பதிவு செய்த நாள்
26
மே
2016
10:05
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். ஓங்கி உயர்ந்த மரங்கள், அடர்ந்த வனங்களுடன் கூடிய மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் நீர் சுனையாக மாறி உள்ளது. வறட்சியை ஏற்படுத்தும் கோடையிலும் சுனையில் நீர் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனையில் நீராடி, முருகனை வழிபடுவதால் தீராத நோய்கள், மனக்கவலைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. தமிழ்புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். காவடி எடுத்தும், பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும் வந்து வேலப்பரை வழிபடுவர். அடுத்தடுத்து வரும் நான்கு வாரங்களிலும் விழா நடைபெறும். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர்.
பல சிறப்புகள் கொண்ட கோயில் இந்து அறநிலையத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இது நுாற்றாண்டைக்கடந்த, பாரம்பரியம் மிக்க கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மிக ரீதியாக கவலை அளிப்பதாக உள்ளது. எனெனில் 12 ஆண்டிற்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆண்டிபட்டியைச்சேர்ந்த ரமணிகணபதி கூறியதாவது: வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து பக்தர்கள் சார்பில் அறநிலையத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான தன்னார்வக்குழு கொண்ட சிலருடன் ஆலோசிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளைச்செய்ய, திருப்பணிக்கமிட்டி அமைக்கப்பட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, கிடப்பில் போய்விட்டது.இக கோயில் பக்தர்கள் சார்பில் அதற்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடரும், என்றார்.