பதிவு செய்த நாள்
26
மே
2016
02:05
ஒருவரிடம் என்னதான் செல்வங்கள் அபரிமிதமாக இருந்தாலும் அதை அனுபவிக்க நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் அவசியம். அதனால் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் ஒருவனுக்குக் கிடைத்துவிட்டால் அதுவே நற்பேறு என்று சொல்லலாம். நலமான உடலையும் நிறைவான ஆயுளையும் இறைவனை வேண்டிப் பெற்று இன்புற்று வாழ எத்தனை எத்தனையோ விரதங்கள் வழிபாடுகள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுள் எளிதானவையும் மிகவும் முக்கியமானவையுமாகக் கூறப்படுபவை பவுர்ணமி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை.
பவுர்ணமி பூஜை: இப்பூஜையை ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். இப்பூஜையை எந்த மாதத்தில் வேண்டுமானாலும் தொடங்கலாம். தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.
பூஜை செய்யும் முறை: சிவனும் பார்வதி சேர்ந்திருக்கும் படத்திற்கு சந்தனம் மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். விக்ரகம் வைத்திருப்பவர்கள் அதனை வணங்கலாம் விக்ரகம் எனில் பாலாபிஷேகம் செய்தும் படம் என்றால் பாலை நிவேதனமாகவும் வைக்கலாம். விக்ரகங்களுக்கு வஸ்திரங்கள் சர்த்தலாம். படம் எனில் ரவிக்கைத் துணியை வெற்றிலை பாக்குடன் ஒரு தட்டில் முன்னால் வைத்து, சாத்துவதுபோல் மனதார வேண்டிக்கொள்ளலாம். பவுர்ணமி தினத்தன்று வீட்டின் ஈசான மூலையில் சிறிது நெல் அல்லது பச்சரிசியைப் பரப்பி, அதன்மேல் படம் அல்லது விக்ரகத்தை வைக்க வேண்டும். குத்துவிளக்கு அல்லது ஐந்துமுக விளக்கினை ஏற்றிவைத்து தூபம் இட்டபின்னர், சக்தி கவசம் காமாட்சி அம்மன் ஆசிரிய விருத்தம் லலிதா நவரத்தின மாலை போன்ற அம்மன் துதிகள் எதையும் சொல்லலாம் சிவன் துதிகளும் சிலவற்றைச் சொல்லலாம். இந்தத் துதிகள் எதுவானாலும் எல்லா மாத பவுர்ணமியிலும் கூறலாம். அதில் எந்த வித்தியாசமும் கிடையாது. பிறகு கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு பிரசாதங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.
பிரசாதங்களை முதலில் தெரிந்தவர்களுக்கு அல்லது ஏழைகளுக்கு வினியோகித்து விட்டு அதன் பின்னர் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்ணலாம். பூஜையைச் செய்பவர்கள் அன்று இரவு பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். மற்றவர்கள் அரிசி சேர்த்த உணவை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் எனவே அதற்கேற்றபடி நிவேதனங்களும் வஸ்திரம் முதலியவையும் மாறும். ஆனால் எல்லா மாதத்திலும் தூப, தீப, நைவேத்யம் என்ற வரிசை மாறாது. பூஜையின்போது குடும்பத்தினர் அனைவரும் கொஞ்சம் மலர்களை எடுத்துத் தூவி வழிபாடு செய்யலாம். பிறகு அந்தந்த மாதத்திற்குரிய நிவேதனப்பொருளை படைத்து இறுதியில் மங்கல ஆரத்தி எடுத்துப் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இப்பூஜையை பெண்கள் செய்தால் இறுதியில் கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லி மங்கல ஆரத்தி செய்யலாம்.
ஓம் எனும் ப்ரணவத்தை தனது பெயருக்கு முன்னால் தரித்துக் கொண்டுள்ளவளும் வேதங்களுக்குத் தாயானவளும், சரஸ்வதி வடிவினளுமான சாவித்ரி தேவியே, உன்னை வணங்குகிறேன். கணவனை விட்டுப் பிரியாத தீர்க்க சவுமாங்கல்யத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும். பதிவிரதையும், மிகுந்த பாக்யசாலியும் கணவனுக்கு பிரியமான வார்த்தைகள் பேசுகிறவளும் பக்தர்களை காப்பதையே கடமையாகக் கொண்டவளும் ஆன அம்பிகையே நான் தீர்க்க சுமங்கலியாக வாழ இனிது அருள்புரிவாய் தாயே!
ஆண்கள் செய்தால் என்னுடைய அறிவைத் தூண்டி, என் சிந்தனையிலும் செயலிலும் ஆக்கப்பூர்வமான புத்துணர்வைத்தரும் பேரொளியே உனக்கு நமஸ்காரம் மனதில் உறுதியும், செயலில் நேர்மையும் கொண்டு நானும் உயர்ந்து என்னைச் சார்ந்தோரையும் உயர்த்தும் நற்குணம் என்னை வந்தடைய உதவுவாயாக! என்று வேண்டலாம். மாதாமாதம் பவுர்ணமி அன்று இப்பூஜையை மேற்கொண்டு வந்தால் அழியாத செல்வம், நல்ல புகழ், நீண்ட ஆயுள், நிறைந்த ஆரோக்கியம், ஆகியவற்றை மனம்மகிழும்படி அருள்வாள் மகேஸ்வரி.
திருவிளக்கு பூஜை: அகமோ புறமோ இருள் நீங்கினாலே எல்லாமும் தெளிவாகும். உடல்நலத்திலும்கூட அப்படித்தான் ஓர் இடத்தில் பிரகாசம் நிறைந்திருந்தாலே அங்கே ஆரோக்கியமான சூழல்தான் நிலவும் அதனால்தான் திருவிளக்கு ஏற்றுவதையும் அதனை தீபலட்சுமி என வழிபடுதையும் சொல்லிவைத்தார்கள். நம் முன்னோர் திருவிளக்கை காமாட்சி அன்னையின் அம்சமாகச் சொல்வதும் உண்டு. ஆயுளும் ஆரோக்கியமும் பெறவும் குடும்பம் நிம்மதியாக வாழவும் காலம் காலமாக இப்பூஜை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக பெண்களே மேற்கொள்ளும் இப்பூஜையில் ஆண்களும் கலந்து கொள்ளலாம். இதை ஒருவர் மட்டும் வீட்டில் தனியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள். நண்பர்கள் என இரண்டு மூன்று பேர் சேர்ந்தோ செய்யலாம். அல்லது பலர் இணைந்து கூட்டு பிரார்த்தனை போன்று பொதுவான இடத்திலும் செய்யலாம். எப்படிச் செய்தாலும் நிறைந்த பலனைத்தரும்.
எந்த மாதத்திலும் வளர்பிறையில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் விசேஷ மானவை வளர்பிறை திருதியை நாளில் செய்தல் மிகச் சிறந்தது பித்தளை வெண்கலம், வெள்ளி விளக்குகள் ஏற்றவை, எவர்சில்வர் இரும்பு விளக்குகள் கூடாது. பூஜை செய்யும் விதம்: பூஜை செய்யும் பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தனி குத்துவிளக்குகளிலேயே பூஜை செய்ய வேண்டும். இருவர் ஒரு விளக்கிலோ அல்லது ஒருவரே இரு விளக்கிலோ பூஜை செய்யக் கூடாது. மகாலட்சுமி அல்லது காமாட்சி அம்மனின் படம் அல்லது விக்ரகத்துக்கு வஸ்திரம் சாத்தி பூமாலைகள் அணிவித்து மஞ்சள் சரடு கட்டி அலங்காரம் செய்ய வேண்டும்.
விளக்குக்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். முதலில் பாதத்தில் ஐந்து இடங்களிலும் நடுத்தண்டில் ஒரு இடத்திலும் எண்ணெய் ஊற்றும் பகுதியில் மீண்டும் ஐந்து இடங்களிலும் மேற்பகுதியில் மூன்று இடங்களிலும் பொட்டு வைக்க வேண்டும். நல்ல நேரம் பார்த்து ஐந்து முகங்களையும் ஏற்றிக்கொள்ளவேண்டும். பூஜை முடியும் வரை அவசியம் விளக்கு எரிய வேண்டும். என்பதால் தேவையான எண்ணெயை பக்கத்திலேயே வைத்துக் கொள்வது நல்லது. கூட்டாக செய்தால் அனைவரும் ஒரே நேரத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். திருவிளக்கு துதிகளைச் சொல்லி அர்ச்சனை செய்யும் போது பூவையோ, குங்குமத்தையோ வெறுமே விளக்கின் பாதத்தில் அப்படியே போடக்கூடாது. மேல்பகுதி, நடுப்பகுதியில் பூவைக் காட்டிவிட்டு இறுதியாகப் பாதத்தில் அதாவது விளக்கின் கீழ் அந்தப் பூவைப் போடுவது அவசியம். அதன் பின்னர் திருவிளக்கை மகாலட்சுமியாக பாவித்து திருமகள் துதிகள் காமாட்சியாக பாவித்து காமாட்சி அம்மன் ஆசிரிய விருத்தம் போன்ற துதிகளைச் சொல்லலாம்.
பிறகு நோய்களைத் தீர்க்கும் சீதளா தேவியை மனதார நினைத்து சீதளாதேவியே நமஸ்காரம் உன்னைச் சரணடைந்தோரின் உடல் உபாதைகளும் சரும நோய்களும், கொப்புளங்களும் அவற்றால் ஏற்படும் பயமும் வேதனையும் தீர்க்கும் தாயே, உன்னை வணங்குகின்றேன். எனக்கு எல்லா நோய்த்துயரங்களையும் பயத்தையும் நீக்கி அருள் புரிவாய் என வேண்டுங்கள். பின்னர் மங்கல ஆரத்தி காட்டியபடியே அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சித்து அருள் புரிவாய் தீபஜோதி தாயே! எனத் துதியுங்கள். அவரவரால் இயன்ற சுண்டல், பால், பாயசம் சாத வகைகள் என நிவேதனம் செய்வது அவசியம். சிறிது கல்கண்டை பாலில் போட்டு நிவேதித்தாலும் போதும் நிவேதனம் செய்த பின்னர், வழிபட்ட விளக்கை சிறிது வடக்குப் பக்கமாக நகர்த்திவிட்டு அதன் பின்னர் குளிர்வித்தல் வேண்டும். பூஜித்த அன்றே திருவிளக்கை சுத்தம் செய்தல்கூடாது. திருவிளக்கு பூஜையை முறைப்படி செய்தால் சகல சவுபாக்கியங்களும் பெற்று, நோய் நொடியின்றி நிம்மதியான நிறைந்த வாழ்வு வாழலாம். எளிமையான பூஜைகளைச் செய்யுங்கள் ஆரோக்யமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ தெய்வங்கள் நிச்சயம் ஆசிவழங்குவார்கள்.