பதிவு செய்த நாள்
26
மே
2016
10:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று, வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த சனிக்கிழமை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம் நேற்று, வெகு விமரிசையாக காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்ட பெருமாள், 4:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியருடன், திருத்தேரில் எழுந்தருளினார். பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 6:30 மணிக்கு நிலையிலிருந்து தேர் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ’வரதராஜா... தேவராஜா’ என, கோஷமிட்டவாறு, தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். வழியெங்கும், மோர், பானகம், உணவு வகைகள் தானமாக வழங்கப்பட்டன. வரதராஜ பெருமாள் தேரில் பவனி வந்த காட்சியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். இதில், காஞ்சிபுரம் மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பிற்காக, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காந்தி சாலை, காமராஜர் சாலை, இந்திராகாந்தி சாலை, ராஜவீதிகள், செங்கழுநீரோடை வீதி போன்ற வீதிகளில் வலம் வந்து, 1:00 மணிக்கு, மீண்டும் தேர், நிலைக்கு வந்து சேர்ந்தது.