சங்கரன் திருவருளை ஐயம் இன்றிப் பெறுதலுக்கு எளிதாகிய வழியாயிற்று

1181 நம்பனார்நல மலர்கொடு தொழுதெம்
அடியவர் தமக்கெல்லாம்
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
செல்வமல் கியநல்ல
கொம்ப னார்தொழுது ஆடிய கோட்டூர்நற்
கொழுந்தேயென்று எழுவார்கள்
அம்பொ னார்தரும் உலகினில் அமரரோடு
அமர்ந்தினிது இருப்பாரே

தெளிவுரை : நன்மலர் கொண்டு அடியவர்கள் தொழுது போற்ற விளங்குபவர், நம்பன் ஆகிய சிவபெருமான் அவர் செம்பொன் போன்று மகிழ்ச்சியினை நல்குபவர் எழில் மிக்கும், விளங்கும் செல்வம் பெருகவும், பூங்கொம்பு அனைய தேவ மங்கையாகிய அரம்பை பூசித்த நற்கொழுந்தே ! என்று தொழுபவர்கள், தேவர் உலகத்தில் தேவர்களுடன் இனிது மகிழ்ந்திருப்பார்கள்

1182 பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
மாங்கனி பயில்வாய
கலவ மஞ்சைகள் நிலவுசொற் கிள்ளைகள்
அன்னம் சேர்ந்து அழகாய
குலவு நீள்வயற் கயல்உகள் கோட்டூர்நற்
கொழுந்தேயென்று எழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
நீடிய புகழாரே

தெளிவுரை : பலவாகிய நீண்ட பொழில்களில் சுவை மிகுந்த கனிகள், தேன் மணக்கும் பலா, மாங்கனிகள் விளங்கவும், தோகை விரித்தாடும் மயில்களும், நற்சொற்களை மொழியும் கிளிகளும் மற்றும் அன்னப் பறவைகளும் சேர்ந்து மேவும் வளம் மிக்க வயல்களில் கயல்கள் திகழும் கோட்டூரில் வீற்றிருக்கும் நற்கொழுந்தே என ஈசனைப் போற்றிப் பரவுபவர்கள்நிலவும் நல்ல செல்வந்தராகியும், புகழ்மிக்கவர்களாயும், இவ் உலகத்தில் நீண்டு விளங்குவார்கள்

1183 உருகு வாருள்ளத்து ஒண்சுடர் தனக்கென்றும்
அன்பாரம் அடியார்கள்
பருகும் ஆரமுது எனநின்று பரிவொடு
பத்திசெய்து எத்திசையும்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென்று எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
அவன்அருள் பெறலாமே

தெளிவுரை : உள்ளம் ஒன்றி உருகி நின்று போற்றும் அன்பர்களுக்கு ஒண்சுடராகிப் பருகும் ஆரமுதாகி விளங்குகின்ற ஈசன், வயல் சூழ்ந்த கோட்டூரின் நற்கொழுந்தாக இருப்பவனே ! என்று போற்றி வழிபடுபவர்கள், வினை நீங்கப் பெற்றவராய் அப்பெருமானின் அருள் பெறுவார்கள்

1184 துன்று வார்சடைத் தூமதி மத்தமும்
துன்னெருக் கார் வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
புலியுரி உடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
கொழுந்தே யென்று எழுவாரை
என்றும் ஏத்துவார்க்கு இடரிலை கேடிலை
ஏதம்வந்து அடையாவே

தெளிவுரை : நீண்ட சடை முடியில் தூய்மையான சந்திரனும், ஊமத்த லரும், எருக்கம் பூவும், வன்னிப் பத்தரமும் நிலவ, இறந்தவர்களின் மண்டை ஓடும், கபாலமும் கொண்டு, புலித்தோலை ஆடையாக உடுத்திப் பொன்னென மேவும் கொன்றை மலர் தரித்துக் கோட்டூரில் வீற்றிருக்கும் நற்கொழுந்தீசப் பெருமானே ! எனப் பரவித் தொழுபவர்களை ஏத்தும் அடியவர் பெருமக்களுக்கு இடர் இல்லை; கேடு இல்லை; குற்றமும் அவர்கள்பால் அணுகாது

1185 மாட மாளிகை கோபுரம் கூடங்கள்
மணியரங்கு அணிசாலை
பாட சூழ்மதில் பைம்பொன்செய் மண்டபம்
பரிசொடு பயில்வாய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென்று எழுவார்கள்
கேடது ஒன்றில ராகிநல் லுலகினில்
கெழுவுவர் புகழாலே

தெளிவுரை : மாட மாளிகைகள், கோபுரம், கூடங்கள், அரங்குகள், அழகிய சாலைகள், பெரிய மதில்கள், மண்டபங்கள் விளங்கவும், பூம்பொழில்கள் சூழவும் உள்ள கோட்டூரில் வீற்றிருக்கும் நற்கொழுந்தீசனே என்று போற்றுகின்றவர்கள், கேடு எதுவும் இல்லாதவர்களாய் விளங்கிப் புகழ் மிகுந்தும் திகழ்வார்கள்

1186 ஒளிகொள் வாளெயிற்று அரக்கன்அவ் வுயர்வரை
யெடுத்தலும் உமையஞ்சிச்
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு
நாள்அவற்கு அருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்
தவமுடை யவர்தாமே

தெளிவுரை : இராவணன், உயர்ந்ததாகிய கயிலை மலையை எடுத்தபோது, உமாதேவி அஞ்சுதல் கொண்டு சுளியத் தமது திருவிரலால் ஊன்றி அவ்அரக்கனை நலிவு செய்து, பின்னர் மந்திர வாளும் நீண்ட வாழ்நாளும் அருள் புரிந்த பூம்பொழில் சூழ்ந்த கோட்டூரில் மேவும் நற்கொழுந்தீசப் பெருமானைத் தொழுது போற்றுபவர்கள், அப்பெருமானின் திருவடிக் கமலத்தைப் பெறும் தவப் பயனை அடைந்தவர்கள் ஆவார்கள்

1187 பாடி யாடு மெய்ப் பத்தர்கட்கு அருள்செயு
முத்தினைப் பவளத் தைத்
தேடிமாலயன் காண்வொண் ணாதவத்
திருவினைத் தெரிவைமார்
கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற்
கொழுந் தேயென்று எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகிஇவ் வுலகினில்
நிகழ்தரு புக ழாரே

தெளிவுரை : பாடிப் போற்றியும் பக்தியால் தன்னிலை மறந்து ஆடியும் வழிபடும் அடியவர்களுக்கு, முத்தும் பவளமும் போன்ற மேலான பொருளாக விளங்கும் பெருமான், திருமாலும், பிரமனும் தேடிக் காண வெண்ணாத செல்வராக விளங்குபவர் அவரை, மகளிர்கள் கூடிச் சேர்ந்தும் ஆடவர்கள் கைதொழுது கோட்டூரில் வீற்றிருக்கும் நற்கொழுந்தே என்றும் வணங்குகின்றனர் அத்தகையோர் நிலை பெற்ற செல்வம் உடையவராய்ப் புகழுடன் விளங்குவார்கள்

1188 கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்
கொழுந்தினைச் செழுந்திரளைப்
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
மெய்ய(ன்)நல் லருள்என்றும்
காணல் ஒன்றிலாக் காரமண் தேரர்குண்
டாக்கர் சொற் கருதாதே
பேணல் செய்துஅர னைத்தொழும் அடியவர்
பெருமையைப் பெறுவாரே

தெளிவுரை : பிறை சந்திரனைச் சூடிய சடை முடிஉடைய, கோட்டூரின் நற்கொழுந்தீசப் பெருமான் செழுமையுடைய திரட்சியாய் விளங்கி நிற்க, பூக்கள் மற்றும் அணி அலங்காரம் செய்து போற்றித் தொழுவீராக சமணர்களும், தேரர்களும் கூறும் சொற்களைக் கருத்திற் கொள்ளாது, அரனைத் தொழும் அடியவர்களுக்கு எல்லாப் பெருமையும் நாடும்

1189 பந்து லாவிரண் பவளவாய்த் தேன்மொழிப்
பாவையோடு உருவாரும்
கொந்து லாமலர் விரிபொழில் கோட்டூர்நற்
கொழுந்தினைச் செழும்பவளம்
வந்து லாவிய காழியுள் ஞானசம்
பந்தன்வாய்ந்து உரைசெய்த
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்
தாங்குவர் புகழாலே

தெளிவுரை : பந்தார் விரல்களும் பவளவாயும் உடைய தேன் மொழிப் பாவை என்னும் திருநாமம் தாங்கிய உமாதேவியோடு, பொழில்சூழ் கோட்டூரின் நற்கொழுந்தீசப் பெருமானை, செழுமையான பவளம் விளங்கும் காழியுள்மேவும் ஞானசம்பந்தர் உரைசெய்த சந்தம் திகழும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர் புகழ் மிக்கவராவர்

திருச்சிற்றம்பலம்

246 திருமாந்துறை (அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1190 செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும்
செருந்திசெண் பகம்ஆனைக்
கொம்பும் ஆரமு(ம்) மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொ னேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரான்இமை யோர்தொழு பைங்கழல்
ஏத்துதல் செய்வோமே

தெளிவுரை : செம்பொன் போன்ற வேங்கை மரம், குங்கும மரம், மற்றும் செருந்தி, செண்பகம், ஆனைக் கொம்பு ஆரம், மாதவி, சுரபுன்னை, குருந்த மலர்கள் எனப் பல்வகையான மரங்களும், ஆரங்கள் மற்றும் பூக்களும் உந்திக்கொண்டு வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் விளங்கும் ஈசன், தேவர்களாய் தொழப் படுபவர் அத்தகைய பெருமானின் இனிய கழல்களை ஏத்திப் பரவுவோமாக

1191 விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உறைவானத்
துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச்
சுடவிழித் தவன்நெற்றி
அளக வாள்நுதல் அரிவைதன் பங்கனை
அன்றிமற்று அறியோமே

தெளிவுரை : விளா மரங்களும், தேனும் உயர்ந்த வகையில் பெரும்புகழ் மிக்க முதிர்ந்த மூங்கில்களிலிருந்த தெரித்த சாதிமுத்துக்களும் நீர் அலைகளால் உந்தப பெற்று வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் உறைகின்ற ஈசன், துளப மாலையுடைய திருமாலின் மகனாகிய, ஐங்கணைகளைக் கொண்டு விளங்கும் மன்மதனை, எரியுமாறு விழித்த நெற்றிக் கண்ணுடையவன் உமாதேவியைத் தனது பாகமாகக் கொண்டு மேவும் அப்பரமனையன்றி மற்ற எதுவும் யாம் அறிவோம்

1192 கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமும்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிட வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யில்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந்த தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது
கெழுமுதல் அறியோமே

தெளிவுரை : மலைப் பகுதிகளிலிருந்து பாக்கு மரங்களின் குலைகளை நீரின்வழி, கொண்டு வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் உறையும் ஈசன் பிரம கபாலம் ஏந்திப் பலி கொள்பவன் அப்பெருமான், வானவர்கள் மகிழ்ந்து ஏத்தும் மாசிலாமணியாக விளங்குபவன் அப் பரமன் திருக்கழலைத் தொழுதலை அன்றி வேறு நிறைவான பெருளை யாம் அறியோம் ஈசனையன்றி முழு முதல் வேறு இல்லை என்பது சுட்டப் பெற்றது

1193 இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமருது இலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
வணங்குதல் அறியோமே

தெளிவுரை : இலவம், குங்குமம், ஈச்சம், சுரபுன்னை, இளமருது, இலவங்கம் என யாவும் கலந்து வரும் காவிரியில் வடகரை மாந்துறையில் உறையும் நீலகண்டனாகிய ஈசன்; கங்கை, சந்திரன், ஊமத்தம், அரவம் ஆகியவற்றைப் பொருந்த வைத்த மலையானவர்; வானவர்தம் கொழுந்தானவர் அப்பெருமானையன்றி வேறு எப்பொருளும் அறியத்தக்கது அல்ல

1194 கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி
குரவிடை மலர்உந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறை வானைப்
பாங்கி னால்இடுந் தூபமும் தீபமும்
பாட்டவிம் மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படும் தவத் தோரே

தெளிவுரை : கோங்கு, செண்பகம், குருந்தை, பாதிரி, குரவம் ஆகிய மலர்களை இடையில் உந்திவரும் காவிரியின் வடகரை மாந்துறையில் உறையும் ஈசனை, சிவாகம விதிப்படி தூப தீபங்கள் மற்றும், தோத்திரப் பாட்டும் மொழிந்து மலர் தூவி வணங்கித் திருநாமங்களை நாவால் ஓதுபவர்கள், தவத்தின் பயனை அடைந்தவர்கள் ஆவார்கள்

1195 பெருகு சந்தனம் காரகில் பீலியும்
பெருமர நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதன்எம் பெருமானைப்
பரிவி னால்இருந்து இரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே

தெளிவுரை : சந்தனம், அகில், மயிற் பீலி ஆகியனவும், பெருமரங்களும் உந்திக் கொண்டு வந்த கரை சேர்க்கும் காவிரியின் வடகரை மாந்துறையில் மேவும் புனிதனாகிய எம்பெருமானைப் பக்திப் பெருக்கினால் சூரியனும், சந்திரனும் மற்றும் பார்மன்னர்களும் ஏத்த, மருத்துக்கள் வழிபட்டுச் சிறந்த மலரடியை, நாம் வணங்குதல் செய்வோமாக

1196 நறவ மல்லிகை முல்லையு மௌவலு
நாள்மலர் அவை வாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறைஅன்று அங்கு
அறவ னாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரை வில்லால்
நிறைய வாங்கியே வலித்தெயில் எய்தவ(ன்)
நிரைகழல் பணிவோமே

தெளிவுரை : தேன் துளிர்க்கும் மல்லிகை, முல்லை, மௌவல் ஆகிய மலர்களை வாரி மிகுதியாகத் திகழும் வகையில் உந்தித் தள்ளிக் கொண்டு வரும் காவிரி வடகரை மாந்துறையின் நாதன், அறக் கடவுளாகிய காலனை உதைத்த தூயவனாய், மேருவை வில்லாகக் கொண்டு முப்புரக் கோட்டைகளை எரியுமாறு செய்வன் அப் பெருமான் இணையடியைப் பணிவோமாக

1197 மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத்து ஆர்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானைச்
சிந்தியாமனத் தார்அவர் சேர்வது
தீநெறி யதுதானே

தெளிவுரை : தென்றல் காற்று வீசும் பொழில்களில் விளங்கும் மாங்கனிகளை மந்திகள் பறித்துத் தின்ன, மாணிக்கங்களை உந்தி தள்ளி நீர் பெருக்கி வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் உறையும் ஈசனை, நிந்தனை செய்த பாங்கில் ஆர்த்துத் கயிலை மலையை எடுத்த அரக்கனை நெரித்த திருவிரலானைச் சிந்தனை செய்து வணங்காதவர் சேர்வது தீ நெறியேயாகும்

1198 நீல மாமணி நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமவர்வானை
மாலு நான்முகன் தேடியும் காண்கிலா
மலரடி யிணைநாளும்
கோலம் ஏத்திநின்று ஆடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே

தெளிவுரை : நீல நிற மணிகளும், முத்துக்களும், மலர்க் குவியல்களும் நிரம்ப உந்தித் தள்ளிக் கொண்டு வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் வீற்றிருக்கும் பெருமான் திருமாலும் பிரமனும் தேடியும் காண்கிலாத மலரடிச் சிறப்புடையவர் அத் திருவடிகளை நாள்தோறும் ஏத்திப் பாடுமின், ஆடுமின் அவ்வாறு செய்தால் கூற்றுவனாய் உமக்கு நலிவு இல்லை

1199 நின்று ணும்சமண் தேரரு நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலன்களு(ம்)
நாணலி னுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொரு காலம்
அன்றி யுள்ளழிந்து எழும்பரி சழகிது
அதுஅவர்க்கு இடம் ஆமே

தெளிவுரை : சமணரும் தேரரும் நிலையற்ற சொற்களை நவில்பவர் ஆவர் நீண்ட மூங்கில்களும், தேன் மணம் கமழும் மாங்கனி, வாழைப்பழம் ஆகியனவும் நுரையின் வாயிலாக அடித்துத் தள்ளி வரும் காவிரியின் வடகரை மாந்துறையினை எக்காலத்தும் உள்ளம் உருகித் தொழும் அடியவர்களுக்குப் பரிசாவது, அவ்அடியவர் நெஞ்சுள் ஈசன் இடம் கொண்டு வீற்றிருந்து ஆனந்தத்தைப் பொழிதலாம்

1200 வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை உறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர்தாமே

தெளிவுரை : மலைபோன்ற உயர்ந்த வளத்தை ஈர்த்து நல்குகின்ற காவிரியின் வடகரை மாந்துறையில் உறையும் ஈசனை, சிரபுரத்துடைய கவுணியர் குலத்தின் வேதங்களை நவிலும் நாவும், அர அர என நவிலும் பணியில் வல்லமையும் கொண்டு விளங்கும் ஞானசம்பந்தர், அன்புறு மாலையாகச் சாற்றிய இத் திருப்பதிகத்தை ஓதுதலைப் பணியாகக் கொண்டவர்களுக்கு, அல்லல் இல்லை; பாவமும் இல்லை

திருச்சிற்றம்பலம்

247 திருவாய்மூர் (அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1201 தளிர்இள வளர்என உமைபாடத்
தாளம் மிடவோர் தழல்வீசிக்
கிளர்இள மணியர வரையார்த்து
ஆடும் வேடக் கிறிமையார்
விளர் இள முலையவர்க்கு அருள்நல்கி
வெண்ணீறு அணிந்தோர் சென்னியின்மேல்
வளர் இள மதியமொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : உமாதேவியார் தளிர் இள வளர் என எடுத்துப் பாட்டிசைத்துத் தாளம் இட, மாணிக்கத்தையுடைய இளமையான அரவத்தை அரையில் கட்டி விளங்கும் ஈசன், பெசய்ம்மையான வேடத்தால் ஆடல் புரிபவர் அப் பெருமான், தாருக வனத்தில் உள்ள மகளிர்க்கு அருள் நல்கியவர் அவர் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் நன்கு பதியப் பூசி, தலை முடியின் மீது பிறைச் சந்திரனைச் சூடி வாய்மூர் அடிகளாய் வருவார்

1202 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண உடைமேலோர்
பந்தம் செய்து அரவசைத்து ஒலிபாடிப்
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக்கு அருள்நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை :  ஈசன், வெம்மையான தழல்போன்ற சிவந்த வடிவத்தை உடையவர்; திருமேனியில் திருவெண்றீறு பூசிக் கோவண ஆடை கொண்டு விளங்குபவர்; அரவத்தை அரையில் பொருந்தக் கட்டிப் பாடல்களைப் பாடி இல்லங்கள்தோறும் சென்று பிச்சை கேட்பவர் அப் பெருமான், என் சிந்தையில் புகுந்து எனக்கு அருள் புரிந்தவர் திருவடி பரவி வந்தனை செய்ய மேவும் இவரே வாய்மூர் அடிகள்

1203 பண்ணிற் பொலிந்த வீணையர்
பதினெண் கணமும் உணராநஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றானார்
உள்ளம் உருகில் உடனாவார்
சுண்ணப் பொடிநீறு அணிமார்பர்
சுடர்பொன் சடைமேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : ஈசன், பண்ணற் பொலியுமாறு நல் வீணை மீட்டி வாசிப்பவர்; பதினெட்டு வகையான தேவகணங்கள் அஞ்சி வெருவ அக்கொடிய நஞ்சினை உட்கொண்டு பொலிந்த மிடற்றினையுடையவர்; உள்ளம் கசிந்து உருகிப் போற்றும் அன்பர்களுக்கு உடனாகித் திகழந்து அருள் செய்பவர்; திருவெண்ணீறு குழையப் பூசிய அழகிய மார்பினை உடையவர்; பொன் போன்று சுடர் தரும் சடைமுடியின்மீது வண்ணம் மிக்க பிறைச் சந்திரனைத் தரித்து விளங்குபவர் இவர் வாய்மூர் அடிகள் ஆவார்; கண்டு மகிழ்வீராக

1204 எரிகிளர் மதியமொடு எழில்நுதல்மேல்
எறிபொறி அரவினொடு ஆறுமூழ்க
வெருவந்து இடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருஅகலம்
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியரவு அரைக்கசைத்து இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : நெற்றியில் சுடர்விடும் சந்திரனும், படத்தை எடுத்து ஆடுகின்ற அரவமும் சூடி, கங்கை தரித்து விளங்கும் சடையுடன் மேவும் ஈசன், இடபவாகனத்தில் ஏறி எம்மைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்ட விகிர்தன் ஆவார் திருநீறு பூசிய அகன்ற திருமார்பு உடைய வாய்மையராய் அழகுடன் மிளிரும் அரவத்தை அரையில் கட்டி விளங்குபவர் இவரே !  இவர் வாய்மூர் அடிகள்

1205 அஞ்சன மணிவணம் எழில்நிறமா
அகம் மிடறு அணிகொள வுடல்திமில
நஞ்சினை அமரர்கள் அமுதமென
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின் தோல்
வெருவுறப் போர்த்ததன் நிறமுமதே
வஞ்சனை வடிவினொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : நீல மணியின் எழில் வண்ணம் உடைய நஞ்சு, மிடற்றினை அணிபெறச் செய்யுமாறு விளங்க, தேவர்கள் போற்றும் உமாதேவி நடுங்குமாறு, சினமுடன் பாய்ந்த பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்த ஈசன், என்னைக் கவர்ந்தனர் இவரே வாய்மூர் அடிகள்

1206 அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
கழலிணை யடிநிழல் அவைபரவ
எல்லியம் போதுகொண்டு எரியேந்தி
எழிலொடு தொழிலவை இசையவல்லார்
சொல்லிய அருமறை இசைபாடிச்
சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியம் தோலுடுத்து இவராணீர்
வாயமூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : அல்லி மலர் சூடிய நீண்ட கூந்தலையுடைய மகளிர் திருவடி நிழலைப் பரவி, தாமரை போன்ற மலர் கொண்டு தூவி, தூப தீபங்கள் விளங்க, அரியனவாகிய வேதத்தினை விளங்கப் போற்ற, இளம் பிறைச் சந்திரனைச் சூடி தோடு அணிந்தவராய்ப் புலித்தோலை உடுத்திய ஈசன் இவரே இவர் வாய்மூர் அடிகள்

1207 கடிபடு கொன்றைநன் மலர்திகழும்
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறைபவர் மறுகினல்லார்
முறைமுறை பலிபெய முறுவல் செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம்
பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்
வடிநுனை மழுவினொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : மணம் கமழும் கொன்றை மலர் சூடித் திகழும் ஈசன் ஒளி திகழும் முடியுடைய தேவர்களின் தலைவர், தெருவில் மகளிர்பால் பிச்சை ற்கும் தன்மையில் முறுவல் செய்பவர் அவர் திருநீறு பூசிய தஇருக்கோலத்தராய், மார்பில் ஒளிதிகழும் அரவம் சஞ்சரிக்க, மழுப்படையுடன் இருப்பவர் இவரே வாய்மூர் அடிகள் ஆவார்

1208 கட்டிணை புதுமலர்க் கமழ் கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமும்அஃதே
எட்டுணை சாந்தமொடு உமைதுணையா
இறைவனார் உறைவதொர் இடம் வினவில்
பட்டியணை யகல்அல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை ஆடலொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : கொன்றை மலர்களைத் தொடுத்து மாலையாகக் காட்டிச் சூடிய சிவபெருமான், வீணை மீட்டி விளங்குபவர் எண்ணத்தின் துணையாய் சாந்தம் திகழும் உமாதேவியை உடனாகக் கொண்டு , அப்பரமன் உறையும் இடம் யாது என வினவில், மகளிர், பலி கொண்டு வந்து வழங்கப் பெருமகிழ்வுடன் பெறும் இவர் வீற்றிருக்கும் வாய்மூர் அப்பெருமான் வருவார்

1209 ஏன மருப்பினொடு எழிலாமை
இசையப் பூண்மோர் ஏறுஏறிக்
கானமது இடமா உறைகின்ற
கள்வர் கனவில் துயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித்
திகழ்பொன் சடைமேல் திகழ்கின்ற
வான நன்மதியினொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : பன்றியின் கொம்பும், ஆமையும் பொருந்த அணியாக அணிந்து இடபத்தில் ஏறி, மயானத்தை இடமாகக் கொண்டு உறைகின்ற ஈசன், கனவில் தோன்றிக் கவர்ந்த கள்வன் என்னைக் கொள்ளை கொண்டவன் தேன் மணக்கும் மலர்கள், திகழ்கின்ற பொற்சடையில் விளங்கச் சந்திரனைச் சூடிய இவர், வாய்மூர் அடிகள் ஆவார்

1210 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவாள்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடல்நல் மகிழ்விரல் கூப்பி நல்லார்
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித்து இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : ஈசன், சுடுதல் இல்லாத, குளுமையான பிறைச் சந்திரனையுடையவர்; ஒளி திகழும் சடைமுடி உடையவர்; திருவெண்ணீறு தரித்தவர்; சுடர்விடு மழுவாள் படையும், வண்டு இடைபாடி முரலும் கொன்றை மாலையும், அரவமும், முப்புரி நூலும், பற்றி விளங்கத் திகழ்பவர் மகளிர்கள் கைகூப்பி வழங்கும் பலியினைப் பிரம கபாலத்தில் ஏற்றுக் கொண்ட பெருமான், இவரே வாய்மூர் அடிகள் ஆவார்

1211 திங்ளொடு அருவரைப் பொழிற் சோலைத்
தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமொடு அருமறை யொலிபாடல்
அழல்நிற வண்ணர்தம் அடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே

தெளிவுரை : சந்திரனைத் தழுவும் உயர்ந்த பொழில், தேன் துளிர்க்கும் பூக்கள் நிறைந்த சோலை வனங்கள் உடைய திருவாய்மூரின்கண், வேதங்கள் பாட விளங்கும் செவ்விய அழல் வண்ணராகிய ஈசனின் திருவடி பரவி, நம்வினை கெடுமாறு மொழியவல்ல ஞானசம்பந்தர் உரைத்த இத் தமிழ் மாலையை மனத்தில் நன் இருத்தித் தொழுபவர், தமர் நெறி அடைவர் அதுவே உலகத்திற்கு ஒப்பற்றி தவமாகும்

திருச்சிற்றம்பலம்

248 திருவாடானை (அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை, ராமநாதபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1212 மாதோர் கூறுகந்து ஏறதுஏறிய
ஆதி யானுறை ஆடானை
போதி னாற்புனைந்து ஏத்துவார்தமை
வாதி யாவினை மாயுமே

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு இடப வாகனத்தில் வீற்றிருக்கும் ஆதிப்பிரானாகிய ஈசன் உறையும் ஆடானையை, மலர்களால் புனைந்து ஏத்துவார தமக்கு, வினையானது துன்பத்தைத் தராது அது தானாகவே மாய்ந்து அழியும்

1213 வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்று
ஆட லானுறை ஆடானை
தோடு லாமலர் தூவிக் கைதொழ
வீடு நுங்கள் வினைகளே

தெளிவுரை : கபாலம் கையில் ஏந்தி நின்று ஆடல் புரிகின்ற ஈசன் உறைகின்ற ஆடானையை மலர் தூவிப் போற்றிக் கைதொழும் அடியவர்கள், வினை யாவும் வீழ்த்தியவர்கள் ஆவார்கள்

1214 மங்கை கூறினன் மான்மறி யுடை
அங்கை யான்உறை ஆடானை
தங்கை யால்தொழுது ஏத்தவல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகங்கொண்டு விளங்கும் ஈசன் இளமையான மானை அழகிய கரத்தில் ஏந்தி உறையும் ஆடானை என்னும் திருத்தலத்தினைத் தமது கைகளால் தொழுது ஏத்த வல்லவர்களுக்கு, வாழ்க்கையில் துன்புறுத்தி அழிவைத் தரும் நோயும் பிறவி முதலான பிணிக்கப்பட்டுள்ள துன்பந்தரும் வினைகளும் மாயும்

1215 கண்ண நீறணி மார்பில் தோல்புனை
அண்ண லான்உறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணு வார்இடர் ஏகுமே

தெளிவுரை : வெண்மையான ஒளி மிக்க திருவெண்ணீறு அணிந்த திருமார்பில் மான் தோல்புனையும் அண்ணலாகிய ஈசன் உறைகின்ற ஆடானை என்னும் தலத்தினை, வண்ணம் மிக்க மலர்கள் கொண்டு தூவிப் போற்றித் தொழும் அன்பர்களுடைய இடர், நீங்கிச் செல்லும்

1216 கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கைய ணிம்மல ரால்வணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே

தெளிவுரை : கொய்து அணியப் பெறுகின்ற கொன்றை மலர் சூடிய ஈசன் மேவி வீற்றிருக்கும் ஆடானை என்னும் தலத்தை மலர் கொண்டு ஏத்தி வணங்கிட, தீமை செய்யும் கொடிய வினையானது கொட்டழியும்

1217 வான்இ ளம்மதி மல்கு வார்சடை
ஆன்அஞ்சு ஆடலன் ஆடானை
தேன் அணிம் மலர்சேர்த்த முன்செய்த
ஊனம் உள்ள ஒழியுமே

தெளிவுரை : வானத்தில் விளங்கும் சந்திரனை நீண்ட சடையின்கண் விளங்கச் செய்து பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்வியத்தினைப் பூசனையாகக் கொள்ளும் ஈசன் வீற்றிருக்கும் ஆடானைத் தலத்தினை, மலர் கொண்டு கைங்கரியம் செய்ய முன் செய்த வினை யாவும் நீங்கும்

1218 துலங்கு வெண்மழு ஏந்திச் சூழ்சடை
அலங்க லான்உறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாள்தொறும்
வலங்கொள் வார்வினை மாயுமே

தெளிவுரை : ஒளிமிக்க மழுப்படை ஏந்திச் சடைமுடியில் மாலை தரித்துள்ள ஈசன் உறையும் ஆடானை என்னும் பதியினை, மலர் கொண்டு தூவி நாள் தோறும் வலம் வரும் அடியவர்களுடைய வினையானது மாய்ந்து அழியும்

1219 வெந்த நீறணி மார்பில் தோல்புனை
அந்த மில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழும்
சிந்தை யார்வினை தேயுமே

தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்த திருமார்பில் மான் தோல் புனைந்து அந்தம் இல்லாது விளங்கும் ஈசன் மேவும ஆடானை என்னும் தலத்தினை மணம் மிக்க மலர் தூவித் தொழும் அன்பர்களின் வினையானது தேய்ந்து கெடும்

1220 மறைவலாரொடு வானவர் தொழுது
அறையுந் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை யேத்தத் தீவினை
பறையும் நல்வினை பற்றுமே

தெளிவுரை : வேதம் வல்ல அந்தணர்களும், வானவர்களும் தொழுது போற்றும் ஒலிமிகும் தண்புனல் சேர் ஆடானையில் வீற்றிருக்கும் ஈசனை ஏத்தித் துதிக்க, தீவினையானது அழிந்து, நல்வினை யாவும் பற்றி, மகிழ்ச்சியைத் தரும்

1221 மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழத்
தீய வல்வினை தீருமே

தெளிவுரை :  திருமாலும், பிரமனும் கைதொழுகின்ற அந்தணனாகிய ஈசன் விளங்கும் ஆடானை என்னும் பதியைத் தூய்மையான மலர் கொண்டு தூவிப் போற்றிக் கைதொழ, தீமைதரும் வன்மையான வலியவினை தீரும்

1222 வீடினார்மலி வேங்க டத்துநின்று
ஆட லான்உறை ஆடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே

தெளிவுரை :  இறந்தவர்கள் மலிந்த வெம்மையான சுடுகாட்டில் நின்று ஆடுகின்ற ஈசன் உறையும் ஆடானை என்னும் தலத்தை நாடி, ஞானசம்பந்தர் வாய் மலர்ந் இத் திருப்திகத்தைப் பாட, நோயின் பிணிப்பு யாவும் அழிந்து ஏகும்

திருச்சிற்றம்பலம்

249 சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1223 பொடியிலஙல்குந் திருமேனி யாளர் புலியதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும் அடிகள்ளிடம்
இடியிலங்குங் குரலோத மல்கவ் வெறிவார்திரைக்
கடியிலங்கும் புனல்முத்து அலைக்கும் கடற்காழியே

தெளிவுரை :  திருநீறு விளங்கும் திருமேனியுடைய ஈசன் புலித்தோலை ஆடையாகக் கொண்டவர்; திருவடியில் திகழும் கழல் ஒலிக்க நடனம் புரிபவர் அப்பெருமான் விளங்குகின்ற இடமாவது, இடியொலி போன்று கடலின் ஒலி முழுங்க, அலைகள் வாயிலாக முத்துக்களைக் கரை சேர்க்கும் சீகாழி ஆகும்

1224 மயல்இலங்கும் துயர்மாசறுப்பான் அருந்தொண்டர்கள்
அயல்இலங்குப் பணிசெய்ய நின்ற அடிகள்ளிடம்
புயல்இலங்கும் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயல்இலங்கும் வயற்கழனி குழும்கடற் காழியே

தெளிவுரை :  மயலைத் தரும் துயரமும், மாசாகிய வினையும் தீர்த்து அருள்புரியம் ஈசன், திருத்தொண்டர்கள் நிஷ்காமியமாகப் பணிகளை ஆற்றி நிற்க, மேவி விளங்குகின்ற இடமானது, கைம்மாறு வேண்டாத மழையைப் போன்ற வள்ளல்களும், மறையவர்களின் வேத ஒலியும் விளங்க, கயல்கள் திகழும் வயல்கள் சூழும் காழிப் பதியாகும்

1225 கூர்விளங்கும் திரிசூல வேலர் குழைக்காதினர்
மார்விலங்கும் புரிநூல் உகந்த மணவாளனூர்
நேர்விலங்கல் அனதிரை கள்மோதந் நெடுந்தாரைவாய்க்
கார்விலங்கல் எனக்கலந்து ஒழுகும் கடற்காழியே

தெளிவுரை :  கூர்மை பொருந்திய திரிசூலத்தையுடைய ஈசன், குழை என்னும் அணியைக் காதில் அணிந்திருப்பவர்; திருமார்பினில் முப்புரி நூல் அணிந்து உகந்த மணவாளர் அப் பெருமானுடைய ஊரானது, மலைபோன்ற உயர்ந்த அலைகள் எழும்பி மோதவும், அவ்வாறு எழும்பும் அலைகளின் தன்மை மழையின் தாரைகள் வீழும் பாங்கிலும் பொலிகின்ற சீகாழி ஆகும்

1226 குற்றம்இல்லார் குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்த பெருமானிடம்
மற்றுநல்லார் மனத்தால் இனியார் மறைகலையெலாம்
கற்றுநல்லார் பிழைதெரிந்து அளிக்கும் கடற்காழியே

தெளிவுரை :  மாசிலாமணியாய் விளங்கும் சிவபெருமான், குற்றம் குறை முதலானவற்றால் உண்டாகும் பழி முதலான வினைகளைத் தீர்ப்பவர்; இடபக் கொடியை உடையவர் அப் பெருமானுடைய  இடமாவது, குணத்தால் நன்மையும், மனத்தால் இனிமையும் வேதங்களைக் கற்ற புலமையும், அதன் வழி குற்றங்களை நன்கு கடிந்து நற்பாங்கு உடைமையும் கொண்டு விளங்கும் சான்றோர் வாழும் காழி ஆகும்

1227 விருதுஇலங்கும் சரிதைத் தொழிலார் விரிசடையினார்
எருதுஇலங்கப் பொலிந்தோறும் எந்தைக்கு இடமாவது
பெரிதுஇலங்கும் மறை கிளைஞர்ஓதப் பிழைகேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்கும் கடற்காழியே

தெளிவுரை :  அடியவர்களுக்கு அருள் நல்கிய பல பெருமைகளை உடையவராய், அவ்வரிய புகழ் விளங்கும் சடைமுடியுடையவராய், இடபவாகனத்தில் பொலிவுடன் மேவும் ஈசனின் இடமாவது, மிகப் பெரிய பொருளாகிய வேதங்களை இளையவர்கள் சொல்ல அவற்றைச் செவிமடுத்துத் திகழும் கிளிகள், பிழைச் சொல் கேட்டஞான்று திருத்தி மொழியும் பாங்குடன் திகழும் சீகாழியாகும்

1228 தோடுஇலங்கும் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்
பீடுஇலங்கும் சடைப்பெருமை யாளர்க்கு இடமாவது
கோடுஇலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெரும் செந்நெலின்
காடுஇலங்கும் வயல்பயிலும் அந்தண் கடற்காழியே

தெளிவுரை :  ஈசன், தோடும் குழையும் காதில் அணியாகக் கொண்டு விளங்குபவர்; வேதமாக இருப்பவர்; வண்டுகள் சூழ்ந்த மலர்கள் திகழும் சடையுடையவர் அத்தகைய பெருமையுடைய பெருமானுக்கு இடமாவது, காம்புகள் நிறைந்த பொழில்கள் பெருகவும், அடர்ந்து நெருங்கிய செந்நெற் கதிர்கள் கொண்ட வயல்கள் உடையதாகவும் கொண்ட அழகிய குளிர்ச்சியான கடல் சிறப்பும் உடைய காழி ஆகும்

1229 மலைஇலங்கும் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்து
அலைஇலங்கும் புனல்கங்கை வைத்த அடிகட்குஇடம்
இலைஇலங்கும் மலர்க்கைதை  கண்டல்வெறி விரவலால்
கலைஇலங்கும் கணத்தினம் பொலியும் கடற்காழியே

தெளிவுரை :  மேருமலையினை வில்லாகக் கொண்டு மூன்று மதில்களையும் ஏக காலத்தில் வெந்து சாம்பலாகுமாறு செய்து, கங்கையினைச் சடை முடியில் வைத்த அடிகளாகிய ஈசனார்க்கு உரிய இடமாவது, தாழை மற்றும் நறுமணம் கமழும் மலர்கள் விளங்க, மான் இனம் பொலியும் கடற்கரை வளம் மிகுந்த காழியாகும்

1230 முழுதிலங்கும்பெரும் பாரும் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதுஇரங்கச் சிரம்உரமொடுங்கவ் அடர்த்து ஆங்கவன்
தொழுதுஇரங்கத் துயர்தீர்த்து உகந்தார்க்கு இடமாவது
கழுதும்புள்ளு மதிற்புறம துஆருங்கடற் காழியே

தெளிவுரை :  இப்பேருலகில் மாறுபாடு கொண்ட இராவணன், அழுது யாசிக்குமாறு, தலை முடியும் வலிமையும் ஒடுங்கும்படி தண்டித்தும், அவன் தொழுது வணங்கத் துயர் தீர்த்து மகிழ்ந்து அருள் செய்த ஈசனுக்கு இடமாவது, வண்டுகளும் பறவைகளும் மதிற்புறத்தில் விளங்கும் காழியாகும்

1231 பூவினானும் விரிபோதின் மல்கும்திரு மகள்தனை
மேவினானும் வியந்தேத்த நீண்டார் அழலாய்நிறைந்து
ஒவியங்கே அவர்க்கருள் புரிந்தவ் ஒருவர்க்குஇடம்
காவியங்கண் மடமங் கையர்சேர் கடற்காழியே

தெளிவுரை :  தாமரைப் பூவில் விளங்கும் பிரமனும், விரிந்த மலரில் விழைந்து மேவும் திருமகளைத் திருமார்பில் பொருந்திய திருமாலும், வியந்து போற்றுமாறு நீண்டு எழும் அழலாய் நிறைந்து, அவர்களுக்கு அருள்புரிந்த ஒப்பற்றவராகிய ஈசனுக்கு இடமாக விளங்குவது, கருங்குவளை போன்ற கண்களையுடைய மகளிர் விளங்கும் கடற் பெருமை சார்ந்த காழியாகும்

1232 உடைநவின்றார் உடைவிட்டுழல்வார் இருந்தவத்தார்
முறைநவின்று அம்மொழி யொழித்து உகந்தம் முதல்வன்னிடம்
மடைநவின்ற புனற்கொண்டை பாயும் வயல்மலிதரக்
கடைநவின்ற நெடுமாடம் ஓங்கும் கடற் காழியே

தெளிவுரை :  சாக்கியர்களும் சமணர்களும் மொழியும் உரைகளை நீக்கிய ஈசன் உகந்து விளங்கும் தலைவனாய் வீற்றிருக்கும் இடமாவது, மடைகளில் உள்ள நீரில் கெண்டைகள் பாயும் வயல்கள் கொண்டு மாட மாளிகைகள் விளங்கும் காழியாகும்

1233 கருகுமுந்நீர் திரையோதம் ஆரும் கடற்காழியுள்
உரகமாரும் சடையடிகள் தம்பால் உணர்ந்துறுதலால்
பெருகமல்கும் புகழ்பேணும் தொண்டர்க்கு இசையார்தமிழ்
விரகன் சொன்ன இவைபாடி ஆடக்கெடும் வினைகளே

தெளிவுரை :  கடலின் அலை மோத, அதன் ஓதம் கொண்டு மேவும் சீகாழியுள், பாம்பினைச் சடை முடியில் வைத்து விளங்கும் ஈசன்பால் பக்தி பூண்டு, அப்பெருமானின் புகழைப் பரவும் திருத்தொண்டர்களுக்கு இசையில் திகழவும் தமிழில் வல்லவனாகவும் உள்ள ஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓத வேண்டும் அவ்வாறு ஓதி மனம் உருகித் தன்னை மறந்து ஆட, வினை யாவும் நம்மை விட்டு நீங்கும்

திருச்சிற்றம்பலம்

250 திருக்கேதாரம் (அருள்மிகு கேதாரநாதர் திருக்கோயில், கேதார்நாத், ரிஷிகேஷ், உத்தராகன்ட்)

திருச்சிற்றம்பலம்

1234 தொண்டர்அஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைக்கட்டி வழிபாடு செய்யும் இடம்என்பரால்
வண்டுபாட மயில்ஆல மான்கன்று துள்ளவ்வரி
கெண்டைபாயச் சுனைநீலமொட்டலரும் கேதாரமே

தெளிவுரை :  திருத்தொண்டர்களின் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, சுரும்பினம் பொருந்தி மேவும் இண்டை மலர்களைக் கட்டி மாலையாக்கி ஈசனை வழிபாடு செய்யப்படும் இடம் என்பது, வண்டுகள் பாட, மயில்கள் ஆட, மான்கள் துள்ளிக்குதிக்க, கெண்டை (மீன்)கள் பாயும் சுனைகளில் நீல மலர்கள் விளங்கும் கேதாரம் ஆகும்

1235 பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேதநான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார்க்குஇடம்
தாதுவிண்டம் மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாடம் மடமந்தி கேட்டுகளும் கேதாரமே

தெளிவுரை :  ஈசன் திருவடியைத் தேவர்கள் பலரும் பரவிப் பணிந்து ஏத்த, நான்கு வேதங்களும், பதினெட்டுப் புராணங்களும், ஆறு அங்கங்களும் விரித்து மிளிரும் இடமாவது, மகரந்தத் தாதுக்களிலிருந்து மது உண்ட வண்டினம் கீதங்களை இசைக்க, மந்திகள் கேட்டு மகிழும் கேதாரம் ஆகும்

1236 முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர்
எந்தைபெம்மான் எனநின்று இறைஞ்சும் இடம்என்பால்
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்நாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே

தெளிவுரை :  உஷத் காலத்தில் முந்திச் சென்று முனிவர்கள் பலர் நீராடி எந்தை பெருமானே ! என ஈசனை ஏத்தி வணங்குகின்ற இடமாவது, மரங்களில் உள்ள மந்திகள் பாய்ந்து செல்ல பூக்கள் சரேலென உதிர்ந்து மாரிபோல் சொரிய நறுமணம் கமழும் சடையுடைய எந்தையாரின் கேதாரமே ஆகும்

1237 உள்ளமிக்கார் குதிரையும் முகத்தார் ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள் சேரும் இடம்என்பரால்
பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வகேட்டுப் பிரியாது போய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யும் கேதாரமே

தெளிவுரை :  ஒன்றிய சிந்தைராய் உள்ளவர்களும், குதிரை முகம் கொண்டு விளங்கும் கின்னரர்களும், ஒற்றைக் காலில் நின்று தவம் செய்பவர்களும், பழியற்றுச் சிறப்புடன் மேவும் தேவர்களும் ஈசனைப் பரவுதல் செய்வதற்குச் சேரும் இடமாவது, கிளிகள் நற்கதிர்களைக் கொண்டு வந்து தம் பிள்ளைகளுக்கு வாயில் ஊட்டும் கேதாரம் ஆகும்

1238 ஊழியூழி உணர்வார்கள் வேதத்தின்ஒண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்து இறைஞ்சும் இடம்என்பரால்
மேழிதாங்கி உழுவார்கள் போலல்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே

தெளிவுரை : ஊழிக் காலத்தை உணர வல்லவர்களாகிய ஞானிகள், வேதத்தின் உயர்ந்த பொருளாக விளங்கும் ஈசனை, வாழி எந்தை ! என வந்து வணங்குகின்ற இடம் என்று சொல்லப்படுவது, கலப்பை கொண்டு உழுதலைப் போன்று, பன்றிகள் புழுதியைக் கிளர, மணிகள் ஒளி திகழ மண்ணில் விளங்கும் கேதாரம் ஆகும்

1239 நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள் சேரும் இடம்என்பரால்
ஏறிமாவின் கனியும் பலாவின் னிருஞ்சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோடு உண்டுகளும் கேதாரமே

தெளிவுரை :  நன்னீரில் மூழ்கித் திருவெண்ணீறு அணிந்த அடியவர்கள், தெளிந்த சிந்தையுடன் நீண்ட மலையின் மீது சென்று ஈசனைப் பரவுவதற்காகச் சேரும் இடமானது, மந்திகள் தம் இனத்துடன் சேர்ந்து மரத்தில் ஏறி மாங்கனிகளையும், பலாவைக் கீறி அதன் சுளைகளையும் உண்டு மகிழும் கேதாரம்
ஆகும்

1240 மடந்தைபாகத்து அடக்கிம் மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கு இடம்என்பரால்
உடைந்தகாற்றுக்கு உயர்வேங்கை பூத்துதிரக்கல் லறைகண்மேல்
கிடந்தவேங்கை சினமாமுகம் செய்யும் கேதாரமே

தெளிவுரை :  உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, தேவர்கள் வேதங்களால் ஓதித் தொழ, நம்மீது தொடர்ந்து பற்றி வரும் சஞ்சித, பிராரத்த வினைகளைத் தீர்க்க மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடமானது, வேங்கை மரத்தலிருந்து மலர்கள் பெருங்காற்றால் உதிர்ந்து பரவ, அவற்றை கண்ட புலியானது பிறிதொரு வேங்கையோ ! எனச் சினந்து எழுகின்ற கேதாரம் ஆகும்

1241 அரவமுந்நீர் அணிஇலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவ ஊன்றி விரலால்அடர்த் தார்க்குஇடம் என்பரால்
குரவம் கோங்கம் குளிர்பிண்டி ஞாழல் சுரபுன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யும் கேதாரமே

தெளிவுரை :  கடல் சூழ்ந்த இலங்கையின் தலைவனாகிய இராவணனை, கயிலை மலையினால் நெரியுமாறு தமது திருவிரலால் அடர்த்த சிவபெருமானுக்கு உரிய இடம் எனச் சொல்லப்படுவது, குரவம், கோங்கு, அசோகம், குங்கும மரம், சுரபுன்னை ஆகிய மரங்களில் திகழும் பூக்களில் முறையாக வண்டுகள் ரீங்காரம் செய்யும் கேதாரம் ஆகும்

1242 ஆழ்ந்துகாணார் உயர்ந்துஎய்த கில்லார் அலமந்தவர்
தாழ்ந்து தந்தம் முடிசாய நின்றார்க்கு இடம்என்பரால்
வீழ்ந்து செற்றும் நிழற்குஇறங்கும்வேழத்தின் வெண்மருப்பினைக்
கீழ்ந்துசிங்கம் குருகுஉண்ண முத்துஉதிரும் கேதாரமே

தெளிவுரை :  பூமியைக் குடைந்து திருவடியைக் காணாதவராகிய திருமாலும், உயர்ந்து அன்னப் பறவையாய்ப் பறந்தும் திருமுடியைக் காணாதவராகிய  பிரமனும் சோர்வடைந்து தாழ்ந்து தமது முடிகளைச் சாய்த்து வணங்கி நிற்க, ஓங்கிய சிவபெருமானுக்குரிய இடம் எனப்படுவது, யானையின்மேல் விழுந்து அடர்த்து, அதன் தந்தங்களைப் பிளந்து, சிங்கம், திகழச் சிதறிய முத்துக்கள் விரவ விளங்கும் கேதாரம் ஆகும்

1243 கடுக்கள்தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர்
இடுக்கண்உய்ப்பார் அவர்எய்த வொண்ணா இடம்என்பரால்
அடுக்கநின்றவ் அறவுரைகள் கேட்டாங்கு அவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே

தெளிவுரை : புலால் உண்ணும் மாசுடையவர்கள் மற்றும் துன்பம் செய்பவர்கள் எய்துவதற்கு இயலாத இடம் எனப்படுவது பக்கம் சார்ந்து நின்று, அறவுரைகளை நவிலுமாறு வேண்டிய சனகாதி முனிவர்களுக்கு அறமுரைத்து, வினை நீக்கிய சிவபெருமான் உறைகின்ற கேதாரம் ஆகும்

1244 வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்இசை வல்லவர்
வேந்தராகி உலகாண்டு வீடுகதி பெறுவரே

தெளிவுரை : செந்நெல் பெருகும் வயல்வளம் திகழும் சீகாழி நகருடைய ஞானசம்பந்தர், சிறப்புடன் இனிமை தோன்றி விளங்கும் தேவர்கள் வழிபாடு செய்கின்ற கேதாரத்தை ஆய்ந்து சொன்ன அரிய இத் திருப்பாடல்களை, இசையுடன் ஓத வல்லவர்கள், இம்மையில் வேந்தர்கள் என ஆட்சிமை கொண்டு, மறுமையில் வீடுபேறு அடைவார்கள்

திருச்சிற்றம்பலம்

251 திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1245 வெங்கள்விம்மு குழலிளையர் ஆடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரம் ஒருஅம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடிபரவ நாளும்இடம் கழியுமே

தெளிவுரை : தேன் கமழும் மலர்களைச் சூடிய மகளிர் நாட்டியம் புரியவும், நறுமணம் கமழும் மலர்களைக் கொண்ட நீரில் கயல்கள் விளங்கி வயல்களை பளப்படுத்தவும் திகழும் புகலூரில், சந்திரனைச் சடையில் தரித்து முப்புரங்களை ஒரே அம்பினால் எரியுமாறு செய்த எங்கள் பெருமானாகிய ஈசன் வீற்றிருக்கின்றார் அப் பெருமானின் திருவடியை நாள்தோறும் பரவிப் போற்ற இடரானது விலகிச் செல்லும்

1246 வாழ்த்தநாளும் இனிவாழு நாளும்இவை அறிதிரேல்
வீழ்த்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிர்காள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன் புகலூரையே
சூழ்த்த உள்ளம் உடையீர்கள் உங்கள்துயர் தீருமே

தெளிவுரை : இதுவரையில் வாழ்ந்த நாளும், இனி வாழ்கின்ற நாளும் யாது என அறிய விரும்புவீராயின், இறைவனை ஏத்தி வணங்காத நாளே வீழ்த்தி வீணாகக் கழிந்த நாள் ஆகும் பிறைச் சந்திரனைப் புரிசடையில் தரித்த ஈசன் விளங்கும் புகலூரை உள்ளமானது சூழ்ந்து பற்றித் தியானம் செய்வீர்களாக உங்கள் துயர் யாவும் தீர்ந்துவிடும்

1247 மடையினெய்தல் கருங்குவளை செய்யம் மலர்த்தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும் புகலூர்தனும்
தொடைகொள்கொன்றை புனைந்தானொர் பாகம் மதிசூடியை
அடையவல்லவர் அமருலகம் ஆளப் பெறுவார்களே

தெளிவுரை : வயல்களுக்குப் பாயும் வாய்க்கால் மடைகளில் நெய்தலும், கருங்குவளையும், செம்மையான தாமரை மலர்களும் சூழ விளங்கச் செந்நெல் விளைகின்ற கழனிகள் மல்கிப் பெருகும் புகலூரில், கொன்றை மலர் மாலை புனைந்த சிவபெருமான், பிறைசூடி விளங்கி வீற்றிருக்கின்றார், அப்பெருமானைச் சார்ந்து வணங்குபவர்கள் தேவலோகத்தினை ஆள்வார்கள்

1248 பூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்றேத்தல் ஓவார்செவித் துளைகளால்
யாவுங் கேளார் அவன்பெருமை யல்லால் அடியார்கள்தாம்
ஓவும்நாளும் உணர்வொழிந்த நாளென்றுளங் கொள்ளாவே

தெளிவுரை : ஈசனைப் பூசித்துப் போற்றும் தன்மையில், பூவும் நீரும் நைவேத்தியம் செய்வதற்கு உரிய பொருள்களும் கொண்டு புகலூர் என்னும் பதியை நாவினால் நன்று நவின்று ஏத்தி வணங்குபவர்கள், அப்பெருமானுடைய அருட் புகழையன்றி வேறு சொற்களைச் செவியிலும் கொள்ளார்கள் அத்தகையோருக்கு, அவர்கள் நீங்கும் நாள் அப்பெருமானுடைய உணர்வு இல்லாத நாள் என்று கொள்ளப்படும்

1249 அன்னங்கன்னிப் பெடைபுல்கி ஒல்கிஅணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்
முன்னம்மூன்று மதில்எரித்த மூர்த்திதிறம் கருதுங்கால்
இன்னர்என்னப் பெரிதுஅரியர் ஏத்தச் சிறிதெளியரே

தெளிவுரை : அன்னப் பறவை மகளிர் நடை பயில, அழகிய காஞ்சி மலர் விளங்கி மேவும் புகலூரில் வீற்றிருக்கும் முப்புரம் எரித்த ஈசனின் தன்மையினைக் கருதி உரைக்கும் நிலையில், அப் பெருமானை இத் தன்மையுடையவர் என்று சொல்வதற்குப் பெரியதும் ஆகும்; அரியதும் ஆகும் ஆயினும், அப் பெருமான் ஏத்தி வணங்குவதற்கு எளிமையாக விளங்குபவர்

1250 குலவராகக் குலமிலரும் ஆகக்குணம் புகழுங்கால்
உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மலர் ஊறுதேன்
புலவம்எல்லாம் வெறிகமழும் அந்தண் புகலூர்தனுள்
நிலவமல்கு சடையடிகள் பாதம் நினைவார்களே

தெளிவுரை : எத்தகைய குலத்தில் பிறந்தவர்களாயினும், உலகில் நல்லகதியைப் பெற்றுள்ளனர் எனில், தேன் மணம் கமழும் அழகிய குளிர்ச்சி மிக்க புகலூரில், பிறைச் சந்திரனைச் சூடிய சடை முடியுடைய ஈசன் திருப்பாதத்தை நினைத்தவர்கள் ஆவர்

1251 ஆணும்பெண்ணும் எனநிற்ப ரேனும்அரவு ஆரமாப்
பூணுமேனும் புகலூர்தனக்கு ஓர்பொருள் ஆயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேலும் பிரான்என்ப ரால்எம்பெரு மானையே

தெளிவுரை : ஈசன், ஆணும் பெண்ணும் என அர்த்த நாரியாய் விளங்குபவர்; அரவத்தை ஆரமாகப் பூண்டு புகலூரில் ஒப்பற்ற பொருளாய் விளங்குபவர்; ஊரார் இடுகின்ற பிச்சையினை உணவாகக் கொள்பவர்; கோவணத்தை உடையாகப் பெற்றவர் அவரே எமது பிரான் என்று, யாவராலும் போற்றி வணங்கப் பெறுபவர்

1252 உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேஉயர் இலங்கைக்கோன்
கைகள்ஒல்கக் கருவரை யெடுத்தானை ஓர்விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள வல்வசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே

தெளிவுரை : நெஞ்சமே ! நீ உய்தி பெற வேண்டுமானால், இராவணன் தனது கைகள் தளர்ச்சி கொள்ளுமாறு கயிலை மலையை எடுத்தஞான்று, ஒரு விரலால் அவனைச் சிதைத்து, அருள் புரிதலில் வல்லமை உடைய சிவபெருமான் மேவிய புகலூரைப் புகழ்ந்து போற்றுக அது உனக்கு உரிய பொருளாகிக் கைகூடும்

1253நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப் போய்ஆர் அழல் ஆயினான்
சாமிதாதை சரணாகும் என்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வ மல்கும் புகலூரையே

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடிக் காணாதவாறு பேர் அழல் ஆகிய ஈசனை, இறைவனே ! தந்தையே ! சரணம் ! என ஏத்தி வணங்குமின் பூவுலகம் எல்லாம் புகழும செல்வச் செழிப்புடைய புகலூரைப் போற்றுமின்

1254 வேர்த்தமெய்யர் உருவத்துஉடைவிட்டு உழல்வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள்
தீர்த்தமெல்லாம் சடைக்கரந்த தேவன்திறம் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென்று உணராது பாதம் தொழுது உய்ம்மினே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் புகலூரில் வீற்றிருக்கும் கங்கை தரித்து விளங்கும் ஈசன் திருவருட் பெருமையைக் கருதி ஆராய்ந்து பாராதும், அதனை மெய்யென்று உணராதும் புறத்தில் இருக்க, நெஞ்சமே, அப் பெருமானின் திருவடியைத் தொழுது, நீ உய்தி பெறுவாயாக

1255 புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பல் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை
அந்தம்இல்லா அனலாட லானைஅணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே

தெளிவுரை : நற்சித்தம் கொண்ட பெரியோர்கள் ஏத்தி வழிபடும் புகலூரில் திருநீறு அணிந்த திருமேனியராகி, இடப வாகனம் கொண்டு விளங்கி, முடிவற்ற கனலை ஏந்தி ஆடும் ஈசனை, அணி திகழ் ஞானசம்பந்தர் போற்றிச் சொன்ன இத் தமிழ் மாலையைப் பாடிப் பக்தியால் கசிந்து உருகும் அன்பர்களுக்குப் பாவம் அனைத்தும் கெடும்

திருச்சிற்றம்பலம்

252 திருநாகைக்காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)

திருச்சிற்றம்பலம்

1256 கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றநெடு வெண்ணிலா
ஏனல்பூத்தம் மராங்கோதை யோடும் விராவுஞ்சடை
வானநாடன் அமரர்பெரு மாற்குஇடம் ஆவது
கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடி விளங்கும் சடை உடைய ஈசன் விளங்கும் இடமாவது, கடற் சோலைகள் வேலியாகவும் உப்பங்கழிகள் சூழ்ந்தும் உள்ள கடலின் கரையில் விளங்கும் நாகையில் உள்ள காரோணம் ஆகும்

1257 விலங்கலென்று சிலையாமதில் மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்டத்து எழிலாமை பூண்டாற்கு இடமாவது
மலங்கியோங்கி வருவெண்திரை மல்கிய மால்கடல்
கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு மூன்று மதில்களை வீழ்த்தி எரித்த சிவபெருமான், எழில் ஆமையை அணிகலனாகப் பூண்டு வீற்றிருக்கும் இடமாவது, அலைகள் பெருகி வர, ஓதமும் உப்பங்கழிகளும் பெருகும் நாகையில் மேவும் காரோணம் ஆகும்

1258 வெறிகொளாரும் கடற்கைதை நெய்தல் விரிபூம்பொழில்
முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லை முகைவெண்மலர்
நறைகொள்கொன்றை நயந்தோங்கு நாதற்கிட மாவது
கறைகொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : நன்கு மணம் பரப்பும் தாழை மற்றும் நெய்தல் சிறப்புடைய பொழில்களும், கொன்றை புன்னை, முல்லை மலர்கள் விளங்க, கொன்றை மலர் விரும்பி ஓங்கும் ஈசனுக்கு இடமாவது, கடல் சூழ்ந்து உப்பங்கழிகள் உடைய நாகையில் விளங்கும் காரோணம் என்னும் கோயில் ஆகும்

1259 வண்டுபாட வளர்கொன்றை மாலைமதியோடுடன்
கொண்டகோலம் குளிர்கங்கை தங்கும்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் எனவைத்து கந்தவொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : வளம் மிக்க கொன்றை மாலையும் பிறைச் சந்திரனும் சூடிக் குளிர்ச்சி மிக்க கங்கை தங்கும் சடை முடியுடைய ஈசன் விளங்குகின்ற இடமாவது, நீர் முள்ளிச் செடிகளும் கழிகளும் சூழ்ந்து, கடல் விளங்கும் நாகையில் உள்ள காரோணம் ஆகும்

1260வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந்து ஏத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு வெண்திங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க்கு இடமாவது
கார்கொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : மகளிர் மகிழ்ந்து ஏத்தி வணங்க, நீண்ட சடையில் திங்கள் தரித்துச் சூலப் படையினைக் கரத்தில் கொண்டு விளங்கும் ஈசனுக்கு உரிய இடமானது, கடல் நாகையில் மேவும் காரோணம் ஆகும்

1261 விடையதேறிவ் விடவரவு அசைத்த விகிர்தரவர்
படைகொள் பூதம் பலபாட ஆடும்பரமர் அவர்
உடைகொள் வேங்கை யுரிதோல் உடையார்கிடமாவது
கடைகொள் செல்வம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : இடப வாகனத்தில் ஏறி, விடம் கொண்ட அரவத்தைச் கட்டிய விகிர்தராகிய ஈசன், பூத கணங்கள் பாட ஆடுகின்ற பரமன் ஆவார் அவர் புலியின் தோலை உரித்து உடையாகக் கொண்டு விளங்குபவர் அப் பெருமானுக்கு உரிய இடமாக விளங்குவது, செல்வச் செழிப்பு மிக்க கடல் நாகையில் உள்ள காரோணம் ஆகும்

1262 பொதுவாழ்வார் மனம்பாழ் படுக்கும் மலர்ப்பூசனை
செய்து வாழ்வார் சிவன்சேவடிக்கே செலும்சிந்தையார்
எய்த வாழ்வார் எழில்நக்கர் எம்மாற்கு இடமாவது
கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : பொய்யான தன்மையில்  அழியக் கூடிய கெடுதல் வாழ்க்கையைப் பாழாக்கி நன்னெறிப்படுத்தும் தன்மையில் மலர்கொண்டு பூசித்துப் போற்றிச் சிவபெருமான் திருவடிக்கே செலுத்தும் சிந்தையுடையவர்கள், தம்மை அடையுமாறு விளங்கும் கோவணத்தராகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, கடல் சூழ்ந்த நாகையில் உள்ள காரோணம் ஆகும்

1263 பத்திரட்டி திரள்தோர் உடையான் முடிபத்திற
அத்திரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடமாவது
மைத்திரட்டிவ் வருவெண் திரைமல்கிய மால்கடல்
கத்திரட்டும் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : இருபது திரண்ட தோள் உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் நலியுமாறு செந்நிற வண்ணமிகும் திருப்பாதவிரலால் அடர்த்த ஈசனுக்கு இடமாக இருப்பது, வெண்மையான கடல் அலைகள் கொண்டு வரும் நாகையில் மேவும் காரோணம் ஆகும்

1264 நல்லபோதில் உறைவானு(ம்) மாலும் நடுக்கத்தினால்
அல்லராவர் எனநின்ற பெம்மாற்க் கிடமாவது
மல்லல்ஓங்கிவ் வருவெண் திரைமல்கிய மால்கடல்
கல்லல் ஓதம் கழிசூழ்கடல் நாகைக் காரோணமே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடிக் காணப் பெறாதவராக விளங்கிய பெருமானாகிய ஈசனுக்கு உரிய இடமாவது, வளத்தைக் கொண்டு வரும் திரைகள் மல்கிய கடல் சூழ்ந்த நாகையில் மேவும் காரோணம் ஆகும்

1265 உயர்ந்த போதின் னுருவத்து உடைவிட்டு உழல்வார்களும்
பெயர்ந்த மண்டை யிடுபிண்ட மாவுண்டு உழல்வார்களும்
நயந்துகாணா வகைநின்ற நாதர்க்கு இடமாவது
கபங்கொள் ஓதம் கழிசூழ் கடல் நாகைக் காரோணமே

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் விரும்பிக் காணாதவாறு பிச்சை ஈட்டி உறைகின்ற ஈசனுக்கு உரிய இடமாவது, வளம் மிக்க ஓதம் விளங்கும் கடல் நாகையில் மேவும் காரோணம் எனப்படுவது ஆகும்

1266 மல்குதண்பூம் புனல்வாய்ந்து ஓழுகும்வயற் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்த னல்லார் கண்முன்
வல்லவாறே புனைந்தேத்தும் காரோணத்து வண்டமிழ்
சொல்லுவார்க்கும் இடை கேட்பவர்க்கும் துயரில்லையே

தெளிவுரை : நல்ல நீர் நிலை வாய்ந்து ஓழுகும் வயல்கள் திகழும் காழிப் பதியில் விளங்கும், நல்ல வேதங்கள் முதலான கேள்வி ஞானம் மிக்க ஞானசம்பந்தர் நல்லோர்கள் முன்னால் காரோணத்தில் மேவும் பெருமானைப் போற்றிப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்களுக்கும் அதனைச் செவிமடுத்துக் கேட்பவர்களுக்கும் வாழ்க்கையில் துயர் இல்லை

திருச்சிற்றம்பலம்

253 இரும்பைமாகாளம் (அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை, விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1267 மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன்றெரித்த குழகன்னிடம்
எண்திசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் கலாய்நின்ற மகாளமே

தெளிவுரை : கங்கையைச் சடை முடியில் ஏற்று, சந்திரனைச் சூடி மானைக் கரத்தில் ஏந்தி, முப்புரத்தை எரித்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, எட்டுத் திசைகளும் புகழ் பரவும் இரும்பை என்னும் பதியில், வண்டு கீதம் பாடும் பொழில் சூழ்ந்த மாகாளம் ஆகும்

1268 வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தா நீறெழக் கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க் கும்இடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே

தெளிவுரை : வேதத்தின் வித்திகி, திருவெண்ணீற்றைத் திருமேனியில் குழையப் பூசி, வணங்கிப் போற்றும் அடியவர்களின் வினை யாவையும் நீங்குமாறு புரிந்து, முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, குற்றங்களை எல்லாம் தீர்க்கும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்பது, இரும்பை என்னும் பதியுள், முனிவர்களும் அந்தணர்களும் தொழுது நிற்கும் மாகாளம் ஆகும்

1269 வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மான் இடம்எழில் கொள்சோலை இரும்பைதனுள்
கந்தமாய பலவின்கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண்டு உகள்கின்ற மாகாளமே

தெளிவுரை : திருவெண்ணீறு தரித்து, எலும்பினை அணிந்து, இடப வாகனம் கொண்டு விளங்கும் எந்தை பெருமானாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, எழில் மிக்க சோலை சூழந்த இரும்பை என்னும் பதியுள் பலாவின் கனிகளையுடைய பொழிலில் மந்திகள் உண்டு உகளும் மாகாளம் ஆகும்

1270 நஞ்சுண்டகத்து அடக்கிந் நடுங்கும் மலையாமன்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்இடம்
எஞ்சல்இல்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே

தெளிவுரை : நஞ்சினை கண்டத்தில் அடக்கி, உமா தேவியும் அஞ்சுமாறு, பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்து ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, புகழ் மிகுந்து மேவும் இரும்பையுள் மேகத்தைத் தொடும் நெடிய பொழில் சூழ்ந்த அழகிய மாகாளம் ஆகும்

1271 பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள்
கூசஆனை உரித்தபெரு மான்குறை வெண்மதி
ஈசன்எங்கள் இறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கள் மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே

தெளிவுரை : குற்றங்களை இல்லாமையாக்கும் திருவெண்ணீற்றைத் திருமேனியில் குழைத்துப் பூசிய இடப வாகனத்தையுடைய ஈசன், மலைமகளாகிய உமாதேவி கண்டு கூசுமாறு யானையின் தோலை உரித்தவன் அப்பெருமான், வெண்மையான பிறைச் சந்திரனைத் தரித்து விளங்கும் எங்கள் இறைவன் அவன் இடமாவது, இரும்பையுள் மாசில்லாத உத்தமர்கள் மலர்கொண்டு பூசித்து வழிபடும் மாகாளம் ஆகும்

1272 குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவன்எங்கள் பெருமாள் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே

தெளிவுரை : குளிர்ச்சியான பிறைச் சந்திரனைச் சூடி ஆடல் புரியும் ஈசன், அடியவர்கள்பால் பற்றியுள்ள வினையை நீக்குபவன்; பரமன்; இறைவன்; பரந்த சடையுடைய எங்கள் பெருமான் அவன் வீற்றிருக்கும் இடம், வேதம் வல்ல அந்தணர்கள் வணங்கித் தொழுகின்ற இரும்பையுள் மேவும் மாகாளம் ஆகும்

1273 பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமான் பெருமான் என நின்றவர் தாழ்விடம்
எங்குமிச்சை அமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல் தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே

தெளிவுரை : சீற்றம் மிகுந்த சிவந்த கண்ணுடைய அரவமும், குளிர்ச்சியான சந்திரனும் சடை முடியில் ஒருசேர விளங்குமாறு வைத்த சிவபெருமான் விழைவுடன் வீற்றிருக்கும் இடமாவது, மேகம் தோயும் நெடிய பொழில் சூழ்ந்த அழகிய இரும்பையுள் திகழும் மாகாளம் ஆகும்

1274 நட்டத்தோடு நரியாடு கானத்துஎரி யாடுவான்
அட்டமூர்த்தி அழல்போல் உருவன் அழகாகவே
இட்டமாக இருக்கும் இடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கு மாகாளமே

தெளிவுரை : நரிகள் உலவும் மயானத்தில் நெருப்பைக் கரத்தில் ஏந்தி நடனம் புரியும் அட்டமூர்த்தியாகிய ஈசன், அழல் போன்ற செந்நிறத்தினை உடைய ஒப்பற்றவன் அப் பெருமான் விருப்பத்துடன் அழகாக வீற்றிருக்கும் இடம் இரும்பையுள் வலம் வந்து பணியும் அன்பர்களுடைய பிணிகளைத் தீர்க்கும் மாகாளம் ஆகும்

1275 அட்டகாலன் றனைவவ் வினான்அவ் அரக்கன்முடி
எட்டுமற்றும் இருபத்திரண் டும்இற ஊன்றினான்
இட்டமாக இருப்பான் அவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந்து எழிலாறு மாகாளமே

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்வதற்குப் போராடிய காலனை உதைத்து வீழ்த்திய ஈசன், இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது முடிகளும் நலியும்படி ஊன்றிய பரமன் அப் பெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடம், தேன் துளிர்க்கும் பொழில் சூழ்ந்த இரும்பையுள் எழில் மிகுந்து மேவும்  மாகாளம் ஆகும்

1276 அரவம்ஆர்த்தன்று அனல்அங்கை யேந்தி அடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே

தெளிவுரை : அரவத்தை அரையில் கட்டி, நெருப்பினை அழகிய கையில் ஏந்திய ஈசன், திருமாலும் பிரமனும் அடியும் முடியும் காண முடியாதவாறு ஓங்கிய பெரியோன் அப் பெருமான் வீற்றிருக்கும் இடம், குராமரம் விளங்கும் பொழிலின்கண் குயில்கள் சேரும் இரும்பையுள் மேவி, வானோரும் மறைவல்லோரும் தொழுகின்ற மாகாளம் ஆகும்

1277 எந்தையெம்மான் இடம்எழில் கொள்சோலை இரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந்து அழகாரு மாகாளத்தில்
அந்தம்இல்லா அனலாடு வானையணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே

தெளிவுரை : எந்தையாகிய ஈசன், எழில் மிக்க சோலை சூழ்ந்த இரும்பையுள், தென்றல் விளங்கும் பொழில் சூழ்ந்த அழகிய மாகாளத்தில் முடிவில்லாத அனல் ஏந்தி ஆடும பரமன் அப் பெருமானை ஏத்தி, ஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகமாகிய தமிழ் மாலையைப் பாட வல்லவர்களின் பழியானது, விலகிப் போகும்

திருச்சிற்றம்பலம்

254 திலதைப்பதி (அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலப்பதி,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1278 பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகள்ஆரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகள்ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள் சோலைம் மலர்மணம் கமழும் மதிமுத்தமே

தெளிவுரை : திருநீறு விரவப் பூசிய தொண்டர்கள் விடியற் காலை, ஆரத் தொழுது ஏத்த விளங்குகின்ற அழகனாகிய ஈசன், வீற்றிருக்கும் இடமாவது, கொடிகள் உயர்ந்து, விளங்கவும் விழாக்கள் பொலியும் திலதைப் பதியில், அழகிய சோலைகளில் மணங் கமழும் மலர்கள் திகழ மேவும் மதிமுத்தம் ஆகும்

1279 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனல்அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகொண்டுற்று இசைபயிலும் சோலைம் மதிமுத்தமே

தெளிவுரை : திருத்தொண்டர்கள் நெகிழ்ந்து நின்று தூப தீங்களுடன் சந்தனம் மற்றும் நறுமணம் கமழும் மலர்மாலையும் கொண்டு ஏத்த, அவ்வன்பர்களுக்கு அருள் செய்யும் தன்மையில், குறிப்பினை அறிந்து விளக்கும் அன்பினனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம், தெளிந்த நீர் விளங்கும் அரிசில் ஆறு சூழ்ந்த திலதைப்பதியில் வண்டானது மலர்களில் இசை பயிலும் சோலை மேவும் மதிமுத்தம் ஆகும்

1280 அடலுளேறுய்த் துகந்தான் அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக உண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே

தெளிவுரை : வீரம் மிக்க இடபவாகனத்தை உகந்த ஈசன், அடியவர்களும், தேவர்களும் தொழுது ஏத்தக் கடல் பெருக்கிய நஞ்சினை அமுதம் என அருந்திய கடவுள் அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வெறுமையாகப் பயிரிடப் பெறாத கரம்பாக உள்ளதென இல்லாது, செழுமையான கழனிகள் சூழப்பெற்ற திலதைப்பதியின்கண் வாழைக் கனியிலிருந்து தேன் சிந்தும் தோட்டப் பொலிவுடைய மதிமுத்தம் எனப்படும் கோயிலாகும்

1281 கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
வெங்கணாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப் பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்தழகார் மதிமுத்தமே

தெளிவுரை : கங்கை, சந்திரன், வன்னி, எருக்கும் பூ ஆகியவற்றொடு வில்வமும் அரவமும் சடைமுடியில் வைத்துளள விகிர்தனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம், வைத்துள்ள விகிர்தனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம், கயல்கள் பாயும் நீர் பெருகும் அரிசில் ஆறு சூழ்ந்த திலதைப் பதியின்கண், மேகம் தோயும் பொழில் சூழ்ந்த பதியின்கண், மேகம் தோயும் பொழில் சூழ்ந்த அழகு மிளிரும் மதிமுத்தமும் எனப்படும் திருக்கோயில் ஆகும்

1282 புரவியேழும் மணிபூண்டு இயங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைகர புன்னைகள்
மரவமவ்வல் மலரும் திலதைம் மதிமுத்தமே

தெளிவுரை : மணிகள் பூண்ட ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரினையுடைய சூரியன் பரவி நின்று வழிபாடு செய்யும் பரம்பொருளாகிய ஈசன் வீற்றிருக்கும் தலம் என்பது குங்குமம், கோங்கு வேங்கை, சுரபுன்னை, புலிநகக் கொன்றை, கடம்பு முதலான மரங்கள் விரவி மலரும் திலதைப்பதியில் மேவும் மதிமுத்த ஆகும்

1283 விண்ணர்வேதம் வரித்தோத வல்லார் ஒருபாகமும்
பெண்ணார்எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந்து அருள்பேண நின்றம் மதிமுத்தமே

தெளிவுரை : விண்ணென உயர்ந்த ஈசன், வேத்தினை விரித்து ஓத வல்லவர்; ஒரு பாகத்தில் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; பக்தி நிறைந்து எண்ணிப் போற்றாத அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, தூய நிலவின் ஒளியைத் தீண்டும் நெடிது ஓங்கிய சோலைகளைக் கொண்ட திலதைப்பதியின்கண், மண்ணுலகத்தவர் வந்து அருள் வேண்டி நின்று போற்றும் அழகிய மதிமுத்தம் ஆகும்

1284 ஆறுசூடி அடையார்புரம் செற்றவர் பொற்கொடி
கூறுசேரும் உருவர்க்கு இடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனல்அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே

தெளிவுரை : கங்கையைச் சடையில் தரித்து, பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு புரிந்து, உமாதேவியாரை ஒரு கூறுடைய அர்த்தநாரியாக மேவும் ஈசனுக்கு இடம் ஆவது யாது எனக் கூறும்போது, தேன் விளங்கும் பொழில் சூழ்ந்த அழகிய திலதைப்பதியின்கண், நீர் வளத்தை வரையாது வழங்கும் அரிசில் ஆறு சூழ்ந்த, மதிமுத்தம் என்னும் திருக்கோயில் ஆகும்

1285 கடுத்துவந்த கனல்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோர் அடர்த்தார்க்கு இடமாவது
புடைக்கொள் பூகத்து இளம்பாளை புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளும் திலதைம் மதிமுத்தமே

தெளிவுரை : கனன்று வந்த கயிலையை எடுத்த இராவணனுடைய முடியும் தோளும் நலியுமாறு அடர்த்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, பக்கங்களில் சூழ்ந்துள்ள பாக்கு மரங்களின் இளம் பாளையிலிருந்து கள்நீர் பாய, மந்திகள் அருந்தித் துள்ளிக் குதிக்கும் திலதைப்பதியில் மேவும் மதிமுத்தம் என்னும் திருக்கோயில் ஆகும்

1286 படங்கொள்நாகத் தணையானும் பைந்தா மரையின்மிசை
இடங்கொள்நால்வே தனும்ஏத்த நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைதொண்டர் பாடும் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஏத்த நின்ற இறைவன் வீற்றிருக்கும் இடமாவது, உறுதி பயக்கும் ஈசன் புகழ்ப் பாடங்களை, நாவினால் நனி இசைத்துப் பாடுகின்ற அடியவர்கள் பாடிப் போற்றும் திலதைப்பதியில், சிங்கம் வழிபாடு செய்யும் மதிமுத்தம் ஆகும்

1287 புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தம் சொன்னம் மொழிகேட்கி லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே

தெளிவுரை : புத்தராகிய தேரரும் சமணரும் சத்தில்லாத மொழிகளைக் கூற, அதனைக் கருத்தெனக் கொள்ளாது மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், பக்தர்களும், சித்தர்களும் பணிவுடன் இறைஞ்சும் திலதைப் பதியில் யானை வழிபாடு செய்யும் மதிமுத்தம் என்பதாகும்

1288 மந்தமாரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தமேல்
கந்தமாரும் கடற்காழி யுளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள் போய்ச்
சிந்தை செய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே

தெளிவுரை : தென்றல் வீசும் பொழில் சூழ்ந்த திலதைப் பதியில் விளங்கும் மதிமுத்தம் என்னும் திருக்கோயிலின்மீது, காழிப்பதியின் தமிழ் ஞானசம்பந்தர் பரவிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், பழீ தீரப் பெறுவார்கள்; சிவன் கழலை நாடிச் சேர்வார்கள்; இது உறுதி

திருச்சிற்றம்பலம்

255 திருநாகேச்சுரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1289  தழைகொள்சந் தும்அகிலும் மயிற்பீலி யும்சாதியின்
பழமும்உந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதந் தொழுதேத்த வல்லார்க்கு அழகாகுமே

தெளிவுரை : சந்தனர், அகில், மயிற் பீலி, சாதிக்காய் என நறுமணப் பொருட்களை உந்தித் தள்ளி நீர் பாயும் தொன்மையான விரும்பிச் சென்று தொழுதேத்தச் சிறப்புகளை நல்கும் நாகேச்சரத்துள் வீற்றிருக்கும் அழகராகிய ஈசன் திருவடியைத் தொழுது போற்றுபவர்களுக்கு அழகு வாய்க்கப் பெறும்

1290 பெண்ணொர்பாகம் அடையச் சடையிற் புனல்பேணிய
வண்ணமான பெருமான் மருவும்இட மண்ணுளார்
நண்ணிநாளும் தொழுதேத்தி நன்குஎய்து நாகேச்சுரம்
கண்ணினாற் காணவல்லார் அவர்கள் ணுடையார்களே

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகத்தில் ஏற்றுச் சடை முடியில் கங்கை தரித்து, வண்ணம் பொலிய விளங்கும் ஈசன் மருவும் இடமானது, இவ் உலகத்தவர் நண்ணி நாள்தோறும் தொழுது ஏத்தி நல்லன யாவும் அடையப்பெறும் நாகேச்சுரம் ஆகும் அதனைத் தரிசிப்பவர்கள் கண் பெற்ற பயனை அடைந்தவர் ஆவார்கள்

1291 குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர்
பறவையாலப் பரக்கும் பழங்காவிரத் தென்கரை
நறுவநாறும் பொழில்சூழ்ந்து அழகாய நாகேச்சுரத்து
இறைவர்பாதம் தொழுதேத்த வல்லார்க்கு இடம்இல்லையே

தெளிவுரை : குறவர்களின் கொல்லைப் புனத்தில் உள்ள கதிர்களை வெள்ளத்தால் கவர்ந்து கொண்டு வரும் தன்மையில், நீர்ப் பறவைகள் கத்திக் கொண்டு அவற்றைக் கவர வேண்டும் எனும் வேட்கையுடன் பறக்கும் தொன்மையான காவிரியின் தென்கரையில், தேன் மணக்கும் பொழில் சூழ்ந்து அழகுடன் விளங்கும் நாகேச்சுரத்தின் இறைவன் திருப்பாதத்தைத் தொழுது ஏத்தவல்லவர்களுக்கு எத்தகைய துன்பமும் இல்லை

1292 கூசநோக்காதுமுன் சொன்ன பொய்கொடு வினைகுற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சுரம்
தேசமாக்கும் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே

தெளிவுரை : நாணத்தால் சிறுமைக்கும் அஞ்சியும், பின் விளைவினை ஆராயாமலும் சொன்ன பொய்மை கொண்டும், வினையின் குற்றமும் கெடுமாறு வந்து வணங்குகின்ற நாகேச்சுரத்தினில் ஒளிமயமாக்கி அருள் புரியும் கருணையால் திருக்கோயில் கொண்ட செல்வனாகிய ஈசன் கழலைப் பணிந்து, அன்புடன் ஏத்து பாங்குடையவர்கள், அறத்தின்வழி நிற்பவர்கள் ஆவார்கள்; முத்திநெறியில் செல்லும் தன்மையில் இம்மையில் ஒழுகும் உத்தமர்களாய் விளங்குவார்கள்

1293 வம்புநாறும் மலரும்மலைப் பண்டமும் கொண்டுநீர்
பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சுர நண்ணுவார்
உம்பர் வானோர் தொழச் சென்றுடனாவதும் உண்மையே

தெளிவுரை : நல்ல மணம் கமழும் மலரும், மலைப் பகுதியில் விளையும் பண்டங்களும் கொண்டு நீரில் பெருக்கினால் வாரிக் கொழிக்கும் தென்மையான காவிரியின் தென்கரையில் ஈசன் எக்காலத்திலும் வீற்றிருக்கின்ற நாகேச்சுரத்தினை நண்ணி வணங்குபவர்கள், உம்பரும் வானவரும் தொழுது நிற்கத் தாமும் உடனாகி விளங்கி, வணங்குதலும் மகிழ்தலும் கொள்வார்கள்

1294 காளமேகம் நிறக்கால னோடுஅந்தகன் கருடனும்
நீளமாய்நின்று எய்தகாமனும் பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சுர நண்ணுவார்
கோளுநாளும் தீயவேனு(ம்) நான்காம் குறிக்கொள்மினே

தெளிவுரை : கரிய மேகம் போன்ற நிறங் கொண்ட காலனும், அந்தகனும், கருடனும், மன்மதனும் அழிந்து பட்டத்தை நினைவு கொண்டு நோக்குகையில், ஈசன் எக்காலத்திலும் வீற்றிருக்கும் நாகேச்சுரத்தினை அடைபவர்களே ! கோளும், நாளும் மற்றும் தீய வகை உடைய பிறவற்றாலும் நன்மையே உண்டாகும் எனக் கொள்வீராக

1295வேயுதிர்முத் தொடுமத்த யானை மருப்பும்விராய்ப்
பாய்புனல்வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை
ஞாயிறும் திங்களும்கூடி வந்தாடு நாகேச்சுரும்
மேயவன்றன் னடிபோற்றி யென்பார் வினைவீடுமே

தெளிவுரை : மூங்கில்களிலிருந்து தெரித்த முத்தும் யானையின் தந்தங்களும் விரவிப் பாயும் நீர் வந்து அலைக்க மேவும் தொன்மை விளங்கும் காவிரியின் தென்கரையில், சூரியனும், சந்திரனும் சேர்ந்து வந்து வழிபடும் நாகேச்சுரத்தில் வீற்றிருக்கும் ஈசன் திருவடியைப் போற்றித் துதிப்பவர்களின் வினையாவும் நீங்கி அழியும்

1296 இலங்கைவேந்தன் சிரம்பத்தி ரட்டியெழில் தோள்களும்
மலங்கிவீழம் மலையால் அடர்த்தான் இடமல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறு(ம்) நண்ணு நாகேச்சுரம்
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே

தெளிவுரை : இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நலிவுற்றும் கெடுமாறு அழகிய திருக்கயிலை மலையால் அடர்த்த ஈசனின் இடமாவது, நலங்கள் யாவும் பெற்று உய்ய வேண்டும் என்னும் கருத்தினால், அடியவர்கள் எக்காலத்திலும் நண்ணுகின்ற நாகேச்சுரம் ஆகும் அதனை வலம் வரும் சிந்தையுடையவர்களுக்கு இடர் யாவும் தீர்ந்து நன்மை பயக்கும்

1297 கரியமாலும் அயனும் அடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்இடம் ஈண்டுகா
விரியின்நீர்வந்து அலைக்கும் கரைமேவு நாகேச்சுரம்
பரிவிலாதுஅவ் வடியார்கள் வானிற் பிரியார்களே

தெளிவுரை : திருமாலும் பிரமனும், திருவடியும் திருமுடியும் காண முடியாதவாறு தீப்பிழம்பாகி ஓங்கி உயர்ந்த ஈசன் அமர்ந்து அருள் செய்யும் இடமாவது, காவிரியின் நீர் அலைகள் பொருந்தும் கரையில் மேவும் திருநாகேச்சுரம் ஆகும் இத் திருக்கோயிலைப் பிரியாது வணங்குகின்ற அடியவர்கள் வானுலகில் வாழ்கின்ற சிறப்பிலிருந்து பிரியாதவர்கள் ஆவார்கள்

1298 தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை
நட்டிருட்கண் ணடமாடிய நாத(ன்) நாகேச்சுர
மட்டிருக்கும் மலரிட்டு அடிவீழ்வது வாய்மையே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் புனைந்துரைக்கும் சொற்களை ஏற்காது, மயானத்தில் நள்ளிருளில் நடம் புரியும் நாதனாகிய நாகேச்சுரனை தேன் துளிர்க்கும் புதுமலர் கொண்டு தூவிப் போற்றித் திருவடியைப் பணிந்து வணங்குவது நல்வழியின் தன்மையாகும்

1299 கந்தநாறும் புனல்காவிரித் தென்கரைக் கண்ணுதல்
நந்திசேரும் திருநாகேச் சுரத்தின் மேல்ஞானசம்
பந்தனாவிற் பனுவல் இவைபத்தும் வல்லார்கள்போய்
எந்தைஈசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே

தெளிவுரை : நன்மணம் கமழும் நீர் பெருகும் காவிரித் தென்கரையில், திருநுதலில் கண்ணுடைய ஈசன் வீற்றிருக்கும் திருநாகேச்சுரத்தின் மீது ஞானசம்பந்தர் நாவினால் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் ஈசன் விளங்குகின்ற சிவலோகத்தை எய்த வல்லவர்கள் ஆவார்கள்

திருச்சிற்றம்பலம்

256 மூக்கீச்சரம் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்(முக்தீச்சுரம்), திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1300 சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தள் ஆரும் விரல்ஏழை யொடுஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டாங்கு அறியந் நிறைந்தார் அவர்ஆர்கொலோ
வேந்தன் மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே

தெளிவுரை : நன்மணம் திகழும் சாந்தம் தருவது எனக் கருதி, திருவெண்ணீற்றினைக் குழையப் பூசிக் கங்கையினைச் சடை முடியில் வைத்தவராகிய சிவபெருமான், காந்தள் மலர் போன்ற அழகிய பூ விரல் கொண்டு விளங்கும் உமாதேவியோடு சேர்ந்து திருநடனம் புரிந்த காரணத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டவர் யார்கொல் ! இச் செயல் யாவரையும் நன்கு பாதுகாப்பவராகிய ஈசனாகிய மூக்கீச்சரத்து அடிகள் புரிகின்ற மெய்ம்மையே ஆகும்

1301 வெண்டலைசேர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த்து உமையாளொடும் கூட்டமா
விண்டவர்தம் மதில்எய்தபின் வேனில்வேள் வெந்தெழக்
கண்டவர் மூக்கீச் சரத்து எம்அடிகள் செய்கன்மமே

தெளிவுரை : பிரம கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்ட பலி கொள்வதை விரும்பிய ஈசன், ஆகாச கங்கையினைச் சடை முடியில் தரித்து, உமாதேவியார் ஒரு பாகத்தில் விளங்கச் சேர்ந்து நின்று பகைத்த முப்புர அவுணர்தம் கோட்டைகள் வெந்து சாம்பல் ஆகுமாறு செய்தவர் அப் பெருமான் மன்மதன் எழுமாறு அருள் புரிந்தவர் இத்தகைய திருவிளையாடல்களை நிகழ்த்துபவர் மூக்கீச்சரத்தில் வீற்றிருக்கும் எம் ஈசன் ஆவார்

1302 மருவலார்தம் மதில்எய் ததுவும்மால் மதலையை
உருவிலார்அவ் எரியூட்டி யதும்முலகு உண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானை யினான்செய்த
பொருவின் மூக்கீச்சரத்து எம்அடிகள் செயும்பூசலே

தெளிவுரை : ஈசன் தன்னை மருவிச் சார்ந்து பணிதல் இன்றிப் பகைத்து நின்ற அசுரர்களையும் அவர்களுடைய மூன்று புரங்களையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்த பரமன்; திருமாலின் புதல்வனாகிய மன்மதனை, வடிவம் அற்றவனாகத் திகழுமாறு, நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கிய தலைவன்; தென்னவனாய் உலகு ஆண்ட கோச்செங்கட்சோழன் திருப்பணி ஆற்ற மூக்கீச்சரத்தில் எழுந்தருளிய அடிகள் ஆவர் அவ் இறைவன் திருச் செயலே யாவையும ஆற்ற வல்லதும்

1303 அன்னம் அன்னந் நடைச்சாய லாளோடு அழகெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்
தென்னன்கோழி எழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன் மூக்கீச்சரத் தடிகள் செய்கின்றது ஓர்மாயமே

தெளிவுரை : அன்னம் போன்ற நடையின் சாயல் கொண்டு விளங்கும் உமாதேவியார் ஒரு பாகத்தில் மேவித் திகழ, அழகு மிளிரும் மின்னலைப் போன்ற சடை முடியின் மீது கங்கை என்னும் நங்கையினைக் கொண்டுள்ள காரணமானது, சேர, சோழ, பாண்டியர் நாதனாகி மூக்கீச்சரத்தில் வீற்றிருக்கும் அடிகள் செய்கின்ற ஓர் மாயமே ஆகும்

1304 விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் அழலாடுவார்பேயொடு நள்ளிருள்
வடமனீடு புகழ்ப்பூமியன் தென்னவன் கோழிமன்
அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே

தெளிவுரை : விடம் பொருந்திய அரவத்தை அரையில் கட்டிக் கையில் நெருப்பினை ஏந்தி நள்ளிருளில் பேய்க் கூட்டத்தோடு நடனம் புரிபவர் ஈசன் ஆல்போல் தழைத்து நீண்ட புகழ் விளங்கும் பாண்டியர்களும் சோழ மன்னர்களும் வணங்கிப் போற்ற ஆற்றல் மிக்கு மேவும் நாதனாகிய மூக்கிச்சரத்து அடிகள் புரிகின்ற இத்தகைய செயல்கள் யாவும் அவ் இறைவனுக்கே எளிமையானதாகும்

1305 வெந்தநீறு மெய்யில் பூசுவர்ஆடுவர் வீங்கிருள்
வந்தென்ஆரவ் வளைகொள்வதும் இங்கொருமாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பியன் ஆக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் ஏதமே

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீற்றைப் பூசி அணிந்து, அடர்த்தியான இருள் சூழ்ந்த மயானத்தில், நின்று நடனம் புரிபவர் அப் பெருமான், என் உள்ளத்தில் புகுந்து, என்னை அப்பெருமானையே நினைத்து உருகுமாறு செய்வித்தும் என் மேனியை இறைத்து மெலியுமாறு செய்தும், என் வளையல்கள் தாமாகவே கழன்று விழுமாறு புரிந்தவர் இது ஒரு விந்தையே ஆகும் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து யானையை வென்ற தன்மையில் கோச்செங்கட்சோழனாக்கிய எந்தை மூக்கீச்சரத்து அடிகளே, இவ்வாறு என்னை உருகச் செய்யும்படி செய்த பெருமான் ஆவார்

1306 அரையிலாருங் கலையில்லவன் ஆணொடு பொண்ணுமாய்
உரையிலார்அவ் அழலாடுவர் ஒன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதில்மூன் றுடன்வெவ்வழல் ஆக்கினான்
அரையன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் அச்சமே

தெளிவுரை : ஈசன், அரையில் துகில் பொருந்திக் கட்டாது கோவணத்தை உடுத்தியவர்; ஆணொடு பெண் வடிவமும் சேர்ந்து மேவும் அர்த்தநாரியாய்த் திகழ்பவர்; சொற்பொருளுக்கும் உரைகளுக்கும் அப்பாற்பட்டவர்; அதனைப் போன்று வரையரையில்லாத நெருப்பினைக் கையில் ஏந்தி திருக்கூத்து புரிபவர்;  எப்பொருளின்மீதும் பற்றிக்கொண்டு ஒன்றுதல் கொள்ளாது விளங்கித் திகழ்பவர் அப்பெருமான், பகைத்த முப்புரத்து அசுரர்களையும், அவர்தம் கோட்டைகளையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் அவர், தலைவராக விளங்கி, மூக்கிச்சரத்தில் மேவும் அடிகள் ஆவார் இவை யாவும் அவருக்கு மிக எளிமை வாய்ந்த செயலாகும்

1307 ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்றதும் கூற்றை உதைத்ததும்
கூர்க்குநன்மூ விலைவேல்வலன் ஏந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன் உரத்தை நெரித்தவ்வடல்
மூர்க்கன் மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே

தெளிவுரை : கங்கையைச் சடை முடியில் ஏற்றதும் தன்பால் வந்தடைந்த மார்க்கண்டேயரின் உயிரைக் கவர முனைந்த கூற்றுவனை உதைத்து அழித்ததும், கூர்மை விளங்கும் சூலத்தை ஏந்திய கொள்கையும், ஆரவாரம் செய்து வாய்ச் சொல் புகலும் இராவணனுடைய வலிமையை நெரித்து அடர்த்த செயலும், திண்மையுடன் விளங்கும் மூக்கீச்சரத்தில் மேவும் அடிகள் செய்த வலிமையின் பாற்றே ஆகும்

1308 நீருளாரும் மலர்மேல் உறைவா(ன்) நெடுமாலுமாய்ச்
சீருளாரும் கழல்தேடி மெய்த்தீத் திரள்ஆயினான்
சீரினால்அங்கு ஒளிர்தென்னவன் செம்பியன் வில்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே

தெளிவுரை : நீரில் விளங்கும் தாமரை மலரில் உறையும் பிரமனும், திருமாலும், திருக்கழலைத் தேடி நிற்க, மெய்ம்மை மேவும் தீத் திரளாய் ஓங்கிய ஈசன், சீரிய புகழால் ஒளிரும் பாண்டியர், சோழர், சேரர் ஆகிய பெருமன்னர்கள் சேர்ந்து தொழுமாறு விளங்கும் மூக்கீச்சரத்து மேவிய அடிகள் ஆவார் இச்செயல் அப்பெருமான் புரியும் செம்மையாகும்

1309 வெண்புலால் மார்பிடு துகிலினர் வெற்றரை உழல்பவர்
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம தாக்கினான்
ஒண்புலால் வேல் மிகவல்லவன் ஓங்குஎழிற் கிள்ளி
பண்பின் மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே

தெளிவுரை : துவர் ஆடை அணிந்துள்ள சாக்கியரும், திகம்பரராகிய சமணரும் உரைக்கும் மொழிகள் ஊனம் உடைமையாகும் என ஆக்கிய ஈசன், மாற்றாரை வென்று தென்னவனாய் உலகாண்ட கோச் செங்கட்சோழன் திருஉள்ளத்தின் பாங்கால் அமையப் பெற்ற மூக்கிச்சரத்தில் மேவும் அடிகள் ஆவார் இத்தகைய அருமை வாய்ந்த திருப்பணிகள் யாவும் அப் பெருமான் நிகழத்துகின்ற பசுமையான அருட்பேறு ஆகும்

1310 மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத்து அடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய் வாழ் பவர்காழியுள் ஞான சம்பந்தன்
சொல்லவல்லார் அவர்வானுலகு ஆளவும் வல்லரே

தெளிவுரை : வளமும் வலிமையும் மிக்க மூவேந்தர்களும் மூக்கீச்சரத்தில் மேவும் ஈசனைத் தமது செல்வராக நினையுமாறு புரிந்தனைச் செந்தமிழ் வல்லவராகவும் நல்லவராகவும் வாழ்பவர்கள் திகழும் காழியுள் விளங்கும் ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள் வானுலகத்தை ஆளும் வல்லமையைப் பெறுவார்கள்

திருச்சிற்றம்பலம்

257 திருப்பாதிரிப்புலியூர் (அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1311 முன்னநின்ற முடக்கால் முயற்குஅருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ் பாதிரிப் புலியூருளான்
தன்னைநின்று வணங்கும் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே

தெளிவுரை : முற்காலத்தில், கால்கள் முடங்கி முயலின் கால்கள் போன்றுள்ள சாபத்தைப் பெற்ற மங்கண முனிவரின் பூசையை ஏற்று, நீடுஅருள் புரிந்த ஈசன், திருப்பாதிரிப்புலியூரில் வீற்றிருக்கும் பரமன் ஈசனை வணங்கும் தவத்தினைப் பெறாதவர்கள் மறுமையில் பிணியுடைய யாக்கையைப் பெறுவார்கள்

1312 கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை
உள்ள நம்மேல் வினையாயி ஒழியுங்களே

தெளிவுரை : பிணத்தினை எரிக்கின்ற இடுகாட்டில் பேய்க் கூட்டங்கள் குழைந்து ஆட்டங்களைப் புரிய விளங்குகின்ற ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, பறவைகள் நனிவிளங்கும் பாதிரிப்புலியூர் ஆகும் அதனை நினைத்து வணங்க, வினையாயின யாவும் நீங்கிச் செல்லும்

1313 மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில் பாதிரிப் புலியூருளான்
வெருளின் மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்தபின்
அருளியாகத் திடைவைத் ததுவும் அழகாகவே

தெளிவுரை : மருள் வயப்படும் அஞ்ஞானம் முழுமையாக நீங்கிய நல்லோர்கள் வழிபாடு செய்கின்ற, மழுப்படை ஏந்திய ஈசனினும் மேற்பட்ட பொருள் யாதும் இல்லை எனத் தெளிந்தவர்கள் விளங்குகின்ற தலம் பாதிரிப்புலியூர் ஆகும் ஆங்கு மேன்மை திகழும் மான் அன்ன உமாதேவியை நயந்து, தேகத்தில் பொருந்துமாறு வைத்த அருட் பாங்கு மிக அழகிய தன்மை உடையது இது, காட்சிக்கு இனிமையும், பேறும் நல்கும் ஈசன் திருவருளை வியந்து ஏத்தியவாறு ஆயிற்று

1314 போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்
ஆதிநாலும் அவலம் இலாதஅடி கள்மறை
ஓதிநாளும் இடும்பிச்சை யேற்றுண்டு உணப்பாலதே

தெளிவுரை : மலர்களாலும் தூபங்களாலும் அடியவர்கள் விதித்த காலங்களில் பூசித்து வழிபாடு செய்யும் பாதிரிப் புலியூரில் வீற்றிருக்கும் அடிகளாகிய ஈசன் ஆதிப்பிரா ன் ஆவார் அப் பெருமான் எத்தகைய அவலத்திற்கும் பிணிக்கப்படாதவர் இந்நிலையில் பாடல்களைப் பாடிப் பிறர் இடுகின்ற பிச்சையேற்று உணவு கொண்டு உட்கொள்ள மேவும் பாங்கு, விந்தையே

1315 ஆகநல்லார் அமுதாக்க உண்டான் அழல்ஐந்தலை
நாகநல்லார் பரவந்நயந்து அங்குஅரை ஆர்த்தவன்
போகநல்லார் பயிலும் பாதிரிப் புலியூர்தனுள்
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே

தெளிவுரை : உமாதேவியார், நன்மையாகுமாறு செய்த நஞ்சினை உண்ட ஈசன், நல்லோர்கள் யாவரும் பரவித் தொழுமாறு ஐந்தலை நாகத்தை அரையில் ஆர்த்துக் கட்டிய பெருமான் ஆவார் அவர் போகம் தரும் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூரில், உமாதேவியாரைப் பாகங் கொண்டு மேவி வீற்றிருக்கும் பரம்பொருள் ஆவார்

1316 மதியமொய்த்த கதிர்போல் ஒளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ் பாதிரிப் புலியூரெனும்
பதியில் வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகாகவே

தெளிவுரை : சந்திரனின் வெண்மையான கதிர் போன்று ஒளி தருகின்ற கடற்கரைச் சோலையின் மணல் பரப்பில் புத்தம் புதிய முத்துக்கள் திகழும் பெருமையுடைய பாதிரிப்புலியூர் என்னும் பதியில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய ஈசனின் பழந்தொண்டர்கள், பக்திப் பெருக்கில் ஆனந்தக் கூத்தும் ஆடுவார்கள்; சிவாகம விதிப்படி வழிபாடும் குழைந்து விருப்பம் மேலிட்டுச் செய்வார்கள்

1317 கொங்குஅரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
சங்குஅரவப் பறையின் ஒலியவை சார்ந்தெழப்
பொங்குஅரவம் உயர் பாதிரிப் புலியூர்தனுள்
அங்குஅரவம் அரையில் அசைத்தானை அடைமினே

தெளிவுரை : பூந்தாதுக்களில் தேன் அருந்தும் தன்மையில் ஒலியெழுப்பிக் குளிர்ச்சி மிகுந்த சோலைகளில் ரீங்காரம் செய்யவும், சங்கின் ஒலியும், பறையின் ஒலியும் சார்ந்து எழ, திருவிழாக்கள் நடத்தும் காரணமாகப் பொங்கும் பேரொலி கொண்டு விளங்கும் பாதிரிப்புலியூரில், பாம்பை அரையில் அசைத்துக் கட்டி வீற்றிருக்கும் ஈசனை அடைந்து வணங்கித் தொழுவீராக

1318 வீக்கம்எழும் இலங்கைக்கு இறை விலங்கல்லிடை
ஊக்கம்ஒயிந்து அலறவ் விரல்இறை ஊன்றினான்
பூக்கமழும் புனல் பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெலிந்து அணுகா வினை நணுகுங்களே

தெளிவுரை : பாராட்டுதற்கு ஒண்ணாத பெருமை உடைய இராவணன், கயிலை மலையின்கீழ், ஆற்றல் அழிந்து அலறுமாறு, திருவிரலை ஊன்றிய ஈசன் வீற்றிருக்கும் பூக்களின் நறுமணம் கமழும் பாதிரிப் புலியூரினை நோக்கி வணங்க, வினையானது நலிவுற்றுத் தன்னிலை கெடும் எனவே அத்தகைய வினையைச் சாய்த்தவர்கள் ஆவீர்கள்

1319 அன்னம்தாவும் மணியார் பொழில் மணியார்புன்னை
பொன்னந்தாது சொரி பாதிரிப் புலியூர்தனுள்
முன்னம்தாவி அடிமூன்று அளந்தவன் நான்முகன்
தன்னம் தாளுற்று உணராத தோர் தவநீதியே

தெளிவுரை : அன்னப் பறவைகள் விளங்கும் அணி மிக்க பொழிலில் அணிதிகழ் புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களைச் சொரிய, மூன்று அடியால் உலகத்தை அளந்த திருமாலும், நான்முகனும் பாதிரிப்புலியூரில் வீற்றிருக்கும் ஈசனின் திருவடியை உணராத செயல் விந்தையே ஆகும்

1320 உரிந்தகூறை உருவத்தொடு தெருவத் திடைத்
திரிந்துதின்னும் சிறுநோன்பரும் பெருந்தேரரும்
எரிந்துசொன்னவ் உரைகொள்ளாதே யெடுத்து ஏத்துமின்
புரிந்த வெண்ணீற்றண்ணல் பாதிரிப் புலியூரையே

தெளிவுரை : சமணரும், தேரரும் சொல்லும் கருத்துக்கள் மன எரிச்சலால் ஆகியன அவ்வுரைகளை ஏற்காது திருவருளைப் புரிந்த திருவெண்ணீற்றினைத் தரித்த சிவபெருமான் எழுந்தருளி விளங்கும் பாதிரிப் புலியூரை ஏத்தி வழிபடுவீராக

1321 அந்தணல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தனல்லார் பயில் பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத்திவை தரித்தார் கண்மேல்
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே

தெளிவுரை : அந்தணர் பெருமக்கள் விரிந்து பரந்து விளங்கும் காழி நகரில் மேவும் ஞானசம்பந்தர், நல்லோர்கள் திகழும் பாதிரிப்புலியூரில் சந்தம் பெருகுகின்ற தமிழ் மாலையைப் பாடிய இத் திருப்பதிகத்தினை ஓதி உரைப்பவர்கள்பால், தீயவை வந்து அடையாத தன்மையும் வினை மாய்தலும் உண்டாகும்

திருச்சிற்றம்பலம்

258 திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1322 விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார்
படையதாகப் பரசு தரித்தார்க்கு இடமாவது
கொடையில்ஓவார் குலமும் உயர்ந்தம் மறையோர்கள்தாம்
புடைகொள் வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே

தெளிவுரை : இடப வாகனத்தில் அமர்ந்து, திருக்கரத்தை நன்கு அசைத்து ஆர்க்கும் விமலன் மழுப்படையைத் தரித்துள்ள பெருமான் ஆவர் அவர் வீற்றிருக்கும் இடமாவது, ஓய்வின்றி கொடையில் சிறந்தும், வேதம் ஓதுதலில் திகழ்ந்து விளங்கும் மறையோர்கள் சூழ்ந்தும், வேள்விப் புகை சூழ, அது ஆகாயத்தில் சென்று உலவும் பெருமையுடையதும் ஆகிய புகலியே ஆகும்

1323 வேலைதன்னின் இருநஞ்சினை உண்டிருள் கண்டனர்
ஞாலமெங்கும் பலிகொண்டு உழல்வார் நகராவது
சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
சோலைமேவும் கிளித்தான் சொற்பயிலும் புகலியே

தெளிவுரை : பாற்கடலில் தோன்றிய, மரணத்தை உண்டாக்கும் கொடிய நஞ்சினை உட்கொண்டு, அதனால் கரிய கண்டத்தைப் பெற்றுத் திருநீலகண்டர் எனப் பெயர் தாங்கிய ஈசன், யாண்டும் சென்று திரிந்து பலிகொண்டு மேவுபவர் அப் பெருமான் வீற்றிருக்கும் நகரானது, நற்குணங்களையுடைய அந்தணர்கள் பயில்கின்ற வேத மொழிகளைக் கேட்டு, அவ்வரிய உயர்ந்த பதங்களைச் சோலையில் மேவும் கிளிகள் பயில்கின்ற புகலியாகும்

1324 வண்டுவாழும் குழல்மங்கையோர் கூறுகந் தார்மதித்
துண்டமேவும் சுடர்த்தொல் சடையார்க்கு இடமாவது
கொண்டைபாய மடுவில் உயர்கேதகை மாதவி
புண்டரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே

தெளிவுரை : வண்டு வாழும் மலர்போன்ற கூந்தலை உடைய உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு, பிறைச் சந்திரனைச் சூடி விளங்குகின்ற, சுடர் போன்ற சடை முடியுடைய சிவபெருமானுக்கு இடமாகத் திகழ்வது, கெண்டை (மீன்)கள் பாயும் மடுவில் தாழை, மாதவி, தாமரை ஆகியன விளங்கி மலர்கள் சூழும் பொய்கை நிலவும் புகலியாகும்

1325 திரியுமூன்று புரமும் எரித்துத் திகழ்வானவர்க்கு
அரியபெம்மான் அரவக்குழையார்க்கு இடமாவது
பெரியமாடத்து உயரும் கொடியின் இடைவாய்வெயிற்
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே

தெளிவுரை : ஆங்காங்கு திரிந்து சென்று தேவர்களையும் மக்களையும் துன்புறுத்திய உலோகத்தாலான மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, பெருமையுடன் திகழவல்ல வானவர்களுக்கும் அரியவனாகிய ஈசன், அரவத்தைக் காதில் குழையாக அணிந்தவர் அப்பெருமானுக்கு இடமாவது, பெரிய மாடங்களில் உயர்ந்து மேவும் கொடியின் நெருக்கத்தால் வெயிலின் வெம்மை தோன்றாதவாறு பெரிய பூம்பொழில் சூழ்ந்த குளிர்ச்சி மிக்க புகலியாகும்

1326 ஏவிலாரும் சிலைப்பார்தனுக்கின் னருள்செய்தவர்
நாவினாள்மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடமாவது
மாவிலாரும் கனிவார் கிடங்கில் விழ வாளைபோய்ப்
பூவிலாரும் புனற்பொய்கையில் வைகும் புகலியே

தெளிவுரை : ஈசன், அம்பு தொடுத்துப் போர் செய்யும் வில்லையுடைய ஒளி மிக்க பார்த்தனுக்கு அருள் செய்தவர்; கலைமகளின் நாசியை அரிவித்தவர்; நம்பும் அடியவர்களுக்கு உரிமையானவர் அப் பெருமானுக்கு இடமாவது, மாமரங்களிலிருந்து கனிகள் நீண்ட அகழியில் விழ, ஆங்கு வைகும் வாளை மீன்கள் வாய்க்கால் வழியாகப் பூக்கள் திகழும் நீர்ப் பெருக்குடைய பொய்கையில் சாரும் புகலியாகும்

1327 தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையாளொடும்
ஒக்கவேயெம் முரவோன் உறையும் இடமாவது
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்கவாசப் புன்னை பொன்திரள் காட்டும் புகலியே

தெளிவுரை : ஈசனைப் பகைகொண்டு செய்ய முனைந்தது தக்கன் செய்யத் தொடங்கிய வேள்வியாகும் அத்தகைய வேள்வியைத் தகர்த்த ஈசன், உமா தேவியாரோடு பாகம் கொண்டு விளங்கும் வல்லமை உடைய பெருமான் அப்பெருமான் உறையும் இடமாவது, மா, வாழை, பலா என்னும் முக்கனிகளும் செழித்து ஓங்கவும், கொன்றை மற்றும் புன்னை மரங்களின் மலர்கள் பொன் வண்ணத்தில் பொலியவும் மேவும் பகலியாகும்

1328 தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன்
தலையும்தோளும் நெரித்த சதுரர்க்கு இடமாவது
கலையின்மேவும் மனத்தோர் இருப்போர்க்குக் கரப்பிலார்
பொலியும்அந்தண் பொழில் சூழ்ந்து அழகாரும் புகலியே

தெளிவுரை : எத்தன்மையிலும் தோல்வியும் இழப்பும் இன்றி விளங்கிய இராவணனுடைய வலிமை மிகுந்த தேகத்தை நலியுமாறு செய்வித்து, முடிகளையும் தோள்களையும் நெரித்த சதுரனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, வேதம் முதலான கல்வியில் சிறந்து சிவஞானம் கொண்ட நன்மனத்தையுடைய சீலத்தவர்கள், இரந்து வேண்டுபவர்களுக்கு வரையாது வழங்குகின்ற பொழில் சூழ்ந்த அழகுடன் மிளிரும் புகலியாகும்

1329 கீண்டுபுக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல்அன்னமாய்க்
காண்டும்என்றார் கழல்பணிய நின்றார்க்கு இடமாவது
நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற்
பூண்டு மிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியதே

தெளிவுரை : பூமியைக் கிளறும் பன்றியின் வடிவம் தாங்கிய திருமாலும், மேலே உயர்ந்து பறக்கும் அன்னப் பறவையின் வடிவம் தாங்கிய பிரமனும் கண்டு வணங்க வேண்டும் என்று போற்றித் தொழ, பேரழல் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, நீண்ட அலகுகளை உடைய நாரை, தனக்கு இரையாகிய ஆரல் மீன் வார, நிறைந்த சேறு கொண்டுள்ள வயல்களையுடைய அழகு மிளிரும் குளிர்ச்சியுடன் திகழும் புகலியாகும்

1330 தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கண்உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடமாவது
மடுப்படுக்கும் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
அடத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியதே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் துன்பத்தை உய்க்கும் தன்மையால் போற்றித் துதியாத எம்பெருமானாகிய ஈசனுக்கு உரிய இடமாவது, வேதத்தில் வல்ல அந்தணர்களும் தேவர்களும் அடுத்தடுத்து நாடி வந்து மேவும் புகலியாகும்

1331 எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர்
செய்தபத்தும் இவை செப்பவல்லார் சிவலோ கத்தில்
எய்திநல்ல இறையோர்கள் ஏத்த இருப்பார்களே

தெளிவுரை : புலன்களால் கண்டு அடைவதற்கு அரியவனாகிய இறைவன் உறைகின்ற புகலியைப் பொய்ம்மையில்லாத கவுணியர் கோத்திர மரபுடைய ஞானசம்பந்தர், செம்மை நல்கும் புகழ் மேவச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதி உரைக்க வல்லவர்கள், சிவலோகத்தை அடைந்து இமையோர்கள் ஏத்தும் நற்பேறு கொண்டவர்களாய் விளங்குவார்கள்

திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை  மூலமும் தெளிவுரையும் நிறைவுற்றது.

 
மேலும் இரண்டாம் திருமறை »
temple news
1,2,3 திருமுறைகளில் திருஞான சம்பந்தர் 4146 பாடல்கள் பாடியுள்ளார். அதில் இரண்டாம்  திருமறையில் திருஞான ... மேலும்
 
temple news
183. மயிலாப்பூர் (அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை) திருச்சிற்றம்பலம் 502. மட்டிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar