Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம் மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » மூன்றாம் திருமறை
மூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 செப்
2011
05:09

1,2,3 திருமுறைகளில் திருஞான சம்பந்தர் 4146 பாடல்கள் பாடியுள்ளார். அதில் மூன்றாம்  திருமறையில் திருஞான சம்பந்தர் பாடிய  1346 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

259. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1. ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாய்இடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறை யோடுபல் கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாய் அ ருளாய் சுருங்கஎம தொல்வினையே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பிரணவ புட்பம் என்று சொல்லப்படுகின்ற கொன்றை மலரை விரும்பி அணிந்துள்ள பெருமானே ! நன்மணம் விளங்கும் நெய்யும் பாலும் தயிரும் அபிடேகமாக ஏற்று மகிழ்ந்து விளங்குகின்ற நாதனே ! தில்லைவாழ் அந்தணர் என்னும் சிறப்புப் பொருந்திய அந்தணர்களின் உடனாகிப் பிரியாத நிலையில் திகழும் ஈசனே ! சிற்றம் பலத்தில் மேவும் அம்பலக் கூத்தனே ! வேதங்கள் முதலான, கீதங்களை நவின்றருளிய ஈசனே ! கங்கை தரித்தமையால் பனித்துக் குளிர்ந்து விளங்கும் சடை முடியின்கண், வெண் திங்களைச் சூடிய பரமனே ! எமது தொல்வினையாகிய சஞ்சித, பிராரத்த கன்மத்தை நீக்கி அருள்வீராக.

2. கொட்டமேகம ழும்குழ லாளொடு
கூடினாய்எரு தேறினாய்நுதற்
பட்டமே புனைவாய் இசைபாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறை யோர்தில்லை
நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னைகொலோ

தெளிவுரை : நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியுடன் இணைந்து, இடபவாகனத்தில் வீற்றிருக்கும் நாதனே ! நெற்றியின்கண் வீரப்பட்டம் புனைந்து, பூதகணங்கள் இசை பாட, நடம் புரியும் நாயகனே ! வேத விற்பன்னராய் விளங்குகின்ற தில்லை வாழ் அந்தணர்கள், பரிவில்லாது மேவும் திருச்சிற்றம்பலத்தில் (விரும்பி) வீற்றிருப்பவனே ! இவற்றினைப் பொருந்தியது தான் எனக்கொல் !

3. நீலத்தார்கரிய மிடற்றார் நல்ல
நெற்றிமேல்உற்ற கண்ணினார் பற்று
சூலத்தார் சுடலைப்பொடி நீறணி வார்சடையார்
சீலத்தார்தொழுது ஏத்துசிற்றம் பலம்
சேர்தலால்கழற் சேவடி கைதொழக்
கோலத்தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே.

தெளிவுரை : ஈசன், நீல வண்ணம் பொருந்திய கரிய கண்டத்தையுடையவர்; அழகிய நெற்றியின் மீது ஒரு கண்ணுடையவர்; சூலப் படையைக் கரத்தில் ஏந்தி விளங்குபவர்; சுடலையின் சாம்பலைத் திருமேனியில் குழையப் பூசியவர்; நீண்ட சடைமுடியுடையவர்; அப்பெருமான், ஆசார ஒழுக்க நெறியால் திகழும் அந்தணர்கள் தொழுது போற்றும் சிற்றம்பலத்தில் விளங்குபவர்; அனைவராலும் ஏத்தி வழிபடும் அத் திருக்கோலத்தையுடையவர்; அவர் எமக்கு அருள்புரிவாராக !

4. கொம்பலைத்தழகு எய்திய நுண்ணிடைக்
கோலவாள்மதி போலமுகத்திரண்டு
அம்பு அலைத்தண்ணாள் முலைமேவிய வார்சடையான்
கம்பலைத்துஎழு காமுறு காளையர்
காதலால் கழற் சேவடிகைதொழ
அம்பலத்துறைவான் அடியார்க்கு அடையா வினையே.

தெளிவுரை : பூங்கொம்பு போன்ற நுண்ணிய இடையுடைய உமாதேவியைப் பாகம் கொண்டு மேவும், சடைமுடியுடைய ஈசனின் அரநாமத்தை, ஆரவரித்துக் காளை போன்ற மிடுக்குடைய தில்லை வாழ் அந்தணர்கள் ஓதுவார்கள். பக்தியுடன் அப்பெருமானை கைதொழும் அடியவர்களுக்கு வினையானது பற்றி நிற்காது.

5. தொல்லையார்அமு துண்ணநஞ் சுண்டதோர்
தூமணி மிடறா பகுவாய தோர்
பல்லையார் தலையிற் பலியேற்றுழல் பண்டரங்கா
தில்லையார்தொழுது ஏத்து சிற்றம்பலம்
சேர்தலால்கழற் சேவடிகைதொழ
இல்லையாம்வினை தான்எரியம் மதில் எய்தவனே.

தெளிவுரை : பண்டைக் காலத்தில் தேவர்கள், அமுது உண்ணும் பொருட்டுத் தானே நஞ்சினை உட்கொண்டு, நீலகண்டனாகத் திகழும் பெருமானே ! பிரம கபாலத்தை ஏந்திப் பலி ஏற்றுப் பாண்டரங்கக் கூத்து ஆடிய நாதனே ! அசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசனே ! தில்லை வாழ் அந்தணர்கள் தொழுது ஏத்துகின்ற சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் தேவரீரே ! உமது கழலிணையைத் தொழுது போற்ற, வினை யாவும் நீங்கும்.

6. ஆகந்தோய்அணி கொன்றை யாய்அனல்
அங்கையாய்அம ரர்க்கம ராவுமை
பாகந்தோய் பகவா பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய்பொழில் மல்கு சிற்றம்பலம்
மன்னினாய்மழு வாளினாய் அழல்
நாகந்தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே.

தெளிவுரை : திருமேனியில் அழகிய கொன்றை மாலை திகழ, திருக்கரத்தில் நெருப்பு ஏந்திய தேவாதி தேவனே ! உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் பகவானே ! கபாலம் ஏந்திப் பலியோற்று, வானளாவிய பொழில் மல்கும் தில்லைச் சிற்றம்பலத்தில் விளங்கும் நாதனே ! மழுப் படை உடையவனாய், நாகத்தை அரையில் கட்டி மேவும் ஈசனே ! அடியவர்களுக்கு வினையானது பற்றாதவாறு அருள்பாலிக்கும் இறைவர், நீவிரே ஆவர்.

7. சாதியார்பளிங் கின்னொடு வெள்ளிய
சங்கவார்குழை யாய்திக ழப்படும்
வேதியா விகிர்தா விழவாரணி தில்லை தன்னுள்
ஆதியாய்க்கிடம் ஆயசிற் றம்பலம்
அங்கையால்தொழ வல்லடி யார்களை
வாதியாதகலும் நலியாமலி தீவினையே.

தெளிவுரை : உயர்ந்த வகையான பளிங்குபோன்று, வெண்மையான சங்கினால் ஆகிய குழையைக் காதல் அணிந்துள்ள ஈசனே ! பெருமை திகழும் நான்கு வேதங்களும் ஆகிய விகிர்தனே ! விழாக்கள் மலிந்த தில்லையில், ஆதியாக விளங்கிச் சிற்றம்பலத்தில் மேவும் நாதனே ! தேவரீரைத் தமது கரங்களால் தொழ வல்லவர்களுக்குத் தீவினையானது, துன்புறுத்தாது அகன்று ஏகும்.

8. வேயினார்பணைத் தோளியொ டாடலை
வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமுது
ஆயினாய்இடு காட்டெரி யாடல் அமர்ந்தவனே
தீயினார்கணை யால் புரம்மூன் றெய்த
செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய்கழலே தொழுது எய்துதும் மேலுலகே.

தெளிவுரை : மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியுடன் சேர்ந்து நடனம் ஆடுதலை விரும்பிய விகிர்தனே ! மன்னுயிர்களுக்குப் பேரின்பம் நல்கும் நல்லமுது ஆகிய பரமனே ! மயானத்தில் நெருப்பினை ஏந்தி நின்று ஆடும் இறைவனே ! முப்புரங்களை அக்கினிக் கணை தொடுத்து எரியுமாறு செய்த செம்மையுடையவனே ! சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் நடராசனே ! தேவரீரின் திருக்கழலைத் தொழுது வணங்க, மேலான உலகினில் வாழும் பேறு உண்டாகும்.

9. தாரினார்விரி கொன்றையாய்மதி
தாங்குநீள்சடை யாய்தலைவாநல்ல
தேரினார்மறுகின் திருவாரணி தில்லைதன்னுள்
சீரினால்வழிபாடு ஒழியாத தோர்
செம்மையால்அழ காய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய் உனசீரடி யேத்துதுமே.

தெளிவுரை : கொன்றை மலர் மாலை தரித்து மேவும் பெருமானே ! நீண்ட சடைமுடியில் சந்திரனைத் தரித்த நாதனே ! எம் தலைவனே ! அழகு பொலியும் தேரோடும் வீதிகளையுடைய செல்வத் தில்லையுள், சாத்திரத்தில் விதித்தவாறு வழிபாடு செய்யப்பெறும் சிற்றம்பலத்தில் அழகு மிளிரத் திகழும் பரமனே ! தேவரீரின் சீர் மிக்க திருவடியைப் பரவி ஏத்துகின்றோம்.

10. வெற்றரை யுழல்வார் துவர் ஆடைய
வேடத்தாரவர்கள் உரைகொள்ளன்மின்
மற்றவர் உலகின் வைலம்மவை மாற்றகில்லார்
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம்
காதலால் கழற் சேவடிகை தொழ
உற்றவர் உலகின் உறுதிகொள வல்லவரே.

தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் சொல்லும் உரைகளை ஒரு பொருட்டாகக் கொள்ள வேண்டாம். மன்னுயிர்களுக்கு, விதியின் வசத்தால் நேரும் துன்பங்களை அவர்களால் தீர்க்க இயலாது. வேதங்களை நன்கு கற்று தேர்ந்து, அவற்றின் மாண்பினை நன்கு உணர்ந்த அந்தணர்கள் தொழுதேத்தும் சிற்றம் பலத்தின் மேன்மையினை அறிந்து, ஆங்கு, ஆடல் புரியும் நடராசப் பெருமானுடைய சேவடியைத் தொழுது போற்றும் அடியவர்கள், மனிதப் பிறவியின் பயனை அடைந்தவர்கள் ஆவார்கள்.

11. நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
நான்மறைவல்ல ஞானசம்பந்தன்
ஊறும் இன்தமிழால் உயர்ந்தார்உறை தில்லைதன்னுள்
ஏறுதொல்புகழ் ஏந்துசிற்றம் பலத்து
ஈசனை இசையாற் சொன்ன பத்திவை
கூறு மாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவரே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பொழில்கள் திகழும் சீகாழி நகரில் மேவும் நான்கு மறைகளிலும் தேர்ந்த ஞானசம்பந்தன். அன்பினால் திளைக்கச் செய்யும் இனிய தமிழ்ப் பாடல்களால், உயர்ந்த பெருமக்களாகிய வேதங்களில் வல்ல அந்தணர்கள் விளங்குகின்ற தில்லையில், தொன்மையாய் விளங்கும் புகழ் இசையுடன் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், உயர்ந்து மேவும் பெருமக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

260. திருப்பூந்தராய் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

12. பந்துசேர்விரலாள் பவளத்துவர்
வாயினாள்பனி மாமதிபோல் முகத்து
அந்தமில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையும்
நிறைந்துவலம் செய்து மாமலர்
புந்திசெய் திறைஞ்சிப் பொழில்பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : பவளம் போன்ற வாயும், முழுமதி போன்ற திருமுகமும் பந்து அணையும் விரலும் திகழ, எல்லையற்ற புகழுடைய மலைமங்கையாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் ஆதிப் பிரானாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம், தேவர்கள் வலம் வந்து மலர் தூவி ஏத்தி இறைஞ்சும் பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவோமாக.

13. காவியங்கருங் கண்ணினான்கனித்
தொண்டைவாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவியம் பெடை அன்னநடைச்சுரி மென்குழலாள்
தேவியுந்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றிரண் டொரு மூன்றொடு சேர்பதி
பூவிலந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : நீலோற்பவ மலர்போன்ற கண்களும், கனிச் சொல் வழங்கியருளும் திருவாயும், ஒளிதிகழ் முத்தன்ன பற்களும், தூய வெண்மையான அன்னப் பறவை போன்ற நடையும், சுருண்ட மென்மையான கூந்தலும் உடைய, உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டு, பூந்தராய் என்னும் பதியில் ஈசன் வீற்றிருக்கின்றார். தாமரை மலரில் விளங்கும் பிரமனை ஒத்த வேத விற்பன்னர்களும், ஆசார சீலர்களும் திகழும் அத் திருத்தலத்தைப் போற்றி வணங்குவோமாக.

14. பையராவரும் அல்குல் மெல்லியல்
பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தையலாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்
செய்யெலாங்கழு நீர்கமலம் மலர்த்
தேறல்ஊறலிற் சேறுல ராதநற்
பொய்யிலா மறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : பாம்பின் படத்தைப் போன்ற அல்குலும், பஞ்சினை ஒத்த மென்மையான பாதமும், நுண்ணிய மென்மையான இடையும் கொண்டு விளங்குகின்ற உமாதேவியை, ஒரு பாகமாகக் கொண்டு மேவும் எமது ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, வயல்களில் திகழும் தாமரை மலர்களிலிருந்து துளிர்க்கும் தேன், ஊறிப் பாயும் சேறு உலராத பாங்கும், அஞ்ஞானத்தின்பாற்படாத மறையோர் விளங்குகின்ற செம்மையும் கொண்டு திகழ்வது, பூந்தராய் என்னும் பதியாகும். அதனைப் போற்றுவோமாக.

15. முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்பு தேன்கொள் குரும்பை மூவாமருந்து
உள்ளியன்ற பைம்பொற் கலசத்தியல் ஒத்தமுலை
வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியன்
மேவினார் பதி வீமருதண்பொழிற்
புள்ளினம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : தாமரை மொட்டு, கோங்கின் அரும்பு, குரும்பை என்று பேசப்படுகின்ற தன்மையில் கருணைத் தேன் சொரியும் மூவா மருந்தாகிய  தனங்களுடன் உமாதேவி விளங்குபவள். திருக்கயிலை அனைய தனது திருமேனியில், அத்தேவியைப் பொருந்தித் திகழும் ஈசன் விளங்கும் பதியாவது, மலர்கள் பொருந்திய குளிர்ச்சி மிக்க சோலையில், பறவை இனங்கள் அமைதியாகத் துயில் கொள்ளும் பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவோமாக.

16. பண்ணியன்றெழு மென்மொழியாள்பகர்
கோதையேர்திகழ் பைந்தளிர்மேனியோர்
பெண்ணியன்ற மொய்ம்பிற் பெருமாற்கிடம் பெய்வளையார்
கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு
நீலமல்கிய காமருவாவிநற்
புண்ணியர் உறையும்பதி பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : பண்ணில் இசைபோன்று இனிய மொழி பகரும் தன்மையும், பசுந்தளிர்போன்ற வண்ணத் திருமேனியும் தாங்கித் திகழ்கின்ற உமாதேவியாரை, ஒரு பாகமாகக் கொண்டுள்ள வலிமை மிக்க பெருமானாகிய ஈசனுக்கு உரிய இடமாவது, வளையலை அணிந்த மகளிர் தமது அழகிய நீலோற்பவ மலர் போன்ற கண்களால், விரும்பி நோக்கப் பெறும் புண்ணியர் உறையும் பூந்தராய் என்பதாகும். அதனைப் போற்றுவோமாக.

17. வாணிலாமதி போல் நுதலாள்மட
மாழையொண்கணாள் வண்தரளந்நகை
பாணிலாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும்
சேணிலாத் திகழ் செஞ்சடைஎம் மண்ணல்
சேர்வது சிகரப் பெருங்கோயில்சூழ்
போணிலா நுழையும் பொழிற்பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : உமாதேவியார், ஒளிமிக்க திங்களைப் போன்ற நுதலும், மான் விழியும், முத்துப் பற்களும், பண்ணின் இசை போன்ற இனிய மொழியும் உடையவர். அத்தகைய பிராட்டியை, ஒளி மிக்க நிலவு திகழும் செஞ்சடையுடைய அண்ணலாகிய ஈசன், உடனாகக் கொண்டு விளங்குகின்ற இடமாவது, சிகரம் போன்ற உயர்ந்த பெருங்கோயிலைச் சூழ்ந்து, திங்களின் தண்ணொளி பரவும் பொழில் கொண்ட பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவோமாக.

18. காருலாவிய வார்குழலாள்கயற்
கண்ணினாள் புயற் காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னியல்மன்னி
நிகரும்நாம முந்நான்குநிகழ்பதி
பேருலாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் பேற்றதுமே.

தெளிவுரை : மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலும், கயல் போன்ற கண்களும், மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற இடையும் கொண்டு விளங்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடைய கங்கை தரித்த திருமுடியுடைய ஈசன், பெருமையுடன் விளங்கும் பதியாவது, பன்னிரண்டு பெயர்களையுடையதாய், மதில்கள் சூழ்ந்து திகழும் பொழில் விளங்கும் பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவோமாக.

19. காசைசேர்குழலாள் கயல்ஏர்தடங்
கண்ணிகாம்பன தோள் கதிர்மென்முலைத்
தேசுசேர்மலை மாதுஅமருந்திரு மார்பகலத்து
ஈசன்மேவும் இருங்கயிலை யெடுத்தானை
அன்றடர்த்தான் இணைச்சேவடி
பூசைசெய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : காயாம் பூ போன்ற கரிய கூந்தலும், கயற்கண்ணும், மூங்கிலையன்ன தோளும் உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஈசன், கயிலை மலையை எடுத்த இராவணனை அடர்த்திய பெருமான். அவ் இறைவனுடைய திருவடிக் கமலத்தைப் பூசிப்பவர்கள் விளங்குகின்ற பூந்தராய் என்னும் பதியினைப் போற்றுவோமாக.

20. கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்
கொவ்வை வாய்க்கொடி யேரிடையாள் உமை
பங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனும் மாமலரோனும்
மயங்க நீண்டவர் வான்மிசைவந்தெழு
பொங்குநீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : தேன் மணம் கமழும் கூந்தலும், ஒளி மிக்க வெண்பற்களும், கொடி போன்ற இடையும் கொண்டு விளங்கும் உமாதேவியை, ஒரு கூறாகக் கொண்டு விளங்கும் ஈசன், படரும் தீப்பிழம்பாகித் திருமாலும் பிரமனும் காண முடியாதவாறு திகைத்து நிற்க ஓங்கியவர். அப்பெருமான் வீற்றிருக்கும் நகரானது, மகாப் பிரளய காலத்திலும் அழியாது மிதந்து விளங்குகின்ற பூந்தராய். அதனைப் போற்றுவோமாக.

21. கலவமாமயி லார்இயலாள்கரும்பு
அன்னமென்மொழி யாள்கதிர் வாள்நுதற்
குலவுபூங்குழலாள் உமைகூறனை வேறுரையால்
அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள்
ஆக்கினான்றனை நண்ணலும் நல்கும்நற்
புலவர்தாம் புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : மயில் போன்ற சாயலும், கரும்பு போன்ற இனிமையான மொழியும் ஒளி மிக்க நுதலும் கொண்டு திகழும் மென்மையான பூங் கூந்தலுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ள ஈசனைப் பழித்துக் கூறும் தேரர், சமணர் ஆகியோர் முன்வினைப் பயனால் அவ்வாறு ஆயினர். வினையின் வழியால் அவ்வாறு ஆக்கிய பெருமான் தன்னை நண்ணி வணங்குபவர்களுக்கு அருள் நல்குபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் அறிஞர்கள் மேவும் பெருமைமிக்க, அப் பதியாகிய பூந்தராய் என்னும் திருத்தலத்தைப் போற்றுவீராக !

22. தேம்பலநுண்ணிடை யாள்செழுஞ்சேலன
கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன்அமர்
பூம்பொழில் திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும் என்று
ஓம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்டு
ஆம்படிஇவை ஏத்தவல்லார்க்கு அடையாவினையே.

தெளிவுரை : மெலிந்த நுண்மையான இடையும், சேல் போன்ற கண்களும் உடைய உமாதேவியுடன் விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் இடமானது, தேன் மணம் கமழும் பூம்பொழில் திகழும் பொற்பதியாகிய பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவீராக என்று, ஓம்புதல் செய்யும் தன்மையினால் நான்கு மறைகளிலும் வல்ல முத்தமிழ் வித்தகனாகிய ஞானசம்பந்தன் உரைத்த தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை வேண்டுதல் கொண்டு ஓதவல்லவர்கள், வினை நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

261. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

23. இயலிசை எனும்பொரு ளின்திறமாம்
புயல்அன மிடறுடைப் புண்ணியனே
கயல்அன வரிநெடுங் கண்ணியொடும்
அயல்உல கடிதொழ அமர்ந்தவனே
கலன்ஆவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலன்நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே

தெளிவுரை : இயல், இசை ஆகிய பொருளின் உறுதி பயக்கும் நிலையாகி, மேகம் போன்ற மிடற்றினை உடைய புண்ணியனே ! கயல் போன்ற நெடுங்கண்ணுடைய உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவனே ! பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி நறுமணம் கமழும் பொழில் விளங்கும் புகலியில் மேவி, இம் மண்ணுலகானது குளிர்ச்சியுடன் விளங்குமாறு சந்திரனுக்கு அருள் நல்கியும் வளர்ச்சியுற்று நிறையுமாறும் நீவிர் அருள் புரிந்தீர்.

24. நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
இலையுறு மலர்கள்கொண்டு ஏத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்தேரல்
அலைவரு மதகரி உரித்தவனே
இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடிஇணையே.

தெளிவுரை : பெருமானே ! தேகத்தைத் தாங்கி நிலை கொள்ளும் இப்பிறவியானது, இடரின்கண் நிலைத்து அழுந்தாதவாறு, மலர் தூவி உமது திருவடியை ஏத்துதல் புரிவோம். உமாதேவி வெருவி நிற்குமாறு, ஆரவாரத்துடன் யானையின் வலிமை மிக்க தோலை உரித்த செம்மையுடைய நாதனே ! தேவர்கள் நின் திருவடியைத் தொழ, எழில் மிக்க புகலியில் உமாதேவியை உடனாகக் கொண்டு நீவிர் விளங்கி மேவினீர்.

25. பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையேஅடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருள்எமக்கே.

தெளிவுரை : வெண்பிறையைச் சடை முடியில் சூடிய நின்மலனே  ! நீவிர் அரிய வேதங்களைத் தோற்றி அருளினீர் ! தாருகாவனத்தில் கூத்து உகந்து ஆடினீர் ! மார்க்கண்டேயரின் உயிரைக் கவரப் போந்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்து மாயச் செய்தீர் ! புகலி நகரின்கண் மேவி வீற்றிருந்து அடியவர்கள் நின்னையே தொழுமாறு விளங்குபவர் ஆயினீர். இந்நிலையில், எமக்குத் தவநெறியினை அருள்வீராக.

26. நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே.

தெளிவுரை : ஒளி திகழும் மழுப்படையினையுடைய பெருமானே ! யானையின் தோலை நெருப்புப் போன்ற திருமேனியில் போர்த்தி விளங்கும் நாதனே ! திருக்கழலில், சிலம்பு ஒலிக்க மழுவின் ஓசை முழுங்க அரிய நடம்புரியும் பரமனே ! தேவரீர், திருமுடியின் மீது சந்திரனைச் சூடி, அழகு திகழும் பொழிலுடைய புகலியின்கண் அடியவர்கள் தொழுது ஏத்துமாறு அருள் பாலிக்க வீற்றிருப்பவர் ஆயினீர்.

27. கருமையின் ஒளிர்கடல் நஞ்சம் உண்ட
உரிமையின் உலகுயிர் அளித்த நின்றன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பரி தாயவனே
அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே

தெளிவுரை : கரிய வடிவத்துடன் பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அருந்தி, முழுமுதற் பொருள் என்னும் உரிமை விளங்குமாறு உலகில் உள்ள உயிர்களைப் பாதுகாத்தருளிய தேவரீரின் பெருமையை மண்ணுலகத்தவர் பேசித் தொழுதல் அன்றி வேறுயாது புரிய இயலும் ! அரவம் அன்ன இடையுடைய உமாதேவியாரோடு, கடல் அலைகள் விளங்கும் புகலியின் பெருமை விளங்குமாறு பூவுலகில் பொலிந்து வீற்றிருப்பவர் நீவிரே ஆவர்.

28. அடையரி மாவொடு வேங்கையின்தோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசளித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
விகிர்தாபரமா நின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.

தெளிவுரை : நனி அடைந்து மேவிப் பொலியும் அரியின் தோலும், யானையின் தோலொடு புலியின் தோலும் அரையில் பொருந்தப் புனைந்து விளங்கும் நாதனே ! மூன்று மதில்களையுடைய உலோகக் கோட்டைகளைப் படையாகக் கொண்ட அவுணர்களை, அக்கோட்டைகளுடன் எரித்து சாம்பலாகுமாறு அழித்து இடபக்கொடியுடன் திகழும் வேத நாயகனே ! விகிர்தனே ! பரமனே ! தேவர்கள் எல்லாம் தொழுமாறு உமாதேவியுடன் புகலி நகரின்கண் அடியவர்களுக்கு நீவிர் அருள்புரிபவர் ஆயினீர்.

29. அடியவர் தொழுதெழ அமரர் ஏத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகல்அல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
புண்ணியர் புனிதா புகர்ஏற்றினை புகலிந்நகர்
நண்ணியனாய் கழல்ஏத்திட நண்ணகிலா வினையே.

தெளிவுரை : அடியவர்கள் தொழுது போற்றவும், தேவர்கள் ஏத்தி நிற்கவும் மேவும் ஈசனே ! துன்பம் விளைவிக்கும் கொடிய வினையைத் தீர்ப்பவனே ! தூமொழி நவிலும் உமாதேவியைத் திருமார்பில் பொருந்துமாறு வைத்த புண்ணியனே ! புனிதனே ! ஒளிமிக்க அழகிய இடபத்தை உடையவனே ! புகலி நகரில் வீற்றிருக்கும் பெருமானே ! தேவரீருடைய திருவடியைப் போற்றிட, வினைத் துயரானது மன்னுயிரைச் சாராது அருள் புரிபவர் நீவிரே ஆயினீர்.

30. இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்தகையே
அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர்ந்து இருந்தனை புகலியுளே.

தெளிவுரை : எம் பெருமானே ! இரவும் பகலும் உன்னைப் பரவிப் போற்றுகின்றேன். நினக்கு வழி வழியாக வந்த அடியவர் மரபில் வந்து, யான் அவ்வழியில் மேவும் அடிமை பூண்டவன். குரா மலரும் நறுங்கொன்றை மலரும் அணிந்த சடைமுடியில் அரவத்தைத் தரித்த ஆண்டகையே ! இராவணனுடைய தோளை நெரித்து, அன்னம் போன்ற மென்மையான நடையழகு பொருந்திய உமாதேவியாரை உடனாகக் கொண்டு, புகலி நகருள் வீற்றிருப்பவர் நீவிர்.

31. உருகிட உவகைதந்து உடலினுள்ளால்
பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனும் பூவுளானும்
பெருகிடும் அருள்எனப் பிறங்கெரியாய்
உயர்ந்தாய்இனி நீஎனை ஒண்மலரடி யிணைக்கீழ்
வயந்தாங் குறநல் கிடுமதிற் புகலிமனே.

தெளிவுரை : உள்ளத்தால் உருகிப் போற்றி வணங்கும் அடியவர்பால், அமுதாகச் சுரந்து பேரின்பம் புரிந்தருளும் பண்புடையவன், ஈசன். அப்பெருமான், திருமாலும், பிரமனும் தேடிக் காணும் செயலை முனைந்த ஞான்று பெருகித் தோன்றும் தீப்பிழம்பாய் உயர்ந்து ஓங்கியவன். புகலியின் நாதனாய் விளங்கும் அப்பெருமான், என்னை ஒளி மிக்க மலரடியின் கீழ் நனி விளங்குமாறு விரும்பி அருள் புரிவாராக.

32. கையினில் உண்பவர் கணிகை நோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள்எனாத
மெய்யவர் அடிதொழ விரும்பினனே
வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.

தெளிவுரை : சாத்திர நெறியினின்று விலகிப் பொய்யுரைகளைப் பொருளாகக் கருதி வாழும் நெறியுடையவர்தம் உரைகளைத் கொள்ளாது, மெய்ம்மையுடைய சிவஞானிகளும், அடியவர்களும் தொழுது போற்ற, விரும்பி அருள் புரிபவனாகிய ஈசன், இடப வாகனத்தைக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், தேவர்கள் தொழுது போற்றும் புகலியின் மேவும் பெருங் கோயிலுள் அருள் திகழ வீற்றிருக்க ஏத்துமின்.

33. புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவர் அடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
நடலையவை இன்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.

தெளிவுரை : நல்வினைப் பயன் காரணமாகப் பெறும் புண்ணிய விளக்கத்தினால் உயர்ந்து மேவும் பெருமக்கள் தொழுகின்ற புகலி நகரில், தேவர்கள் தொழுகின்ற சிறப்புடன் திகழும் ஈசனை, நண்ணிய ஞானசம்பந்தன் திருவாய் மலர உரைத்த அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதி உரைக்க விளங்கி  மறுமையில் சிவலோகத்தை நண்ணுவார்கள். மற்றும் இப்பிறவியில் இடர் ஏதும் அற்றவராய்த் தவநெறியை எய்துவார்கள்.

திருச்சிற்றம்பலம்

262. திருவாவடுதுறை (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

34. இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றுஎமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : பாற்கடலின்கண், அமுதத்தை கடைந்தெடுக்கும்போது தோன்றிய நஞ்சினை மிடற்றினில் அடக்கி வைத்துக் காத்தருளிய வேத நாயகனே ! முனைந்து ஆற்றும் செயலில், இடையூறு தோன்றித் துன்பம் நேர்ந்தாலும்; மனம் தடுமாற்றம் கொண்டு அத்தகைய செயலை மேவுதற்குத் தளர்ச்சியுற்றாலும்; எனது தீவினைப் பயன் காரணமாக, இன்னலும் பிணியும் தொடர்ந்து வந்தாலும் நான், உன்னுடைய திருக்கழலைக் தொழுது வணங்குபவன். அவ்வாறு உள்ள தன்மையில், எம்மை ஆட்கொள்ளும் தகைமை இதுவோ ! எமக்குத் தேவைப்படுகின்ற பொருளைத் தந்து அருள்புரியவில்லையானால், அது உமது திருவருளுக்கு அழகு ஆகுமா ! ஆவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே ! அருள்புரிவீராக.

35. வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : இம்மையில், மண்ணுலகத்தின் நன்மைகளை நுகர்ந்து மகிழ்கின்ற காலங்களிலும், மண்ணுலகத்திலிருந்து விடுபட்டுச் சாயும் தன்மையால் மடியும் காலத்திலும், தீவினைப் பயனால் வருந்தித் துன்புறும் காலத்திலும், மனம் போன போக்கில் சென்று, நற்பாதையிலிருந்து விலகிப் பாவக்குழியில் வீழ்கின்ற காலத்திலும், ஒளிமிக்க செஞ்சடையில் கங்கை திகழப் பிறைமதியைத் தரித்து விளங்கும் புண்ணியனே ! நான் உன்னுடைய திருவடியைப் பற்றி இருப்பவனே அன்றி, நின்னை மறப்பவன் அல்லன். ஆவடுதுறையுள் மேவும் அரனே ! எம்மை ஆட்கொண்டு விளங்கும் நீவிர் அருள்புரியும் பாங்கு தான் இதுவோ ! எமக்குத் தந்தருள்வது ஒன்று இல்லையெனில், அதுவோ உனது இனிய அருள் தன்மைக்குப் பொருத்தம் உடையது ! உனது இனிய அருளின் தன்மையானது அடியவர்களுக்கு வேண்டியவற்றை நன்கு ஈவது அல்லவா !

36. நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றுஎமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : கங்கையும், மணம் கமழும் கொன்றை மலரும் தரித்துக் கனன்று எரியும் நெருப்பைக் கையில் கொண்டு விளங்கும் ஈசனே ! ஆவடுதுறையின் அரனே ! நனவின்கண்ணும், கனவின்கண்ணும் உன்னுடைய நம்பிக்கைக்கு உகந்த திருநாமத்தை மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந்திலேன். எனக்குத் தாய்போன்று அன்பு செலுத்தும் பெருமையுடைய ஈசனே ! நமக்கு வேண்டிய பொருளைத் தராமல் இருப்பது உனது இனிய அருள் தன்மைக்குப் பொருந்துமாறு ஆகாது.

37. தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணைஒன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : மேரு மலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகத் தொடுத்துத் தீயனவாகிய முப்புரங்களை எரியுமாறு செய்த பரமனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! தேகத்தில் தோன்றும் பிணிவகையான தும்மல் போன்ற துயர் வந்துற்ற காலத்திலும், அவற்றின் உபாதைகளால் நலிவுற்ற போதும், சித்தம் கலங்காமல், உனது திருநாமத்தை எனது நாவானது நவிலும் தன்மையுடையது. அங்ஙனம் இருக்க எனக்கு அருள் புரியாது வாளா இருத்தல், உனது இனிய அருள் தன்மையின் மேன்மைக்குச் சிறப்பு ஆகுமோ ! எம்மை ஆட்கொள்ளும் பரிசு இத்தன்மையதோ !

38. கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
கைமயணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவா உனது இன்னருள் ஆவடு துறை அரனே.

தெளிவுரை : கொய்து அணியப் பெறும் நறுமணம் கமழும் மலர்களை, மகிழ்ந்து சடைமுடியில் சூடிய நீல கண்டத்தையுடைய மறையவனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! கையில் உள்ள பொருள்கள் யாவும் இழந்து நைந்த காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருளைப் போன்று குறைவுற்ற போதும், செம்மை விளங்கும் உமது திருவடியை அன்றி யான் சிந்தனை செய்ததில்லை. அங்ஙனமிருக்க, எமக்கு அருள்புரிந்து ஈவது ஒன்று இல்லை என்றால், அதுவோ உமது இனிய அருளுக்கு அழகாவது ! எம்மை ஆண்டு அருள் புரிவதும் இத்தன்மைத்தோ !

39. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் அடியலால் ஏத்தாதுஎன்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : ஐந்து தலைகளையுடைய அரவத்தை அரையில் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் அணிந்து மேவும் சங்கரனே ! ஆவடுதுறையில் திகழும் அரனே ! கொடிய துன்பத்தால் அச்சம் கொண்டுற்றாலும், எம் தந்தையே ! உன் திருப்பெயரை அன்றி என்னுடைய நாவானது வேறு ஒன்றைச் சொல்லாது. அங்ஙனம் இருக்க, எமக்கு வேண்டியவற்றைத் தந்தருளாத பாங்கு, உனது இனிய அருட்குணத்திற்கு நன்றாகுமோ ! எம்மை ஆட்கொண்டு அருளும் பாங்கும் இதுவோ ! அருள் புரிவீராக.

40. வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாஉன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல்எழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : தனக்கு ஒப்புமையாகத் தன்னையே அன்றிப் பிறரைச் சொல்லுதற்கு இல்லாத சிறப்புக் கொண்ட மன்மதனை, அவனுடைய வடிவமானது அழியுமாறு விழித்து நோக்கி எரித்த ஈசனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! அப்பா ! வெம்மை கலந்து தோன்றித் தாக்குகின்ற கொடிய வினையானது பற்றித் தாக்கினாலும், உன் திருநாமத்தை அன்றி என்னுடைய நாவானது வேறொன்றைச் சொல்லாது. அங்ஙனமிருக்க, எமக்குத் தந்தருள்வது ஒன்றும் இல்லையெனில் உமது இனிய அருட்குணத்திற்கு அதுவோ இயல்பு ! எம்மை ஆட்கொண்டு அருள் புரியும் பெற்றியும் இதுதானோ !

41. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : பெருமையுடைய முடிவேந்தனாகிய இராவணனைக் கயிலை மலையின்கீழ் இருந்து துன்புற்று நலியுமாறு செய்த பெருமானே ! ஆவடுதுறையுள் மேவும் அரனே ! தீவினையின் வயத்தால் பெருந்துன்பமும், தேகத்தின் பிணியும் முன்னுற்று வருத்தினாலும், புகழ் மிக்கதாகவும் நன்மையே வழங்குவதாகவும் உள்ள உமது திருவடியை அல்லாது வேறு எதனையும் நான் சிந்தித்தது இல்லை. அங்ஙனம் இருக்க, எமக்கு எந்த ஒன்றையும் தரவில்லையாயின் அதுவோ உமது இனிய அருட் குணத்திற்கு ஒப்பது ! எம்மை ஆட்கொண்டு அருளும் பாங்கும் இதுவோ !

42. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் அளப்பதற்கு அரிய ஈசனே ! சுவை கொண்டு உணவு கொள்கின்ற நிலையிலும் அதன் கனவுத் தன்மையில் வயப்படாமலும், பசியின் களைப்பில் ஆழ்ந்திருப்பினும், அதன் சோர்வால் மெலியுறாதும், தன்னிலை மறந்து உறங்கும் காலத்திலும் அந்தராத்மாவை வெறுமனே உறங்கச் செய்யாது ஒளிமிக்க உனது திருக்கழலை மறவாதும் எமக்கு ஈந்தருள்வது ஒன்றும் இல்லையேல் அதுவோ உனது இனிய அருட் குணத்திற்கு உரியது ! எம்மை ஆட்கொண்டு அருள்கின்ற வழியும் இதுவோ !

43. பித்தொடு மயங்கியொர் பிணிவரினும்
அத்தாஉன் னடியலால் அரற்றாதுஎன்நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : புத்தரும் சமணரும் புறம்பான உரைகளை நவின்றாலும், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், நின்னை வணங்குகின்ற பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தும் வழங்குகின்ற மாண்புடைய நாதனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! பித்தம் முதலான பிணிகளால் மயங்கும் நிலையுற்றாலும், உன்னுடைய திருநாமத்தை அல்லாது எனது நாவானது பிறவற்றைப் பேசாது. அங்ஙனம் இருக்க, அத்தனே ! எமக்கு ஈந்தருள்வது யாதொன்றும் இல்லையேல், அதுவோ உனது இனிய அருள் குணத்திற்கு அழகாவது ? எம்மை ஆட்கொள்ளும் வழியும் இதுவோ !

44. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை எம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே.

தெளிவுரை : அலைகள் பெருகும் நீர் வளம் பொருந்திய ஆவடுதுறையில் வீற்றிருக்கும் சூலப்படையுடைய எம் ஈசனை, உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தர் மொழிந்த பெருமையுடைய தமிழ் மாலையாகிய  இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், வினை யாவும் நீங்கப் பெற்றவராய், விண்ணவர்தம் மேலான உலகத்தினை நோக்கிச் செல்பவர்கள் ஆவார்கள். கர்ம பூமியாகிய இம்மண்ணுலகில் மீளவும் பிறவியை அடையாது செம்மையுறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

263. திருப்பூந்தராய் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

45. தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன் தானே.

தெளிவுரை : தக்கன் மேற்கொண்ட தீய வேள்வியை, வீரபத்திரர் திருக்கோலம் தாங்கித் தகர்த்த ஈசன், பூந்தராய் மேவிய விமலன் ஆவன். அப்பெருமானுடைய பெருமை தாங்கிய திருவடியை வணங்கிப் போற்ற, மெய்யான கதி வாய்க்கும். அத்தகைய நன்மையைச் செய்பவன் சிவபெருமான்.

46. புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி
மூலம் ஆய முதலவன் தானே.

தெளிவுரை : அந்தணர்கள் கூறும் வேதங்களைக் கேட்டுப் பயின்ற கிள்ளைகள், அவ்வேதங்களால் போற்றும் பெருமையுடைய பூந்தராய் என்னும் பதியின்கண் கங்கை தரித்த விகிர்தனாகிய ஈசன் வீற்றிருக்க, அப்பெருமானுடைய திருவடியைத் தொழுது போற்றும் அடியவர்கள், உலகில் உயர்ந்து விளங்குவார்கள். அத்தகைய தன்மையில் தன்னை நினைத்து வணங்குமாறு செய்பவனும், முதற்பொருளாகவும் மூலப் பொருளாக விளங்குபவனும், ஈசனே ஆவன்.

47. வேந்த ராய்உல காள விருப்புறின்
பூந்த ராய்நகர் மேய வன்பொற்கழல்
நீதி யால்நினைந்து ஏத்தி உள்கிடச்
சாதி யாவினை யான தானே.

தெளிவுரை : அரச பதவியைப் பெற வேண்டும் என்று விருப்பம் உடையீராயின், பூந்தராய் நகரில் மேவும் ஈசனின் பொற்கழலை வேதாகம முறைப்படி வணங்கிப் போற்றித் துதிப்பீராக. அது வினையின் தாக்கத்தால் உண்டாகும் பிறவியைக் கெடுத்து பிறவாமையை நல்கும்.

48. பூசு ரர்தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி இறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே.

தெளிவுரை : பூவுலகின் தேவர் என்று சொல்லப்படும் அந்தணர்கள், வேதங்களை ஓதிப் போற்றும் பூந்தராய் மேவிய ஈசனின் திருவடியை ஏத்தி வணங்க, சிந்தையில் ஏற்படும் கலக்கம் முதலான குறைகள் தீரும். அத்தகைய பேற்றினை நல்குகின்ற இறைவன், சந்திரனைச் சடை முடியில் சூடிய எம் ஈசன் ஆவன்.

49. பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
எந்தை யாயஎம் மீசன் தானே

தெளிவுரை : எலும்பினை மாலையாகத் திருமேனியில் கொண்டு விளங்கும் ஈசன், பூந்தராய் என்னும் பதியில் வீற்றிருப்பவன். அப்பெருமானை மனம் ஒன்றி வணங்கிட, இப்பிறவியில் பற்றும் வினை யாவும் நீங்கும். அவ்வாறு வினையை வீழுமாறு செய்பவன் எந்தையாகிய ஈசனே ஆவன்.

50. பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே.

தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு ,காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களிலும் பொலிந்து விளங்குகின்ற ஈசன் பூந்தராய் என்னும் நகரில் வீற்றிருக்கும் நாதன் ஆவான். அப்பெருமானுடைய திருவடியை நாள்தோறும் ஏத்தி வணங்குகின்றவர்களுக்குப் பேரின்பம் பெருகும். அத்தகைய வளத்தைப் புரியும் கடவுள், கங்கை தங்கிய நீண்ட சடை முடியுடைய ஈசன் ஆவன்.

51. புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவம் ஆயின தீரப் பணித்திடும்
சேவது ஏறிய செல்வன் தானே.

தெளிவுரை : புற்றில் வாழும் நாகத்தை அணிகலனாகக் கொண்டு, பூந்தராய் என்னும் நகரில் வீற்றிருக்கின்ற பரமனைப் பாடித் துதிக்கப் பாவமானது தீரும். அவ்வாறு தீரப் பணித்திடும் செல்வன் இடப வாகனத்தையுடைய ஈசனே.

52. போத தத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்றஎம் பிஞ்ஞகனே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்திய ஈசன், பூந்தராய் என்னும் நகரில் விரும்பி வீற்றிருப்பான். அப்பெருமான், திருப்பாத விரல் ஒன்றினால் இராவணனுடைய வலிமையினை அழித்துப் பின்னர் அருள் செய்து உகந்த பிஞ்ஞகனும் ஆவன்.

53. மத்தம் ஆன இருவர் மருவொணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யும் தானே.

தெளிவுரை : தம்முள் பெரியவர் யார் என்பதை அறிய வேண்டும் என்று செருக்குற்று மேவிய திருமாலும், பிரமனும் காண முடியாதவராகி, உயர்ந்து விளங்கிய ஈசன் வீற்றிருக்கும் பூந்தராய் என்னும் நகரை, அடியவராய்ச் சென்றடைவீராக. உமது தீவினை யாவும் கெடுமாறு செய்தருள்பவன் அப்பெருமானே ஆவன்.

54. பொருத்த மில்சமண் சாக்கியப் பொய்கடிந்து
இருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி எம்இ றையே.

தெளிவுரை : பொருந்துமாறு உரை செய்யாத சமணர் சாக்கியர்களின் பொய்மையைக் கடிந்து ஒதுக்கித் தேவர்கள் தொழுது ஏத்துமாறு எக்காலத்திலும் விளங்குகின்ற கடவுள், பூந்தராய் என்னும் நகரில் இளமையான மானைக் கரத்தில் ஏந்தி விளங்கும் ஈசன். அப்பெருமானைப் போற்றுவீராக.

55. புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல்எம் அடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண்டு ஏத்தி வாழும்நும்
பந்த மார்வினை பாறிடுமே.

தெளிவுரை : இயல்பாகவே அருள் உணர்வு உடையவராய், நன்மைசெய் குணத்தவராய், முடிவில்லாத தன்மையில் எல்லாக் காலத்திலும் விளங்கிப் பூந்தராய் என்னும் நகரில் வீற்றிருக்கும் எம் அடிகளைத் திருஞானசம்பந்தர் ஓதி அருளிய இத்திருப்பதிகத்தைக் கொண்டு ஏத்தி வாழ்வீராக. நும்மைப் பற்றியுள்ள வினை யாவும் தீர்ந்து துன்பம் இல்லாத நல்வாழ்க்கை உண்டாகும்.

திருச்சிற்றம்பலம்

264. திருக்கொள்ளம்பூதூர் (அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

56. கொட்ட மேகமழும் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள நம்பனே.

தெளிவுரை : நல்லருள் மணம் கமழும் கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தின்கண் திருக்கூத்து ஆடும் ஈசனை நினைத்துப் போற்றுகின்ற தன்மையால் இந்த ஓடமானது தனக்குத் தானே உந்திச் செல்வதாக. ஈசனே ! என் நம்பனே ! உம்மைச் சிந்தனை செய்து தியானித்து மகிழும் அடியவர்கள், நின்னைத் திருக்கோயிலின்கண் கண்டு தொழுமாறு அருள்புரிவீராக.

57. கோட்ட கக்கழநிக் கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : நீர் நிலைகளும் கழனிகளும் கொண்டு மேவும் கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கும் ஈசனை, நெஞ்சமானது நினைத்து மகிழ, இந்த ஓடமானது தனக்குத்தானே உந்தி முன்னோக்கிச் செல்வதாக, ஈசனைத் தொழுது போற்ற, அப்பெருமான் நல்குகின்ற வழியாகும்.

58. குலையினார் தெங்குசூழ் கொள்ளம் பூதூர்
விலையின் ஆட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : குலைகள் விளங்கும் தென்னை மரங்கள் சூழ்ந்த கொள்ளம்பூதூரில் பெருமையுடைய பாங்குடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய ஈசனை நினைத்துப் போற்ற, இந்த ஓடமானது உந்திச் செல்வதாக. இது ஈசனைச் சிந்திப்பவர்களுக்கு அப்பெருமான் நல்குகின்ற வழியாகும்.

59. குவளை கண்மலரும் கொள்ளம் பூதூர்த்
தவற நீறணி தலைவனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : குவளை மலர் திகழும் கொள்ளம்பூதூரில் திருவெண்ணீறு அணிந்து மேவும் தலைவனாகிய ஈசனை நினைத்து ஏத்த, இந்த ஓடமானது உந்திச் செல்வதாக. இது சிவபெருமானைச் சிந்தித்து வழிபடுகின்றவர்களுக்கு, அப்பெருமான் நல்கும் வழியாகும்.

60. கொன்றைபொன் சொரியும் கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : பொன் நிறம் கொண்ட கொன்றை மலர்கள் மரத்திலிருந்து உதிரும் தன்மையானது, பொன் சொரிந்தாற்போன்று திகழும் சிறப்புடையது கொள்ளம்பூதூர். ஆங்கு வீற்றிருக்கும் மென்மையான சடையை உடைய ஈசனை நினைத்து வணங்க, இந்த ஓடமானது தானாகவே உந்திச் செல்வதாகுக. ஈசன், தன்னைச் சிந்திக்கும் அடியவர்களுக்கு நல்கும் அருள் இத்தகையது ஆகும்.

61. ஓடம்வந் தணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : திருநடம் புரியும் நாதனாகிய ஈசனை நினைக்க, ஓடமானது கொள்ளம்பூதூர் என்னும் ஊரின்கண் வந்து அடைய, உந்திச் செல்லுக. சிவபெருமானைத் தியானிப்பவர்களுக்கு அப்பெருமான் நல்குகின்ற வழியும் அதுவே.

62. ஆறுவந்து அணையும் கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : ஆறு சூழ்ந்துள்ள கொள்ளம்பூதூரில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் இறைவனை எண்ணித் துதிக்க, ஓடமானது உந்திச் செல்வதாக. ஈசன் தமது அடியவர்களுக்கு நல்குகின்ற அருட்பேறும் இஃதே ஆகும்.

63. குரக்கினம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : குரங்குகள் மரங்களில் ஆடிக் குதிகொள்ள, கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற ஈசன், இராவணனைச் செற்று அடர்த்த பெருமான். அப்பரமன், ஆதிமூலமாக விளங்குபவன். அவ் இறைவனை எண்ணித் துதிக்கும் தன்மையில், ஓடமானது உந்திச் செல்வதாக. தமது அடியவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் ஈசன், அருள் புரியும் வழியும் இதுவே.

64. பருவ ரால் உகளும் கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழல் உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : மீன்கள் உகளும் கொள்ளம்பூதூரில் திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவனாகிய ஈசன் திருக்கழலை எண்ணித் தொழும் பாங்கால், ஓடமானது உந்திச் செல்வதாக, அவ்வாறு சிந்தையுடைய அடியவர்களுக்கு அருள் புரியும் ஈசன் நல்குவதும் இதுவே.

65. நீரகக் கழனிக் கொள்ளம் பூதூர்த்
தேரமண் செற்ற செல்வனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : தேரரும் அமணரும் பகைத்துப் பேசும் செல்வனாகிய நீர் வளம் மிக்க கழனிகளையுடைய கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கும் ஈசனை நினைந்து வணங்க, இந்த ஓடமானது தானாகவே உந்திச் செல்வதாக. ஈசனைச் சிந்தையில் கொண்டு மேவும் அடியவர்களுக்கு அப்பெருமான் நல்கும் அருள் வண்ணமும் இதுவே.

66. கொன்றை சேர்சடை யான் கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்று சொல் மாலைகொண்டு ஏத்தவல் லார்போய்
என்றும் வானவ ரோடுஇருப் பாரே.

தெளிவுரை : கொன்றை மலர் தரித்த சடை முடியுடைய ஈசன் வீற்றிருக்கும் கொள்ளம்பூதூரினை, நற்புகழ் இத்திருப்பதிகத்தை ஓதுகின்ற அன்பர்கள், வானவர் பெருமக்களுடன் எஞ்ஞான்றும் மகிழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

265. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

67. கண்ணுத லானும்வெண் ணீற்றினானும் கழலார்க்கவே
பண்ணிசை பாடநின்று ஆடினானும் பரஞ்சோதியும்
புண்ணிய நான்மறை யோர்கள்ஏத் தும்புகலிந் நகர்ப்
பெண்ணினல் லாளொடும் வீற்றிருந்த பெருமானன்றே.

தெளிவுரை : ஈசன், நெற்றியில் ஒரு கண்ணுடையவன்; திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவன்; திருப்பாதத்தில் மேவும் வீரக்கழல் ஒலிக்கப் பண்ணின் வழி காணும் இசைப்பாடல் பாட நின்று திருநடனம் புரிபவன்; யாங்கணும் விளங்கும் சோதியாய்த் திகழ்பவன். அப்பெருமான் புண்ணியம் செய்த தன்மையால் வேதம் பயின்ற மறையவர்கள் ஏத்தும் புகலி நகரில் வீற்றிருக்கும் பெண்ணில் நல்லாளாகிய உமாதேவியோடு மேவும் இறைவனே !

68. சாம்பலோ டுந்தழல் ஆடினானும் சடையின்மிசைப்
பாம்பினோ டும்மதி சூடினானும் பசுவேறியும்
பூம்படு கல்லிள வாளைபாயும் புகலிந்நகர்க்
காம்பன தோளியொ டும்மிருந்த கடவுளன்றே.

தெளிவுரை : ஈசன், மகாப் பிரளய காலத்தில், உலகம் யாவும் நெருப்புமயமாய்த் தோன்றிய நிலையில் அவற்றின் இடையே அழல் ஏந்தி ஆடியவன்; சடை முடியின்மீது அரவத்துடன் சந்திரனும் விளங்குமாறு சூடியவன்; இடப வாகனத்தில் அமர்ந்திருப்பவன். அப்பெருமான், மலர்ப்பொய்கையில் வாளை பாயும் புகலியில், மூங்கிலை ஒத்த தோளுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுள்.

69. கருப்புநல் லார்சிலைக் காமன்வேவக் கடைக்கண்தானும்
மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங்கும் புகலிந்நகர்
விருப்பினல் லாளொடும் வீற்றிருந்த விமலனன்றே.

தெளிவுரை : ஈசன், கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணைத் திறந்தவன்; நீண்ட வலிமையான தந்தத்தையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட மணவாளன். அப்பெருமான் மலைபோன்று உயர்ந்து மேவும் மாட மாளிகைகளையுடைய புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருக்கும் விமலன் ஆவன்.

70. அங்கையி லங்குஅழல் ஏந்தினானும் அழகாகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும் கடலின்னிடைப்
பொங்கிய நஞ்சமுது உண்டவனும்புக லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.

தெளிவுரை : அழகிய கையில் நெருப்பினை ஏந்தியவனாகிய ஈசன், கங்கையை அழகு திகழச் செஞ்சடையில் வைத்துப் பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமென உட்கொண்டு, புகலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருக்கும் மணவாளன் ஆவன்.

71. சாமநல் வேதனும் தக்கன்றன் வேள்வி தகர்த்தானும்
நாமநூ றாயிரம் சொல்லிவா னோர்தொழு நாதனும்
பூமல்கு தண்பொழில் மன்னும்அந் தண்புகலிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகனன்றே.

தெளிவுரை : ஈசன், சாம வேதத்தை விரித்த பரமன்; தக்கனின் தீய வேள்வியைத் தகர்த்த தலைவன் ; நூறாயிரம் (இலட்சம்) திருநாமங்களைக் கொண்டு தேவர்களால் தொழப்படுபவன். அப்பெருமான், பூக்கள் மல்கி விளங்கும் பொழில்கள் மேவும் குளிர்ச்சி மிக்க புகலியில் உமாதேவியோடு வீற்றிருக்கும் குழகன்.

72. இரவிடை ஒள்ளெரி ஆடினானும் இமையோர்தொழச்
செருவிடை முப்புரம் தீயெரித்த சிவலோகனும்
பொருவிடை ஒன்றுஉகந்து ஏறினா னும்புக லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழக னன்றே.

தெளிவுரை : நள்ளிரவில் மயானத்தில் திருக்கூத்து புரிந்தவனும், தேவர்கள் தொழுது போற்றுமாறு முப்புரமும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவனும், சிவலோக நாதனும், இடப வாகனத்தில் உகந்து அமர்ந்தவனும், புகலி நகரின்கண்  அரவம் போன்ற இடையுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் அழகனாகிய சிவபெருமானே அல்லவா !

73. சேர்ப்பது திண்சிலை மேவினானும் திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந்த பரம னன்றே.

தெளிவுரை : திண்மையுடன் மேவும் கயிலை மலையில் மேவி விளங்குபவனும், மார்க்கண்டேயர் மீது சினந்து வந்த கொடிய கூற்றுவனை உதைத்தவனும், வேள்விப் புகையானது மேலெழுந்து மாடமாளிகைகளில் சூழ்ந்து ஓங்கும் புகலி நகரில், உமாதேவியுடன் வீற்றிருப்பவனும் ஈசனேயன்றோ !

74. கல்நெடு மால்வரைக் கீழ்அரக்கன் னிடர்கண் டானும்
வில்நெடும் போர்விறல் வேடனாகி விசயறகு ஒரு
பொன்நெடுங் கோல்கொடுத் தானும்அந் தண்புக லிந்நகர்
அன்னமன் னந்நடை மங்கையொடும் அமர்ந் தானன்றே.

தெளிவுரை : பெருமை மிக்க கயிலை மலையின்கீழ் இராவணனை இடம் செய்தவனும், வில்லேந்திப் போர் செய்யும் வீரம்மிக்க வேட்டுவ வடிவம் தாங்கி, அருச்சுனருக்கு உயர்ந்த பாசுபதம் என்னும் கணையைக் கொடுத்தவனும், புகலி நகரில் மேவும் உமாதேவியை உடனாகக் கொண்டு உறைபவன் ஈசன் அல்லவா !

75. பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்
தன்னைஇன் னான்எனக் காண்பரிய தழற் சோதியும்
புன்னை பொன்றாது உதிர் மல்கும் அந்தண் புகலிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந்த விமலனன்றே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவனாகிய நெருப்பின் சோதியும், புன்னை மரத்திலிருந்து பொன் போன்ற தாதுக்கள் உதிர்ந்து மேவும் குளிர்ச்சி மிக்க புகலியில் திகழும் உமாதேவியுடன் வீற்றிருக்கும் விமலனாகிய ஈசன் அல்லவா !

76. பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டரும் காதல்செய் சோதியாய சுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலிந் நகர்
வண்டமர் கோதையொடும் இருந்த மணவாளனே.

தெளிவுரை : அசோக மரத்தையும் அரச மரத்தையும் போற்றும் சமணரும் சாக்கியரும் சொல்லும் உரைகளை ஏற்காது, தொண்டர்கள் விரும்பி ஏத்தும் சோதிச்சுடராய் விளங்குகின்ற ஈசன், தாமரை மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலியில், உமாதேவியோடு வீற்றிருக்கும் மணவாளன் ஆவன்.

77. பூங்கமழ் கோதையொடும் இருந்தான் புகலிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன் சொன்னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய ஆதியாக இசை வல்லவர்
ஓங்கம ராவதியோர் தொழச்செல்வதும் உண்மையே.

தெளிவுரை : பூவின் மணம் கமழ்கின்ற உமாதேவியோடு வீற்றிருக்கும் புகலி நகர் நாதனாகிய ஈசனை, ஞான சம்பந்தன் சொன்ன இத் திருப்பதிகத்தினைத் திருத்தலத்தில் மேவும் ஈசனாகவே பாவித்து, இசையுடன் ஓத வல்லவர்கள், தேவர்களால் தொழுது போற்றப்படுவார்கள். இது உண்மை.

திருச்சிற்றம்பலம்

266. திருக்கடவூர் வீரட்டம் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

78. சடையுடை யானும்நெய் யாடலா னும்சி கோவண
உடையுடை யானும் மையார்ந்த ஒண்கண்உமை கேள்வனும்
கடையுடை நன்னெடு மாடம்ஓங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தரன்அல்லனே.

தெளிவுரை : சடை முடியுடையவனும், நெய் முதலான பசுவின் ஐந்து பொருள்களை அபிடேகப் பொருளாகக் கொள்பவனும், சரிந்த கோவண ஆடையுடையவனும், மை திகழும் கண்ணொடு விளங்கும் உமாதேவியின் துணைவனும், நெடிய மாடங்களை உடைய கடவூரில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலாகிய வீரட்டானத்து அரன் அல்லவா !

79. எரிதரு வார்சடை யானும்வெள் ளைஎருது ஏறியும்
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந்து ஏத்தவே
கரிதரு காலனைச் சாடினா னும்கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : நெருப்புப் போன்ற சிவந்த நீண்ட சடை முடியுடையவனும், வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனும். சிறப்பான மலராக விளங்கும் கொன்றை மலரைப் புனைந்து ஏத்தி வழிபட்ட மார்க்கண்டேயருக்கு அருள் புரியும் பாங்கில், கரிய கோலத்தையுடைய காலனைக் காலால் உதைத்தவனும் ஆகிய ஈசன், கடவூரின்கண் தொல்புகழ் விளங்கும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அரன் அல்லவா !

80. நாதனும் நள்ளிருள் ஆடினா னும்நளிர் போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியும்
காதலர் தண்கட வூரினா னும்கலந்து ஏத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : எல்லா உலகங்களுக்கும் நாதனாகவும், நள்ளிருளில் நடனம் புரிபவனாகவும், அடியவர்களின் இதயத் தாமரையில் வீற்றிருப்பவனாகவும், புலித் தோலை உடையாகக் கொண்டு விளங்குபவனாகவும், இடப வாகனத்தில் ஏறி அன்பர்கள் மேவிய கடவூரில் விளங்குபவனாகவும் உள்ள ஈசன், யாவரும் ஏத்தி வணங்குமாறு வேதம் விரித்தோதிய வீரட்டானத்தில் திகழும் அரன் அல்லவா !

81. மழுவமர் செல்வனும் மாசிலாத பல பூதமுன்
முழவொலி யாழ்குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடைக்
கழல்வலர் கால்குஞ்சித் தாடினானும் கடவூர்தனுள்
விழவொலி மல்கிய வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : மழுப்படையைக் கரத்தில் கொண்ட மேவும் செல்வனாகிய ஈசனைப் பரவிப் போற்றும் எக்குற்றத்தின்பாலும் மேவாது திகழும் பூதகணங்கள் முழவு ஒலிக்கவும், யாழும் குழலும் இசைக்கவும், மொந்தை என்னும் கருவி கொட்டவும் விளங்குகின்றன. சுடுகாட்டின் இடையில் இருந்து கழல்கள் ஒலிக்கத் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் அப்பெருமான் கடவூரின்கண் திருவிழாக்கள் பெருகும் வீரட்டானத்தில் அரன் அல்லவா !

82. சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னும்சுழல் வாயதோர்
படமணி நாகம் அரைக் கசைத்தபர மேட்டியும்
கடமணி மாவுரித் தோலினா னும்கட வூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : சுடர் விடும் மணி போன்ற உருத்திராக்கம் அணிந்து திருவெண்ணீறு தரித்தவனும், படம் கொண்டு விளங்கும் நாகத்தை அரையில் கட்டிய பரமேட்டியும், மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவனும், கடவூரில் மேவி நஞ்சினை மணி போன்று கண்டத்தில் கொண்டு திகழ்பவனும், வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அரன் அல்லவா !

83. பண்பொலி நான்மறை பாடியாடிப் பலவூர் கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும் வானின் னொளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் திங்க ளானும் கடவூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டானத்தரன் அல்லனே.

தெளிவுரை : நல்ல பண்முறையில் ஓதப் பெறும் நான்கு வேதங்களையும் பாடிப்பல ஊர்களில், கபாலம் ஏந்திப் பிச்சை கொண்டு உழல்பவனும், வானில் ஒளிரும் சந்திரனைத் தரித்தும், நெற்றியில் நெருப்புக் கண் உடையவனும், கடவூரில் திருவெண்ணீறு பூசி விளங்கும் வீரட்டானத்து அரன் அல்லவா !

84.செவ்வழ லாய்நில னாகிநின்ற சிவமூர்த்தியும்
முவ்வழல் நான்மறை ஐந்துமா யமுனி கேள்வனும்
கவ்வழல் வாய்க் கத நாகமார்த் தான்கட வூர்தனுள்
வெவ்வழல் ஏந்துகை வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : ஈசன், செவ்வழலாகிய நெருப்பாகவும் நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியாய் விளங்குபவன்; ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி எனப்படும் மூவகையான நெருப்பாய்த் திகழ்பவன்; இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களாய் மிளிர்பவன்; ஐவகையான ஞான வேள்வியாகிய ஞானநூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என ஐந்தும் ஆற்றும் முனிசிரேஷ்டர்களின் துணைவனாய் மேவுபவன். அப்பெருமான் கொடிய நஞ்சுடைய நாகத்தை அணிந்தவனாய்க் கடவூரின்கண் வெம்மையான நெருப்பினைக் கரத்தில் ஏந்தி விளங்கும் வீரட்டானத்து அரன் அல்லவா !

85. அடியிரண் டோருடம் பைந்நான்கிரு பதுதோள்தச
முடியுடை வேந்தனை மூர்க்கழித்த முதல் மூர்த்தியும்
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள்
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : ஓர் உடலில் இரண்டு கால்களும் இருபது தோள்களும் பத்துத் தலைகளும் உடைய இராவணனுடைய மூர்க்கத் தன்மையினை அழித்த, முதற்பொருளாகிய மூர்த்தி நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த குளிர்ச்சி மிக்க கடவூரில், பிரம கபாலம் ஏந்தி உள்ள அவன், வீரட்டானத்து அரன் அல்லவா !

86. வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந்து தேத்தவே
கரைகடல் சூழ்வையம் காக்கின்றா னுங்கட வூர்தனுள்
விரை கமழ் பூம்பொழில் வீரட்டானத்தரன் அல்லனே.

தெளிவுரை : கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களைக் காத்த திருமாலும், குற்றமற்ற தாமரைமலரின் மீது விளங்கும் நான்முகனும் போற்றுமாறு இவ்வுலகத்தைக் காத்தருள்பவனாகிய ஈசன், கடவூரின்கண், பூம்பொழில் மேவும் வீரட்டானத்தில் மேவும் அரன் அல்லவா !

87. தேரரும் மாசுகொள் மேனியா ரும்தெளி யாததோர்
ஆரரும் சொற்பொரு ளாகிநின்ற எமது ஆதியான்
காரிளங் கொன்றைவெண் திங்களானும் கடவூர்தனுள்
வீரமும் சேர்கழல் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : தேரர்களும் சமணர்களும் தெளிவு கொண்டு அறிவதற்கு அரிய சொற்பொருளாகிய எமது ஆதிபிரானாகிய ஈசன், கார்காலத்தில் மலரும் கொன்றை மலரைத் தரித்துத் திங்களைச் சடைமுடியில் சூடிக் கடவூரில் வீரக்கழல் விளங்க மேவும் வீரட்டானத்து அரன் அல்லவா !

88. வெந்தöண் ணீறணி வீரட்டானத்துறை வேந்தனை
அந்தணர்தம் கடவூருளா னைஅணி காழியான்
சந்தமெல் லாம்அடிச் சாத்தவல்ல மறைஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியாடக் கெடும் பாவமே.

தெளிவுரை : வீரட்டானத்தில் உறைகின்ற திருவெண்ணீறு தரித்து மேவும் இறைவன், மறையவர்கள் விளங்கி மேவும் கடவூரில் திகழ்பவன். அப்பெருமானைச் சந்தப் பாடல்களால் உரைக்கவல்ல, காழியில் மேவும் ஞானசம்பந்தன், போற்றி உரைத்த செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிப் பக்தியால் கசிந்துருகித் தன்னை மறந்து விளங்கும் அன்பர்களின் பாவம் யாவும் கெடும். இது வினை யாவும் தீரும் என உரைப்பதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

267. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

89. கேள்வியர் நாள்தொறும் ஓதுதல் வேதத்தர் கேடிலா
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழி மிழலையார்
வாழியர் தோற்றமும் கேடும்வைப் பாருயிர்கட்கெலாம்
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்கு அணியரே.

தெளிவுரை : கேள்வி ஞானத்தால் நாள்தொறும் பயிலும் வேதத்தை ஓதி, ஐவகையான வேள்விகளை ஆற்றிஒழுகுகின்ற அந்தணர்கள் ஏத்துகின்ற வேதநாதனாய், வீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான், மன்னுயிர்க்கு உலகில் பிறந்தும், நீத்தும் அடைகின்ற சரீரத்தைத் தருபவர்; உயிரால் அறியப்படாத தன்மையில் ஆழ்ந்து விளங்குபவர்; தனது திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு நெருக்கமானவர்.

90. கல்லினற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழி மிழலையார்
நல்லினத் தார்செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத் தும்தகர்த் தார்அடியார் பாவ நாசரே.

தெளிவுரை : மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழும் ஈசன், மென்மையான இனத்தினராகிய அந்தணர்கள் விரும்பிப் போற்றுகின்ற வீழிமிழலையில் விளங்குபவர். அப்பெருமான் தீய நோக்கில் செய்யப் பெற்ற தக்கனது யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களை வாட்டியவர். அவர், அடியவர்களின் பாவத்தைப் போக்கும் பாவநாசகர்.

91. நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண்டு அந்தகனைச்செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.

தெளிவுரை : ஈசன், நஞ்சினை உட்கொண்ட கருமையான கண்டத்தை உடையவர்; அந்தகா சூரனை வதைத்த சூலப் படையுடையவர்; திருவீழிமிழலையில் வீற்றிருப்பவர்; மை திகழும் கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகம் கொண்டு விளங்குபவர்; கங்கையை அபிடேகமாகக் கொள்ளும் சிறப்புடன் சிவந்த சடை முடியுடையவர். அப்பெருமானைப் போற்றி வணங்கக் கொடிய வினை யாவும் மாயும்.

92. கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடம் சூலம் தமருகம்
அலையிலங் கும்புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே.

தெளிவுரை : மான், மழுப்படை யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் ஆகியன கொண்டு மணிமாடங்கள் திகழும் வீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசன், பிறைச் சந்திரன் சடைமுடியில் திகழச் சூலம், எலும்பு மாலை, தமருகம், கங்கை, இடபக் கொடி ஆகியனவும் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் அடியவர்களுக்கும் அவ்வடிவத்தின் பாங்கினைச் செய்விப்பவர்.

93. பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார்
முறைமுறை யாலிசை பாடுவார் ஆடிமுன் தொண்டர்கள்
இறையுறை வாஞ்சியம் அல்லது எப்போதும் என் உள்ளமே.

தெளிவுரை : ஈசன், பிறைச் சந்திரனைச் சூடிய சிவந்த சடை முடியுடையவர்; இடப வாகனத்தை உடையவர்; பிச்சை எடுப்பதை விரும்பித் தெருக்களில் தினந்தோறும் பலியேற்றுத் திரியும் வீழிமிழலையார். அப்பெருமான், பண்முறைப்படி இசைபாடுகின்றவர்கள், தம்மை மறந்து பக்திப் பரவசத்தினால் ஆட, அவர்தம் இதயத் தாமரையில் வீற்றிருப்பவர். அதனை அல்லாது எனது உள்ளம் பிரிதொன்றை நாடாது.

94. வசையறு மாதவங் கண்டு வரிசிலை வேடனாய்
விசையனுக் கன்றருள் செய்தவர் வீழி மிழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்ல வடமிட்டுத்
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.

தெளிவுரை : குற்றமில்லாத சிறப்பான தவவேடத்தைப் பூண்டு, தவம் மேற்கொண்ட அர்ச்சுனருக்கு, அழகிய வில்லை ஏந்திய வேடனாய்க் கோலம் தாங்கி அருள் நல்கி வீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசன், தன்னை வாயாரப் பக்திப் பெருக்கால் பாடுகின்ற அடியவர்கள்; ஈசனின் திருப்புகழை இயற்றமிழால் போற்றி உரைத்தும், கேட்டும் மகிழும் அன்பர்கள்; யோக முத்திரையில் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு புலன்களை அடக்கித் திசை நோக்கித் தொழுது போற்றுபவர்கள் ஆகியோர்தம் சித்தத்தில் வீற்றிருப்பவர்.

95. சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர்
வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழி மிழலையார்
காடரங் காவுமை காணவுண் டத்துஇமை யோர்தொழ
நாடகம் ஆடியை ஏத்தவல் லார்வினை நாசமே.

தெளிவுரை : ஈசன், தேவர்களால் காண முடியாத தொலைவில் இருப்பவர்; ஆறு அங்கங்களையும் கற்று விளங்கும் பூவுலகின் தேவர்களாகிய அந்தணர் பெருமக்களுக்கு வீட்டுலகத்தை அளிக்கும் பாங்குடையவர்; அவர், மூத்தீயராய், நான்கு வேதத்தினராய் வீழிமிழலையில் விளங்குபவர்; அப்பெருமான், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு, உமாதேவியார் கண்டு மகிழுமாறு எல்லா அண்டங்களிலும் திகழும் தேவர்கள் தொழ, திருநடம்புரிபவர்; அத்தகைய இறைவனை ஏத்தி வணங்கும் அடியவர்கள் வினை யாவும் அழியும்.

96. எடுத்தவன் மாமலைக் கீழஇ ராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழி மிழலையார்
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழக்குறைவு இல்லையே.

தெளிவுரை : இராவணன், அவன் எடுத்த கயிலை மலையின்கீழ் கிடந்து அலறுமாறு விடுத்து, அவன் பாடும் இசை கேட்டு அருள் புரிந்த வீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசன், காலனைக் காலால் உதைத்து அழித்துத் தன்பால் சார்ந்து திகழ விளங்கும் பாலனாகிய மார்க்கண்டேயருக்குப் பேரின்பத்தைப் கொடுத்தனர். அப் பெருமானைத் தொழுது போற்றும் அடியவர்களுக்கு, நன்மைகளை தவிர குறைவு ஏதும் உண்டாகாது.

97. திக்கமர் நான்முகன் மால்அண்ட மண்டலம் தேடிட
மிக்கமர் தீத்திரளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும்
நக்கர்தந் நாம்ந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.

தெளிவுரை : நான்கு திக்குகளிலும் முகங்கொண்டு மேவும் பிரமனும் திருமாலும் வானத்திலும் பூமிக்கடியிலும் தேடி ஞான்று, மிகுந்து எழும் தீப் பிழம்பு ஆகியவர் வீழிமிழலை நாதர். அப்பெருமான் சொக்கு எனப்படும் ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் திகம்பரராய்க் காட்சி நல்கியவர். அவர் திருநாமமாவது நமச்சிவாய என்பர், சிவஞானியர்.

98. துற்றரையார்துவர் ஆடையர் துப்புர பொன்றிலா
வெற்றரை யார்அறி யாநெறி வீழி மிழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்
மற்றறி யாஅடி யார்கள்தம் சிந்தையுள் மன்னுமே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் அறியாத நெறியில் விளங்கும் பெருமான் வீழிமிழலையில் வீற்றிருக்கும் நாதர். சொல்லுக்கு அப்பால் விளங்கும் உண்மைப் பொருளை உணர்த்தும் அருள் ஒளியாக விளங்கி, அடியவர்தம் சிந்தையில் நன்கு காணும் வண்ணம் மிகுந்த சோதிச் சுடராய் விளங்குபவரும் அப்பெருமானே ஆவர்.

99. வேதியர் கைதொழு வீழி மிழலைவி ரும்பிய
ஆதியை வாழ்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்ஆய்ந்து
ஓதிய ஒண்தமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியப் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.

தெளிவுரை : மறையவர்கள் தொழுது போற்றும் வீழி மிழலையில் வீற்றிருக்கும் ஈசனை, பொழில் திகழும் காழியுள் விளங்கும் ஞானசம்பந்தர் ஆய்ந்து ஓதிய செம்மையான இத்தமிழ் மாலையை நன்கு போற்றி உரைப்பவர்கள், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஈசனின் திருவடி மலரில் சேர்ந்து மிளிரும் வல்லமை பெற்றவர் ஆவார்கள். இது, முத்திப் பேறு வாய்க்கும் என உணர்த்தப் பெற்றது.

திருச்சிற்றம்பலம்

268. திருஇராமேச்சுரம்

திருச்சிற்றம்பலம்

100. அலைவளம் தண்மதி யோடய லேஅடக் கிஉமை
முலைவளர் பாக முயங்கவல்ல முதல்வன்முனி
இலைவளம் தாழைகள் விம்முகானல் இராமேச்சுரம்
தலைவளர கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.

தெளிவுரை : கங்கையையும் சந்திரனையும் ஒருசேரச் சடை முடியில் இருக்குமாறு செய்து, உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகப் பொருந்த வைத்த முதல்வன், மடல்களைப் பெருக்கி ஓங்கும் தாழைகள் விளங்கும் சோலை திகழும் இராமேச்சுரத்தில் வீற்றிருந்து, அருளாட்சி செய்தலை மேவுகின்றான்.

101. தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடிபொன்றுவித் தபழி போயற
ஏவிய லும்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தாம் மேல்வினை வீடுமே.

தெளிவுரை : சீதாப் பிராட்டியைக் கவர்ந்த இராவணனின் தலையை அறுத்துக் கொல்வித்த பழியானது நீங்குமாறு, அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான், நிருமாணித்த இராமேச்சுரத்தை நெஞ்சினால் நினைப்பவர்கள், வினை நீங்கப் பெற்றவராவர்.

102. மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய கார்அரக் கன்உயிர் செற்றவன்
ஈனமி லாப்புகழ் அண்ணல் செய்தஇ ராமேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொடு நன்மையே.

தெளிவுரை : மான் போன்ற விழியுடைய சீதாப் பிராட்டியை மாயம் செய்து கவர்ந்த அரக்கனாகிய இராவணனை அழித்துப் பெரும் புகழ் கொண்ட இராமபிரான் நிருவிய இராமேச்சுரமானது, சிவஞானமும் அதன் பொருளாகிய முத்தி இன்பமும் நல்கி, மன்னுயிர்களுக்கு நன்மை தரும் ஒண் பொருளாகத் திகழ்கின்றது.

103. உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையால்
வரைபொரு தோளிறச் செற்றவில்லி மகிழ்ந்து ஏத்திய
விரைமரு வுங்கடல் ஓதமல் கும்இரா மேச்சுரத்து
அரைஅர வாடநின்று ஆடல்பே ணும்அம்மா னல்லனே.

தெளிவுரை : பிறருடைய மனைவியைக் கவர்தல் தவறு என்னும் அறவுரையை உணராது, காமத்தால் நலியப்பெற்ற இராவணனுடைய மலை போன்ற தோள் அறுந்து வீழுமாறு போர் செய்து அழித்து விளங்கிய இராமபிரான், மகிழ்ந்து ஏத்திய இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் ஈசன், அரையில் அரவத்தைக் கட்டி நின்று திருநடம் புரியும் அழகிய தலைவன் அல்லவா !

104. ஊறுடை வெண்டலை கையில்ஏந்திப் பல வூர்தொறும்
வீறுடை மங்கையர் ஐயம்பெய்ய விறல் ஆர்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி எந்தைமேய இரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந்தர் பிணி பேருமே.

தெளிவுரை : பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றினைக் கொய்ததால் அமைந்த கபாலத்தைக் கையில் ஏந்திய ஈசன், ஊர்கள்தொறும் சென்று வீறுடைய மாதர்கள் இட்ட பிச்சையை ஏற்றும், வீரம் மிக்க இடபக் கொடியுடைய எந்தையில் இராமேச்சுரத்தில் வீற்றிருப்பவன். அப்பெருமான் எல்லாப் பேறுகளும் கொண்டு திகழ்பவன். ஆதலினால் பேறு அளிக்கும் அவன் திருப்பெயரை ஓதி ஏத்துகின்ற மாந்தர், பிணி அற்றவராய்த் திகழ்வர்.

105. அணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத்த பழி போக்கிய
இணையிலி யென்றும் இருந்தகோ யில்இரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத்தத் துயர் நீங்குமே.

தெளிவுரை : அலைகள் மேவும் கடலின் மீது அணையைக் கட்டிக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், பெருமையின்பால் விளங்கும் முடிகள் பத்து கொண்ட இராவணனை அழித்தவன், அதனால் நேர்ந்த பழியைப் போக்கிய ஈசன், இணையற்றவனாய் வீற்றிருக்கும் கோயில் இராமேச்சுரம். அப் பெருமானுக்கு யாருடைய துணையும் தேவையில்லை. ஒப்பற்றவனாய்த் திகழும் இப்பெருமானுடைய திருவடி மலரைப் போற்றி ஏத்துபவர்களின் துயர் யாவும் நீங்கும்.

106. சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கடபல தீயன
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடு என்று அண்ணல்செய்தஇரா மேச்சுரம்
பனிமதி சூடிநின்று ஆடவல்ல பரமேட்டியே.

தெளிவுரை : நவக் கிரகங்கள் என்று சொல்லப்படுகின்ற சனி, புதன், சூரியன், சுக்கிரன், சந்திரன் மற்றும் உள்ள குரு, அங்காரகன், ராகு, கேது ஆகியவற்றால் தனக்குக் கெடுதல் வரக்கூடாது எனச் சிறையில் வைத்த இராவணனை அழித்து வெற்றி கொண்ட பழியானது தீர வேண்டும் எனவும், அருள் பெருகுதல் வேண்டும் எனவும் இராமபிரானால் அமைக்கப் பெற்றது இராமேச்சுரம். ஆங்கு, குளிர்ச்சி மிக்க சந்திரனைத் தரித்து வீற்றிருப்பவர், முழுமுதற் பரம்பொருளாகிய சிவபெருமானே.

107. பெருவரை யன்றெடுத்து ஏந்தினான் றன்பெயர் சாய்கெட
அருவரை யாலடர்த்து அன்றுநல்கி அயன் மாலெனும்
இருவரு நாடிநின்று ஏத்துகோயில் இரா மேச்சுரத்து
ஒருவனு மேபல வாகிநின்ற தொரு வண்ணமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனுடைய புகழ் சாயுமாறு அவனை அம் மலையால் அடர்த்தும், நான்முகனும் திருமாலும் நாடி வந்து ஏத்துகின்றபோது விளங்கியும், திகழும் இராமேச்சுரத்தில் மேவும் ஈசனின் செம்மை ஒருவனே பல வண்ணமாகிக் காட்சி நல்குகின்ற பாங்கினை உடையதாகும்.

108. சாக்கியர் வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார்
வாக்கிய லும்முரை பற்று விட்டுமதி யொண்மையால்
ஏக்கிய லும்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே.

தெளிவுரை : சாக்கியர்களும் சமணர்களும் உரைக்கும் மெய் இல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப் பற்றி நிற்காது, ஒளி மிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபாடு செய்த இராமேச்சுரத்தின்கண் மேவி விளங்குகின்ற செல்வனை, ஏத்தி வாழ்வீராக. அப்பெருமானை ஏத்தி வழிபட அவன் அருளால் அனைத்தும் கைகூடும்; நன்மைகள் பெருகும் என்பதாம்.

109. பகலவன் மீதுஇயங் காமைக் காத்தபதி யோன்றனை
இகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிடம் எங்குநின்று ஏத்தவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : சூரியனுடைய வெம்மையானது தனது நகரின் மீது இயங்கக் கூடாது என்னும் ஆணையை, வரபலத்தின் வலிமையால் செலுத்திய இராவணனைப் போரில் அழித்த இராமபிரான் ஏத்துகின்ற கோயிலாகிய இராமேச்சுரத்தினைப் போற்றிப் புகலியுள் விளங்கும் ஞானசம்பந்தன் சொன்ன இத்திருப்பதிகத்தை, நன்கு மனத்திருத்தி எல்லா இடங்களிலும் ஓத வல்லவர்களுக்குத் துயரம் என்பது இல்லை.

திருச்சிற்றம்பலம்

269. திருப்புனவாயில் (அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல், புதுக்கோட்டை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

110. மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள் போய்
அன்னமன் னந்நடை யாளொடும் அமரும் இடம்
புன்னை நன் மாமலர் பொன்னுதிர்க்கும் புன வாயிலே.

தெளிவுரை : ஈசன், மின்னலைப் போன்று ஒளிரும் சிவந்த சடை முடியும், வெண்மையான பிறைச் சந்திரனும், விரிந்த மார்பினில் முப்புரி நூலும் கொண்டு விளங்குபவராய் இடைவிடாது திரும்பத் திரும்ப ஓதப் பெறும் வேதங்களை நன்கு இசைத்துத் திருத்தலங்கள் தொறும் சென்றடைந்து உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, புன்னை என்னும் மலர் பொன் போன்ற மகரந்தங்களை உதிர்க்கும் புனவாயில் ஆகும்.

111. விண்டவர் தம்புர மூன்றெரித் துவிடை யேறிப்போய்
வண்டம குங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடம்
கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.

தெளிவுரை : பகைத்து நின்ற முப்புர அசுரர்களும், அவர்களுடைய கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, இடபவாகனத்தில் ஏறி உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருக்கும் ஈசனின் இடமாவது, தாழையும் புலி நகக் கொன்றையும் கடற்கரைச் சோலையில் திகழ, தாமரை மலர் விளங்கும் பொய்கையும் சூழ்ந்த புனவாயில் ஆகும்.

112. விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
புடைபட ஆடிய வேடத்தா னும்புன வாயிலில்
தொடைநவில் கொன்றையந் தாரினா னும்சுடர் வெண்மழுப்
படைவல னேந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.

தெளிவுரை : ஈசன், இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவர்; வீரம் மிக்க பூதகணங்கள் சூழ நடனக் கோலம் தாங்கித் திருநடம் புரிபவர்; புனவாயில் என்னும் தலத்தில் கொன்றை மாலை அணிந்து, சுடர்மிகும் மழுப்படையைத் தாங்கி இருப்பவர். அப்பெருமான், நெய்யும் பாலும் அபிடேகப் பொருளாக ஏற்று, அடியவர்களுக்கு அருள் புரியும் பரம் பொருள் ஆவர்.

113. சங்கவெண் தோடணி காதினா னும்சடை தாழவே
அங்கையி லங்குஅழல் ஏந்தினா னும்அழ காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலில்
பைங்கண்வெள் வேற்றண்ண லாகிநின்ற பர மேட்டியே.

தெளிவுரை : காதில் சங்குகளால் ஆன தோடும் நீண்ட சடையும், அழகிய கையில் நெருப்பும் சீறிப் படம் உடைய ஈசன் புனவாயிலின்கண் வெள்ளை இடபத்தின் மீது ஏறி, மேலான பரம்பொருள் ஆகித் திகழ்கின்ற அண்ணல் ஆவார்.

114. கலிபடு  தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
புலியதன் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
ஒலிதரு தண்புன லோடு எருக் கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.

தெளிவுரை : ஆராவாரம் கொண்டு கடையப் பெற்ற பாற்கடலில் இருந்து தோன்றிய நஞ்சினை உண்டு, அதனால் கரிய கண்டத்தை உடைய ஈசன், புலித் தோலை உடையாகக் கொண்டும், பாம்பினை அரையில் சுற்றிக் கட்டியும் விளங்குபவர். அப்பெருமான், குளிர்ந்த கங்கையோடு எருக்கு, ஊமத்தம் ஆகிய மலர்களும், மெல்லிய கீற்றையுடைய வெண்மையான பிறைச் சந்திரனும் சூடி இடப வாகனத்துடன் புனவாயிலில் வீற்றிருப்பவர்.

115. வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க்
காருறு கொன்றைவெண் திங்களானும் கனல் வாயதோர்
போருறு வெண்மழு ஏந்தினா னும்புன வாயிலில்
சீருறு செல்வமல் கவ்விருந்த சிவலோகனே.

தெளிவுரை : உமாதேவியார் இசை பாட, அவ் இசைக்கு ஏற்ப நடம் புரிந்து, கார்காலத்தில் மலரும் கொன்றை மலரும், வெண்மையான சந்திரனும் சடைமுடியில் தரித்துக் கனல் போன்ற பேரொளி காட்டும் போர்த் தன்மை கொண்ட மழுப்படையுடைய ஈசன், புனவாயிலில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார். அப்பெருமான் சிவலோக நாதனாய்ச் சீரான செல்வத்தை நல்கும் மாண்பில் வீற்றிருப்பவர்.

116. பெருங்கடல் நஞ்சமு துண்டுகந்து பெருங் காட்டிடைத்
திருந்திள மென்முலைத் தேவிபா டநட மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புர மூன்றும் எய்து புனவாயிலில்
இருந்தவன் தன்கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே.

தெளிவுரை : பெரிய அளவாகிய பொருட் செல்வத்தை தன்னகத்தே  கொண்ட கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்டு மகிழ்ந்து, தேவர்களையும் உலகங்களையும்  காத்தருளிய ஈசன், மயானத்தின்கண் இருந்து, உமாதேவியார் பாடும் இசைக்கு ஏற்ப நடம் புரிந்தவர். அப்பெருமான், பகைமை கொண்ட முப்புர அசுரர்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; புனவாயிலில் வீற்றிருப்பவர். அவர்தம் திருக்கழலை ஏத்தித் தொழுபவர்களுக்கு எத்தகைய இடையூறும் இல்லை.

117. மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த்தான் இட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழில் மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றல்ஆர்ந்த புனவாயிலே.

தெளிவுரை : செருக்கு மிகுந்த மனத்தை உடையவனும் வேல் முதலான படைக்கலன்களைக் கொண்டவனும் ஆகிய அரக்கனாகிய இராவணனுடைய வலிமை அழியுமாறு, சோலைகள் மிகுந்து ஓங்கும் பெருமை உடைய கயிலை மலையால் அடர்த்த இறைவன், சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, சிறந்த கருத்துக்களால் அமைந்த புகழ்ப் பாடல்களும், அவற்றுக்குரிய ஆடல்களும் எழில் கொண்டு மேவி, கொன்றை மலரின் நறுமணம் கமழும் தெய்வீகக் காற்று வீசுகின்ற புனவாயில் ஆகும்.

118. திருவளர் தாமரை மேவினா னும்திகழ் பாற்கடல்
தருநிற வண்ணனும் காண்பரிய கடவுள் இடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல மல்கிய
பொருகடல் வெண்திரை வந்தெறியும்புன வாயிலே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவராகிய கடவுள் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, ஒலிக்கப் படுகின்ற சங்குகளும், சிப்பிகளும் அலைகளில் வாயிலாக உந்திக் கடற்கரையில் சேர்த்துச் செல்வத்தைக் கொழிக்கும் புனவாயில் ஆகும்.

119. போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்கும்அந் தண்புன வாயிலில்
வேதனை நாள்தொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே.

தெளிவுரை : பௌத்தர் எனப்படுபவர்களும், சமணர்களும் சாதனையாகச் சாதித்துக் கூறும் சொற்களைக் கொண்டு அயர்ந்து தளர்ச்சி அடைய வேண்டாம். மலர்கள் விரிந்து மேவும் பொழில் மல்கும் குளிர்ச்சி மிக்க புனவாயிலில் வீற்றிருக்கும், வேதமாய் மேவும் ஈசனை, நாள்தோறும் சென்று வழிபடுவீராக. அவ்வாறு செய்பவர்களுக்கு, வினை யாவும் விலகிச் செல்ல துன்பம் இல்லாத வாழ்க்கை அமையும்.

120.பொற்றொடி யாளுமை பங்கன் மேவும் புன வாயிலைக்
கற்றவர் தாம்தொழு தேத்த நின் றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன தமிழ் நன்மையால்
அற்றமில் பாடல்பத்து ஏத்தவல் லார்அருள் சேர்வரே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஈசன் வீற்றிருக்கும் புனவாயிலை, வேதம் கற்றவர்கள் தொழுது போற்றுகின்ற காழி நகரில் விளங்கும் நற்றமிழ் ஞானசம்பந்தன் ஏத்திய இத்தமிழ் மாலையை ஓத வல்லவர்கள், ஈசனின் அருளில் திளைத்தவர் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

270. திருக்கோட்டாறு (அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம், திருவாரூர்  மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

121. வேதியன் விண்ணவர் ஏத்தநின்றான் விளங் கும்மறை
ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்தழ கார்திருக் கோட்டாற்றுள்
ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்லால் இல்லையே.

தெளிவுரை : வேதத்தில் வல்லவராய்த் தேவர்களால் ஏத்தப் பெறுபவராய் விளங்குகின்ற சிவபெருமான், வேதங்களால் போற்றப்படும் உயர்ந்த பொருள் ஆகியவர். அப்பெருமான் பொழில் நிறைந்த அழகிய திருக்கோட்டாற்றில் வீற்றிருப்பவர். அப் பரமனைத் தியானம் செய்து வணங்குபவர்களுக்கு இம்மையில் அல்லல் ஏதும் இல்லை.

122. ஏலமலர்க்குழல் மங்கைநல் லாள்இம வான்மகள்
பால்அமரும் திரு மேனிஎங்கள் பரமேட்டியும்
கோல மலர்ப்பொழில் சூழ்ந்து எழிலார்திருக் கோட்டாற்றுள்
ஆல நீழற்கீழ் இருந்து அறம்சொன்ன அழகனே.

தெளிவுரை : உமாதேவியார், நறுமணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாள் எனப்படுபவர்; இமாசல மன்னனின் மகளாகத் தோன்றியவர். அப்பெருமாட்டியை உடனாகிய எங்கள் பரம்பொருள் பொழில் சூழ்ந்து விளங்கும் திருக்கோட்டாற்றுள் வீற்றிருப்பவர். அப்பெருமான் தட்சணாமூர்த்தித் திருக்கோலம் தாங்கிச் சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் சொன்ன அழகராவர்.

123. இலைமல்கு சூலமொன்று ஏந்தினானும் இமை யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனாய மணி கண்டனும்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந்த அழகன் அன்றே.

தெளிவுரை : கங்கையைச் சடை முடியில் ஏற்றுகந்த அழகராகிய ஈசன், சூலப் படையினைக் கரத்தில் ஏந்தியவராய்த் தேவர்கள் தொழுது போற்றவும், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டும் நீல கண்டத்தினராகியும், சோலைகளில் காய்களும் கனிகளும் குலைகளுடன் திகழும் பொழில் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாற்றுள் வீற்றிருப்பவர் அல்லவா !

124. ஊனம ரும்உட லுள்ளிருந்த உமை பங்கனும்
வானம ரும்மதி சென்னிவைத்த மறை யோதியும்
தேனம ரும்மலர்ச் சோலை சூழ்ந்திருக் கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும் எங்கள் தலைவன் அன்றே.

தெளிவுரை : ஈசன் உயிர்க்கு உயிராய் இருப்பவர்; அப்பெருமான், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; சந்திரனைச் சென்னியில் வைத்தவர்; மறைகளை விரித்து ஓத வல்லவர்; இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து காட்சி தருபவர். அவர், அழகிய சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள் வீற்றிருக்கும் எங்கள் தலைவர் ஆவர்.

125. வம்பல ரும்மலர்க் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனும்
கொம்ப ரும்மலர் வண்டுகொண்டுந் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவாரக்கு அருள்செய் எங்கள் நாதனே.

தெளிவுரை : நறுமண மலர் அன்ன உமாதேவியை பாகமாகக் கொண்டு மகிழும் சிவபெருமான், செம்பவளம் போன்ற திருமேனியுடன் விளங்கித் திருவெண்ணீறு அணிந்த செல்வராவர். தேன் துளிர்க்கும் திருக்கோட்டாற்றுள் வீற்றிருக்கும் நம்பனாய் மேவும் அப்பிரான், தன்னைப் பணிந்து ஏத்துகின்றவர்களுக்கு அருள் புரிபவர். அவர் எங்கள் நாதன்.

126. பந்தம ரும்விரல் மங்கைநல் லாள்ஒரு பாகமா
வெந்தமரும்பொடிப் பூசவல்ல விகிர் தன்மிகும்
கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அந்தண னைநினைந்து ஏத்தவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : பந்து போன்று திரட்சியான விரல்களை உடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திருவெண்ணீறு பூசி விளங்கும் விகிர்தன், கொத்தாகப் பூக்கும் மலர்ச் சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள் வீற்றிருக்கும் அந்தணன் ஆவார். அப் பெருமானை நினைத்து வழிபடும் அடியவர்களுக்கு அல்லல் இல்லை.

127. துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
வண்டம ருங்குழல் மங்கைநல் லாள்ஒரு பங்கனும்
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அண்டமும் எண்டிசை யாகிநின்ற அழகன் அன்றே.

தெளிவுரை : துண்டித்த பிறைபோன்று விளங்கும் சந்திரனைச் சூடிய பெருமான், நீண்டு ஓங்கும் சுடர் வண்ணமாய்த் திகழ்கின்ற பரமன். அவர், வண்டு அமரும் கூந்தலை உடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். நீர் வயல் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாற்றில் எழுந்தருளியுள்ள அவ் இறைவன், அண்டங்களும் ஆகி, எட்டுத் திசைகளும் ஆகி நின்ற அழகன் அல்லவா !

128. இரவம ருந்நிறம் பெற்றுடைய இலங்கைக் கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலை சூழ்ந்ததிருக் கோட்டாற்றுள்
அரவம் ருஞ்சடை யானடி யார்க்கருள் செய்யுமே.

தெளிவுரை : இருள் கொண்ட இரவு போன்ற கரிய நிறமுடைய இராவணன், கரவு கொண்ட நெஞ்சு உடையவனாய்க் கயிலையை எடுக்க, அவனைச் செற்று அடர்த்த ஈசன், மணம் பொருந்திய குரவ மலர்ச் சோலை திகழும் திருக்கோட்டாற்றுள் வீற்றிருப்பவர். அப் பெருமான், சடை முடியில் அரவம் தரித்து விளங்கியவராய் அடியவர்களுக்கு அருள்புரிபவர்.

129. ஓங்கிய நாரண னான்முகனும் உணரா வகை
நீங்கிய தீயுரு வாகிநின்ற நிமலன் நிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்து எழிலார்திருக் கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே.

தெளிவுரை : உலகினை அளப்பதற்குத் திரிவிக்கிரமனாய் ஓங்கிய திருமாலும், மற்றும் நான்முகனும் உணராத வகையாய் மறைந்திருந்தும் தீயுருவாகியும் நின்ற ஈசன், ஒளி திகழும் கோங்கு மலர்ப் பொழில் சூழ்ந்துள்ள திருக்கோட்டாற்றில் வீற்றிருக்கும் பெருமான் ஆவர். அப் பெருமான் தேவர்களுக்கெல்லாம் தேவர்.

130. கடுக்கொடுத்த துவர் ஆடையர் காட்சியில் லாததோர்
தடுக் கிடுக்கிச் சமணேதிரி வார்கட்குத் தன்னருள்
கொடுக்ககில்லாக் குழகன் அமரும்திருக் கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழு வார் அமரர்க்குஇறை யாவரே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் ஈசனை நாடாது புறமாக நிற்க, அருள் புரிவதற்கு உரித்தாகாத நிலை மேவிய ஈசன் திருக்கோட்டாற்றில் வீற்றிருக்க, அப்பெருமானை வணங்குபவர்கள் துன்பம் அற்றவர்களாய் வானுலகத்தின் தலைமைப் பதவியைப் பெறுவார்கள்.

131. கொடியுயர் மால்விடை யூர்தி யினான்திருக் கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல்ல அருளாளனைக்
கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.

தெளிவுரை : இடபத்தைக் கொடியாகவும், வாகனமாகவும் உடைய திருக்கோட்டாற்றில் வீற்றிருக்கும் ஈசன், திருப்பாதத்தில் விளங்கும் கழல் ஆர்க்க நின்று ஆடுகின்ற அருளாளர். அப்பெருமானை நறுமணம் கமழும் பொழில் திகழும் காழியுள் மேவும் ஞானசம்பந்தன் ஏத்திச் சொல்லிய, இத்திருப் பதிகத்தைப் பாடிப் பத்திமையால் தன்னை மறந்து ஏத்த வல்லவர்கள், தம் பாவம் யாவும் நீங்கப் பெற்றவராவர். இது தீவினை நீக்குதலின் சிறப்பு உணர்த்துவதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

271. திருப்பூந்தராய் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

132. மின்னன எயிறுடை விரவ லோர்கள்தம்
துன்னிய புரமுகச் சுளிந்த தென்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரியவை பங்கரே.

தெளிவுரை : மின்னலைப் போன்ற வளைந்த பற்களை உடைய பகைமை கொண்ட அசுரர்களுடைய மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு சினந்த தொன்மையராகிய ஈசன், புன்னை மரங்களின் பொழிலை அணியாகப் பெற்று விளங்கும் பூந்தராய் நகரில், உமைபங்கராய் வீற்றிருப்பவர்.

133. மூதணி முப்புரத்து எண்ணி லோர்கள்
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.

தெளிவுரை : முதுமைத் தன்மையுடைய முப்புரத்து அசுரர்களை, வெம்மையுடைய அம்பினால் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன், மலர்கள் நனிவிளங்கும் பொழி திகழும் பூந்தராய் நகரில் மகரந்தத் தேன் கமழும் கூந்தலையுடைய உமாதேவியின் தலைவராய் வீற்றிருப்பவர். அப் பெருமானைக் கண்டு தரிசித்து ஆனந்தம் அடைவீராக.

134. தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருகடல் புடைகரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.

தெளிவுரை : தருக்கித் திரிந்த முப்புரத்து அசுரர்கள் அழியுமாறு மேரு மலையை வில்லாகக் கொண்ட ஈசன், கடலலைகள் சூழ்ந்த பூந்தராய் நகரின்கண் கரிய கூந்தலையுடைய உமாதேவியின் கணவர் ஆவார். அவரைக் கண்டு தரிசித்து உய்வீராக.

135. நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.

தெளிவுரை : வாசுகி என்னும் நாகத்தை நாணாகவும், மேருமலையை வில்லாகவும் கொண்டு ஆகாயத்தில் திரிந்த மூன்று புரங்களை அழியச் செய்த மாண்புடைய ஈசன், பாக்கு மரங்கள் திகழும் பூந்தராய் நகரில் இனிமையான பாகு போன்ற மொழியுடைய உமாதேவியை பாகமாக கொண்டு திகழ்பவர். அப்பெருமானைத் தரிசித்து உய்வீராக.

136. வெள்ளெயிறு உடையஅவ் விரவ லார்கள்ஊர்
ஒள்ளெரி யூட்டிய ஒருவ னார்ஒளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.

தெளிவுரை : வெண்மையான அகன்ற முன் பற்களுடைய அசுரர்களின் மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன் ஒளிர்கின்ற பறவைகள் திகழும் பூந்தராய் நகரில், தேன் கமழும் கூந்தலை உடைய அம்பிகையின் கணவர் ஆவர். அப்பெருமானைத் தரிசித்து உய்வீராக !

137. துங்கியல் தானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த வாம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி அரிவை பங்கரே.

தெளிவுரை : அசுரர்களின் நெடிய வடிவங்களைப் போன்று தோற்றமுடைய பெரிய நகரங்கள் மூன்றும் நெருப்பில் மூழ்கி எரியுமாறு செய்த அக்கினிக் கணையை உடைய ஈசன், கடலின் அணி திகழ மேவும் பூந்தராய் நகரில் எழுந்தருளியுள்ள கயல் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். அவரை ஏத்துமின் !

138. அண்டர்கள் உயந்திட அவுணர் மாய்தரக்
கண்டவர் கடல்விடம் உண்ட கண்டனார்
பூண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.

தெளிவுரை : எல்லா அண்டங்களிலும் உள்ள மன்னுயிர்கள் நன்மை அடையும் பொருட்டு முப்புர அவுணர்களை மாயச் செய்தும், கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு கரிய கண்டத்தினராய்க் காத்தும் அருளிய ஈசன், தாமரை மலர்கள் திகழும் வயல்களை உடைய பூந்தராய் என்னும் நகரில் உமாதேவியின் மணாளராக வீற்றிருப்பவர். அப்பெருமானை எத்தித் தரிசித்து உய்வீராக !

139. மாசின அரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.

தெளிவுரை : குற்றத்தை உடைய அரக்கனாகிய இராவணனைக் கயிலை மலையைக் கொண்டு அடர்த்து நலியச் செய்து, மன்னுயிர்களை வதைத்த முப்புரக் கோட்டைகளைக் கனன்று எரியுமாறு புரிந்த நீலகண்டராகிய ஈசன், அந்தணர்கள் பொலிந்து விளங்கும் பூந்தராய் நகரில், கரிய கூந்தலையுடைய உமாதேவியின் கணவர் ஆவர். அப் பெருமானைத் தரிசித்து உய்வீராக !

140. தாமுக மாக்கிய அசுரர் தம்பதி
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணதும்
பூமகன் அறிகிலாப் பூந்த ராய்நகர்க்
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே.

தெளிவுரை : தமது விருப்பத்தின்படி பெருந்தீங்கைப் புரிந்த அசுரர்களின் மூன்று புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர், ஈசன். திருமாலும் பிரமனும் அறிவதற்கு ஒண்ணாத பூந்தராய் நகரில் வீற்றிருக்கும் அப்பெருமான், எழில் மிக்க உமாதேவியை ஒரு கூறாக உடையவர். அவரைத் தரிசித்து உய்வீராக!

141. முத்தர அசுரர்கண் மொய்த்த முப்புரம்
அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண்
புத்தரும் அறிவொணாப் பூந்த ராய்நகர்க்
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.

தெளிவுரை : அசுரர்களிடமுள்ள மூன்று உலோகத்தால் ஆகிய கோட்டைகளை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன், சமணர் மற்றும் பௌத்தர்களால் அறியவொண்ணாத பூந்தராய் நகரின்கண், உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு வீற்றிருப்பவர். அப்பெருமானைத் தரிசித்து உய்வீராக !

142. புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்
பரமலி குழலுமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.

தெளிவுரை : முப்புரங்களை எரித்த பரமன் பூந்தராய் நகரில் மேவும் பெருமாட்டியாகிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு திகழ்பவர். அப் பெருமானைப் பரவிய ஞானசம்பந்தரின் மெய்ம்மை நவிலும் இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், தலையானதாகப் போற்றப்படுகின்ற சிவகதியை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

272. திருப்பைஞ்ஞீலி (அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, திருச்சி மாவட்டம்)


திருச்சிற்றம்பலம்

143. ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
ஓரிடம் குறைவிலர் உடையர் கோவணம்
நீரிடம் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.

தெளிவுரை : ஈசன், பாடலாகப் பாடுவது ஆரிடம் என்னும் வேதமும்; உறைவது சுடுகாடு எனப்படும் இடமும் உடையாகக் கொள்வது கோவண ஆடையும் ஆகும். அப்பெருமான், கங்கையைச் சடை முடியில் ஏந்தி, இடப வாகனராய் மேவி, நித்தமும் பணிகொண்டு மேவும் பூத கணங்கள் சூழத் திருப்பைஞ்ஞீலியில் திகழ்பவர்.

144. மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை உளங்கொ ளாதஅத்
திருவிலா ரவர்களைத் தெருட்ட லாகுமே.

தெளிவுரை : பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு, மேரு என்னும் பெருமையுடைய மலையினை  வில்லாக வளைத்த ஈசன், திருப்பைஞ்ஞீலி என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். வடிவம் அற்றவராய் விளங்கும் அப்பெருமானுடைய பெருமையை உள்ளத்தில் கொண்டு ஏத்தாதவர்கள் திரு இல்லாதவர் ஆவர். அவர்களைத் தெளிவித்து நலம் கொள்ளச் செய்தல் ஆகுமா !

145. அஞ்சுரும்பு அணிமலர் அமத மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேலான்
வெஞ்சுரந் தனில்உமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.

தெளிவுரை : அழகிய வண்டினம், மலரில் துளிர்க்கும்  தேனை அமுதமென அருந்திப் பஞ்சுரம் என்னும் பண்ணிசைத்து விளங்கும் பைஞ்ஞீலியில் வீற்றிருக்கும் ஈசன், உமாதேவி வெருவுமாறு கானகத்தில் வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருவிளையாடல் புரிந்தவர்.

146. கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல் வண்டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே.

தெளிவுரை : வெண்காந்தள் மலர்களும், காடுகளில் மேவும் முல்லை மலர்களும் திகழ வண்டுகள் ரீங்காரம் செய்து பாடற் பண்களை ஒலிக்கின்ற பைஞ்ஞீலியில் வீற்றிருக்கும் ஈசன், ஆணும் அல்லர், பெண்ணும் அல்லர்; ஆணும் இல்லாது பெண்ணும் இல்லாத மேவும் அலியும் அல்லர்; ஆடலை விரும்பி மேவும் அடிகள் அல்லர்.

147. விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.

தெளிவுரை : பிரம கபாலத்தை ஏந்தி இளமையான பிறைச் சந்திரனும் கங்கையும் தரித்த ஈசன், வினை நீங்கப் பெற்ற அடியவர்கள் போற்றுகின்ற பைஞ்ஞீலியில், வேதம் விரித்த ஓதும் பரமன் ஆவர். அப்பெருமானை ஏத்தித் தொழுபவர்களின் வறுமையானது கெடும்.

148. விடையுடைக் கொடிவலன் ஏந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள்பைஞ்ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாகச்
சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே.

தெளிவுரை : இடபக் கொடியை ஏந்தி மழுப்படை உடைய ஈசன், பைஞ்ஞீலியில் மேவி விளங்குகின்ற பெருமான். அவர் உமாதேவியைத் தனது தேகத்தில் ஒரு பாகமாகக் கொண்டு சடை முடியிலும் கங்கையைத் தரித்த சதுரன் ஆவர்.

149. தூயவன் தூயவெண் ணீறு மேனிமேல்
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவன் எனைச் செயுந் தன்மை என்கொலோ.

தெளிவுரை : ஈசன், தூய நிலை உடையவர் தூய திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; நன்கு பரவப்படுமாறு பைஞ்ஞீலியில் கோயில் கொண்டு மேவித் திகழ்பவர்; மூங்கிலைப் போன்ற தோளை உடைய உமாதேவியை ஒரு கூறாக ஏற்று இருப்பவர். அப்பெருமான் என்னை ஏற்று ஆட்கொண்டு செய்கின்ற தன்மைதான் என்கொல் !

150. தொத்தின தோள்முடி யுடைய வன்தலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருதி வாழ்மினே.

தெளிவுரை : ஒன்றுடன் ஒன்று தொத்திச் சேர்ந்தாற் போன்ற தோள்களைக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு செய்த ஈசன், பைஞ்ஞீலியில் மேவி விளங்கும் பெருமான். முத்தன்ன வெண்ணகை உடைய உமாதேவியை ஒரு பாகமாகத் திருமேனியில் வரித்து விளங்கும் அப்பெருமானின் திருவடிமலரைப் பொருந்தி வாழ்வீராக.

151. நீருடைப் போதுறை வானு மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.

தெளிவுரை : நீரில் விளங்கும் தாமரையில் மேவும் பிரமன் சீர் நல்கும் கழல் அணிந்த அடி மலரையும் திருமால் திருமுடியையும் காண்கிலராய் நிற்க, பூவுலகில்  பைஞ்ஞீலி என்னும் இடத்தில் மேவிய ஈசன், கொன்றை மாலை அணிந்த தலைவராய் வீற்றிருக்கின்றனர்.

152. பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
சாலியா தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.

தெளிவுரை : மயிற் பீலி கொண்டு பெருமை கொள்ளும் சமணரும் பிடக நூல் கொண்டு மேவும் சாக்கியரும் தாம் கூறியவற்றைச் சாதிக்கும் தன்மையில்லாதவர்கள் மேருவை வில்லாக்கி, அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்த ஈசன் பைஞ்ஞீலியில் மேவும் பரமன். அப் பெருமானுடைய மலர்களை வணங்கி வாழ்வீராக.

153.கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
நண்புணர் அருமறை ஞானசம் பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே.

தெளிவுரை : நீரைத் தேக்கி வைத்திருந்து பாய்கின்ற வயல் வளம் உடைய காழியில், கற்பக மரம் போன்று நண்பு கொண்டு நலம் சேர்க்கும் மறைவல்ல ஞானசம்பந்தன், நற்பண்புடையோர் பரவும் பைஞ்ஞீலியில் வீற்றிருக்கும் ஈசனைப் பாடிய இத் திருப்பதிகத்தை உரைப்பவர்கள், கன்ம உலகமாகிய இப்பூவுலகில் ஓங்குகின்ற வாழ்க்கையை உடையவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

273. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

154. மந்திர மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றார் வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை அடிகள் அல்லரே.

தெளிவுரை : நன்கு ஏத்தப் பெறும் மந்திரங்களாக உள்ள வேதமும், வானவருடன் சேர்ந்து இந்திரனும் வழிபடுமாறு வீற்றிருக்கும் இந்திரனும் திருவெண்ணீற்றுத் திருமேனியராக வெண்காட்டில் பொருந்தி விளங்குபவர். அப்பெருமான், அந்தமாகவும் ஆதியாகவும் எல்லாக் காலங்களிலும் திகழும் அடிகள் அல்லவா !

155. படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய
சடையிடைப் புனல்வைத்த சதுரர் அல்லரே.

தெளிவுரை : ஈசன், மழுப்படையுடையவர்; புலியின் தோலை உடையாகக் கொண்டு, கோவணத்தை உகந்து தரித்திருப்பவர்; இடபத்தைக் கொடியாக ஏந்தி உடையவர். அவர் வெண்காட்டில் வீற்றிருந்து, சடையின்கண் கங்கையை வைத்து மேவும் சதுரர் அல்லவா !

156. பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவுவெண் காடு மேவிய
ஆலம தமர்ந்தஎம் அடிகள் அல்லரே.

தெளிவுரை : ஈசன், பால், நெய், தயிர் மற்றும் முக்கனிகள் முதலான பலவும் பூசையாக ஏற்று மகிழ்பவர்; தோலை மார்பினில் திகழ அணிபவர்; சிவஞானிகள் பரவிப் போற்றும் வெண்காட்டில் வீற்றிருக்கும் அப்பெருமான், கல்லால மரத்தின்கீழ் இருந்து அறப்பொருள் உரைத்தவர். அவர் எம் தலைவர் அல்லவா !

157. ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப் புன்னையும்
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழமது உரித்தவெண் காடு மேவிய
யாழினது இசையுடை இறைவர் அல்லரே.

தெளிவுரை : புலிநகர் கொன்றை, செருந்தி, புன்னை, தாழை ஆகியவற்றுடன், வெண் குருகு ஒளிர்ந்து திகழும் கடற்கரைச் சோலை விளங்கும் வெண்காட்டில், யானையின் தோலை உரித்த ஆற்றல் உடையவராயும், யாழில் இசை போன்ற இனிமை உடையவராயும் ஈசன் வீற்றிருப்பவர் அல்லவா !

158. பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்இறை
வேதங்கள் முதல் வர்வெண் காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரமல் அல்லரே.

தெளிவுரை : பூத கணங்கள் பல உடைய புனிதர் ஆகிய ஈசன், புண்ணியத்தின் வடிவினராய் விளங்கி, மன்னுயிரின் குற்றங்களையும், அதனால் நேரும் இடையூறுகளையும் தீர்த்தருள்கின்ற எமது இறைவன் ஆவர். அப்பெருமான், வேத முதல்வராய் வெண்காட்டில் வீற்றிருப்பவர். அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப் பெறும் தன்மையில் விளங்க, அவர் பரம்பொருளாகத் திகழ்பவர் அல்லவா !

159. மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்இறை
விண்ணமர் பொழில்கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே.

தெளிவுரை : பூவுலக மாந்தர்களும் விண்ணுலகத்தவர்களும் ஈசனை வணங்குகின்றனர். நாள்தோறும் போற்றி வழிபட்டு இறைஞ்சுகின்ற தேவர்களுக்கு இறைவனாகிய அப்பெருமான், உயர்ந்து மேவும் பொழில் கொண்டு விளங்கும் வெண்காட்டில் வீற்றிருப்பவர். அப்பரமனைத் தொழுது போற்றுபவர்களுக்கு அல்லல் இல்லை.

160. நயந்தவர்க்கு அருள்பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவுவெண் காடு மேவிய
பயந்தரு மழுவுடைப் பரமர் அல்லரே.

தெளிவுரை : இசைந்து வழிபடும் அடியவர்களுக்கு வேண்டியவாறு நல்கியும், யானை வழிபட அருள் புரிந்தும் விளங்கும் நெற்றிக்கண்ணுடைய ஈசன், யோகிகள் பரவிப் போற்றும் வெண்காட்டில் வீற்றிருப்பவர். அப்பெருமான், மழுப்படையைக் கொண்டு மேவும் பரமர் அல்லவா !

161. மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடி
தலையுடல் நெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
அலையுடைப் புனல்வைத்த அடிகள் அல்லரே.

தெளிவுரை : கயிலை மலையை எடத்த கொடிய அரக்கனாகிய இராவணனுடைய நீண்ட முடி, தலை, உடல் ஆகியன யாவும் நெரியுமாறு செய்த சங்கரர், பெருமையுடைய திருநீற்றினைப் பூசி விளங்கித் திகழும் வெண்காட்டில் வீற்றிருப்பவர். அப்பெருமான் சடைமுடியில் கங்கையைத் தரித்து விளங்குபவர் அல்லவா !

162. ஏடவிழ் நறுமலர் அயனு மாலுமாய்த்
தேடவும் தெரிந்தவர் தேர கிற்கிலார்
வேடம துடையவெண் காடு மேவிய
ஆடலை அமர்ந்தஎம் அடிகள் அல்லரே.

தெளிவுரை : தாமரை மலரில் விளங்குகின்ற பிரமனும், மற்றும் திருமாலும் தேடிய காலத்தில், அவ்விருவரும் தேடிய தன்மையை நன்கு அறிந்தும், காணுதற்கு அரியவராய் விளங்கிய ஈசன், வெண்காட்டில் இனிது மேவி நடம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லவா !

163. போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
வேதியர் பிரவுவெண் காடு மேவிய
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் பொருத்தம் இல்லாதவறாய், நன்னெறிகளை ஏற்றுத் தொழாதவர் ஆயினர். வேத வித்தகர்கள் பரவித் தொழும் வெண்காட்டில் வீற்றிருக்கும் ஆதிநாயகனாகிய ஈசனது திருவடியை அன்றி, தொழுது போற்றுவதற்கு வேறு எப்பொருளும் இல்லை.

164. நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேல்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே

தெளிவுரை : நல்வினையின் பயனால் வாய்த்துப் புண்ணிய மாந்தர்கள் விளங்குகின்ற புகலியுள் மேவும் ஞானசம்பந்தன், சிவபெருமானாகிய எமது செல்வன் உறையும் திருவெண்காட்டின் மீது சொல்லிய, அரிய தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், அல்லல் அற்றவராயும் வினை நீங்கப் பெற்றவராயும் விளங்குவார்கள். இது ஆணை ஆயிற்று.

திருச்சிற்றம்பலம்

274. திருக்கொள்ளிக்காடு (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

165. நிணம்படு சுடலையி னீறு பூசிநின்று
இணங்குவர் பேய்களோடு இடுவர் மாடம்
உணங்கல் வெண்டலைதனில் உண்பர் ஆயினும்
குணம்பெரி துடையர்நம் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்க் கூட்டத்தோடு நின்று ஆடுகின்ற ஈசன், காய்ந்த மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பலி ஏற்று உண்பவர். ஆயினும் அப்பெருமான், பெருங்குணத்துடன் உடையவராய்க் கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

166. ஆற்றல்நல் லடியிணை அலர்கொண்டு ஏத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் னடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : நலம் செய்யும் ஈசனின் திருவடிக் கமலத்தை மலர் தூவிப் போற்றி வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கி கூற்றுவனை, அடர்த்து உதைத்தருளிய ஈசன், கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

167. அத்தகு வானவர்க்கு காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : எக்காலத்திலும் குறைவின்றி வழிபடும் தேவர்களின் நலன்களைக் காப்பதற்காகப் பெரியதாகத் திரண்டு எழுந்த விடத்தைக் கண்டத்தில் தேக்கி வைத்து நீலகண்டனாய் விளங்கி ஈசன், ஊமத்தம் பூவும் வன்னியும் மலிந்து மேவும் சடைமுடியில், கொத்தாகக் கொன்றை மலர் சூடியவர். அவர் கொள்ளிக் காட்டில் வீற்றிருப்பவராவர்.

168. பாவண மேவுசொல் மாலை யிற்பல
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினும்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : பலவாறாகிய சந்தங்களையுடைய பாடல்களின் வண்ணம் மேவும் தமிழ் மாலையால், சொல் வண்ணம் திகழும் கொள்கையில் நவிலுமாறு செய்தவர் ஈசன். அப்பெருமான், எல்லா வகையாலும் ஆகின்ற வண்ணத்தில் எம்மை ஆள்கின்றவர். அவர், கோவண ஆடை உடையவராய்க் கொள்ளிக்காட்டில் வீற்றிருக்கும் பெருமானே.

169. வாரணி வனமுலை மங்கை யாளொடும்
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லார்எயில்
கூர்எரி கொளுவினர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு சிறப்பான அழகிய திருவடிவத்தோடு திகழும் ஈசன், பெருமை மிக்க மேருமலையை வில்லாகக் கொண்டு, பகைவர்களாகிய முப்புர அவுணர்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவர் கொள்ளிக் காட்டில் வீற்றிருப்பவரே.

170. பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : பஞ்சு போன்ற மென்மையான அடியை உடைய அம்பிகையை உடனாகக் கொண்டு, மேகங்கள் தோயும் கயிலை மலையின்கண் மகிழ்ந்து, நாள்தொறும் அருள் பாலிக்கும் ஈசன், வெஞ்சினத்துடன் வந்த யானையின் தோலை உரித்தவர். அப்பெருமான், கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

171. இறையுறு வரிவளை இசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : திருக்கரத்தில் விளங்குகின்ற அழகிய வளையல்களையுடைய உமாதேவியார் இசை பாட தமது வீரக்கழல்கள் ஒலிக்கத் திருநடம் புரிபவர், ஈசன். அவர், கங்கையைத் தடுத்துச் சடையில் வைத்துப் பிறைச் சந்திரனையும் உடன்கொண்டு கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவர்.

172. எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திருவிர லால் அலறிடப்
படுத்தனர் என்றவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : தனது வர பலத்தின் வலிமையினால் கயிலை மலையை எடுத்த இராவணனைத் திருப்பாத விரலால் அடர்த்து நலியுறச் செய்தவர், ஈசன். அத்துன்பத்தை தாங்க முடியாத அவ்வரக்கன், அலறிச் சாதவேதத்தை இசைத்துப் பாட, இரங்கி அருள் புரிந்த அப்பெருமான், வீரம் மிக்க வாட்படையை அருளிச் செய்தவர். அவர் கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

173. தேடினார் அயன்முடி மாலும் சேவடி
நாடினார் அவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : பிரமன், திருமுடியினையும்; திருமால், திருவடியையும் தேடிய கலத்தில், நண்ண முடியாதவாறு விளங்கியவர் ஈசன். அவர், பரிவுடன் விளக்கும் பக்தர் சித்தத்தில் வீற்றிருந்து அருள் புரியும் கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

174. நாடிநின்று அறிவில் நாணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் னோதிய உரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் முனைந்து சொல்லும் உரைகள் யாவும் பொய்யுரைகளாகும். அவற்றை மெய்யென்று கருத வேண்டாம். நான்கு மறைகளை விரித்து ஓதியவரும், அத்தகு மறைகளில் வல்லவராகிய உமாதேவியோடு உடனாகத் திகழ்பவரும் ஆகிய பெருமான் கொள்ளிக்காட்டில் வீற்றிருக்கின்ற இறைவன் ஆவர். அவரை வணங்கி ஏத்துமின்.

175. நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே.

தெளிவுரை : நற்றவத்தை மேவி விளங்கும் காழியுள் திகழும் ஞானசம்பந்தன், குற்றம் அற்ற பெரும்புகழ் மேவும் கொள்ளிக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனை, இனிய தமிழால் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தை நன்கு கற்று ஓதுபவர்கள், அப்பரமனின் திருவடி நலன் காணும் வல்லமையைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

275. திருவிசயமங்கை (அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

176. மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே.

தெளிவுரை : நறுமணம், கமழும் கூந்தலை உடைய உமையவள் பங்கராய், நீண்ட சடையின்கண் அரவம் அணிந்த எமது ஈசனின் கோயில் என்பது, குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் கலந்து விளங்கும் பொழில் திகழும் விசய மங்கை ஆகும்.

177. கீதமுன் னிசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.

தெளிவுரை : கீதத்தின் வாயிலாக எழும்பும் இசையில் விழைந்து வீணை வாசிப்பவர், ஈசன். அப்பெருமான் பூதகணங்கள் புடை சூழ விளங்கும் புனிதர் ஆவர். அப்பெருமானின் பொன்னகர் என்பது பசுவானது வழிபட்டு விளங்கவும், நான்மறை வல்ல வேதியர் தொழுது போற்றத் திகழும் விசய மங்கையே.

178. அக்கர வரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
தக்கநல் வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர் தொழுதெழ விசய மங்கையே.

தெளிவுரை : உருத்திராக்கமும் அரவமும் அரையில் கட்டி மேவும் ஈசன், உமாதேவியை ஒரு பாகமாகவும், இடபத்தை வாகனமாகவும் உடைய சோதியாவர். அவர் வீற்றிருக்கும் தொன்மையான நகராவது, வானவர்தம் தலைவராகிய இந்திரனும் மற்றும் பிரமன் திருமால் ஆகியோரும் நாள்தொறும் தொழுது போற்றுகின்ற விசய மங்கையாகும்.

179. தொடைமலி இதழியும் துன்னெ ருக்கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெற்
விடைமலி கொடியணல் விசய மங்கையே.

தெளிவுரை : கொன்றை மலர் மாலையும், நெருக்கமாகக் கட்டிய எருக்க மாலையும், திகழத் தரித்த சடை முடியுடைய ஈசனின் பொன்னகராவது, மழுப்படை ஏந்திய கையும், இடபக் கொடியும் விளங்கும் ஈசனின் விசய மங்கையே.

180. தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோடு இனிது அமர்விடம்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல் விசய மங்கையே.

தெளிவுரை : ஈசன், தோடு அமர்ந்த காது உடையவர்; நன்கு குழையத் திருவெண்ணீறு பூசியவர்; மலர் போன்ற கூந்தலையுடைய உமாதேவியோடு இனிது வீற்றிருப்பவர். அப்பெருமானுடைய இடமாவது கானகத்தில் விளங்கிய பெரிய யானையானது கதறுமாறு, அதன் தோலை உரித்துப் போர்த்துத் திகழும் அண்ணலின் விசய மங்கையாகும்.

181. மைப்புரை கண்ணுமை பங்கன் வண்தழல்
ஒப்புரை மேனியெம் முடைய வன்நகர்
அப்பொடு மலர்கொடு அங்கு இறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே.

தெளிவுரை : கரிய மை போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பங்காகக் கொண்டு திகழும் ஈசன், தழலை ஒத்த நன்மை தரும் செம்மேனியராய் எம்மை உடையவர். அப் பெருமானின் நகரானது, நீரும், மலரும் கொண்டு பூசித்துப் பக்தியுடன் வானவர்கள் இறைஞ்சிப் போற்றி வழிபட, மெய்ம்மையுறுமாறு அருள் புரியும் விசய மங்கையாகும்.

182. இரும்பொனின் மலைவில் லின்எரி சரத்தினால்
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடையண்ணல் விசய மங்கையே.

தெளிவுரை : மிகப் பெரிய பொன்மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு, அக்கினியை அம்பாக்கித் தொடுத்து, முப்புரங்களைச் சாம்பலாகுமாறு செய்த ஈசனின் ஊரானது. கொன்றை மலரும் தூய்மையான ஊமத்தம் பூவும் விரும்பிச் சடை முடியின்கண் அணிந்த அண்ணலின் விசய மங்கையாகும்.

183. உளங்கைய இருபதோடு ஒருபதும் கொடுஆங்கு
அளந்தரும் வரையெடுத் திடும் அரக்கனைத்
தளர்ந்துடன் நெரிதர அடர்த்த தன்மையன்
விளங்கிழை யெடும்புகும் விசய மங்கையே.

தெளிவுரை : தனது பாதையின் குறுக்கே தடை செய்வதாக உள்ளத்தில் வெறுப்புத் தோன்ற, இருபது தோளும் பத்துத் தலையும் கொண்டு அளப்பதற்கு அரியதாகிய கயிலை மலையை எடுத்த இராவணனைத் தளர்ச்சியுற்று நலியுமாறு, அக்கணமே நெரியும் தன்மையில் அடர்த்த தன்மையுடைய ஈசன், உமாதேவியோடு இனிது மேவுவது விசய மங்கை ஆகும்.

184. மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்குஅளப் பரிய அத்தனூர்
தண்ணுறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய அண்ணல்களால் அளப்பதற்கு அரியவனாகிய ஈசனின் ஊரானது. குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும் சந்தனம் கொண்டும், பூக்கள் கொண்டும், நீர் கொண்டும் தேவர்கள் பூசித்துத் தொழுது போற்றும் விசய மங்கையாகும்.

185. கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.

தெளிவுரை : கஞ்சியாகவும் கவளமாகவும் தமது உணவை வகுத்துக் கொண்ட ஒழுகுகின்ற புறச் சமயத்தார் உரைக்கும் கருத்துக்கள், நஞ்சினும் கொடியனவாகும். அதனை நம்மவர்கள் ஏற்றுக் கொள்ளாதவர் ஆவார்கள். சிவந்த சடைமுடியுடைய தேவன் வீற்றிருக்கும் நன்னகராகிய வித்தியாதரர்கள் போற்றித் தொழுகின்ற விசய மங்கையை ஏத்துமின் ! அது அமிர்தத்தை ஒப்பாகும் என்பது குறிப்பு.

186. விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.

தெளிவுரை : விண்ணவர்கள் தொழுது போற்றும் விசய மங்கையை நண்ணிய, புகலி நகர் மேவும் ஞானசம்பந்தன் பாடிய செந்தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், புண்ணியர்கள் ஆவர். அத்தகையோர் சிவகதியை அடைவது உறுதியாகும்.

திருச்சிற்றம்பலம்

276. வைகல் மாடக் கோயில் (அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

187. துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை எந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைகல் ஓங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே.

தெளிவுரை : ஈசன், துள்ளிக் குதிக்கும் இயல்பான தன்மையுடைய மான் கன்றைத் திருக்கரத்தில் ஏந்தி உள்ளவர்; இளமையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் அணிந்தவர். எம் தந்தையாகிய அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, சிவஞானம் கொண்டு விளங்கும் பெருமக்கள் திகழும் வைகல் என்னும் ஊரில், வளம் நிறைந்த மதியொளி மேவும் மாடக் கோயில் ஆகும்.

188. மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.

தெளிவுரை : ஈசன், திருமேனியில் முப்புரி நூல் கொண்டு விளங்குபவர்; வேதம் விரித்து ஓதுபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு திகழ்பவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, இப்பூவுலகத்தில் மகிழ்ச்சி அடையுமாறு, வைகல் என்னும் ஊரின் மேற்றிசையில், சிவந்த கண்ணுடைய வளவன் எனப்பெறும் கோச் செங்கட் சோழனால் கட்டப் பெற்ற மாடக் கோயிலாகும்.

189. கணியணி மலர்கொடு காலை மாலையும்
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி உமையொடு தாமும் தங்கிடம்
மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.

தெளிவுரை : கண்களுக்கு அழகிய மலர்கள் தூவிக் காலையும் மாலையும் பணிபவர்களுக்கு அருள் செய்யும் சிவபெருமான், கருணை வயத்தவராகிய உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, நவமணிகள் முதலான சிறப்புகளுடன் திகழும் வைகல் மாடக் கோயில் ஆகும்.

190. கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பியது உரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.

தெளிவுரை : உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்தி வீரத்தைப் புரிந்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, நறுமணம் கமழும் சோலை சூழ்ந்த வைகலில் மேற்புரத்தில், கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில் ஆகும்.

191. விடமடை மிடற்றினர் வேத நாவினர்
மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே.

தெளிவுரை : பாற்கடலில், தோன்றிய விடத்தைக் கழுத்தில் தேக்கி வைத்து விளங்கும் நீலகண்டத்தை உடைய ஈசன், வேதத்தை விரித்து ஓதும் நாவினர். அப்பெருமான், உமாதேவியாரோடு வீற்றிருக்கும் இடமாவது, அன்னம் நடை பயிலும் வைகல் என்னும் நகரின் மேற்புரத்தில் நிலவும் மாடக் கோயில் ஆகும்.

192. நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவிடம் இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.

தெளிவுரை : நிறைந்த புனிதம் மிக்க புனலாகிய கங்கையும், பிறைச் சந்திரனும் நீண்ட சடை தரித்த இறைவன் மூன்று வகையாக ஓம்பும் தீயிலும் வேதத்திலும் மேவி விளங்குபவர். அப் பெருமான், திறைப்பொருள் ஈட்டிய நிறை செல்வனாகிய கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலில் வீற்றிருப்பவர்.

193. எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகில் அணவிய மாடக் கோயிலே.

தெளிவுரை : அக்கினியைச் சரமாகக் கொண்டு மேரு மலையை வில்லாக வளைத்துத் தொடுத்துத் திரிபுரங்களை எரியுண்ணுமாறு செய்த செல்வராகிய ஈசன் உறையும் இடமாவது, வரிவளையல்கள் அணிந்த மகளிர் பயிலும் வைகலின் மேற்புரத்தில் விளங்கும் மாடக் கோயில் ஆகும்.

194. மலையன இருபது தோளி னான்வலி
தொலைவுசெய்து அருள்செய்த சோதி யார்இடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாடக் கோயிலே.

தெளிவுரை : மலை போன்ற இருபது தோள் உடைய இராவணனுடைய வலிமையை அழித்துப் பின்னர் அவன் வேதத்தின் வாயிலாகப் போற்றி ஏத்த, அருள் செய்யும் சோதியாகிய ஈசனின் இடமாவது, மலர்ப் பொழில் அணியுடன் விளங்கும் வைகலில் வாழ்கின்றவர்கள், வலம் வரும் மலை போன்ற மாடக் கோயிலாகும்.

195. மாலவன் மலரவன் நேடி மால்கொள
மாலெரி யாகிய வரதர் வைகிடம்
மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாடக் கோயிலே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் தேடியும் காணாது மயக்கம் கொள்ள, பெருமை மிக்க நெருப்பு மலையாகிய, வரம் நல்கும் வள்ளலாகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, மாலை கொண்டு அணிந்து வேத விற்பன்னர்கள் வாழும் வைகலில் பெருமை மிக்க மணிகளை அணியாக் கொண்டு மேவும் மாடக் கோயில் ஆகும்.

196. கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாடக் கோயிலே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் போற்றும் பிடக நூலைப் பேணாதவர்களாகிய சிவனடியார்கள் போற்றுகின்ற கோயிலாவது, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நான்கு நற்பண்புகள் நிறைந்த மகளிர் பயிலும் மாநகராகிய வைகலில் மேரு மலையனைய சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும்.

197. மைந்தனது இடம்வைகல் மாடக் கோயிலைச்
சந்தமர் பொழில்அணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.

தெளிவுரை : ஈசனது இடமாகிய வைகல் மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட பொழில் விளங்கும் சண்பை நகரின் ஞானசம்பந்தன் நவின்ற தமிழ் வழங்கும் இத்திருப்பதிகத்தைச் சிந்தையில் கொள்பவர்கள், சிவலோகம் சேருவார்கள்.

திருச்சிற்றம்பலம்

277. திருஅம்பர் பெருந்திருக்கோயில் (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர், அம்பல், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

198. எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.

தெளிவுரை : ஈசன், எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்தி நள்ளிருளின்கண், நரிகள் திரிகின்ற மயானத்தில் நடனம் புரிகின்றவர். அவர் அரிசில் ஆற்றின் நீர்ப் பெருக்கம் கொண்ட மேவும் அம்பர் மாநகரில், உயர்ந்தோனாகிய கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் பொருந்தி வீற்றிருப்பவர்.

199. மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் ஈசன், இருளின்கண், கையில் எரியும் நெருப்பை ஏந்தி ஆடுகின்றவர்; நீர் வளம் மிக்க அம்பரில், கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருப்பவர்.

200. மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை எழில்வளர் இடமது என்பரே.

தெளிவுரை : வேதங்களை நன்கு விரித்துப் பாட வல்லவராகிய ஈசன், எரியும் நெருப்பானது பெருகவும், பிறைச் சந்திரன் சடை முடியில் அசையவும் நடம் புரிபவர். அப் பெருமான், நீர்வளம் நிறைந்த வயல்களையுடைய அம்பர் மாநகரில் கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலின்கண் வீற்றிருப்பவர்.

201. இரவுமல்கு இளமதி சூடி ஈடுயர்
பரவமல்கு அருமறை பாடி ஆடுவர்
அரவமோடு உயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல்கு எழில்நகர் மருவி வாழ்வரே.

தெளிவுரை : இரவில் ஒளிரும் இளம் பிறைச் சந்திரனைச் சூடிப் பெருமையுடைய அரிய மறைகளைப் பாடி ஆடுகின்ற ஈசன், அரவத்தை அணியாகத் தரித்து உயர்ந்து விளங்கும் செம்மலாய், அம்பர் என்னும் நகரில் வீற்றிருப்பவர்.

202. சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கணல் இறைசெய்த கோயில் சேர்வரே.

தெளிவுரை : ஈசன், சங்கால் ஆன குழையைக் காதில் அணியாகக் கொண்டு விளங்குபவர்; சாமம் என்னும் வேதத்தை ஓதி அருள்பவர்; வெம்மையான நெருப்பினைக் கரத்தில் ஏந்தி வீசி ஆடுபவர். அப்பெருமான், அழகிய திருவிழாக்கள் விளங்கும் அம்பர் மாநகரில் கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய கோயிலாகப் பொருந்தி விளங்குபவர்.

203. கழல்வளர் காலினர் சுடர்கை மல்கஓர்
கழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடமது என்பரே.

தெளிவுரை : ஈசன், திருப்பாதத்தில் நன்கு ஆர்க்கும் வீரக்கழலைக் கொண்டு விளங்குபவர்; சுடர்விட்டு எரியும் நெருப்பானது கையில் விளங்கவும், சுழற்சியை உடைய கங்கையானது சடையில் விளங்கவும் ஆடுபவர். அப் பெருமான், வேள்வித் தீ வளர்த்து அந்தணர்கள் ஓம்பும் அம்பர் என்னும் நகரில், பைம்பொழிலின் ஒளி மேவும் பெருந்திருக் கோயிலின்கண் வீற்றிருப்பவர்.

204. இகலுறு சுடர்எரி இலங்க வீசியே
பகலிடம் பலிகொளப் பாடியாடுவர்
அகலிட மலிபுகழ் அம்பர்வம்பவிழ்
புகலிட நெடுநகர் புகுவர் போலுமே.

தெளிவுரை : வலிமை மிகும் சுடரானது, நன்கு எரியுமாறு வீசிப் பலி ஏற்கும் பொருட்டுப் பாடுவதும் ஆடுவதும் ஆக விளங்குபவர், ஈசன். அவர், புகழ் மலிந்து ஓங்கும் அம்பரில், மணம் கமழும் பெருங்கோயிலைத் தமது இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் போலும்.

205. எரியன மணிமுடி இலங்கைக் கோன்தன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.

தெளிவுரை : நெருப்புப் போன்று சுடர்விடும் மணிகளை முடியில் பதித்து மேவிய இராவணனுடைய கரிய நிறங் கொண்ட பெரிய கைகள் நலியுமாறு அடர்த்த திருப்பாதத்தை உடைய ஈசன், அரியவராய், வளமை மிக்க நகராகிய அம்பரில் இனிமையொடு வீற்றிருந்து அருள் புரிபவராய், பூத கணங்கள் சூழத் திகழ்பவர்.

206. வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே.

தெளிவுரை :  நறுமணம் கமழும் தாமரை மலர் மீது திகழும் பிரமனும், கொடிய படத்தை உடைய அரவத்தைப் படுக்கையாகக் கொண்டு மேவும் செல்வனாகிய திருமாலும், அறிவதற்கு அரியவராகிய ஈசன் அம்பரில் கோச்செங்கட் சோழனார் கட்டிய கோயிலில் சேர்ந்து விளங்குகின்றவர்.

207. வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையும் தாமுமே.

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் கட்டுரையாக மொழிவனவற்றைப் பயனுடையதெனக் கொள்ள வேண்டாம். ஆறுகாங்கு திரிந்து அலையாது நீர் வளம் மிகுந்துள்ள அம்பர் மாநகரில், அம்பிகையோடு வீற்றிருக்கும் ஈசனைத் தரிசித்து அருள் பெற வாருங்கள்.

208. அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொள்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.

தெளிவுரை : அழகரை, அடிகளை, அம்பர் நகரில் மேவிய ஒளி திகழும் சடை முடியுடைய நீலகண்டப் பெருமானைத் தமிழில் சிறந்து விளங்கும் பெரியோனாகிய ஞானசம்பந்தன் சொன்ன தமிழாகிய இத் திருப்பதிகத்தை உலகில் ஓதுவீராக ! நற்கதியுறுவீராக !

திருச்சிற்றம்பலம்

278. திருப்பூவணம் (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

209. மாதமர் மேனியனாகி வண்டொடு
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரண மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : உமாதேவியைத் திருமேனியில் பொருந்தியவராகி, வண்டு அமரும் மலர்கள் கொண்டு விளங்கும் பொழில் உடைய பூவணத்தில் உறையும் ஈசன், வேதமாக விளங்குபவர். அப்பெருமான், பகைத்து எழுந்த மூன்று அசுரர்களின் கோட்டைகளை அம்பால் எய்து எரியுமாறு செய்த நாதன். அவ் இறைவனுடைய திருவடியைத் தொழ நன்மை விளையும்.

210. வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
தேனணி பொழில்திருப் பூவ ணத்துறை
ஆனநல் லருமறை அங்கம் ஓதிய
ஞானனை அடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : வானில் அணி கொண்டு திகழும் சந்திரனைத் தொடும் அளவு உயர்ந்து ஓங்கிய வண்டு நுகரும் தேன் துளிக்கும் மலர்கள் விளங்கும் பொழிலை உடைய பூவணத்தில் உறையும் ஈசுன், எல்லாருக்கும் நலம் வழங்கும் நான்கு தேவங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் நன்கு ஓதி அருளியவர். அப் பெருமானுடைய திருவடி மலர்களைத் தொழுது போற்ற, எல்லா நன்மைகளும் கைகூடும்.

211. வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோடு ஆறு சூடிய
நந்தியை அடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : கொடுமையாகத் தாக்கி விளையும் துன்பங்களுக்கும், அடைகின்ற பிணிகளுக்கும் காரணமாகிய வினைகள் தீரும் வழியாக, ஈசனைத் தொழுது போற்றுகின்றோர் விளங்கும் நகர் பூவணம். ஆங்கு உறைகின்ற இளம்பிறைச் சந்திரனும் கங்கையும் சூடிய ஈசனின் திருவடிக் கமலத்தைத் தொழுது போற்ற, நன்மை யாவும் கைகூடும்.

212. வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந்து ஏதஅது வார்வினை
நாசனை அடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : நறுமணம் கொண்ட மலர் மாலைகள் தரித்துத் திருவெண்ணீற்றைக் குழையப் பூசிப் பொழில் திகழ் பூவணத்தில் உறையும் ஈசன், மலர் புனைந்து ஏத்தும் அன்பர்களின் வினையை நாசம் செய்பவன். அப்பெருமானின் திருவடி மலர்களøத் தொழுது போற்ற எல்லா நன்மைகளும் கைகூடும்.

213. குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில்திருப் பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரண மூன்றுஎய்த
பெருந்தகை அடிதொழப் பீடை இல்லையே.

தெளிவுரை : குருந்தம், மாதவி, கோங்கும், மல்லிகை ஆகிய மலர்கள் பொருந்திய பொழில் விளங்கும் திருப்பூவணத்தில், வல்லமையுடைய அசுரர்களின் மூன்று கோட்டை மதில்களையும் எரியுமாறு செய்த ஈசனின் திருவடியைத் தொழுது போற்றப் பற்றியுள்ள தீவினை யாவும் நீங்கும்.

214. வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
பொறியர் வணிபொழில் பூவ ணத்துறை
கிறிபடும் உடையினன் கேடில் கொள்கையன்
நறுமல ரடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : மணம் கமழும் புன்னை, புலி நகக் கொன்றை முதலான மரங்கள் பெருகிப் பொழிலின் எழுப்பி அணி கொளத் திகழும் பூவணத்தில், மயக்கள் தரும் உடை தரித்த கொள்கை உடையவராக வீற்றிருக்கும் ஈசனின் மணம் கமழும் திருவடி மலரைத் தொழ, எல்லா நலன்களும் கைகூடும்.

215. பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.

தெளிவுரை : பாறையின் ஒலியும் முழவின் ஓசையும் ஆர்க்கப் பாடலும் ஆடலும் கொண்டு விளங்கும் ஈசன், சாந்தம் மல்க வழங்கும் பொழில் திகழும் பூவணத்தில் உறைபவர். அப்பெருமான், வேதங்களை விரித்து ஓதி, உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு அருள் புரிபவர். வீரக் கழல் ஒலிக்க மேவும் அப்பரமனின் திருவடியைத் தொழத் துன்பம் என்பது இல்லை.

216. வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவணந்தனைப்
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனுடைய நீண்ட முடிகளைத் தனது திருப்பாத விரல்லா அடர்த்திய ஈசன், தூய்மையான திருவெண்ணீற்றைத் தரித்தவராய்க் கங்கையைச் சடை முடியில் கொண்டு பூவணத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமானைப் பரவிப் போற்றும் அடியவர்களுக்குப் பாவமானது அணுகாது. இது சிவனடியார்களைத் தீவினையானது பற்றி நிற்காது என உணர்த்துவதாயிற்று.

217. நீரமல்கு மலருறை வானும் மாலுமாய்ச்
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனைந்து ஏத்தல் இன்பமே.

தெளிவுரை : புகழ் மிகுந்த செல்வமாகி இன்னுயிர்களைத் தன் வயப்படுத்தும் ஈசன், பிரமனும் திருமாலும் மலரடிகளைக் காண முடியாதவாறு செய்தவர் மழுப்படையுடைய அப்பெருமான் மேவிய பூவணம் என்னும் திருத்தலத்தைச் சிறப்பான மலர்கள் கொண்டு ஏத்துதல் இன்பம் தருவதாகும்.

218. மண்டைகொண் டுழிதரு மதியில் தேரரும்
குண்டரும் குணம்பல பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடிதொழுது ஏத்தல் கன்மமே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் நற்குணம் பயவாத சொற்கள் பல பேசும் தன்மையில் உள்ளவர்கள். அவற்றைப் பொருட்டாகக் கொள்ளாது. வளமான பொழில்களையுடைய ஈசனின் புகழ் மணக்க மேவும் பூவணத்தைக் கண்டவர்தம் பக்தர்களின் அடி மலரைத் தொழுது ஏத்துதல் கடமையாகும்.

219. புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
அண்ணலை அடிதொழுது அந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞான சம்பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.

தெளிவுரை : புண்ணியம் செய்த மாந்தர்கள் தொழுது போற்றுகின்ற பூவணத்தில் உறையும் ஈசனை, வணங்கிப் போற்றிக் காழி நகரில் மேவும் அருமறை வல்லவராகிய ஞானசம்பந்தன் வழங்கி அருளிய இத்திருத்தமிழ்ப் பாடல்களை ஓத, பாவங்கள் யாவும் விலகும்.

திருச்சிற்றம்பலம்

279. திருக்கருக்குடி (அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கருக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

220. நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்குவந்து எய்து நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனலெரி யாடும்எம் அடிகள் காண்மினே.

தெளிவுரை : நனவிலும் கனவிலும், நெஞ்சில் தோன்றும் நினைவிலும் எனக்கு நேரில் காட்சி புரியும் ஈசன், கடலால் சூழப்பெற்ற இவ் உலகம் போற்றும் கருக்குடியில், கரத்தில் நெருப்பேந்தி ஆடுகின்ற எமது அடிகள் ஆவார். அப் பெருமானைக் கண்டு தரிசித்து நலம் கொள்வீராக.

221. வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
காதியல் குழையினன் கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.

தெளிவுரை : வேதத்தின் தலைவனாகவும், இடபக் கொடியுடையவனாகவும், மலமற்ற விமலனாகவும் உள்ள ஈசன், பகைத்த முப்புரு அசுரர்களின் கோட்டை மதில்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப் பெருமான் காதில் குழை அணிந்தவராய்க் கருக்குடியில் வீற்றிருக்கும் ஆதிக் கடவுள். அப்பரமனின் திருவடி மலரைத் தொழுது போற்றுபவர்களுக்குத் துன்பம் இல்லை.

222. மஞ்சுற பொழில்வள மலிக ருக்குடி
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ.

தெளிவுரை : மேகம் சுழும் பொழில் வளம் மிக்க கருக்குடியில் நஞ்சினை அருந்திய மிடறுடைய நீலகண்டராய் விளங்கும் ஈசன், உமாதேவியும் அஞ்சுமாறு கொடிய மயானத்தில் ஆடல் கொண்டு விளங்குவது எனக்கொல் !

223. ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கானிடை ஆடலான் பயில்க ருக்குடிக்
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.

தெளிவுரை : புலன்களின் உணர்வுடைய இப்பிறவியை நீக்க வேண்டும் என்று எண்ணும் அன்பரீர் ! மயானத்தில் திருநடம் பயிலும் கருக்குடி நாதரின் திருக்கோயிலை வணங்கியும், வானவர்கள் தொழும் அப் பெருமானின் திருக்கழலை வாழ்த்தியும் வாழ்வீர்களாக. இப் பிறவியில் இத் தன்மையில் வழிபடும் அடியவர்கள், பிறவியை அறுக்கும் பேரருளைப் பெறுவார்கள் என்பது குறிப்பு.

224. சடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
கூடுவர் உலகிடை ஐயங் கொண்டொலி
பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.

தெளிவுரை : ஈசன், சடை முடியில் கங்கையைச் சூடி, உமாதேவியை ஒரு பாகத்தில் சேர வைத்து, உலகில் பிச்சை ஏற்கும் தன்மையில் பாட்டு இசைத்துப் பறையொலி கொட்ட நள்ளிருளில் நடம் புரிபவர். இது கருக்குடியில் வீற்றிருக்கும் அப் பெருமானின் அருள் வண்ணம் ஆகும்.

225. இன்புடை யாரிசை வீணை பூணரா
என்புடை யாரெழில் மேனி மேலெரி
முன்புடை யார்முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்புடை யார்கருக் குடியெம் அண்ணலே.

தெளிவுரை : ஈசன், வரம்பில்லாத இன்பம் உடைய குணப்பாங்கு உடையவர்; வீணை கொண்டு இசை பயில்பவர்; எலும்பினை மாலையாக அணிபவர்; எழில் மிக்கதாகிய தூய உடம்பினர்; திருக்கரத்தில், சுடர் விடும் நெருப்பினை ஏந்தியவர்; யாவற்றுக்கும் மூலப் பொருளாகவும் முதற் பொருளாகவும் திகழ்பவர்; அன்பர்களுக்கு அன்புடையவராக இருப்பவர்; அப்பெருமான், கருக்குடியில் வீற்றிருக்கும் எம் அண்ணல் ஆவார்.

226. காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடியரவு அணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திருக்க ருக்குடிச்
சாலவும் இனிதுஅவ ருடைய தன்மையே.

தெளிவுரை : சிவபெருமான், காலம், நியதி முதலான எல்லையாகவும், சூரியன் முதலான சுடர்களாகவும், நெருப்பு முதலான பூதப் பொருள்களாகவும் விளங்குபவர். அப்பெருமான், சடை முடியில் அரவத்தை அணிந்தவர்; சிறப்பான புகழை உடையவர்; அவருடைய மாண்பு இனிது விளங்குமாறு திருக்கருக்குடியில் வீற்றிருப்பவர்.

227. எறிகடல் புடைதழு இலங்கை மன்னனை
முறிப வரையிடை அடர்தத மூர்த்தியார்
கறைபடு பொழில்மதி தவழ்க ருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனை, மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியாகிய ஈசன், சிவனடியார்கள் பக்தி அறிவோடு பரவிப் போற்றும் கருக்குடியில் வீற்றிருப்பவர். அப் பெருமான் யாவர்க்கும் நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றவர்.

228. பூமனும் திசைமுகன் றானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்குஎரி
ஆம்என உயர்ந்தவன் அணிக ருக்குடி
நாமன னினில்வர நினைதல் நன்மையே.

தெளிவுரை : திசைமுகனாகிய பிரமனும், பொற்புடைய வாமனாவதாரம் கொண்ட திருமாலும், அறிய முடியாத வண்ணத்தில் ஓங்கி எரியும் தீத்திரளாக உயர்ந்த சிவபெருமான், அணிதிகழ மேவும் கருக்குடியில் வீற்றிருப்பவர். அத்திருத்தலத்தை நாம் மனத்திற் கொண்டு நினைத்தல் நன்மையைத் தரும்.

229. சாக்கியர் சமண்பபடு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய உரைகொளேல் அருந்திருந்நமக்கு
ஆக்கிய அரனுறை அணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் பொய்யான மொழிகளைக் காட்டுரையாக்கிக் கூறுவதனை ஏற்றுக் கொள்ள வேண்டாம். நமக்கு ஆக்கிய அருமையான செல்வமானது அரன் உறைகின்ற அணிதிகழும் கருக்குடி ஆகும். இப்பூவுலகில் நன்கு விளங்கும் இக் கோயிலில் அன்பர் பெருமக்கள் சூழப் போந்து வணங்கி உய்வாராக.

230. கானலில் விரைமலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி
ஆனமெய்ஞ் ஞான சம்பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க்கு உயரும் இன்பமே.

தெளிவுரை : கடற் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள், பெருகி ஓங்கும் காழி நகருக்கு உடையவனாகி, மேலானவனாகிய கருக்குடி நாதனின் ஒளியாகி மெய்ஞ்ஞானம் திகழும் ஞானசம்பந்தன் சொல்லிய வினை நீக்கம் செய்யவல்லதாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்குப் பேரின்பம் மிகும்.

திருச்சிற்றம்பலம்

280. பஞ்சாக்கரத் திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்

231. துஞ்சலும் துஞ்சலில் லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்சஉ தைத்தன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : உறங்கும்போதும், உறங்காது விழித்திருக்கும் போதும் நெஞ்சம் கசிந்து உருகுமாறு, அஞ்செழுத்தை நினைத்துப் போற்றுக. இதனை, நாள் தோறும் புரிவீராக. மார்க்கண்டேயர், நெஞ்சிலே வேறு எண்ணம் இன்றி ஈசனையே நினைத்துத் திருவடியை வாழ்த்திப் போற்றிய காலத்தில், உயிரைக் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தது திருவைந்தெழுத்தே.

232. மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : மந்திராக விளங்குகின்ற நான்கு வேதங்களும் ஆகி, தேவர்களின் சிந்தையில் நிலவி இருந்து அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது, திருவைந்தெழுத்து ஆகும். இத்தகைய திருவைந்தெழுத்து வேள்வியை ஓம்பும் செம்மையுடைய அந்தணர் பெருமக்களின் மந்திரமாக இருந்து, காலச் சந்திகள்தோறும் ஓதப் பெற்ற ஆற்ற வல்லதும் ஆகும்.

233. ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்
தேனை வழிதிறந்து ஏத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : இவ் அரிய தேகத்தில் உள்ள உயிர்ப்பு, சக்தியை ஒருமிக்கச் செய்து, நிட்டை கூடப் பெற்று, ஞான விளக்கம் திகழச் செய்வதும், அத்தகைய நல்லறிவை நாடுபவர்களுக்குத் தோன்றும் அறியாமையாகிய இடரைக் கெடுப்பதும், திருடைந்தெழுத்தாகும்.

234. நல்லவர் தீயவர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : புண்ணியப் பெருமக்களாயினும், பாவத்தின் மேலிட்டுக் கொடுமைகள் புரியும் தீயவர்களே என்றாலும், பாகுபாடு இன்றி சிவமுத்தியைக் காட்டுவிக்கும் ஆற்றல் உடையது, திருவைந்தெழுத்து. இயமனுடைய தூதுவர்களால் உயிர் பறிக்கப்படும் காலத்திலும், அதன் துன்பத்தைத் திருவைந் தெழுத்தானது நீக்கிக் காக்கும் நெறியுடையதாகும்.

235. கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்து
அங்குள் பூதமும் அஞ் ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : மன்மதனின் அம்பானது, தேன் துளிர்க்கும் ஐந்து மலர்களாகிய தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்பனவற்றால் ஆனவை. இவ்வுலகில் உள்ள பூதங்கள் நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து உடையன; பொழில்கள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐவகையுண்டு; பாம்பின் படம் ஐந்து ஆகும்; ஈசனின் திருக்கரத்தில் மேவும் விரல்கள் ஐந்தாகும். திருவைந்தெழுத்து ஐந்து ஆகும்.

236. தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையி னும்துணை அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : தும்மலும் இருமலும் உடலின்கண் நேருங்காலத்திலும், கொடிய துயரத்தால் நைந்து வாடுங் காலத்திலும், வினையின் வயத்தால் தீமையானது அடையும் காலத்திலும், இப்பிறவியில் மட்டும் அல்லாது, மறு பிறவியிலும், நாள்தோறும் ஓதப் பெறும் திருவைந்தெழுத்தானது துணையாகி நின்று நலம் பயக்கும்.

237. வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆட உகப்பன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : திருவைந்தெழுத்தானது, சாதலும் பிறத்துலும் நீங்கிய பேறாளர்களாக்கும் ஆற்றல் உடையது. பீடிக்கப்பெற்ற தொல் பிணியைத் தீர்த்து நாள்தொறும் நல்ல செல்வத்தை அளித்து மகிழ்விக்கச் செய்யும் திறம் கொண்டதாகிய இத்திருவைந்தெழுத்து, சிறப்பான நடம் புரிந்து மகிழும் ஈசனால் பெரிதும் உகந்து ஏற்கப்படுவதாகும்.

238. வண்டமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : வண்டு அமரும் கூந்தலை உடைய உமாதேவியால் போற்றப்படுவதும் மற்றும் இராவணன் கசிந்துருகிப் பாடி ஈசனாரின் அருளைப் பெற்று உய்யச் செய்ததும் திருவைந்தெழுத்து ஆகும். திருத்தொண்டர்கள் இத்திருவைந்தெழுத்தினைக் கொண்டு துதிக்க, அவர்களுக்கு அண்டங்களை ஆளுகின்ற பேற்றினை ஆக்க வல்லதும் இதுவே.

239.கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணுதற்கு ஒண்ணாத புகழ் வண்ணமாகிய திருவடி மலர்களின் செவ்வியை, நாள்தோறும் பெருமை கொள்ளுமாறு பேசிப் போற்றுவதற்கு ஆர்வமாக விளங்குவது திருவைந்தெழுத்தாகும்.

240. புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திரம ஆவன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : புத்தர்களும் சமணர்களும், கூறும் பொய்யுரைகளை ஏற்காத உறுதியான சித்தம் உடையவர்கள், நன்கு தேர்ந்தும் தெறிவும் கொண்டவர்களாய்ச் சிவஞானம் தரவல்ல திருவெண்ணீறு அணியும் பேறுடையவர்கள் ஆவர். அவர்களுடைய தீவினை ஆகிய பகையை மாய்க்கும் அத்திரம் என ஆவது திருவைந்தெழுத்து.

241. நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.

தெளிவுரை : நற்றமிழின் நாயகனாய், நான்கு மறைகள் வல்லவனாய், காழி நகரில் மேவும் பெருமக்களின் மன்னவனாய் மேவும் ஞானசம்பந்தன், நன்கு நினைத்து எத்தகைய குற்றத்தையும் நீக்கிக் காக்க வல்லதாக உரைத்த, திருவைந்தெழுத்துடைய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தேவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

281. திருவிற்கோலம் (அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில், கூவம்,திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

242. உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : ஈசன், அழகிய வடிவத்தில் திகழும் உமாதேவியோடு ஒன்றி நின்று, திருவுடையவராகிச் சடை முடியில் திங்களும் கங்கையும் சூடியவர். அப்பெருமான், வானவர்கள் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க் கோலம் பூண்டவர்; அப் பரமன் உறைகின்ற இடம் திருவிற்கோலம் ஆகும்.

243. சிற்றிடை உமையொடு பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : சிறிய இடையுடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஈசன், அழகிய கையில் எரியும் நெருப்பை கொண்டு விளங்குபவர்; ஓர் அம்பினைக் கொண்டு அசுரர்களின் மூன்று புரங்களையும் எரிந்து சாம்பலாகுமாறு போர் செய்து வெற்றி கொண்டவர். அப் பெருமான் உறைகின்ற இடமாவது, திருவிற் கோலமேயாகும்.

244. ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ணம் வண்ணவான்
பையரவு அல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : ஈசன், யாவற்றுக்கும் தலைவர்; நல்ல அதிசயமாக விளங்கிப் புதுமைப் பொலிவு தோன்ற அருள் புரிபவ்; பிரமனும் தேவர்கள் முதலானோரும் தொழுகின்ற நீலகண்டர்; நல்வண்ணம் உடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமான் செம்மேனியராய் வீற்றிருக்கும் இடமாவது திருவிற்கோலமே ஆகும்.

245.விதைத்தவன் முனிவருக்கு அறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந்து உருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : ஈசன், சனகாதி முனிவர்கள் என்று சொல்லப்படுகின்ற சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் அறப் பொருளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கினையும் உபதேசித்து அருளியவர்; காலன் உயிரிழந்து வீழுமாறு திருப்பாதத்தால் உதைத்தவர்; உலகத்தை அழித்த வன்மையுடைய முப்புர அசுரர்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப்பெருமானின் உறைவிடம் திருவிற்கோலமே ஆகும்.

246. முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : ஈசன், எல்லாப் பொருள்களுக்கும் மூலம் ஆனவர். மும்மூர்த்திகளுள் முன் விளங்கும் தலைமை காணும் முதல்வராகவும் திகழும் ஈசன், கொத்தாகப் பூக்கும் மலர்ப் பொழில் உடைய கூவம் என்னும் ஊரில் மேவியவர்; குறைந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடியவர்; அடியவர்களைப் பற்றியுள்ள வினை யாவும் நீங்குமாறு செய்பவர்; அப்பெருமான் உறைகின்ற இடம், திருவிற்கோலம் ஆகும்.

247. தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : அரிய வேதங்ககளையும் அதன் அங்கமாகிய ஆகமங்களையும் தொகுத்து அளித்த ஈசன், பொழில் திகழும் கூவம் என்னும் ஊரில் மேவிக் கொடுமைகளை மிகுத்துச் செய்த முப்புர அசுரர்களை, எரிந்து சாம்பலாகுமாறு போர் செய்து அழித்து, திருவிற்கோலத்தை உறைவிடமாகக் கொண்டுள்ளவர்.

248. விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளம்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோன்இ டர்படச்
சிரித்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : அரிய வேதங்களை விரித்து ஓதிய சிவபெருமான், விரிந்து சென்ற கங்கையைச் சடைமுடிவில் நிலவுமாறு தரித்தவர்; பகைவராகிய முப்புர அசுரர்களின் கொடுஞ் செயல்கள் யாவும் அற்றொழியுமாறு, அவர்களை எரிந்து சாம்பலாகச் செய்தவர்; இராவணன், கயிலையைப் பெயர்த்த போது அவன் இடர் உற்று நையுமாறு திருவிளையாடல் புரிந்தவர். அப் பெருமானின் உறைவிடமாவது, திருவிற்கோலம் ஆகும்.

249. திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமனது ஆற்ற லால்உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : சிறகுகளைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் திரிந்து சேதங்களையும் தேவர்களுக்குத் தீங்குகளையும் செய்த முப்புரங்களை எரிந்து சாம்பலகுமாறு புரிந்து ஈசன், அரவமும் சந்திரனும் சடை முடியில் வைத்த பெருமான் ஆவார். அப் பெருமான், அரியும் பிரமனும் தமது ஆற்றலைப் பெரிதாகக் கொண்டு முனைந்ததால் காணுதற்கு அரியவனாகியவர். அவரது உறைவிடமானது, திருவிற்கோலம் ஆகும்.

250. சீர்மைஇல் சமணொடு சீவ ரக்கையர்
நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : செம்மையான புகழின்பாற் கொள்ளாத சமணரும் சாக்கியரும் உரைக்கும் அன்பற்ற உரைகளைக் கொள்ளாது, ஈசன்பால் அன்பு கொண்டு, உலகில் பெருஞ் செல்வத்தைப் பரிவுடன் நல்குபவர், ஈசன், அத்தகைழ புகழ் மிகுந்த பெருமான் உறையும் இடமானது, திருவிற்கோலம் ஆகும்.

251. கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல்ல தமிழ்ஞான சம்பந்தன
பாடவல் லார்களுக்கு இல்லை பாவமே.

தெளிவுரை : வளைந்ததும், குறையுடையதும் ஆகிய சந்திரனைச் சடை முடியில் சூடி விளங்குகின்ற சிவபெருமான், கூவம் என்னும் ஊரில் பெருமை கொண்டு மேவும் மதில்களை உடைய திருவிற்கோலத்தை நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தனது பாடலைப் பாட வல்லவர்களுக்குப் பாவமானது விலகிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

282. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

252. மண்ணின்நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல்ல கதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : இப்பூவுலகில் நல்ல வண்ணம் வாழலாம். நற்கதி என வழங்கப் பெறும் முத்தி நலனை அடைய வேண்டும் என எண்ணும் தன்மையிலும், அது கைவரப் பெறும். இப்பேற்றினை அளிக்க வல்லது கழுமலம் எனப்பெறும் வளம் மிகுந்த நகராகும். அத்திருத்தலத்தில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியாரை உடனாகக் கொண்டு பெருந்தகையாகிய ஈசன் நன்கு வீற்றிருப்பவர்.

253. போதையார் பொற்கிண்ணத்து அடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தான்எனை ஆண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : ஞானம் பெருகும் அடிசிலைப் பொற்கிண்ணத்தில் கொண்டு ஈசனின் ஆணைப்படி, உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்டுவித்து அருளிச் செய்தவர். அதுகண்ட சிவபாத இருதயர், பால் அறாவாயராக விளங்கிய ஆளுடைய பிள்ளையாரை முனிந்து நோக்கி, யார் தந்த அடிசில் என வினவ, ஈசன், திருக்காட்சியினை நல்கி ஆட்கொண்டவர். அப்பெருமான், காதில் குழையுடையவர். உமாதேவியை உடனாகக் கொண்டு கழுமலமாகிய வள நகரில் வீற்றிருப்பவர், அவ் இறைவனே.

254. தொண்டணை செய்தொழில் துயரறுத்து உய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகஓர் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : தொன்றுதொட்டு மன்னுயிரைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துயரத்தைக் களைந்து உய்தி அடைவதற்காகக் கொன்றை மலரைச் சடை முடியில் தரித்து, நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் என்னும் வள நகரில், உமாதேவியை உடனாகக் கொண்டு , ஈசன் வீற்றிருக்கின்றார்.

255. அயர்வுளோம் என்றுநீ அசைவுஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : நெஞ்சமே ! வினைத் துன்பத்தால் தளர்வடைந்து எதுவும் கைகூடப் பெறாது ஆயிற்று என்று தளர்ச்சி கொள்ள வேண்டாம். ஒளி மிக்க வளையலை அணிந்த கையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, கயல்கள் குதிக்கும் நீர்வளம் மிகுந்த கழுமலம் என்னும் வளமையான நகரில், பலவாகிய புகழ்மிகும் திருப்பெயர்கள் கொண்டு துதிசெய்யுமாறு ஈசன் வீற்றிருக்கின்றவர் அல்லவா !

256. அடைவிலோம் என்றுநீ அயர்வுஒழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : நெஞ்சமே ! திருவடிப் பேற்றை அடையும் வகை இல்லையே எனத் தளர்வு கொள்ள வேண்டாம். இடபக் கொடியுடைய ஈசன், தேவர்கள் தொழுது போற்றும் கழுமலமாகிய வளம் பொருந்திய நகரில் உமாதேவியரோடு வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்தி வழிபட்டு நலம் கொள்க என்பது குறிப்பு.

257. மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஈசனைத் தவிர பற்றக் கூடியது வேறு இல்லை. நான்கு மறைகள் அதன் தொடர்புடைய பலவும் கற்று, அதன்படி ஒழுகும் வேதியர்கள், பெருமை சேர்க்கும் கழுமலமாகிய வளநகரில், உமாதேவியை உடனாகக் கொண்டு, என்னை ஆளுடைய ஈசன் விளங்குபவர் அல்லவா !

258. குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவனொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : மனக் குறை கொண்டு மொழியும் சொற்களை, நெஞ்சமே ! விடுவாயாக. நிறைந்த வளையலை முன்கையில் அணிந்து மேவும் உமாதேவியாரை உடனாகக் கொண்டு, பொழில் திகழும் கழுமலத்தில், பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய ஈசன், வீற்றிருப்பவர் அல்லவா !

259. அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமலவளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : அரக்கனாகிய இராவணன் பொருந்தி மேவும் பெருமையுடைய திருக்கயிலையை எடுத்தவன், அவன் அலறித் துடிக்குமாறு, ஈசன் தனது திருப்பாத விரலால் நெருக்கினார். பின்னர், அவ் அரக்கன் நீண்டு இனிமை தரும் யாழ் மீட்டிப் பாட, கூர்மையான வாளினை அருள் செய்தார். அப்பெருமான் கழுமல வள நகரில் விளங்குபவர். அப்பெருந்தகை, பெருகிச் சேரும் அன்பினனாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு நனி வீற்றிருப்பவர் அல்லவா !

260. நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர்
அடியொடு முடியறி யாஅழல் உருவினன்
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் காணுதற்கு அரியபொருளாய், அடியும் முடியும் அறியாத தன்மையில், அழல் உருவாய் ஓங்கியவர், சிவபெருமான். அப்பெருமான், மணம் கமழும் பொழில் திகழும் கழுமலம் எனப்படும் வளமையான நகரில், பெண் யானையின் நடை போன்று விளங்கும் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவர் அல்லவா ! அப்பெருமானின் இன்னருளால் நலமே நிகழும் என்பது குறிப்பு.

261. தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளம் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உண்மைப் பொருளை நவிலாது, தமக்குப் பொருந்தியவாறு உரைக்க, அவற்றைக் களைந்து, ஈசனின் திருவடி இணை மலரை அடைந்து உய்வீராக. அத்தகைய நற்பேறு அளிக்கும் தன்மையில் பொழில் வளர் கழுமலத்தில், பேரறத்தாளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு, ஈசன் விளங்குபவர் அல்லவா !

262. கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு இருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள்போய் விண்ணுலகு ஆள்வரே.

தெளிவுரை : நன்னீர் வளமும் தேன் வளமும் மல்கும் கழு மல நகரில் உமாதேவியோடு வீற்றிருந்த எமது தலைவனைப் பேற்றி அருந்தமிழாய் விளங்கும் ஞானசம்பந்தனது செந்தமிழ் எனப் பெறும் இத்திருப்பதிகத்தை விரும்பி ஏத்தி ஓதவல்லவர்கள், விண்ணுலகில் ஆட்சிமை கொள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

283. திருந்து தேவன்குடி (அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

263. மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே.

தெளிவுரை : திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடப் பொலிவுகள் யாவும் அருந்தவத்தோரால் தொழப் பெறுபவை. அத்தகைய திருப்பொலிவைக் கண்டு தரிசனம் செய்தால், நோய் தீர்க்கும் மருந்து எனத் தோன்றி நலம் தரும்; மந்திர வாசகமாக விளங்கி வெற்றியை நல்கும்; மறுமைக்கு உறுதுணையாக வழங்கப்படும் புராண வராலாறு போன்று புண்ணியத்தை ஈட்டித் தரும்.

264. வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் கப்படாப் பெருளை யோர்விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே.

தெளிவுரை : மன்னுயிரின் தீவினைகளை இல்லாமை ஆக்கும் தேவன் குடியில் வீற்றிருக்கும் ஆதியும் அந்தமும் இல்லாத ஈசனின் திருவேடப்பொலிவானது, அலங்காரப் பொருள்களை நல்கியும், தீவினைகளை அழித்தும், ஞான நூல்களின் நுண்ணிய பொருள்களை நனி உணருமாறு செய்வித்தும் அருள்புரிய வல்லது.

265. மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே.

தெளிவுரை : தேனின் மணமும், வண்டின் இசையும் பெருகித் திகழும் தேவன் குடியில் வீற்றிருக்கும் ஈசன், பஞ்ச கௌவியத்தைப் பூசனைப் பொருளாகக் கொண்டு விளங்கும் அடிகள் ஆவர். அப்பெருமானின் திருவேடப் பொலிவானது, மன்னுயிர்க்கும் பெருமை தரவல்ல புகழை மேம்படச் செய்யும்; குற்றம் புரிந்து தீவினைகளை வளர்க்கும் அஞ்ஞானமாகிய மாசினை நீக்கும்; உயர்ந்த பதவியாகிய சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ச நிலைகளுக்குச் செல்லுகின்ற வழிகளைக் குருமூர்த்தமாக விளங்கி உணர்த்தியருளும்.

266. செவிகளார் விப்பன சிந்தையுள் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகள்உய்க் கப்படும் அடிகள்வே டங்களே.

தெளிவுரை : புவியின் வளத்தைப் பெருக்கும் நீர்வளம் மேவும் தேவன்குடியில், வேள்வியின் அவிர்பாகத்தைக் கொண்டு திகழும் அடிகளாகிய ஈசனின் திருவேடப் பொலிவானது, செவிகளுக்கு இனிமை விளங்கிச் சிந்தையில் சேரும் கருத்துக்களை நல்கவல்லது; ஈசனின் நறும்புகழைக் கூறும் கவிகளைப் பாடவைக்கவல்லது; கண்களுக்கு இனிய காட்சியினைக் காட்டியருள் வல்லது.

267. விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி
மண்ணுலா வும்நெறி மயக்கம்தீர்க் கும்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலான் ஏறுடை அடிகள்வே டங்களே.

தெளிவுரை : தெளிந்த நிலவினைத் தொடும் உயர்ந்த மதில்களை உடைய தேவன்குடியில் வீற்றிருக்கும் அண்ணலாகிய ஈசன், இடப வாகனத்தையுடைய அடிகள் ஆவர். அப்பெருமானின் வேடத் திருப்பொலிவு, தேவர் உலகத்தில் மேவும் நெறியைக் காட்டும்; முத்தி நெறி காட்டும்; இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி அஞ்ஞானத்திலிருந்து தெளிவிக்கும்.

268. பங்கம்என் எப்படர் பழிகள் என்னப்படா
புங்கம்என் னப்படர் புகழ்கள்என் னப்படும்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே.

தெளிவுரை : உயர்ந்த பொழில் கொண்ட தேவன்குடியில் வீற்றிருக்கும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் விரித்து ஓதிய ஈசனின் திருவேடப் பொலிவு, மன்னுயிர்களுக்கு, ஈனத் தன்மையால் உண்டாகும் பழிகளிலிருந்தும் காக்கும்; புகழும் தரும்.

269. கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக்கு
உரையில் ஊனம்மிலை உலகினில் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத்து அடிகள்வே டங்களே.

தெளிவுரை : அலைகள் பெருகுமாறு பாயும் நீர் வளம் மிகுந்த தேவன்குடியில், ஒளி மிக்க கோவண ஆடை கொண்டு மேவும் ஈசனின் திருவேடப் பொலிவானது, குற்றம் இல்லாத தன்மையில் விளங்குதலும், அதனைக் கருத வல்லவர்களுக்குக் குறை நீங்கப் பெற்று உலகில் பெருமையை நல்குதலும் ஆகும்.

270. உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகமா ரும்பொழில் சூழந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே.

தெளிவுரை : சிறந்து விளங்கும் பொழில் சூழ்ந்த தேவன்குடியில் ஒளி திகழும் மலர் தரித்து மேவும் ஈசனின் திருப்பொலிவானது, உலகத்தைத் தன் திறமைக்கு உட்பட்டுள்ளதாகச் செய்விக்கும் ஆற்றலுடைய இராவணனுக்கு ஈடு கொடுக்கும் ஆற்றலில் குறைந்துள்ள பூதகணங்கள் கூட அவ் அரக்கனை வெருட்டி நோக்கும் பாங்கினை உடையன.

271. துளக்கம்இல் லாதன தூயதோற் றத்தன
விளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந் தேவன்குடித் திசைமுகன் ஓடுமால்
அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.

தெளிவுரை : நறுமணம் கமழும், வண்டு அமரும் பொழில் சூழ மேவும் தேவன்குடியில், பிரமனும் திருமாலும் காணுதற்கு ஒண்ணாத ஈசனின் திருவேடத் திருப்பொலிவானது, நடுக்கத்தைத் தீர்க்கவல்லதும், தூய்மையான தோற்றம் உடையதும், அஞ்ஞானத்தை நீக்கி ஞான விளக்கும் புரிவதும் ஆகும்.

272. செருமரு தண்துவர்த் தேரம ணாதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே.

தெளிவுரை : துவர் ஆடை கொண்ட சாக்கியரும் சமணரும் கூறும் உரைகளை ஏற்க வேண்டாம். இலக்குமி வாசம் செய்யும் தாமரை மலர் திகழும் பொய்கை சூழ்ந்த தேவன்குடியில் வீற்றிருக்கும் அடிகளாகிய ஈசனின் திருவேடப் பொலிவு, அருமருந்தாகி இன்பத்தை பெருக்கும் பாங்குடையது. இத் திருத்தலத்தின் அம்பிகையின் பெயர் அருமருந்தம்மை என்பதும். அது ஈற்றடியில் குறிப்பால் சுட்டப் பெற்றுள்ளதும் காண்க.

273. சேடர் தேவன்குடித் தேவர்தே வன்றனை
மாடம் ஓங்கும்பொழில் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : பெருமை மிக்க தேவன்குடியில் மேவும் தேவாதி தேவனாகிய ஈசனைப் போற்றி மாடமாளிகைகளும் பொழில்களும் திகழும் காழியில் மேவும் ஞானசம்பந்தன் நன்று நாடவல்ல தமிழால் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இப்பிறவியின்கண் பாவம் இல்லாதவர்களாய் விளங்கி, நல்லின்பத்தை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

284. திருக்கானப்பேர் (அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில், சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

274. பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணலின்
அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.

தெளிவுரை : பெண் யானைகள் பின்னால் சூழ்ந்து மேவ, பெரிய துதிக்கையுடைய யானையானது மலர் கொண்டு ஏந்தி விடியற் காலையில் நீர் படிந்து, விதி முறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் மலர்ப் பொழில் திகழும் கானப் பேயர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அண்ணலாகிய ஈசனின் திருவடியை அன்றி, அடியவர்கள் சரணம் புகுதற்கு யாது உள்ளது !

275. நுண்ணிடைப் பேரல்கு நூபுர மெல்லடிப்
பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்
கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.

தெளிவுரை : நுண்ணிய இடையும், மென்மையான சிலம்பு அணிந்த பாதமும் உடைய பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் மேவும் ஈசன், நெற்றியில் கண்ணுடையவர். அப்பெருமான், கருதி வீற்றிருக்கும் கானப்பேயர் என்னும் தலத்தை, விண்ணுலகை ஆளும் விருப்பம் கொண்டுள்ளவர்கள் விரும்பி ஏத்துதல் கடமையாகும்.

276. வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம்
காவிவாய்ப் பண்செயும் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளு ஞானநீர்
தூவிவாய்ப் பெய்துநின்று ஆட்டுவார் தொண்டரே.

தெளிவுரை : பகலில், பொய்கையில் உள்ள தாமரை மலர்களில் தங்கித் தேனைப் பருகிய வண்டினம், இரவில் மலரும் நிலோற்பல மலரை நுகரும் தன்மையில், எஞ்ஞான்றும் பண்ணிசைத்து விளங்கும் சிறப்புடையது கானப் பேர் ஆகும். ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசனைச் சந்தனம் மற்றும் புனித நீர் கொண்டு பூசித்து மலர் தூவிப் போற்றி அடியவர்கள் விளங்குவர்.

277. நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை அவர்க்கலால் களைகிலார் குற்றமே.

தெளிவுரை : சாந்தம் நிலவும் நிறையுடைய நெஞ்சமும், நீரும், பூவும், ஒலித்து முழக்கும் முழவும், நைவேத்தியமும், திருப்புகழ்பாடல்களும் நன்கு விளங்குகின்ற கானப் பேர் என்னும் தலத்தில், கறைக் கண்டனாக பாங்கால் பூசித்து வழிபடுபவர்களுக்கு அல்லாது ஏனையோருக்குக் குறைகள் தீருமோ !

278. ஏனப்பூண் மார்பின் மேல் என்புபூண்டு ஈறிலா
ஞானப்பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய
கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர்
வானப்பேர் ஊர்புகும் வண்ணமும் வல்லரே.

தெளிவுரை : பன்றியின் கொம்பையும், எலும்பினையும் அணிகலனாகக் கொண்டு, எண்ணற்ற ஞானப் பொலிவுடைய திருநாமம் ஆயிரம் விளங்கப் பெற்று மேவும் ஈசன், நண்ணிய கானப்பேர் என்னும் ஊரினை, விரும்பித் தொழும் அடியவர்கள், தீயவினை அற்றவர் ஆவர்; வானப் பேரூர் என விளங்கும் அமராவதி நகருக்குச் செல்லும் வண்ணத்தைப் பெற்றவராகவும் திகழ்வர்.

279. பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும்என் உள்ளமே.

தெளிவுரை : யாவற்றையும் ஏற்கும் படர்ந்த சடையினில் கங்கையை ஏற்று சிவபெருமான், வெண்மையான சந்திரனைத் தரித்து விளங்குபவர. அஞ்ஞானத்தில் அழுந்தாத மெய்யன்பர்கள் மேவும் கானப் பேர் என்னும் தலத்தில் விளங்கும் மெய்யன்பர்தம் உள்ளத்தில் அப்பெருமான் திகழ, அவ் அடியவர் தம் திருஉள்ளத்தைக் கோயிலாக எண்ணி என் மனம் ஏத்தும்.

280. மானமா மடப்பிடி வன்கையால் அடக்கிடக்
கானமார் கடகரி வழிபடும் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணிகெட எண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.

தெளிவுரை : பெருமையான பெண் யானையை அடக்க வல்ல கானகத்தில் உள்ள பெரிய ஆண் யானையானது வழிபடும் கானப் பேர் என்னும் தலத்தில் டீவற்றிருக்கும் ஈசனை, இத்தேகத்தில் உள்ள பிணி கெட, ஞான மலராகக் கருதப்படுகின்ற அட்ட புட்பங்களாகிய கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, ஆகியவற்றின் பெருக்கத்தால் நண்ணுதல் நன்மையாகும்.

281. வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளுநாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.

தெளிவுரை : வாளும், வேலும் பெருமை மிகுந்த கயிலை மலையை எடுத்த உறுதியான தோளும் உடைய இராவணனின் நீண்ட முடிகளை நலியுமாறு ஊன்றிய திருத்தாளின் சிறப்புடைய ஈசனின் கானப் பேர் என்னும் தலத்தை, முதன்மையாய் வணங்கும் அடியவர்கள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும், உயர்ந்த நிலையினை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள்.

282. சிலையினான் முப்புரம் தீயெழச் செற்றவன்
நிலையிலா இருவரை நிலைமைகண்டு ஓங்கினான்
கலையினார் புறவில் தேன்கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; பிரம்மன், திருமால் ஆகியவர்தம் கண்களுக்குத் தோன்றாதவராய்த் தீத்திரட்சியசய் ஓங்கிய ஈசன், அப் பெருமானின் தேன் மணம் கமழத் திகழும் கானப் பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்று பவர்கள் தவமுடையவர்கள் ஆவார்கள்.

283. உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும் பயினிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளர்இளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.

தெளிவுரை : கையில் கமண்டலம் ஏந்தியும், சிகை நீக்கியும் உள்ள சமணர் சாக்கியர்கள் பயனற்றவை மொழிந்து பாவத்தை ஆள்பவர்களாவர். இளம்பிடியன்ன உமாதேவியாரைப் பாகங் கொண்டு மேவும் ஈசனின் கானப்பேர் என்னும் தலத்தினைத் தொழுது ஏத்துதல் கடமையாகும்.

284. காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இளவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத்து ஓங்குசீர் ஞானசம் பந்தன
பாட்டகத்து இவைவலார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : மயானத்தில் விளங்கி நடம்புரிதலை விரும்பிய ஈசனின் கானப் பேர் என்னும் தலத்தை, நீர்வளம் மிக்க காழியில் சீர்மேவ ஓங்கும் ஞானசம்பந்தன் பாடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

285. திருச்சக்கரப்பள்ளி (அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

285. படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடம் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : படைக்கலனில் சிறப்புடைய வெண்மழு ஏந்திப் பாயும் புலியின் தோலினை உடையாகவும், உமாதேவியாரைத் தனது திருமேனியில் ஒரு கூறாகவும் விளங்கும் சிவபெருமான், இடப வாகனத்தில் வீற்றிருப்பவர்; திருவெண்ணீறு பூசித் திகழ்பவர்; கங்கையைச் சடை முடியில் தரித்தவர். அப் பரமனின் உறைவிடமானது சக்கரப்பள்ளி என்பதாகும்.

286. பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்எருக்கு அதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : ஈசன், சிறப்பாகப் போற்றப் பெறும் வேதங்களை ஓதியருளியவர்; குளிர்ச்சியான சந்திரனைச் சடை முடியின் மீது சூடியவர்; மண்டை ஓட்டு மாலையும், அதனுடன் எருக்கம் பூவும் பொருந்தக் கொண்டு மேவுபவர்; திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். அவர் அருகில், மார்க்கண்டேயர் அபயமாக வந்து வணங்கிப் போற்றுவதைக் கண்டு உயிரைக் கவரும் தன்மையில் நண்ணிய காலனை உதைத்து வீழ்த்தியவர்; அப்பெருமானின் நகரானது வளமை மிகுந்த சக்கரப்பள்ளியாகும்.

287. மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்
துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : மின்னலைப் போன்று விளங்கும் சிவந்த சடை முடியின்மீது, விரிந்து ஒளிக் கதிரை வீசும் சந்திரனையும், பொன் போன்ற கொன்றை மலரையும், படம் கொண்டு மேவும் அரவத்தையும் பொருந்தத் தரித்துள்ள சிவபெருமான், உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு மறைகளின் பொருளாக விளங்குபவர். அப் பெருமானுடைய நகரானது வளம் பொருந்திய சக்கரப்பள்ளியாகும்.

288. நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழும்ஊர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : ஈசன், நலம் தரும் பாங்கினில் கருணை விளங்க அருள்பொழியும் கொள்கை உடையவர்; நான்கு வேதங்களையும் ஓதி விரித்தவர்; வலிமை மிகுந்த மழுப்படையை ஆயுதமாகக் கொண்டுள்ளவர்; அப்பெருமான் மகிழ்ந்து விளங்கும் ஊரானது, வண்டுகள் ஒலிக்கவும், தேன் துளிர்க்கும் மலர்கள் விளங்கவும் காவிரியிலிருந்து மணிகள் கொழிக்கும் சக்கரப்பள்ளியாகும்.

289. வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோடு அமரும்ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீறு மேனியராய் விளங்கும் வேத நாயகர்; கங்கையைச் சடை முடியில் தாங்கியும், மலை மகளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டும் விளங்குபவர். அப் பெருமான் அமர்ந்து மேவும் ஊர், மணம் கமழும் மலரும், அகிலும், பலவகை மணிகளும், சந்தனமும் சேர்ந்து திகழும் நீர் வளம் மிகுந்த சக்கரப் பள்ளியாகும்.

290. பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடம் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : எத் தன்மையில் அமைய வேண்டுமோ அத்தகைய தன்மையில் முப்புரமானது பாழ்பட்டு எரிந்து சம்பலாகுமாறு, மேரு என்னும் பெரிய மலையைச் சுடர் மிகுந்து மேவும் வில்லாகக் கொண்டு அழித்து, வானவர்களும் தானவர்களும் வணங்கித் தொழ ஓங்கியவர், சிவபெருமான். அவர், உமாதேவியைத் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டும், கங்கையைத் திருமுடியில் வைத்தும் இருப்பவர். அவருடைய உறைவிடம் சக்கரப்பள்ளியாகும்.

291. பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : உலகில் உள்ள மக்களெல்லாம் தொழுது போற்ற விளங்கும் ஈசன், பல்லாயிரக் கணக்கான திருநாமங்களை உடையவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டிருப்பவர்; பேரொலி மேவும் கங்கையைச் சடை முடியில் தரித்து வரிசையாக விளங்கும் கொன்றை மலரை மாலையாகச் சூடி இருப்பவர்; அப்பெருமானின் வளநகர் சக்கரப்பள்ளியாகும்.

292. முதிரிலா வெண்பிறை சூடினார்முன் னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அரிதிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : முதிர்வு அடையாத இளமையான வெண் திங்களைச் சூடி மேவும் சிவபெருமான், தம்மை எதிர்த்துப் பொருது வெற்றி பெறுவதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில் திரிந்த முப்புரங்களை, எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவர், தனக்கு இணையாகச் சொல்லுவதற்கு அரிதாக விளங்கும் வலிமை உடைய இராவணனை, அவன் பெயர்த்த மலையினாலே அடர்த்திய திறமையான ஆற்றல் உடையவர். அப்பெருமானின் வளநகர், சக்கரப்பள்ளி ஆகும்.

293. துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : ஈசன், கோவணத்தை ஆடையாக அணிந்தவர்; திருவெண்ணீறு தரித்தவர்; பாம்பினை மார்பில் அணியாகக் கொண்டவர்; குளிர்ந்த சந்திரனைச் சடையில் சூடியவர்; தம்முடைய ஆற்றலில் செருக்குற்ற திருமாலும் பிரமனும் தணியுமாறு செய்தவர். அப்பெருமான், சக்கரப்பள்ளி என்னும் அருள் வளம் மேவும் ஊரில் வீற்றிருப்பவர்.

294. உடம்புபோர் சீவரர் ஊண்தொழில் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : சாக்கியர்களும், சமணர்களும் உரைக்கும் சொற்கள், நஞ்சு போன்று கொடுமையானவை; மெய்ம்மையும் அன்று. அவற்றை ஏற்க வேண்டாம். விரிந்து பரவும் புனித நீர் கொண்டு அபிடேகம் செய்தும், மலர் மாலைகளைச் சாத்தியும், நீர் வளம் மிகுந்த சக்கரப்பள்ளியில் மேவும் ஈசனை வணங்குவீராக.

295. தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்
கண்ணுதல் அவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.

தெளிவுரை : குளிர்ச்சி மிக்க வயல் வளம் கொண்ட சக்கரப் பள்ளியில் வீற்றிருக்கும் எம்முடைய நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானின் திருவடியை, கழுமல வள நகரில் விளங்கும் செந்தமிழ் வல் ஞானசம்பந்தன், கனிந்து போற்றிய இத் திருப்பதிகத்தைச் சொல்பவர்களுக்குப் பாவமானது சாராது.

திருச்சிற்றம்பலம்

286. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

296. காலையார் வண்டினம் கிண்டிய காருறும்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடம்அணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.

தெளிவுரை : காலை வேளையில் வண்டினங்கள் மலர்களைக் கிண்டி விளங்கும் சோலையில் மேவும் கிளிகள், ஈசனின் அரிய பொருளைக் காட்டும் சொற்களைச் சொல்லிப் பயில மேவும் மழபாடி கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தல் தேக்கிய ஈசன் விரும்பி மேவும் இடம் ஆகும்.

297. கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணும் ஊர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழ பாடியே.

தெளிவுரை : நீலகண்டத்தினராயும், நெற்றியில் கண் உடையவராயும், அடைக்கலம் புகுந்த சந்திரனை ஏற்றுச் சிவந்த சடைமுடியில் கொண்டு விளங்கும் ஈசன், விரும்பி இருக்கின்ற ஊரானது, நீர்த் துறைகளில் மேவும் வெண்ணிறமாகிய பறவைகள் வெண்மலர்களுடன் சேர்ந்து ஒரே வண்ணமாகப் பொலிய விளங்கும் மழபாடியாகும். ஆங்கு எழுந்தருளியுள்ள பெருமான் மறைகளை ஓதி அருளும் பெற்ற உடையவர்.

298. அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.

தெளிவுரை : அந்தணர்கள் வேள்வி புரியும் வேதங்கள் ஒலிக்கவும், பக்திப் பாடல்கள் இசைக்கவும் உமா தேவியாரோடு ஈசன் வீற்றிருக்கும் இடமானது, தென்றல் உலவும் புகழ் மிக்க மழபாடியே.

299. அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு, முத்தியின் பெருநலமாய், மும்மூர்த்திகளின் முதல்வனாய் விளங்கும் சிவபெருமான், பத்தி கொண்டு பாடிப் போற்றும் அன்புடையவர்களுக்கு அருள் புரியும் அத்தன். அப் பெருமானின் உறைவிடமானது அணிமிகும் மழபாடி.

300. கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்
வெங்கண்வாள் அரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்உமை யாளொடும் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடிய.

தெளிவுரை : கங்கை பொருந்தி மேவும் சடை முடியின் இடையில், ஒளி திகழும் சந்திரனை அணிந்த பெருமான், ஒளி மிக்க அரவத்தைக் கொண்டு மேவும் ஈசன் ஆவார். எத்தகைய தீமையும் இல்லாமல் செய்கின்ற உமாதேவியை, உடனாகக் கொண்டு பொருந்தி விளங்கும் இடமாவது, மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் சிறப்பு மிக்க மழபாடியே ஆகும்.

301. பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழ பாடியே.

தெளிவுரை : பாலானாகிய மார்க்கண்டேயரின் அரிய உயிரைக் கொண்டு செல்ல வந்த காலனின் உயிரைக் காலால் சாடி உதைத்து, உமாதேவியாரை உடனாகக் கொண்டு பொருந்தி விளங்கும் ஈசனின் இடமாவது, திருமால் முதலான பெருமையுடையோர் வழிபடும் சிறப்பு மிக்க மழபாடியே.

302. விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந்து ஏத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.

தெளிவுரை : விண்ணுலகத்தில் விளங்கும் தேவர்கள் மகிழ்ந்து ஏத்தம் தன்மையில் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு முறுவல் செய்து நெருப்பினை வெளிப்படுத்தி அழித்தும், மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி, அதன் வாயிலாக நெருப்புக் கொண்டு அழித்தும் வீரம் விளைவித்தவர், சிவ பெருமான். அத்தகைய எமது அண்ணலின் உறைவிடமாவது அணி திகழ் மேவும் மழபாடியே.

303. கரத்தினால் கயிலையை எடுத்தகார் அரக்கன்
சிரத்தினை ஊன்றலும் சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்நரம்பு எடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம மாமழ பாடியே.

தெளிவுரை : தனது கரத்தால் கயிலை மலையினை எடுத்த இராவணனுடைய சிரமானது நலிவுற்றுத் துன்புறுமாறு ஊன்றியவர் சிவபெருமான். அவர் திருவடியைச் சரணம் எனக் கொண்டு தனது இரத்தம் தோய்ந்த கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டி, இசை எழுப்பிப் பாட வரம் நல்கிய ஈசன், மருவி விளங்குகின்ற இடமாவது சிறப்புடைய மழபாடியே ஆகும்.

304. ஏடுலா மலர்மிசை அயன்எழல் மாலுமாய்
நாடினார்க்கு அரியசீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடிய காலத்தில் அரியவனாய் விளங்கிய நாதராகிய ஈசனின் உறைவிடமாவது, பனை மரங்களில் காயக்கும் பனம்பழம் பைம் பொழிலில் மல்கி விளங்குகின்ற சிறப்புப் பொருந்திய மழபாடியாகும்.

305. உறிபிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறிபிடித்து அறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித்து அரவினம் பூண்எனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் நெறி முறைக்கு ஒவ்வாறு உரைக்கும் சொற்களை ஏற்க வேண்டாம். படம் கொண்டு மேவும் அரவத்தினை அணியாகக் கொண்டு, மானைக் கரத்தினில் ஏந்திய ஈசனின் இடமாவது சிறப்புப் பொருந்திய மழபாடியே ஆகும். அதனை ஏத்துக என்பது குறிப்பு.

306. ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாள்தொறும்
சீலத்தால் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தால் மிக்கசீர் ஞானசம் பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம்அற் றார்களே.

தெளிவுரை : இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் விண் மீனுக்கு உரியவராகிய ஈசன் வீற்றிருக்கும், நாள்தோறும் சிறப்பான ஆகம விதிப்படி பூசைகள் மேவும் திருமழபாடி என்னும் திருத்தலத்தை உலகத்தரால் மிகுந்த சிறப்புடன் போற்றப்படுகின்ற ஞானசம்பந்தன் சொல்லிய திருப்பதிகத்தைச் சிவநெறிக்குரிய தூய பொலிவுடன் பாடுபவர்கள், தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

287. மேலைத்திருக்காட்டுப்பள்ளி (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

307. வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி உண்பதும் வெண்தலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட்டுப் பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தம் நீர்மையே.

தெளிவுரை : உமாதேவியாரை ஒரு பாகத்தில் கொண்டு விளங்கும் ஈசன், ஊர்தோறும் சென்று பிரம கபாலம் ஏந்திப் பிச்சை கொள்பவர். அப்பெருமான், மேகம் சூழ்ந்த பொழில் மன்னும் காட்டுப்பள்ளியில், கங்கை தரித்த சடை முடியுடைய நிமலராய் விளங்கி இருப்பது அவர்தம் அன்பின் தன்மையே ஆகும்.

308. நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.

தெளிவுரை : ஈசன், நடனம் புரிபவர்; நீண்ட சடை முடியின் மீது சந்திரனோடு பாம்பும் சேர்ந்து அணியும் கருத்தினை உடையவர்; நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளியின்கண், எப்பொருட்கும் விளக்கமாய் மேவும் மேலான பொன் போன்றவராய்த் திகழ்பவர்; உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் காண்டு மேவுபவர்; அத்தகைய பரமனின் திருவடி மலரை வணங்கிப் போற்றுதல் ஒன்றே பயன் தர வல்லதாகும்.

309. பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் எம்மையாள் உடையஎம் அடிகளே.

தெளிவுரை : ஈசன், வேதங்களை உரிய பண்ணில் விரித்து ஓதியவர்; நெற்றியில் கண் உடையவர்; பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளியில் கங்கையைத் தரித்து விளங்கும் சடை முடியுடையவராய் வீற்றிருப்பவர். அவர் எம்மை ஆளாகக் கொண்டு மேவும் அண்ணல்.

310. பணம்கொள்நா கம்அரைக்கு ஆர்ப்பது பல்பலி
உணங்கலோடு உண்கலன் உறைவது நாட்டிடைக்
கணங்கள் கூடித்தொழுது ஏத்துகாட் டுப்பள்ளி
நிணங்கொள் சூலப்படை நிமலர்தம் நீர்மையே.

தெளிவுரை : ஈசன், படம் கொண்டு ஆடும் நாகத்தை அரையில் ஆர்த்துக் கட்டிப் பிரம கபாலத்தைக் கரத்தில் ஏந்திப் பலி ஏற்று விளங்குபவர். அப்பெருமான் உறைவது, சிவகணத்தோர் தொழுது ஏத்தும் காட்டுப்பள்ளியாகும். அப்பதியில், ஈசன், சூலப் படையைத் திருக்கரத்தில் ஏந்திய நிமலராய் விளங்கும் இயல்புடையவர்.

311. வரையுலாம் சந்தொடு வந்திழி காவிரிக்
கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
திரையுலாம் கங்கையும் திங்களும் சூடியங்கு
அரையுலாம் கோவணத்து அடிகள் வேடங்களே.

தெளிவுரை : மலையில் திகழும் சந்தன மரங்களை, நீரின் வாயிலாக உந்திக் தள்ளிக் கரையினில் சேர்க்கும் காவிரி மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளியில், ஈசன் கங்கையும் சந்திரனும் சடை முடியில் சூடி, அரையில் கோவண ஆடையுடன் காட்சி தருபவர்.

312. வேதனார் வெண்மழு வேந்தினார் அருங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின்று ஏத்துமே.

தெளிவுரை : வேதங்களின் நாதராகிய ஈசன், மழுப்படையை ஏந்தியவராய், உமாதேவியை ஒரு கூறு உடையவராய், குழை அணிந்த காதினராய், கடிமணம் கமழும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளியின் தலைவராய் விளங்குபவர். அப் பெருமானின் திருவடியை நாளும் நின்று ஏத்துவீராக.

313. மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட்டுப் பள்ளித்
தையலோர் பாகமர்த் தண்மதி சூடிய
ஐயனார் அடிதொழ அல்லல்ஒன்று இல்லையே.

தெளிவுரை : மை போன்ற கரிய கண்டத்தை உடைய ஈசன், மானையும் மழுவையும் ஏந்திய கையினர். அவர் கடிமணம் பரவும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளியில் உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டு குளிர்ந்த சந்திரனைச் சூடியவராய் வீற்றிருப்பவர். அத்தலைவரின் அருள் வழங்கும் திருவடியைத் தொழுது போற்ற அல்லல் யாவும நீங்கும்.

314. சிலைதனால் முப்புரம் செற்றவன் சீரினார்
மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்
கலைதனார் புறவணி மல்கு காட்டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.

தெளிவுரை : மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தினை எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன், சீர் மிகுந்த கயிலை மலையினால் இராவணனுடைய வலிமையை அடக்கியவர். அப் பெருமான், மான்கள் விளங்கும் சோலைகளைக் கொண்டு மேவும் காட்டுப் பள்ளியைச். சிரத்தையாய் வணங்க, நற்றவத்தின் பேறு கைவரப் பெறும்.

315.செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
தங்கையால் தொழுதெழத் தழலுரு ஆயினான்
கங்கையார் சடையினான் கருது காட்டுப்பள்ளி
அங்கையால் தொழும்அவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் தொழுது போற்ற அழல் உருவம் ஆகிய கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் கருதுகின்ற காட்டுப்பள்ளியை அழகிய கைகளால் கூப்பித் தொழும் அன்பர்களுக்கு, அல்லல் இல்லை.

316. போதியார் பிண்டியர் என்றஅப் பொய்யர்கள்
வாதினால் உரையவை மெய்பல வைகலும்
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட்டுப் பள்ளி
ஏரினால் தொழுதெழ இன்பம்வந்து எய்துமே.

தெளிவுரை : அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழி வந்தவர் எனப் பகரப்படுபவரும், அசோக மரத்தின் நிழலில் அமரும் அருகக் கடவுளின் நெறியுளோர் எனப் பகரப்படுபவரும் கூறும் சொற்கள் வாதத்தால் உரைக்கப் பெற்றவை. அவை மெய்ம்மை ஆகாது. காட்டுப்பள்ளியினை நாள்தோறும் ஏத்தித் தொழுதுபோற்ற இன்பம் வந்து சேரும்.

317. பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
அருமறை யவைவல்ல அணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினான் கருதுகாட்டுப் பள்ளி
பரவிய தமிழ் சொல்லப் பறையுமெய்ப் பாவமே.

தெளிவுரை : நீர் வளம் பெருக அணி பெறும் புறவம் என்னும் பெயர் கொண்ட சீகாழிப் பதியில், சிறப்புடன் விளங்கும், அருமையாகப் போற்றப்பெறும் மறைகளில் வல்ல, அணி திகழ ஓங்கும் ஞானசம்பந்தன், நீல கண்டனாகிய ஈசன் கருதும் காட்டுப்பள்ளியைப் பரவிப் போற்றிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பாவம் தீரப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

288. அரதைப்பெரும்பாழி (அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

318. நைத்தபாம் போடுஅரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : பாம்பும் கோவணமும் புலித்தோலும் கட்டிய ஈசன், பேய்கள் சூழ்ந்து முழங்க மயானத்தில் நடனம் ஆடி விளங்குபவர். அப்பெருமான், திருவெண்ணீறு அணிந்தவராய் மேவும் பித்தர் ஆவர். அவர் கோயில் கொண்டு விளங்குபவது அரதைப் பெரும்பாழியே.

319. கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும்
பயலை கொள்ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
இயலைவா னோர் நினைந் தோர்களுக்கு எண்ணரும்
பெயரர் கோயில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : கயல் போன்றும் சேல் போன்றும் அழகிய கருமை வண்ணக் கண்ணுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு கவரும் தோற்றம் உடையவராய்ப் பலி ஏற்று உழலும் பாங்கு உடையவர் ஈசன். அப்பெருமான், வானவர்களும் அடியவர்களும் எண்ணுதற்கு அரிய பல திருப் பெயர்களை உடையவராய் விளங்குபவர். அவர், கோயில் கொண்டு இருப்பது அரதைப்பெரும்பாழியே.

320. கோடல் சாலவ் உடையார் கொலை யானையின்
மூடல் சாலவ் உடையார் முனிகானிடை
ஆடல் சாலவ் உடையார் அழகாகிய
பீடர் கோயில் அரதைப் பெரும் பாழியே.

தெளிவுரை : ஈசன், அடியவர்களின் மனத்தை ஏற்றுக் கொண்டு ஆங்கு உறைபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; வெறுப்புக்கு உரியதாகும் சுடுகாட்டில் நடனம் புரிபவர். அப்பெருமான், அழகு எனச் சொல்லப்படும் பெருமை உடையவராய்க் கோயில் கொண்டு விளங்குவது, அரதைப்பெரும்பாழியே.

321. மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
விண்ணர்வே தம்விரித்து ஓதுவார் மெய்ப்பொருள்
பண்ணர்பா டல்உடை யார்ஒரு பாகமும்
பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களாக விளங்கும் ஈசன், வேதங்களை விரித்து ஓதி அருள்பவர்; மெய்ப் பொருளாகியவர்; பண்ணில் அமரும் பாடலில் விளங்குபவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; அவர் எழுந்தருளியுள்ள கோயில் அரதைப்பெரும் பாழியே ஆகும்.

322. மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
கறைகொள்சூ லம்உடைக் கையர்கா ரார்தரும்
நறைகொல் கொன் றைநயந் தார்தரும் சென்னிமேல்
பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : வேதங்களை ஓதும் சிவபெருமான், மானும் மழுவும் கொண்டு சூலப்படை உடையவராய்த் தேன் துளிர்க்கும் கொன்றை மாலையை விருமபித் தரித்துப் பிறைச் சந்திரனைச் சூடிக் கோயில் கொண்டு விளங்குவது அரதைப்பெரும்பாழியே.

323. புற்றரவம்புலித் தோலரைக் கோவணம்
தற்றிர வில்நடம் ஆடுவர் தாழ்தரு
சுற்றமர் பாரிடம் தொல்கொடி யின்மிசைப்
பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : அரவம், புலித்தோல், கோவணம் ஆகியவற்றினை இடையில் கட்டி, இரவில் நடம் புரியும் சிவபெருமான், பூத கணங்கள் சூழ விளங்கி இடபக் கொடியை உடையவர். அவர், கோயில் கொண்டு இருப்பது அரதைப்பெரும்பாழி ஆகும்.

324. துணையிறுத்து அம்சுரி சங்குஅமர் வெண்பொடி
இணையிலேற் றையுகந்து ஏறுவ ரும்எரி
கணையினால் முப்புரம் செற்றவர் கையினில்
பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : சங்கினால் ஆகிய வெண்குழை அணிந்து, திருவெண்ணீறு தரித்து மேவும் ஈசன், இடப அக்கினிக் கணையைச் செலுத்தி முப்புரத்தை எரியுமாறு செற்றவர்; அப்பெருமான், மானைக் கையில் ஏந்தி, அரதைப்பெரும்பாழியில் கோயில் கொண்டு விளங்குபவர்.

325. சரிவிலா வல்லரக் கன்தடம் தோள்தலை
நெரிவிலார் அவ்வடர்த் தார்நெறி மென்குழல்
அரிவைபா கம்அமர்ந் தார்அடி யாரொடும்
பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : தளர்ச்சியே இல்லாத அரக்கனாகிய இராவணனின் வலிமையான பெரிய தோளும் தலையும் நெரியுமாறு அடர்த்த ஈசன், உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அடியவர்களோடு பிரியாது வீற்றிருக்கும் கோயிலானது, அரதைப்பெரும்பாழியே.

326. வரியரா என்புஅணி மார்பினர் நீர்மல்கும்
எரியரா வும்சடை மேற்பிறை யேற்றவர்
கரியமா லோடுஅயன் காண்பரி தாகிய
பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : வரிகளையுடைய அரவம், எலும்பு ஆகியவற்றை மார்பில் அணியாகக் கொண்டு, கங்கை திகழும் சிவந்த சடையின் மீது, பிறைச் சந்திரனைச் சூடிய ஈசன், திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியதாக ஓங்கிய பெருமை உடையவர். அவர் மேவி விளங்குகின்ற கோயில், அரதைப்பெரும்பாழியே.

327. நாணிலாத சமண்சாக் கியர் நாள்தொறும்
ஏணிலா தம்மொழியவ் எழிலா யவர்
சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் நாள்தோறும் உயர்வற்ற சொற்களை மொழிதலுற்றலும், எழில் மிகுந்தவராய், முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செற்றவராய் மேவும் ஈசன் பேணும் கோயில், அரதைப் பெரும்பாழியே.

328. நீரினார் புன்சடை நிமலனுக்கு இடம்எனப்
பாரினார் பரவுஅர தைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
ஏரினார் தமிழ்வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : கங்கையை மெல்லிய சடையில் தாங்கும் நின்மலனாகிய ஈசனுக்க இடமாவது எனப் பூவுலகில் நன்கு பரவப்பெறும் அரதைப்பெரும்பாழியைச் சீர்மிகுந்து பொலியும் காழிப் பதியின் ஞானசம்பந்தன் இசைத்த சிறப்புமிக்க இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்குப் பாவம் என்பது இல்லை.

திருச்சிற்றம்பலம்

289. திருமயேந்திரப்பள்ளி (அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப் பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

329. திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயில்எய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை யழகனை அடியிணை பணிமினே.

தெளிவுரை : கடல் அலைகள் பவளம் கொண்டு வந்து சேர்க்கும் மயேந்திரப்பள்ளியில், சிறப்பான வயிரங்களும் அகில் மரங்களும் கனமான சங்குகளும் விளங்குகின்றன. ஆங்கு, மேருவை வில்லாகக் கொண்டு முப்புரங்கள் எரியுமாறு அம்பு தொடுத்த, அரவத்தை அரையில் கட்டி அழகனாக மேவும் ஈசனின் திருவடியைப் பணிவீராக.

330. கொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை
கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினாந் திருந்தடி பணிமினே.

தெளிவுரை : மேகத்தைத் தொடும் உயர்ந்த கோபுரங்களும் அழகிய மாளிகைகளும் விளங்க, நீர்முள்ளியும் தாழையும் தாமரை மலர் பொலியும் பொய்கயும், வண்டுகள் உலவுகின்ற பொழிலும் அணியாகக் கொண்டு மேவும் மயேந்திரப்பள்ளியில், நடையின் மிடுக்குடைய இடபத்தை வாகனமாக உடைய ஈசனின் திருவடியைப் பணிவீராக.

331. கோங்கின வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமும்
ஆங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.

தெளிவுரை : கோங்கு, வேங்கை, புன்னை, கொன்றை, குரவம் ஆகியன நன்கு விளங்குகின்ற மயேந்திரப்பள்ளியில் வீற்றிருக்கின்ற இறைவனின் திருவடி மலரைப் பணிவீராக.

332. வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
சங்கமார் ஒலியகில் தருபுகை கமழ்தரு
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள்நா யகன்றனது இணையடி பணிமினே.

தெளிவுரை : நெடுந்தொலைவிலிருந்து கப்பல் வரும் குறிப்பைத் தெரிவிக்கும் சங்கின் ஒலியும், அகிலின் புகை மிகுந்து கமழும் நறுமணமும் திகழ மேவும் மயேந்திரப்பள்ளியில், உமாதேவியை உடனகக் கொண்டு வீற்றிருக்கும் ஈசன், எங்கள் நாயகன் ஆவார். அப் பெருமானுடைய திருவடியைப் பணிவீராக.

333. நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந்து இருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.

தெளிவுரை : முத்துக்கள் வகை வகையாய்க் குவிக்கப் பெற்று, மலர்கள் போன்று ஒளிர்ந்து விளங்கக் கடல் அலைகளால் பெருகித் திகழ மேவும் மயேந்திரப் பள்ளியில், நீலகண்டனாகிய ஈசன் மழுப்படையை ஏந்தி வீற்றிருக்க, அப் பரமனைத் தரிசித்துப் பணிவீராக.

334. சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தஎம் இறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந்து உய்ம்மினே.

தெளிவுரை : சந்திரன், சூரியன், புகழ் மிகும் பிரமன், இந்திரன் ஆகியோர் வழிபடத் திகழும் எம் இறைவன், வேத மந்திரங்கள் பெருகி ஓங்க அந்தணர்கள் விளங்கும் மயேந்திரப்பள்ளியில் வீற்றிரும் அழகன் ஆவார். அப் பெருமானின் அடி பணிந்து உய்தி அடைமின்.

335. சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடநவில் புரிவினன் நறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவன் அடிபணிந்து உய்ம்மினே.

தெளிவுரை : சடை முடி கொண்டு தவத்தை மேற்கொண்ட விளங்கும் முனிவர்கள், அமைதி பெருகும் பாங்கில் மனம் பொருந்திய வழிபட, ஈசன், நடம் பயின்று மேவுபவராய்ப் படர்ந்து விளங்கும் சடையில் நறுமலரினையும் சந்திரனையும் சூடியவராய், இடப வாகனத்தை உடையவராய், மயேந்திரப்பள்ளியில் வீற்றிருப்பவர். அப்பெருமானின் திருவடியைப் பணிந்து, உய்வீராக.

336. சிரமொரு பதும்உடைச் செருவலி யரக்கனைக்
கரம்இரு பதும்இறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை அடிபணிந்து உய்ம்மினே.

தெளிவுரை : பத்துத் தலைகளை உடைய வலிமை மிகுந்த அரக்கனாகிய இராவணனுடைய இருபது கரங்களும் கெடுமாறு, கனமான மலையாகிய கயிலையைக் கொண்டு அடர்த்த ஈசன், வெண் கடம்ப மரங்கள் கொண்டுள்ள பூம்பொழில், சூழ்ந்த மயேந்திரப் பள்ளியுள், அரவம் சூடிய சடை முடி உடையவராய் வீற்றிருப்பவர். அப் பரமனின் திருவடியைப் பணிந்து உய்வீராக.

337. நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்
மாகணைந் தலம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருப்பது உய்ம்மினே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் திருக்கழலைக் காண முடியாதவாறு ஓங்கிய ஈசன், மேகத்தைக் தொடுகின்ற உயர்ந்த பொழில் சூழ்ந்த மயேந்திரப் பள்ளியுள், யோகியாய் விளங்கும் பெருமான் ஆவார். அவர் திருக்கழலை உணர்ந்து அத்தன்மையால் தியானம் செய்து இருந்து, உய்வு பெறுவீராக.

338. உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையாரும்
படுபழி யுடையவர் பகர்வன விடுமினீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை இணையடி பணிமினே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் பழிச் சொல் பகர்கின்ற தன்மையில், அவற்றை ஏற்க வேண்டாம். நீர்வளமும் நிலவளமும் கொண்ட மயேந்திரப் பள்ளியில் வீற்றிருக்கும் ஈசனின் திருவடியைப் பணிவீராக; நற்கதி உறுவீராக.

339. வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பரம் இதுஎன நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.

தெளிவுரை : நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த மயேந்திரப்பள்ளியுள், ஈசனின் திருவடியை ஏத்தி, ஞானசம்பந்தன் உரைத்த இத் திருப்பதிகத்தை, இதுவே நமக்குக் கேடயமாக இருந்து தீய வினைகளால், உண்டாகும் துன்பத்திலிருந்து பாதுகாக்க வல்லது எனக் கொண்டு ஓதி உரைப்பவர்கள், மறுமையில் தேவர்களால் எதிர் கொண்டு வரவேற்கப் பெற்று, உயர்ந்த இருப்பிடத்தைச் சார்ந்து, இனிது விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

290. திருவேடகம் (அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில், திருவேடகம்,மதுரை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

340. வன்னியு மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னியல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடலர் ஏடகத்து ஒருவனே.

தெளிவுரை : வன்னிப் பத்திரமும், ஊமத்த மலரும், சந்திரனும் சடை முடியில் தரித்து விளங்கும் ஈசனின் பொன்னின் தன்மையில் விளங்கும் திருவடியைப் புது மலர்களால் அந்தணர்கள் போற்றி வழிபடவும், அடியவர்கள் இனிய இசையுடன் பாடிப் போற்றவும் ஏத்தி விளங்குகின்றனர். அவ்வாறு ஏத்தப் பெறுபவன் ஏடகத்தில் மேவும் ஒப்பற்ற இறைவன் ஆவான்.

341. கொடிநெடு மாளிகை கோபுரம் குளிர்மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து
அடிகளை அடிபணிந்து அரற்றுமின் அன்பினால்
இடிபடும் வினைகள்போய் இல்லையே தாகுமே.

தெளிவுரை : கொடிகளை உடைய நெடிது உயர்ந்து விளங்கும் மாளிகையின் கோபுரத்தில் குளிர்ந்த சந்திரன் மருவும் ஏடகத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை, அடி பணிந்து அரநாமத்தினைக் கூறி அன்பினால் ஏத்துமின் இம்மையில் துன்பத்தைத் தருகின்ற தீய வினைகள் யாவும் அற்று ஒழிந்து இல்லாமை ஆகும்.

342. குண்டலம் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனூர் ஏடகம்
கண்டுகை தொழுதலும் கவலைநோய் கழலுமே.

தெளிவுரை : காதில் இரு கந்தருவர்களைக் குண்டலமாகக் கொண்டு திகழும் குழகன், வண்டு உலவும் கொன்றை மலரையும் வானில் விளங்கும் சந்திரனையும் சடை முடியில் தரித்து மேவும் ஈசன் ஆவார். அப்பெருமான், வீரநடையின் சிறப்பினைக் கொள்ளும் இடபத்தின் மீது வீற்றிருப்பவர். அத்தகைய பெருமைக்கு உரியவருடைய ஊர் ஏடகம் ஆகும். அத்தலத்தைத் தரிசித்துக் கைதொழுது போற்ற, மனக் கவலையால் பீடிக்கப்பெற்ற நோய் விலகிச் செல்லும்.

343. ஏலமார் தருகுழல் ஏழையோடு எழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடம்
சாலமா தவிகளும் சந்தனம் சண்பகம்
சீலமார் ஏடகம் சேர்தலாம் செல்வமே.

தெளிவுரை : ஏலவார் குழலி என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையோடு, எழில் மிகுந்த இடப வாகனத்தில் வீற்றிருக்கும் குழகனாரில் உறைவிடமானது. மாதவி, சந்தனம், சண்பகம் ஆகியன மிகுந்து விளங்கும் சிறப்புடைய ஏடகம் ஆகும். அத் தலத்தைச் சென்று அடைந்து, ஈசனை ஏத்துதம் செல்வம் பயக்கும்.

344. வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக்
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோடு ஆண்அலி யாகிய
எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.

தெளிவுரை : அழகிய கண்களை உடைய மலைமகள் வியந்து நோக்க, யானையின் தோலை உரித்த நீலகண்டனாகிய ஈசன், பெருமை மிகுந்தவர். அப்பெருமான், பெண்ணாகவும் ஆண் ஆகவும் அலியாகவும் விளங்கிச் சோதிமயமாய் மேவும் பரமன். அவர் உறைவிடமானது ஏடகக் கோயில் ஆகும்.

345. பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடிபணிந்து அரற்றுமின் அடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.

தெளிவுரை : பொய்கையைச் சூழ்ந்து, பைம்பொழில் விளங்க, நறுமண மலர்களின் தென்றல் காற்று வீச, வைகை ஆற்றின் வடகரையில் மேவும் ஏடகத்தில் வீற்றிருக்கும் தலைவனாகிய ஈசனின் திருவடியைப் பணிந்து, அரநாமத்தினை நன்கு வாய் மலரக் கூறுவீராக. அது இம்மையில் கொடிய பிணிகளைத் தீர்த்து, மறுமையில் முத்திப் பேற்றினை எளிதாகக் கிடைக்கச் செய்யும்.

346. தடவரை எடுத்தவன் தருக்கிறத் தோள்அடர்
படவிரல் ஊன்றியே பரிந்தவற்கு அருள்செய்தான்
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத்து இறைவனே.

தெளிவுரை : பெரிய கயிலையை எடுத்த இராவணனுடைய தருக்கினைக் கெடுத்துத் தோள்களை அடர்த்து விரலால் ஊன்ணியும், பின்னர் பரிவுடன் வன்னி, ஊமத்தம் மலர் ஆகியவற்றைச் சடை முடியில் வைத்தவர். அப் பெருமான் ஏடகத்தில் வீற்றிருக்கும் இறைவன்.

347. பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனில் சமைவுற
அன்னமா மயனுமால் அடிமுடி தேடியும்
இன்னவாறு எனவொணான் ஏடகத்து ஒருவனே.

தெளிவுரை : பொன்னும், மணி வகைகளும், சந்தனம், அகில் ஆகிய மரங்களும் அலைகளின் வாயிலாகக் கொண்டு வந்து சேர்க்கும் வைகையில் கரையில், அன்னப் பறவையாக பிரமனன் திருமுடியையும் பன்றி வடிவாகத் திருமால் திருவடியையும் தேடியும் இன்னதென்று எனக் காணாதவாறு திகழ்ந்திருந்த ஈசன், ஏடகத்தில் வீற்றிருக்கும் பரமனே ஆவான்.

348. குண்டிகைக் கையினர் குணமலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத்து எந்தையே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் கூறும் உரைகள் குணமில்லாதன. அவை அறியாமையால் மொழிவன. அதனைக் கொள்ள வேண்டாம். கொன்றை மலரும் வன்னியும் மாலையாகக் கொண்டு, சடையில் விளங்க மேவும் ஏடகத்தின் எந்தை ஆகிய ஈசனை, ஏத்தி வழிபடுமின்.

349. கோடுசந் தனம்அகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை
நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன
பாடல்பத்து இவைவல்லார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டு வரும் வைகை நீரில் எதிர் நீந்திச் சென்ற திரு ஏடு சேரும் ஏடகத் தீவை நாடி ஏத்திய, அழகிய புகலியின் ஞான சம்பந்தன் பாடிய இத் திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்கள், தீவினை நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

291. திருஉசாத்தானம் (அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

350. நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீ வன்அநு மான்தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.

தெளிவுரை : திருமாலிõகிய, இராமபிரானும், இலட்சுமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அநுமன் ஆகியோரும் தொழுது வணங்கக் கரிய நஞ்சினை அருந்திக் காத்தருள் செய்த, எம் பெருமைக்குரிய சிவபெருமான் வாழ்கின்ற இடம், திருஉசாத்தானம் ஆகும்.

351. கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்
பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்
முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்
தில்லையான் உறைவிடம் திருவுசாத் தானமே.

தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தை உடையவர்; கோவண ஆடை உடையவர்; பிரம கபாலம் ஏந்திப் பலி கொள்பவர்; தேன் துளிர்க்கும் சோலை சூழ்ந்த தில்லையில் விளங்குபவர்; அப் பெருமானின் உறைவிடம் திருஉசாத்தானம் ஆகும்.

352. தாமலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக்
காமனார் உடல்கெடக் காய்ந்தவெங் கண்ணுதல்
சேமமா உறைவிடம் திருவுசாத் தானமே.

தெளிவுரை : தக்கனின் வேள்வியைப் பயனற்றதாகச் செய்த ஈசன், மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகுமாறு செய்த நெற்றிக் கண்ணுடைய கடவுள். அவர், அடியவர்களுக்கு நலம் வழங்கும் தன்மையில் உறையும் இடமாவது, திருஉசாத்தானம் ஆகும்.

353. மறிதரு கரத்தினான் மால்விடை ஏறினான்
குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ
நெறிதரு வேதியர் தித்தலும் நியமம்செய்
செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.

தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்திய ஈசன், பெருமை உடைய இடப வாகனத்தில் ஏறி, சீலமும் ஆசாரமும் கொண்டு விளங்கும் நற்குணத்தினரான அடியவர்கள் தொழுது போற்றவும், சிவாகம நெறியல் அந்தணர்கள் நாள்தோறும் நியமத்துடன் பூசிக்கவும் விளங்கும் இடம், பொழில் திகழும் திருஉசாத்தானம் ஆகும்.

354. பண்டிரைத்து அயனுமா லும்பல பத்தர்கள்
தொண்டிரைத் தும்மலர்தூவித் தோத் திரம்சொலக்
கொண்டிரைக் கொடியொடும் குருகினில் நல்லினம்
தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.

தெளிவுரை : பிரமன், திருமால் மற்றும் பக்தர்கள் பண்டைக் காலம் தொட்டு, அரநாமத்தை ஓதி உரைத்தும், மலர் தூவித் தோத்திரங்கள் சொல்லியும் விளங்கி மேவ, அத்தகைய ஈசன் திகழ்வது, நல்லினப் பறவை இனங்களும், நீர் வளம் மிகுந்த கழனிகளும் சூழ்ந்த, திருஉசாத்தானம் ஆகும்.

355. மடவரல் பங்கினன் மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர
அடர்தர ஊன்றியங் கேஅவற்கு அருள்செய்தான்
திடமென உழைவிடம் திருவுசாத் தானமே.

தெளிவுரை : உமாதேவியைத் தேகத்தில் பாகமாகக் கொண்டு மேவும் ஈசன், கயிலை மலையை மதியாது பெயர்த்தெடுத்த இராவணனின் பத்துத் தலைகளும் நெரியுமாறு அடர்த்தும், பின்னர் அருளும் செய்து, உறுதியாக வீற்றிருக்கும் இடம் திருஉசாத்தானம் ஆகும்.

356. ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்கும்
காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடம்
சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே.

தெளிவுரை : ஆணாகவும் இன்றிப் பெண்ணாகவும் இன்றி மேவும் ஈசன், பிரமனும் திருமாலும் காணுதற்கு அரியவர்; அன்பர்தம் மனத்தில் நிறைந்து இருப்பவர்; வணங்கும் அடியவர்தம் உடற் பிணியும் நீக்கிப் பிறவிப் பிணியும் தீர்ப்பவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடம், மாட மாளிகைகள் கொண்ட, திருஉசாத்தானம் ஆகும்.

357. கானமார் வாழ்க்கையான் காரமண் தேரர்சொல்
ஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய் யஎனில்
வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்
தேனமா மதியந் தோய் திருவுசாத் தானமே.

தெளிவுரை : சமணர் மற்றும் சாக்கியர் தம் சொற்கள் பயனற்றவை. நீவிர் உய்ய வேண்டும் என்றால், மயானத்தில் நடனம் புரியும் ஈசன் விளங்குகின்ற, உயர்ந்த மதில்களும், மாளிகைகளும், வளர் பொழில்களும் சூழ, இனிய நிலவு தோயும் திருஉசாத்தானத்தை ஏத்துமின்.

358. வரைதிரிந்து இழியுநீர் வளவயற் புகலிமன்
திரைதிரிந்து எறிகடல் திருவுசாத் தானரை
உரைதெரிந்து உணரும்சம் பந்தன்ஒண் தமிழ்வல்லார்
நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே.

தெளிவுரை : நீர் வளமும் வயல் மிகுந் புகலியில் விளங்கும் ஞானசம்பந்தன், திருஉசாத்தானத்தில் வீற்றிருக்கும் நாதரை உரை தெரிந்து உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், நரை திரை என வந்து தாக்கும் மூப்பின் தளர்ச்சியின்றி, இளமை மிடுக்குடன் வாழ்ந்து, நன்னெறியாக விளங்குகின்ற சிவஞான நெறியின்கண் பொருந்தித் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

292. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

359. வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந்து இழியவெள்ளருவி சேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.

தெளிவுரை : வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள் வழிபட, ஈசன் உமாதேவியோரோடு இனிது அமர்ந்திருக்கும் இடமாவது, வானத்திலிருந்து மழை பொழிந்து அருவி போன்ற விளங்க, செழுமையான முல்லை நிலத்தின் எழில் பெருக்கும் திருமுதுகுன்றம் ஆகும்.

360. வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு
பொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன்
மறியுலாங் கையினான் மங்கையோடு அமர்விடம்
செறியுளார் புறவணி திருமுது குன்றமே.

தெளிவுரை : தேன் கமழும் கொன்றை மாலை உடைவனாய்ப் படம் விளங்கும் அரவத்தை நன்கு அரையில் கட்டி ஆடுகின்ற ஈசன், மான் ஏந்திய கரத்தை உடையவராய் உமாதேவியை உடனாகக் கொண்டு அமருகின்ற இடமாவது, செறிந்த சோலையுடைய திருமுதுகுன்றம் ஆகும்.

361. ஏறினார் விடைமிசை இமையவர் தொழஉமை
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடம்
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.

தெளிவுரை : ஈசன், இடபவாகனத்தில் ஏறித் தேவர்கள் தொழுது போற்ற, உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு, புலியின் தோலை ஆடையாக அணிந்து, திருமேனியில் திருவெண்ணீறு தரித்து, நிறைந்த புனலாகிய கங்கையைச் சடை முடியின் மீது கொண்டு விளங்குகின்ற இடமாவது, பொழிலின் அணி திகழ மேவும் திருமுதுகுன்றம் ஆகும்.

362. உரையினார் உறுபொருள் ஆயினான் உமையொடும்
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினார் ஒலியென ஓங்குமுத் தாறுமெய்த்
திரையினார் எரிபுனல் திருமுது குன்றமே.

தெளிவுரை : ஈசன், உரைக்கப்படும் பொருள்களின் ஒண்பொருளாக விளங்குபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடை முடியில் தரித்த இருப்பவர். அப் பெருமான் மேவும் இடமாவது, அரநாமத்தின் ஒலியென ஓங்கும் ஓசை எழுப்பும் மணிமுத்தாறு என்னும் ஆற்றின், அலைகள் விளங்கும் திருமுதுகுன்றம் ஆகும்.

363. கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறஓர்
இடியவெங் குரலினோடு ஆளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம்
செடிதார் புறவணி திருமுது குன்றமே.

தெளிவுரை : ஆண் யானையானது கனத்த குரலில் பிளிறவும், அவ் ஒலியோடு ஆண் சிங்கம் கர்ச்சிக்கும் ஒலியும் இணைந்து ஓங்கும் நெறியில், மழுப்படை உடைய ஈசன், உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, சோலைவளம் அழுகுடன் பொலியும் திருமுதுகுன்றம் ஆகும்.

364. கானமார கரியின்ஈர் உரிவையார் பெரியதோர்
வானமார் மதியினோடு அரவர்தாம் மருவிடம்
ஊனமா யினபிணி யவைகெடுத்து உமையொடும்
தேமார் பொழிலணி திருமுது குன்றமே.

தெளிவுரை : கானகத்தில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்ட ஈசன், வானத்தில் பெரியதாகத் திகழும் சந்திரனையும், அரவத்தையும் அணிந்து உமாதேவியுடன் பொருந்த வீற்றிருக்கும் இடமாவது, ஊனங்களை நீக்கிப் பிணியையும் தீர்த்துத் தேன் துளிர்க்கும் பொழில் திகழும் திருமுதுகுன்றம் ஆகும்.

365. மஞ்சர்தா மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே
அஞ்சொலாள் உமையொடும் அமர்விடம் அணிகலைச்
செஞ்சொலார் பயில்தரும் திருமுது குன்றமே.

தெளிவுரை : வலிமை மிகுந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள் மலர் தூவிப் போற்றி வணங்குகின்றனர். கொடுந்தொழிலை மேற்கொள்ளும் வேடர்களும், மற்ற மாந்தர்களும் விரும்பித் தொழ, உமாதேவியை உடனாகக் கொண்டு அப்பெருமான் அமரும் இடமாவது, வேதங்களைப் பயில்பவரும், பக்திப் பாக்களைச் சொல்பவர்களும் விளங்கும் திருமுதுகுன்றம் ஆகும்.

366. காரினார் அமர்தரும் கயிலைநன் மலையினை
ஏரினார் முடியிரா வணன்எடுத் தான்இற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தரும் திருமுது குன்றமே.

தெளிவுரை : கார் மேகம் போன்று குளிர்ச்சியாக விளங்கி மேவும், நன்மை தரும் கயிலை மலையினை இராவணன் எடுத்தபோது, அவனை நலியச் செய்த ஈசன், உமாதேவியோடு விளங்குகின்ற இடமாவது, சிறப்புக்களையுடைய திருமுதுகுன்றம் ஆகும்.

367. ஆடினார் கானகத்து அருமறை யின்பொருள்
பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி
ஏடினார் மலர்மிசை அயனும்மால் இருவரும்
தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.

தெளிவுரை : மயானத்தில் ஆடிய ஈசன், வேதங்களை ஓத தலையும், அதன் பொருளை விரித்தலும் செய்பவர். அப் பரமனைத் திருமாலும், பிரமனும் தேடியும் காண முடியாதவாறு இருக்க, அவர் திருமுதுகுன்றத்தில் விளங்குபவர் ஆனார்.

368. மாசுமெய் தூசுகொண்டு உழல்சமண் சாக்கியர்
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் மிசைசெயத்
தேசமார் புகழ்மிகும் திருமுது குன்றமே.

தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் பேசும் மொழிகள் செய்ம்மையானதல்ல. வாசனை பெருகும் அழகிய பொழிலில் வண்டுகள் சூழும் புகழ் மிகுந்த திருமுதுகுன்றம் சென்றடைமின். ஈசனை ஏத்துமின்.

369. திண்ணினார் புறவணி திருமுது குன்றரை
நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாய்
பண்ணினாற் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : செழுமையான சோலையுடைய திருமுதுகுன்றத்தில் மேவும் பெருமானை நண்ணிய காழியின் ஞானசம்பந்தனின் திருப்பதிகத்தை பண்ணின் முறையில் பாடுபவர்களுக்குத் தீவினை நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

293. தென்குடித்திட்டை (அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

370. முன்னைநான் முறையவை மறைமுறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : நான்கு மறைகளும், நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற விளங்கும் சிவபெருமானின் இடமாவது, காவிரி நீர் வாய்க்கால்கள் வழி வந்து, வயல்களில் விளையும் செந்நெல்லை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும்.

371. மகரம் ஆடும்கொடி மன்மத வேள்தனை
நிகரலா காநெருப்பு எழவிழித் தானிடம்
பகரவாள் நித்திலம் பன்மக ரத்தொடும்
சிகரமா ளிகைதொகும் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : மீனக் கொடியுடைய மன்மதனை நிகரில்லாதனவாகிய நெற்றிக்கண்ணால் விழித்து நோக்கி எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசனின் இடமாவது, புகழ் மிக்க முத்துக்கள், பல அணி வகைகளுடன் உயர்ந்து பதிக்கப் பெற்று மேவும் மாளிகைகளைக் கொண்ட தென்குடித்திட்டை ஆகும்.

372. கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : ஈசன், கருவினுள் பொருந்தி எத்தன்மையிலும் பிறவியைக் கொள்ளாதவராகி எல்லாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்குபவர்; இத்தன்மையன் இவ் வண்ணத்தன், இவ் வடிவினன் எனச் சொல்லப் பெறுவதற்கு அரியவராய் எல்லாவற்றையும் தோற்றுவித்து அருள்பவர். அப் பெருமான் விளங்கும் இடமாவது, சிறப்பாகக் கருதப்படும் விழாக் காலங்களில் பாடலும் ஆடலும் நன்கு நிகழ்த்தப்பெறும் திருமேவும் புகழ் மிகுந்த தென்குடித்திட்டையே.

373. உண்ணிலா ஆவியாய் ஓங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : ஈசன், உயிரின்கண் மேவும், ஒண்மையுறும் பொருளாய் ஓங்கி இருப்பவர். அத்தன்மையைத் தேவர்களும் அறிகிலர். வேதமாகவும் அதன் அந்தமாகவும் விளங்கும் அப்பெருமானின் ஊராவது, எண்ணற்ற நவரத்தின் மணிகளால் இழைக்கப் பெற்ற பொன் மாளிகையின்மேல், தெளிந்த நிலவின் ஒளி திகழும் தென்குடித்திட்டை ஆகும்.

374. வருந்திவா னோர்கள்வந்து அடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க்கு அருள்செய்தான் அமரும்ஊர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி நஞ்சினை அருந்தி அமுதத்தை அவர்களுக்கு அருளிச் செய்த ஈசன் அமரும் இடமாவது, செருந்திப் பூ, மாதவி, செண்பகம் என வளரும் நீண்ட பொழில் திகழும் தென்குடித்திட்டையாகும்.

375. ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தரும் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர்வு எய்திமெய்
தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : ஈசன், எல்லாப் பொருள்களிலும் ஊறித் தோய்ந்து விளங்குபவர்; ஓசையுள் ஒன்றி நிலவுபவர்; திருமாலை ஒரு கூறாகக் கொண்டு திகழ்பவர்; குமாரக் கடவுளை ஈன்றவர்; அப் பெருமானுடைய ஊராவது, ஆறு பகைகளாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் (பொறாமை) ஆகியவற்றைக் களைந்து, மனமானது ஐம்புலன் வழிச் செல்லாது மெய்ம்மையை உணர்ந்தோர் வழிபடும் தென்குடித்திட்டை ஆகும்.

376. கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : கானகத்தில் வேட்டை கொள்ளும் மெய்யன்பர், கண் இடந்து அப்பிய ஞான்று வானவர்கள் எல்லாம் போற்றி ஏத்துமாறு, தவத்தின் தேவனாகச் செய்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, தெளிந்த நீர் நிலைகளில் விளங்கும் இடமாவது, தெளிந்த நீர் நிலைகளில் விளங்கும் தாமரையில் திகழும் தேன், பெருகி வயலில் பாயும் வளம் நிறைந்த தென்குடித்திட்டையாகும்.

377. மாலொடும் பொருதிறள் வாளரக் கன்னெரிந்து ஓவிடும்
படிவிரல் ஒன்றுவைத் தான்இடம்
காலொடும் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : பெருமையுடன் யாவரிடத்திலும் போர் செய்யும் திறலையுடைய அரக்கனாகிய இராவணன், ஓலம் கொண்டு அலறும்படி, விரலால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வாய்க்கால்களில் செல்லும் நீரில் பொன் வண்ண முகப்புடைய கயல், வரால், சேல் என்னும் மீன் வகைகள் விளங்கிப் பாயும் வயல்கள் கொண்ட தென்குடித்திட்டையே.

378. நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணவொண் ணான் இடம்
ஆரணம் கொண்டுபூ சுரர்கள்வந்து அடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் யாவற்றுக்கும் காரணனாக மேவும் ஈசனின் அடிமுடியைக் காண ஒண்ணாதவராயினர். அத்தகு சிறப்புடைய அப்பெருமானின் இடமாவது, அந்தணர்கள் வேதம் ஓதித் திருவடியை ஏத்தப் புகழ் கொண்ட மேவும் தென்குடித்திட்டையே.

379. குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் பொய்யுரைகளைப் பற்றி நிற்காதவர்களே ! வண்டு ஒலிக்கும் பொழிலில், மேகங்கள் சூழ்ந்த குளிர்ந்தபுனல் பெருகும் தென்குடித்திட்டை என்னும் திருத்தலத்தைச் சார்ந்து, ஈசனை ஏத்துமின்.

380. தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தரும் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : தேன் துளிர்க்கும் மணக்கும் சோலை சூழ்ந்த தென்குடித்திட்டையைப் போற்றிப் பொழில் சூழ்ந்த காழியுள், திகழும் சிவஞானம் பெருகி ஓங்கும் ஞானசம்பந்தன் சொல்லிய, செந்தமிழ்ப் பாடல்களை ஓத வல்லவர்களுக்குப் பாவமானது விலகும்.

திருச்சிற்றம்பலம்

294. திருக்காளத்தி (அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல் மாவட்டம், ஆந்திரா மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

381. சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே.

தெளிவுரை : சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய மரங்களை அலைகளால் உந்தித் தள்ளி வரும் சிறப்பான முகலி ஆற்றின் கரையில், தென்றல் வீசும் பொழில் வளர்ந்து பெருக, வள்ளல் தன்மையுடைய எந்தையாகிய காளத்திநாதர் உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருக்கின்றார். அப் பெருமானின் திருவடி என் மனத்தில் பதிந்துள்ளது.

382. ஆலமா மரவமோடு அமைந்தச்சீர்ச் சந்தனம்
சாலமா பீலியும் சண்பகம் உந்தியே
காலமார் முகலிவந்து அணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.

தெளிவுரை : ஆல், மா, மரவம், சந்தனம், ஆகிய மரங்களும், ஏராளமான மயிற் பீலியும் சண்பகமும் உந்தி வரும் முகலி ஆற்றில் கரையில் மேவும் காளத்தியில் விளங்கும் நீலகண்டனாகிய ஈசனை எவ்வகையில் நினைந்து ஏத்துதல் பொருந்துமோ, அத்தன்மையில் நினைந்து ஏத்துதல் கடமை.

383.கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.

தெளிவுரை : கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில் ஆகிய மரங்களை உந்திக் கொண்டு வரும் முகலியின் கரையினில் வீற்றிருக்கும் காளத்தில் நாதரின் திருவடிகளைத் தொழுது போற்ற, வெம்மை தரும் துயர் யாவும் கெடும். முத்திப் பேறு எளிதாகக் கைகூடும்.

384. கரும்புதேன் கட்டியும் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினில் அணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே.

தெளிவுரை : கரும்பு, தேன் கட்டி, வாழைக் கனி ஆகியவற்றை உந்தித் தள்ளி வரும் முகலியின் கரையில் பிறைச்சந்திரனை நீண்ட சடையின்கண் தரித்தவராய் மேவும் காளத்திநாதனை விரும்பிப் பணிபவர்கள், விண்ணுலகை ஆள்வார்கள்.

385. வரைதரும் ஆகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.

தெளிவுரை : மலையில் விளங்கும் அகில் மற்றும் முத்துக்களும் அலைகளால் உந்தித் தள்ளி வருகின்ற முகலியின் கரையினில் சிறந்த மலர்களைச் சடை முடியில் கொண்டு விளங்கும் காளத்திநாதனின் கழல்களை, நித்தமும் தொழுது போற்றி உய்வீராக.

386. முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.

தெளிவுரை : முத்துக்களும் மணிகளும் மலர்த் திரள்களும் அலைகளின் வாயிலாகக் கொண்ட வரும் முகலி ஆற்றின் கரையினில், இராவணனைத் திருப்பாத விரலால் அடர்த்த இறைவனின் காளத்தியானது எழில் பெற்று விளங்குவதாகும். அத்திருத்தலத்தை அணைந்து ஈசனை வணங்குதலைக் கடமையாகக் கொள்க.

387. மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கணைந்து உய்ம்மினே.

தெளிவுரை : சேற்று மண்ணும், வேங்கை, மருது ஆகிய மரங்களையும் வேரொடு தள்ளி, அலைகளால் உந்திக் கொண்டு செல்லும் முகலியின் கரையில், திருமாலும் பிரமனும் காண்கிலாத அண்ணலார்தம் காளத்தி என்னும் தலம் திகழ, ஆங்கு சென்றணைந்து உய்தி பெறுவீராக.

388. வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி உள்ளமோடு உணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே.

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் மொழியும் பாங்கில்லாத சொற்களைக் கை விடுக. ஈசன் திருவடியைப் பணிவீராக. வளமுடன் ஓங்கும் வள்ளலாகிய காளத்திநாதனை உள்ளம் ஒன்றி, மனதார உணர்ந்து போற்றுக. வானவர்களுக்கும் நாதனாகிய அப்பெருமான், வினைகளைத் தீர்த்து நலம் புரிபவன்.

389. அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : அட்டமாசித்திகள் என்று சொல்லப்படும் ஆற்றல்களைச் சேர்க்கும் காளத்தியில், சடை முடிகளையுடைய ஈசனை ஏத்திய வயல்களின் அணி திகழும் காழியின் ஞானியாய், வேதம் வல்ல ஞான சம்பந்தனின் சொல்லாகிய இத் திருப்பதிகத்தை விரும்பி ஓதவல்லவர்களுக்குத் தீவினை விலகும்.

அட்டமா சித்திகளாவன :

1. அணிமா   சிறியதில் சிறியதாதல்
2. மகிமா  பெரியதில் பெரியதாதல் (அண்டங்கள் அணுவாகவும் அணுக்கள் அண்டங்களாகவும் ஆதல்)
3. லகிமா  உறுதியானவற்றை நுண்மையாக்குதல்
4. கரிமா  சிறியனவற்றைப் பெரியதாக்குதல்
5. பிராத்தி  பாதாளத்தில் இருப்பவர் வானுலகில் இருத்தல்
6. பிராகாமியம்  கூடுவிட்டுக் கூடு பாய்தல்  வேறொரு உடலில் பிரவேசித்தல்
7. ஈசத்துவம்  முத்தொழிலை மேவுதல்
8. வசித்துவம்  யாவற்றையும் தன்வசம் ஆக்குதல்

திருச்சிற்றம்பலம்

295. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

390. கரமுனம்மல ராற்புனல்மலர்
தூவியேகலந்து ஏத்துமின்
பரமனூர்பல பேரினாற்பொலி
பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம்
ஐயன்நாள்தொறு மேயசீர்ப்
பிரமனூர்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகன்அருள் பேணியே.

தெளிவுரை : பரமனின் ஊரானது, பல திருப்பெயர்களை உடையது; பக்தர் பெருமக்களும், சித்தர்களும் போற்றி ஏத்த, வரங்கள் பல அருள் செய்யவல்ல எம் தலைவன் நாள்தொறும் மேவி விளங்கும் பிரமானூர் எனப்படும் பிரமாபுரம் ஆகும். அப்பதியில் உறையும் ஈசனின் அருளைப் போற்றிக் கரமலர்களால் கூப்பித் தொழுவீராக ! நற்புனல் கொண்டு அபிடேகம் செய்து, மலர்தூவிப் போற்றி, மனம் கலந்து ஒருமை நெஞ்சினராய் ஏத்தித் துதிப்பீராக.

391. விண்ணலார்மதி சூடினான்விரும்
பும்மறையவன் றன்தலை
உண்ணநல்பலி பேணினான்உல
கத்துள்ஊன்உயி ரான்மலைப்
பெண்ணினார்திரு மேனியான்பிர
மாபுரத்துறை கோயிலுள்
அண்ணலார்அரு ளாளனாய்அமர்
கின்றஎம்முடை ஆதியே.

தெளிவுரை : ஈசன், விண்ணில் திகழும் சந்திரனைச் சூடியவர்; விரும்பி ஏத்திய வேதியனாகிய பிரமனின் ஒரு தலையைக் கொய்து உண்ணுகின்ற பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பலி ஏற்றவர்; ஊனாகவும் உயிராகவும் உள்ளவர்; மலை அரசன் மகளாகிய உமா தேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; அப் பெருமான், பிரமாபுரத்தில் விளங்கும் கோயிலுள் மேவிய அண்ணல்; அவர் எம்முடை ஆதிப் பிரானவர்.

392. எல்லையில்புக ழாளனும் இமை
யோர்கணத்துடன் கூடியும்
பல்லையார் தலை யிற்பலியது
கொண்டுகந்த படிறனுந்
தொலைவையகத் தேறுதொண்டர்கள்
தூமலர்சொரிந்து ஏத்தவே
மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர
மாபுரத்துறை மைந்தனே.

தெளிவுரை : ஈசன், எல்லையற்ற புகழ் உடையவர்; தேவர்களெல்லாம் சூழ்ந்து விளங்க பிரம கபாலம் ஏந்திப் பலி கொண்டு மகிழ்ந்தவர். இப்பூவுலகில் தெளிந்த தொண்டர்களை தூய மலர் கொண்டு தூவிச் சொரிந்து இறைவனை ஏத்தி வாழ்த்த, அப்பெருமான் வளம் மிக்க பொழில் திகழும் பிரமாபுரத்தில் வீற்றிருப்பவர்.

393. அடையலார்புரம் சீறிஅந்தணர்
ஏத்தமாமட மாதொடும்
பெடையெலாம்கடற் கானல்புல்கும்பிர
மாபுரத்துஉறை கோயிலான்
தொடையலார்நறுங் கொன்றையான்தொழி
லேபரவிநின்று ஏத்தினால்
இடையிலார்சிவ லோகம் எய்துதற்கு
ஈதுகாரணம் காண்மினே.

தெளிவுரை : நன்மையுறும் அன்பற்கு உரியவராகாது, பகைத்துச் செறுத்தவர்களாகிய முப்புர அசுரர்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, அந்தணர்கள் ஏத்தி வணங்க, உமாதேவியாரோடு பிரமாபுரத்தில் விளங்குபவர், சிவபெருமான். அப் பெருமான் நறுமணம் கமழும் கொன்றை மலரை மாலையாக அணிந்து திகழ்பவர். அப் பரமனைப் பரவி ஏத்துதலைக் கடமையாகக் கொண்டு மேவும் அன்பர்கள், சிவலோகம் அடைவதற்கு அவர்களுடைய வழிபாட்டு நெறிய உரிய சாதனம் ஆகும்.

394. வாயிடைம்மறை யோதிமங்கையர்
வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்எரி கானிடைப்புரி
நாடகம்இனிது ஆடினான்
பேயொடும்குடி வாழ்வினான்பிர
மாபுரத்துறை பிஞ்ஞகன்
தாயிடைப்பொருள் தந்தையாகும்என்று
ஓதுவார்க்குஅருள் தன்மையே.

தெளிவுரை : ஈசன், திருவாயால் வேதங்களை நன்கு ஓதியவர்; தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகள் வந்து இடுமாறு, கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர்; மயானத்தின் இடையில் இடனது நடனம் ஆடியவர்; பேய்க் கூட்டத்துடன் விளங்குபவர்; அப்பெருமான் பிரமாபுரத்தில் உறையும் பிஞ்ஞகன்; அவனே தாயும் தந்தையுமாய் விளங்கும் பெருமான் என ஓதும் அன்பர்களுக்கு, அவனுடைய அருளிச் செயல் பெருகி ஓங்கும்.

395. ஊடினால்இனி யாவதுஎன்னுயர்
நெஞ்சமேயுறு வல்வினைக்கு
ஓடிநீயுழல் கின்றதென்அழல்
அன்றுதன்கையில் ஏந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான் பிர
மாபுரத்துறை வேதியன்
ஏடு நேர்மதி யோடுஅரவாணி
எந்தையெனாறுநின்று ஏத்திடே.

தெளிவுரை : உயர்ந்த நிலை கொண்டு மேவும் நெஞ்சமே ! வினையினால் உண்டாகும் துன்பத்தைக் கண்டு வருந்தினும் யாது பயன் ! கன்மத்தின்பால் அமையப் பெற்ற வினையை நுகரும் தன்மையில், ஓடி உழல்கின்றதும் எதற்கு ? திருக்கரத்தில் எரியும் நெருப்பை ஏந்திய ஈசன், சிறப்புடைய அருள் தன்மை உடையவராய் பிரமாபுரத்தில் உறையும் வேதியன் ஆவார். கீற்று போன்ற சந்திரனும், அரவமும் அணிந்து மேவும் எந்தையாகிய அவ் இறைவனை, ஒரு மித்த மனத்தால் ஏத்துவாயாக. துன்பம் யாவும் விலகிச் செல்லும்..

396. செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சிலர்
என்றும்ஏத்தி நினைந்திட
ஐயன்ஆண்தகை அந்தணன்அரு
மாமறைப்பொருள் ஆயினான்
பொய்யுமாமழை யானவன்பிர
மாபுரம்இடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந்து
எத்தும்வினை வீடவே.

தெளிவுரை : ஈசன், செம்மேனியர்; வெள்ளி மலை என்பபெறும் கயிலை நாயகர்; ஞானம் மிக்க பெருமக்களால் எக்காலத்திலும் ஏத்தி வணங்கப்படும் தலைவன்; வீரம் மிக்கராகியும் தூயராகியும் அருமையாகப் போற்றப்படும் மறையின் ஒண் பொருளாகவும் ஆகியவர்; வளத்தைப் பெய்து வழங்கும் சிறப்புடைய மழை ஆகியவர். அப் பெருமான் பிரமாபுரத்தை இடமாகக் கொண்டு மழுப்படை ஏந்தியவராய் விளங்க, அவரை ஒன்றி நினைந்து ஏத்துவீராக; வினை யாவும் நீங்கி நலம் பெறுவீராக.

397. கன்றொருக்கையில் ஏந்திநல்விள
வின்கனிபட நூறியும்
சென்றொருக்கிய மாமறைப்பொருள்
தேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்னடி
யும்முடியவை காண்கிலார்
பின்தருக்கிய தண்பொழிற்பிர
மாபுரத்தரன் பெற்றியே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணமுடியாதவாறு ஓங்கிய ஈசன், கயிலை மலையை எடுத்த இராவணனை அடர்த்தியவனாய்ப் பொழில் திகழும் பிரமாபுரத்தில் வீற்றிருக்கும் சிறப்புடைய பெருமான் ஆவார்.

398. உண்டுஉடுக்கைவிட் டார்களும்உயர்
கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டுஅடக்குசொற் பேசும்அப்பரிவு
ஒன்றிலார்கள்சொற் கொள்ளன்மின்
தண்டொடுஅக்குவன் சூலமும்தழல்
மாமழுப்படை தன்கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன்எம்பிர
மாபுரத்துஉறை கூத்தனே.

தெளிவுரை : சமணர்களும் தேரர்களும், தொன்று தொட்டு வரும் சமயக் கருத்துக்களைத் திரித்துச் சொல்லும் தன்மையுடையவர்கள். நலம் பயவாத அச்சொற்களைக் கொள்ள வேண்டாம். ஈசன், யோகதண்டம், உருத்திராக்க மாலை ஆகியன கொண்டு விளங்குபவன்; வலிமையுடைய சூலப்படை உடையவன்; கையில் எரியும் தழலைக் கொண்டிருப்பவன்; சிறந்த மழுப் படையை ஏந்தியவன்; அப்பெருமான் எமது ஊராகிய பிரமாபுரத்தில் உறையும் கூத்தன் ஆவான். அப் பெருமானை ஏத்த உய்வீராக.

399. பித்தனைப் பிர மாபுரத்துஉறை
பிஞ்ஞகன் கழல் பேணியே
மெய்த்தவத்து நின் றோர்களுக்குரை
செய்துநன்பொருள் மேவிட
வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன்
வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம் பொறி நீங்கஇன்னிசை
போற்றிசெய்யும் மெய்ம மாந்தரே.

தெளிவுரை : பித்தனாய், பிரமாபுரத்தில் உறைகின்ற பிஞ்ஞகனாய் விளங்கும் சிவபெருமான் திருக்கழலைப் பேணி, மெய்த்தவத்தினராய் விளங்கும் சான்றோர்களுக்கு உரை செய்து, ஞானசம் பெறுமாறு செய்வித்த மாலைகளைப் பாடுக. பொய்த் தன்மை வாய்ந்து, அவம் பெருக்கும் புலன்களின் குற்றம் நீங்க, இன்னிசையால் ஏத்துக. இத்தன்மையுடையோரே மெய்ம்மை வழி நிலவும் மாந்தர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

296. திருக்கண்டியூர் வீரட்டம் (அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

400. வினவினேன்அறி யாமையில்உரை
செய்ம்மினீர்அருள் வேண்டுவீர்
கனைவிலார்புனல் காவிரிக்கரை
மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக்கு இன்மையோதமர்
ஆயினார்அண்டம் ஆளத்தான்
வனனில் வாழ்க்கைகொண்ட ஆடிப்பாடிஇவ்
வையமாப்பலி தேர்ந்ததே.

தெளிவுரை : ஈசனைத் தொழுது போற்றி அருளை நாடி நிற்கும் அன்பர்களே ! அறியாமை காரணமாக வினவுகின்றேன். உரை செய்வீராக ! ஆராவாரத்தோடு மிகுதியாகச் செல்லும் நீர் விளங்கும் காவிரியின் கரையில் மேவும் கண்டியூரில் வீற்றிருக்கும் வீரட்டநாதன், தனக்கு முன்னோர்கள் இன்மையாலோ, நெருக்கமாகியவர்களாகிய திருமாலும் பிரமனும் அண்டங்களை ஆளவும், தான் மயானத்தில் ஆடியும் பாடியும் இவ்வுலகத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை கொண்டு விளங்குவது.

401. உள்ளவாறெனக்கு உரைசெய்மின்உயர்
வாயமாதவம் பேணுவீர்
கள்ளவிழிபொழில் சூழும்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை
வைத்ததும்பெரு நீரொலி
வெள்ளந்தாங்கியது என்கொலோமிகு
மங்கையாள் உடனாகவே.

தெளிவுரை : உயர்வாகிய மாதவத்தைப் பேணுகின்றவர்களே ! உள்ளவாறு உரைப்பீராக.

தேன் கமழும் பொழில் சூழும் கண்டியூரில் வீற்றிருக்கும் வீரட்டநாதன் உமாதேவியுடன் கொண்டு மேவ, இளைமையான பிறைச் சந்திரனைச் சிவந்த சடையின் மீது வைத்ததும், பெருநீராகிய கங்கையைத் தாங்கியதும் என்கொல் !

402. அடியர் ஆயினீர் சொல்லுமின்அறி
கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாம் தொழுது ஏத்துகண்டியூர்
வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாய்இவ்வைய
முழுதுமாய்அழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி
நூலும்பூண்டெழு பொற்பதே.

தெளிவுரை : அடியவர்கள் ஆகியவர்களே ! அரனின் செய்கையைச் சொல்லுமின் ! உலகமெல்லாம் தொழுது ஏத்துகின்ற கண்டியூரில் வீரட்டானத்தில் உறைகின்ற பெருமான், அந்தமாக இருப்பவர்; முதற்பொருளாய் விளங்குபவர்; இவ் வையம் முழுவதும் ஆகி, நிறைந்து விளங்குபவர். அவர், திருவெண்ணீற்றினைத் திருமார்பில் பூசி, முப்புரி நூலும் அணிந்து மேவும் பொற்புதான் யாது ?

403. பழையதொண்டர்கள் பகருமின்பல
வாயவேதியன் பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி
மன்னு கண்டியூர் வீரட்டன்
குழையொர் காதினிற் பெய்துகந்தொரு
குன்றின் மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்துஉகந்த பொலிவதே.

தெளிவுரை : வாழையடி வாழையாக வந்த திருக் கூட்ட மரபில் விளங்குகின்ற பழம் பெரும் திருத்தொண்டர்களே ! பலவாகிய தன்மைகளை உடைய ஈசனின் பாங்கினைப் பகருமின். மலைப்பகுதிகளின் வழியாகப் பெருகி வரும் காவிரியானது, வளத்தைப் பெருக்கி மேவும் கண்டியூரில், வீரட்டநாதன், காதில் குழை அணிந்து மகிழ்ந்து, மலை மகளாகிய உமையவள் வெருவுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்துப் பொலிவது என்கொல் !

404. விரவிலாதுமைக் கேட்கின்றேன்அடி
விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
கரையெலாம்திரை மண்டுகாவிரிக்
கண்டியூர்உறை வீரட்டன்
முரவமொந்தை முழவொலிக்க
முழங்கு பேயொடும் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல்
நஞ்சம்உண்ட பரிசதே.

தெளிவுரை : ஈசனின் திருவடிக் கமலத்தை விரும்பி ஆட்பட்டுப் போற்றி விளங்கும் அடியவர்களே ! விளம்புவீராக! காவிரியின் அலைகள் பெருக மேவும் கண்டியூரில் உறையும் வீரட்டநாதர், மொந்தை, முழவு முதலான வாத்தியங்கள் முழங்க, பேய்க் கணங்களும் பூத கணங்களும் சூழ்ந்து நிற்க, வானவர்களுக்காகக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட பரிசுதான் என்கொல் !

405. இயலுமாறு எனக்கு இயம்பு மின்இறை
வன்னுமாய்நிறை செய்கையைக்
கயல்நெடுங்கண்ணி னார்கள்தம்பொலி
கண்டியூர்உறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக்
காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயல்நகவ்வது அரிந்து மற்றதில்
ஊணுகந்த அருத்தியே.

தெளிவுரை : ஈசனின் திருவடிக் கமலத்தைப் போற்றி வணங்கும் மெய்யன்பர்களே ! இயம்புவீராக! கயல் போன்ற கண்ணுடைய மகளிர் பொலிந்து விளங்கும் கண்டியூரில் உறையும் வீரட்டநாதன், உலகத்தில் மழை பெய்வித்து நலம் புரியும் தேவர்களுக்காகப் பிரமனுடைய ஐந்தாவதாகிய சிரத்தைக் கொய்து அதனைக் கொண்டு, பிச்சை ஏற்று உண்ணுகின்ற விருப்பத்தைக் கொண்டது என்கொல் !

406 திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச்
செல்வன்றன்னது திறமெலாம்
கருந்தடங்கண்ணி னார்கள்தாம்தொழு
கண்டியூர்உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு ஆல்நிழல்அறம்
உரைத்ததும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யால்அம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே.

தெளிவுரை : நன்று தெளிந்து சிவஞானத்தை உணர்ந்து மேவும் தொண்டர்களே ! மெய்ச் செல்வனாக விளங்கும் சிவபெருமானின் திறம் யாவும் நன்கு உரை செய்வீராக.மகளிர் கூடி இருந்து தொழுகின்ற கண்டியூரில் உறையும் வீரட்டநாதன், சனகாதி முனிவர்களாகிய நால்வருக்குக் கல்லால மரத்தின் நிழலில் இருந்து அறப்பொருள் உரைத்ததுவும், முப்புர அசுரர்களும் அவர்களுடைய மூன்று கோட்டை மதில்களும் எரியுமாறு, மேரு மலையை வலிமையான வில்லாகக் கொண்டு வாட்டிய வண்ணமும் யாதுகொல் !

407. நாவிரித்தரன் தொல்புகழ்பல
பேணுவீர்இறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப்பயன் ஆன்அஞ்சுஆடிய
கொள்கையும் கொடி வரைபெற
மாவரைத்தலத் தால்அரக்கனை
வலியைவாட்டிய மாண்பதே.

தெளிவுரை : நாவினால் அரனது தொன்மையான புகழ்ச் செயல்களைப் போற்றும் அன்பர்களே ! விடைபகர்வீராக !

காவிரியின் நீர் வளம் பெருகும் கண்டியூரின் வீரட்டானத்தில் உறையும் கண்ணுதலாகிய ஈசன், பசுவிலிருந்து பெறும் பால், தயிர், நெய் முதலான பஞ்ச கௌவியத்தைப் பூசிக்கப்படும் பொருளாக ஏற்று ஆடி மகிழ்ந்து, இராவணன் கயிலை மலையால் நெரியுமாறு திருப்பாத விரலை ஊன்றி, வலிமையை அழித்து விளங்கிய மாண்பு யாதுகொல் !

408. பெருமையேசர ணாகவாழ்வுறு
மாந்தர்காள்இறை பேசுமின்
கருமையார்பொழில் சூழந்தண்வயற்
கண்டியூர்உறை வீரட்டன்
ஒருமையால்உயர் மாலும்மற்றை
மலரவன்உணர்ந்து ஏத்தவே
அருமையால்அவ ருக்குஉயர்ந்துஎரி
யாகிநின்றஅத் தன்மையே.

தெளிவுரை : சிவபெருமானுடைய பெரும் புகழைப் பரவிச் சரண் புகுந்து அருளில் திளைக்கும் மாந்தர்காள் ! விடை பகர்வீராக ! அடர்த்தியான இலைகளுடைய வளமையான பொழில் சூழ்ந்தும் குளிர்ச்சி மிக்க வயல்களும் உடைய கண்டியூரில் உறையும் வீரட்டநாதன், திருமாலும் பிரமனும் ஏத்தி நிற்க, அவர்களுக்கு எட்டாதவனாய் உயர்ந்து, தீத்திரளாய் நின்ற தன்மைதான் யாது !

409. நமர்எழுபிறப்பு அறுக்கு மாந்தர்காள்
நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூர்உறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண்
ஆதர்ஓதும் அதுகொளா
தமரர்ஆனவர் ஏத்த அந்தகன்
தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே.

தெளிவுரை : தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தினரின் பிறவிப் பிணியை அறுக்கும் அடியவர்களாகிய மெய்த் தொண்டர்களே ! பூமியில் வெடிப்பு கொண்டு வறட்சி உண்டாகாதவாறு, குளிர்ந்த நீர் பெருகும் வயல்கள் சூழ்ந்த கண்டியூரில் உறையும் வீரட்டநாதன், சமணர் சாக்கியர்தம் சொற்களைக் கருத்துடையதாகக் கொள்ளாததும், அந்தகனைச் சூலத்தால் சம்ஹரித்ததும் என்கொல் !

410. கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர்
வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக்
கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம்
பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வார் உயர்ந்தார்களே.

தெளிவுரை : அன்பர்தம் கருத்தாக விளங்கி, கண்டியூரில் வீரட்டானத்தின்கண் உறையும் ஈசன், பிறரால் காணப் பெறாது, மனத்தைக் கவரும் கள்வராகவும், சொல்லின் பொருளாகவும் இருப்பவர். அப் பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழ்ந்த, திருத்தமாய்த் திகழும் காழியின் ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இதனை, ஒருவராகத் தனித்தும், பலராகச் சேர்ந்தும் பாடுபவர்கள், உயர்ந்தவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

297. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

411. மானினேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாய்ஒரு பாலன்ஈங்குஇவன்
என்றுநீபரிவு எய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்குஎளி யேன்அலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : மான்போன்ற விழியுடைய மாதரசியே ! பாண்டிய மன்னனின் பட்டத்து அரசியே ! இங்கு என்னைப் பால்மணம் கொண்டு மேவும் பாலன் எனக் கருதி மனம் வருந்த வேண்டாம். மலைப் பகுதிகளில், அல்லல் மேவி விளங்குகின்ற ஈனர்களுக்கு யான் எளியவன் அல்ல. திருஆலவாயின்கண் வீற்றிருக்கும் சிவபெருமான், என் முன் நின்று அருள் செய்பவர். அவர், என்னைக் காத்தருள்பவர்.

412. ஆகமத்தொடு மந்திரங்கள்
அமைந்தசங்கத பங்கமாப்
பாகத்தொடு இரைத்துரைத்த
சனங்கள் வெட்குறு பக்கமா
மாகத்கரி போல்திரிந்து
புரிந்து நின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
ஆல்வாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், உயர்ந்த பொருள் தரும் வாசகங்களையும் நன்கு பயின்று ஓதி உரைப்பவர்களாகிய பெருமக்கள், நாணுகின்ற தன்மையில், மதம் பொருந்திய யானையைப் போன்று, தேகத்தில் அழுக்கு சேர இருப்பவர்களுக்கு நான் எளிமையானவன் அல்ல. திருஆலவாயில் விளங்கும் சிவபெருமான் யாவற்றையும் முன்னின்று செய்வதனால் அச்சத்தை விடுக.

413. அத்தகுபொருள் உண்டும்இல்லையும்
என்றுநின்றவர்க்கு அச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : இறைவனின் மேம்பட்ட தன்மையினை உண்டு இல்லை என்னும் தன்மையில் இருப்பவர்களுக்கு நான் அச்சம் தருபவன்.ஒவ்வாத வார்த்தைகளைக் கூறி வாதம் செய்து அழிபவர்களாகிய அத்தகையினருக்கும், பிறர் இகழுமாறு சித்திர வார்த்தைகளை மொழிபவர்களுக்கும் யான் எளியவன் அல்ல. ஆலவாயின்கண் மேவும் அரன் என் முன்னின்று யாவும் புரிபவர்.

414. சந்துசேனனும் இந்துசேனனும்
தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந்து ஆரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்குஎளி யேன்அலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : சந்து சேனன், இந்து சேனன், தரும சேனன், கந்து சேனன், கனக சேனன் முதலாகிய பெயர்களைச் சிறப்பாகத் தாங்கி, எல்லா இடங்களிலும் திரிந்து அலைந்தவர்களாகி, வடமொழியும் செந்தமிழும் நவில்கின்ற சிவப் பரம் பொருளையும் அதன் பயனையும் அறியாது, உலகியலில் அகக் குருடர்களாய் விளங்குபவர்களுக்கு, நான் எளியவன் அல்ல. திரு ஆலவாயின் ஈசன் என் முன்னிருந்து நடத்திச் செல்கின்றார். எனவே அச்சத்தை விடுக.

415. கூட்டின்ஆர்கிளி யின்விருத்தம்
உரைத்ததோர்ஒலி யின்தொழில்
பாட்டுமெய் சொலிப் பக்கமே செலும்
எக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவரு மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : கூண்டில் இருக்கும் கிளி விருத்தம் முதலானவைகளை உரைத்து, அக் கிளியினது ஒலித் தன்மையை மெய்யெனக் கூறி அறங்களைச் சொல்லுகின்றவர்கள் போல் பேசி, இரக்கம் அற்றவராகி, குற்றங்களைப் புரிபவர்களுக்கு நான் எளியவன் அல்ல. ஆலவாயின்கண் உறையும் ஈசன் என் முன்னின்று நன்று அருள் புரிபவர்.

416. கனகநந்தியும் புட்பநந்தியும்
பவணநந்தியும் குமணமா
கனகநந்தியும் குனகநந்தியும்
திவணநந்தியும் மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோம்எனும்
சினகருக்கெளி யேனலேன் திரு
ஆலவாய்அரன் நிற்கவே

தெளிவுரை : கனக நந்தி, புட்ப நந்தி, பவண நந்தி, குமண மாசுனக நந்தி, குனகநந்தி, திவணநந்தி எனப் பலவகையான பெயர்கள் கொண்டு, எண்ணற்றவர்களாய் உலகியல் வாழ்க்கையை ஒதுக்கியவர்களாகி, அவமாகிய நிலையைத் தவம் எனக் கொண்டு, பொய்த் தன்மையைக் காட்டுபவர்களுக்கு நான் எளியவன் அல்ல. திருஆலவாயில் வீற்றிருக்கும் சிவபெருமான் என் முன்னிருந்து அருள்பவர்.

417. பந்தணம்மவை யொன்றிலம்பரி
வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது
புத்தணம்மது சிந்தனச்
சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : பந்தத்தால் கட்டுப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில் ஈடுபடுத்திக் கொள்வதும், ஒரு பொருளின் கண் பரிவு கொண்டு அதன் இச்சைக்கு உவந்து ஆட்படுதலும், இல்லை எனப் பேசியும், புகழ் இன்றி சமயத்தின் கொள்கை இதுவே என மொழிதலும் உடையவர்களுக்கு, நான் எளியவன் அல்ல. திருஆலவாயில் கோயில் கொண்டு மேவும் ஈசன் என் முன்னின்று யாவற்றையும் திகழ்விப்பவர். எனவே அச்சத்தைக் கைவிடுக.

418. மேலெனக்குஎதிர் இல்லையென்ற
அரக்கனார்மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாய்இடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலும்
சீலிகட்குஎளி யேன்அலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை :  தன்னிலும் மேலாக யாரும் இல்லை எனக் கருதிய இராவணனுடைய செருக்கினை அழித்தவர், சிவபெருமான். அப் பெருமானைப் பணிந்து ஏத்தாது, பொய்த் தவத்தைக் கொண்டு, குண்டிகையும் மயிற் பீலியும் விளங்க, ஓலைத் தடுக்கினை உடையவர்களுக்கு, நான் எளியவன் அல்ல. திருஆலவாயின்கண் மேவும் ஈசன், என் முன்னிருந்து யாவற்றையும் புரிபவர்.

419. பூமகற்கும் அரிக்கும்ஓர்வரு
புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போல்தலை
யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
யட்டிவாய்ச கதிக்கு நேர்
ஆமவர்க் கெளியேன லேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் நினைத்தற்கு அரிய பொருளாகிய புண்ணியன், சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி வணங்காதவர்களாய், ஈமக் கிரியையைப் புரியும் தன்மை உடையவர்கள் போன்று தலையில் திகழும் சிகையைக் களைந்து பொய்த் தவத்தின்பால் பயனின்றித் திளைத்துத் தம்மை வருத்திக் கொண்டு பொருள் அற்ற உரை நவில்பவர்களுக்கு, யான் எளியவன் அல்ல. எனக்குத் திருஆலவாயில் வீற்றிருக்கும் ஈசன் முன்னின்று விளங்குபவர்.

420. தங்களுக்கும்அச் சாக்கியர்க்குந்
தரிப்பொணாதநற் சேவடி
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
கேமடுத்தொரு வாய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
வோர்களைப் பழிக் கும்பொலா
அங்கதர்க்குஎளி யேனலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : சமர் கொண்டு அடர்க்கும் சமணர்களுக்கும் சக்கியர்களுக்கும் அரிதாகிய உயர்பொருளாய் விளங்குபவர், சிவபெருமான். அத்தகைய நாதனின் நல்ல சேவடியை ஏத்தி எங்கள் நாயகனே ! என்று போற்றி வழிபடுதலை விட்டு, உவமாய் தவத்தின் வழியாய், நல்ல நூற்கள் புகலும் வழியும் இன்றி, அறிஞர்களைப் பழிக்கும் பொல்லாத பழிச் சொல் பேசுபவர்களுக்கு நான் எளிமையானவன் அல்ல. எனக்குத் திருஆலவாயில் மேவும் ஈசன் முன் இருந்து யாவற்றையும் செய்பவர் ஆவர்.

421. எக்கராம் அமண் கையருக்குஎளி
யேன்அலேன்திரு ஆலவாய்ச்
சொக்கன்என்னுள் இருக்கவே துளங்
கும்முடித் தென்னன் முன்னிலை
தக்கசீர்புகலிக் குமன்தமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேஉரை செய்தபத்தும்
உரைப்பவர்க்கு இடர் இல்லையே.

தெளிவுரை : திருஆலவாய்க் கடவுளாகிய சொக்கநாதன் என் உள்ளத்தில் இருக்க, செருக்குடைய அமணர்களுக்கு எளியவன் அல்ல எனப் பாண்டிய மன்னன் முன்னிலையில் புகலியின்கண் மேவும் சிறப்புடைய தமிழ் நாதனாகிய ஞானசம்பந்தன், வாய்மலர உரைத்த இத்திருப்பதிகத்தை, ஓத வல்லவர்களுக்கு இடம் இல்லை.

திருச்சிற்றம்பலம்

298. பொது  திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்

422. கல்லாலனீழல், அல்லாத்தேவை
நல்லார் பேணார், அல்லோநாமே.

தெளிவுரை : கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிற தெய்வத்தைச் சிவஞானிகள் வணங்கி ஏத்த மாட்டார்கள். நாமும் அவ்வாறு சிவபெருமானை அன்றி வேறு தெய்வத்தைக் கொள்ளோம்.

423. கொன்றைசூடி, நின்றதேவை
அன்றியொன்று, நன்றிலோமே.

தெளிவுரை : கொன்றை மலரைச் சூடி விளங்குகின்ற சிவபெருமானை அன்றி பிற தெய்வத்தை நன்மை செய்யும் கடவுளாக யாம் கருதவில்லை.

424. கல்லாநெஞ்சின், நில்லான்ஈசன்
சொல்லாதாரோடு அல்லோநாமே.

தெளிவுரை : ஈசன், சிவஞானத்தை உணராத நெஞ்சத்தில் விளங்கி நிற்காதவர். அப்பெருமானுடைய திருப்புகழை நன்கு சொல்லாதவர்களோடு, யாம் சேர்ந்து இருக்க மாட்டோம்.

425. கூற்றுதைத்த, நீற்றினானைப்
போற்றுவார்கள், தோற்றினாரே

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த கூற்றுவனைத் திருநீற்று மேனியராக விளங்கும் சிவபெருமான், திருப்பாதத்தால் உதைத்து அழித்தார். அப் பெருமானை, மக்கட் பிறவி எடுத்தவர்கள் போற்றித் துதிப்பார்கள்.

426. காட்டுளாடும், பாட்டுளானை
நாட்டுளாரும், தேட்டுளாரே.

தெளிவுரை : ஈசன், சுடுகாட்டில் விளங்கி நின்று நடனம் புரிபவர்; பெருமை விளங்கும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனப்படும் ஐந்தொழிலையும் தனது சங்கற்பத்தால் ஆற்றுபவர். அப்பரம் பொருளை, நெஞ்சில் தேக்கித் தியானம் செய்பவர்கள் பேரின்பத்தில் திளைப்பவர்கள்.

427. தக்கன்வேள்விப், பொக்கம்தீர்தத
மிக்கதேவர், பக்கத்தோமே.

தெளிவுரை : தக்கன் செய்த வேள்வியால் உண்டாகும் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும் அருளும் மிகுந்த தேவராகிய சிவபெருமானுடைய பக்கத்தில் யாம் இருக்கின்றனம்.

428. பெண்ணாண்ஆய, விண்ணோர்கோவை
நண்ணாதாரை, எண்ணோநாமே.

தெளிவுரை : பெண்ணாகவும், ஆணாகவும் ஆகி விண்ணோர்கள் போற்றும் தலைவராகிய சிவபெருமானை; மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களால் அணுகாதவர்களை  நாம் நெஞ்சாலும் எண்ணுவதில்லை.

429. தூர்த்தன்வீரம், தீர்த்தகோவை
ஆத்தமாக, ஏத்தினோமே.

தெளிவுரை : துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்துத் திருமலையின் பெருமையும் திருவருளும் பொலியுமாறு அவனுக்கு வாளும், வாழ்நாளும் வழங்கிய இறைவனை, விருப்பத்துடன் யாம் ஏத்தி வணங்கினோம்.

430. பூவினானும், தாவினானும்
நாவினாலும், நோவினாரே.

தெளிவுரை : மலர்மேல் விளங்கும் பிரமனும் உலகத்தைத் தாவி அளந்த திருமாலும், ஈசனின் திருமுடியையும் திருவடியையும் உடல் வருத்தித் தேடியும் காண்கிலராய்ப் பின்னர் நாவினால் ஏத்தி உருகி நின்றவராயினர்.

431. மொட்டமணர், கட்டர்தேரர்
பிட்டர்சொல்லை, விட்டுளாமே.

தெளிவுரை : சமணர்களும், தேரர்களும் சமயநெறிக்குப் புறம்பாகச் சொற்களைக் கூறுபவர்கள். அவற்றைப் பொருளாகக் கொள்ளாது விடுத்தன்.

432. அந்தண்காழிப், பந்தனசொல்லைச்
சிந்தைசெய்வோர், உய்ந்துளோரே.

தெளிவுரை : அழகிய குளிர்ச்சி பொருந்திய காழியில் மேவும் ஞானசம்பந்தனது திருச் சொல்லாக மலர்ந்த இத் திருப்பதிகத்தை சிந்தித்தும், வாயாரப் பாடியும் திகழ்பவர்கள், உய்வு பெற்றவர்களாவார்கள்.

திருச்சிற்றம்பலம்

299. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

433. கருவார்கச்சித், திருவேகம்பத்து
ஒருவாஎன்ன, மருவாவினையே

தெளிவுரை : கருப்பொருளாக விளங்கும் சிறப்பு மிக்க கச்சியில் திருவேகம்பத்தில் வீற்றிருக்கும் ஒருவனே ! பெருமானே ! என்று ஏத்தி வணங்க, வினைத் துயர் இல்லை.

434. மதியார்கச்சி, நதியேகம்பம்
விதியால்ஏத்தப், பதியாவாரே.

தெளிவுரை : சிவஞானம் பெருக்கும் தன்மையில் கம்பாநதியின் கரையில் விளங்குகின்ற திருவேகம்பத்தை ஆகம விதிப்படி அன்பர்கள் ஏத்தி வணங்க, சிவ கணங்களுக்குத் தலைமையாய் விளங்குவார்கள்.

435. கலியார்கச்சி, மலியேகம்பம்
பலியாற்போற்ற, நலியாவினையே

தெளிவுரை : விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எஞ்ஞான்றும் விளங்குகின்ற கச்சியில், பேரருள் வழங்குகின்ற திருத்தலமாகத் திகழும் திருவேகம்பத்தை பூசையின் சிறப்புக் காட்டும் அபிடேகப் பொருள் கொண்டு போற்ற, தீவினையால் நலிவு இல்லை.

436. வரமார்கச்சிப், புரம்ஏகம்பம்
பரவாஏத்த, விராவவினையே.

தெளிவுரை : வணங்கிப் போற்றும் பக்தர்களுக்குப் வேண்டிய வரங்களை நல்கும் தெய்வப் பேறுடைய திருத்தலம், காஞ்சிபுரம். இத் திருத்தலத்தில் திருவேகம்பப் பெருமானைப் பரவி ஏத்த, வினை யாவும் நீங்கும்.

437. படமார்கச்சி, இடமேகம்பத்து
உடையாய்என்ன, அடையாவினையே.

தெளிவுரை : சித்திரங்களின் வேலைப்பாடுகளை உடைய கவின்மிகு கச்சியை இடமாகக் கொண்டு, திருவேகம்பத்தில் வீற்றிருக்கும் நாதனே ! என்று ஏத்த, வினையானது சாராது.

438. நலமார்கச்சி, நிலவேகம்பம்
குலவாஏத்தக் கலவாவினையே

தெளிவுரை : நலம் யாவும் பொருந்தி மேவும் கச்சி நகரில் நிலவுகின்ற திருவேகம்பத்தை, அன்பின் வயத்தால் குலாவி ஏத்த, வினையானது பற்றாது நீங்கும்.

439. கரியின்னுரியன், திருவேகம்பன்
பெரியபுரமூன்று, எரிசெய்தானே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்துச் கொண்டவராகிய ஈசன், திருவேகம்பப் பெருமான். அப் பரமன், நன்னெறியிற் பொருந்தி நில்லாது கேடுகளை விளைவித்த மூன்று புரங்களை எரியுமாறு செய்தவர்.

440. இலங்கைஅரசைத் துலங்கஊன்றும்
நலங்கொள்கம்பன் இலங்குசரணே.

தெளிவுரை : இராவணனை கயிலை மலையின்கண் நெரியுமாறு ஊன்றி, அவன் நலத்தை அழித்த திருவேகம்பன் திருவடியைச் சரணம் கொள்ளுதலே சிறந்து விளங்குவதற்கு உரிய செம்மையான வழி.

441. மறையோன்அரியும், அறியாஅனலன்
நெறியேகம்பம், குறியால்தொழுமே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் அறியமுடியாதவாறு நெருப்பின் திரட்சியாகியவர், சிவபெருமான். அப்பரம்பொருளாகிய அப் பெருமானையே தொழுகின்ற மாண்பினை நோக்கமாகக் கொண்டு, நெஞ்சே ஏத்துமின்.

442. பறியாத்தேரர், நெறியில்கச்சிச்
செறிகொள்கம்பம், குறுகுவோமே.

தெளிவுரை : சாக்கியர்களும் சமணர்களும் கூறும் நெறியின்படி அமையாது, கச்சியில் ஞானம் பெருகும் திருவேகம்பநாதனின் திருக்கோயிலை நண்ணி, ஏத்துவோமாக.

443. கொச்சைவேந்தன் கச்சிக்கம்பம்
மெச்சும்சொல்லை நச்சும்புகழே.

தெளிவுரை : கொச்சைவயம் என்னும் திருப்பெயரை உடைய சீகாழியில் அருள் நாயகனாக விளங்கும் ஞானசம்பந்தன், வேதம் போன்று உயர்வாக மெச்சிக் கச்சிக் கம்பனைப் போற்றிப் பாடுகின்ற இத் திருப்பதிகத்தை ஏத்தி உரைக்க வல்லவர்கள், நிலைத்த புகழுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

300. திருச்சிற்றேமம் (அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

444. நிறைவெண்திங்கள் வாள்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டுயாழ்செய் பைம்பொழிற் பழனம்சூழ் சிற்றேமத்தான்
இறைவன்என்றே உலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.

தெளிவுரை : முழு நிலவு போன்ற ஒளி திகழும் முகம் உடைய உமாதேவியார் இசை பாட, நீண்ட சடை முடியில் பிறைச் சந்திரனைச் சூடி நடனம் புரிகின்ற இயல்பினை உடையவராய் சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பைம்பொழிலும், வயல்களும் சூழ்ந்த சிற்றேமத்தில் வீற்றிருக்கின்ற ஈசன், உலகமெல்லாம் ஏத்திப் போற்றுகின்ற இறைவன்.

445. மாகத்திங்கள் வாள்முக மாதர்பாட வார்சடைப்
பாகத் திங்கள் சூடியோர் ஆடல்மேய பண்டங்கள்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேம மேவினான்
ஆகத்துஏர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே.

தெளிவுரை : ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்ற ஒளியுடைய முகத்தை உடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச் சந்திரனைச் சூடிப் பண்டரங்கம் என்னும் கூத்து மேவும் ஈசன், மேகம் திகழும் சோலை சூழ்ந்த சிற்றேமத்தில் மேவியவர். அப்பெருமான், திருமார்பில் ஆமை ஓட்டினை அணிகலனாகப் பூணும் அண்ணல் அல்லவா !

446. நெடுவெண்திங்கள் வாள்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
படுவண்டியாழ் செய்பைம் பொழில் பழனம்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங் கூற்றைக் காலினாற் காய்ந்த கடவுள் அல்லனே.

தெளிவுரை : முழு நிலவு போன்ற முகங் கொண்ட உமாதேவி பண் இசைத்துப் பாட, நீண்ட சடையில் பிறைச் சந்திரனைச் சூடி நடம் புரிதலையுடைய ஈசன், பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுள் அல்லவா !

447. கதிரார்திங்கள் வாள்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோர் ஆடல்மேய முக்கணன்
ஏதிரார்புனலம் புன்சடை எழிலாரும் சிற்றேமத்தான்
அதிரார் பைங்கண் ஏறுடை ஆதிமூர்த்தி அல்லனே.

தெளிவுரை : கதிர்கள் வீசி விளங்கும் சந்திரனைப் போன்ற முகங் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப் பாட, நெற்றிக் கண்ணுடைய ஈசன், இளம் பிறைச் சந்திரனைச் சூடி, ஆடலை மேவுகின்ற முக்கண்ணன் ஆவார். அவர், கங்கையும் சடை முடியும் கொண்டவராய் எழில் திகழும் சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், இடபத்தை வாகனமாக உடைய ஆதிமூர்த்தி அல்லவா !

448. வானார்திங்கள் வாள்முகமாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயும் திருவாரும்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே.

தெளிவுரை : வானில் விளங்குகின்ற சந்திரனைப் போன்ற ஒளி திகழும் முகம் உடைய உமாதேவியார் பண் இசைத்துப் பாட, நீண்ட சடைமுடியில் வளைந்த பிறைச் சந்திரனைச் சூடித் திருக்கூத்து மேவும் ஈசன், செல்வம் மிகுந்த சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான் மான் போன்ற விழியாளாகிய மாதொடு மகிழ்ந்து மேவும் மைந்தன் அல்லவா !

449. பனிவெண்திங்கள் வாள்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமம் சூழ்சிற் றேமத்தான்
முனிவும் மூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே.

தெளிவுரை : குளிர்ச்சியான வெண் திங்களைப் போன்ற முகன் கொண்டு மேவும் உமாதேவியார் பண் இசைத்துப் பாட பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடி ஆடல் மேவும் ஈசன், ஒற்றை இடபத்தை வாகனமாக உடையவராய்ப் பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும் சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், விருப்பும் வெறுப்பும் அற்றவராயும் மூப்பினை அடையப் பெறாத வண்ணம் உடையவராயும் மேவும், முக்கண் மூர்த்தி அல்லவா !

450. கிளரும்திங்கள் வாள்முக மாதர்பாடக் கேடிலா
வளரும்திங்கள் சூடியோர் ஆடல்மேய மாதவன்
தளிருங்கொம்பு மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண் ணூல் மார்பன்என் உள்ளத்துள்ளான் அல்லனே.

தெளிவுரை : கிளர்ந்து எழுந்து நிறைவடைந்த சந்திரனைப் போன்ற ஒளி திகழும் முகம் கொண்டு மேவும் உமாதேவியார் பண் இசைத்துப் பாட குறைவிலாத தன்மையில் வளரும் பாங்குடைய பிறைச் சந்திரனைச் சூடி, ஆடலை மேவும் பெருந்தவத்தினராகிய ஈசன், தளிரும் காம்புகளும் தேன் துளிர்க்கும் மலர் மாலைகளும் சூழ விளங்கும் சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப் பரமன் ஒளிர் விடுகின்ற முப்புரி நூலை அணிந்து மேவும் திருமார்பினராய், என் உள்ளத்தில் இருப்பவர் அல்லவா !

451. சூழ்ந்ததிங்கள் வாள்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோர்ஆடல்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்
ஆழ்ந்த அரக்கன் ஒல்கஅன்று அடர்த்தஅண்ணல் அல்லனே.

தெளிவுரை : திங்களைப் போன்ற ஒளி மிக்க முகம் கொண்டு திகழும் உமாதேவியார் பண் இசைத்துப் பாட, சடை முடியில் பிறைச் சந்திரனைச் சூடி, ஆடல் புரியும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், வயல் வளம் நிறைந்த சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், கயிலையாகிய பெரிய மலையைத் தன் திருப்பாத விரலால் ஊன்றி இராவணன் நலியுமாறு அடர்த்தியவர் அல்லவா !

452. தனிவெண்திங்கள் வாள்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேல் அந்தணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.

தெளிவுரை : தனிப் பெருமை உடைய வெண் திங்கள் போன்ற ஒளி திகழும் முகப்பொலிவு உடைய உமாதேவியார், பண் இசைத்துப் பாட, தாழ்ந்து விளங்கும் சடையின்கண் பிறைச் சந்திரனைச் சூடி, ஆடல் மேவும் தொன்மையராகிய ஈசன், அழகு பொருந்தியவண்ணம் திகழும் சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான், பிரமனும் திருமாலும் காண முடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வன் அல்லவா !

453. வெள்ளைத்திங்கள் வாள்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோர் ஆடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தாற்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.

தெளிவுரை : வெண்திங்கள் போன்று ஒளி திகழும் திருமுகப் பொலிவுடைய உமாதேவியார் பண் இசைத்துப் பாட, சடை முடியில் பிறைச் சந்திரனைச் சூடி, ஆடல் மேய ஈசன், விழைவுடன் வீற்றிருப்பது சிற்றேமம் ஆகும். அப்பெருமான், பௌத்தர் சமணர் ஆகியோரைப் படைத்தும், அவர்க்குத் தோன்றாதவராய் ஆங்கு மறைந்து விளங்குபவர் அல்லவா !

454. கல்லில் ஓதமல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய இன்தமிழ் நவிலுஞான சம்பந்தன்
செல்வ னூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவார் அல்லல்இன்றி வாழ்வரே.

தெளிவுரை : கற்களால் ஆகிய மதிலில் கடலலையின் ஓதம் விளங்கும் காழி நகரில், நல்லவை நவிலும் இனிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன், செல்வனாகிய ஈசன் வீற்றிருக்கும் சிற்றேமம் என்னும் தலத்தை, இத்திருப் பதிகத்தை, நாவினால் ஓதவல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

301. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

455. சந்த மார்முலை யாள்தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யார்அடி என்மனத்து உள்ளவே.

தெளிவுரை : நறுமணம் கமழும் வனப்புடைய உமாதேவியாரை ஒரு கூறாக உடைய ஈசன், திருவெண்ணீற்றைத் திருமேனியில் குழையப் பூசிக் காழிப் பதியில் மேவும் எம் தந்தையாவார். அவருடைய திருவடிகள் என்னுடைய மனத்தில் நன்கு பதிந்துள்ளன.

456. மானி டம்உடை யார்வளர் செஞ்சடைத்
தேநி டங்கொளும் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளும் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டேன் உச்சியில் நிற்பரே.

தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்திய ஈசன், சிவந்த சடை முடியின் மீது, தேன் துளிர்க்கும் கொன்றை மாலையைத் தரித்து விளங்குபவர், மயானத்தில் இருந்து ஆடுகின்ற, வயல்சூழ் காழியில் மேவும் அப்பெருமான், என் உடலின்கண் விளங்கி உயர்ந்த தன்மையில் ஓங்கி இருப்பவர் ஆவார்.

457. மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளரவுஆட்டும் படிறனார்
கைகொள் மான்மறி யார்கடற் காழியுள்
ஐயன்அந் தணர்போற்ற இருக்குமே.

தெளிவுரை : தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இரங்கி, மை போன்ற கரிய நஞ்சினை அருந்தி நீல கண்டராகிய சிவபெருமான், வானில் விளங்குகின்ற சந்திரனைச் சடை முடியில் சூடிப் படம் கொண்டு ஆடுகின்ற அரவத்தைத் தரித்து ஆட்டுகின்ற சதுரப்பாடு உடையவர். அப்பெருமான், இளசை பொருந்திய மானைக் கரத்தில் ஏந்திக் காழிப் பதியில் மேவும் தலைவராய், அந்தணர்கள் போற்ற வீற்றிருப்பவர்.

458. புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார்சடை வைத்தவர் காழியுள்
பொற்றொடி யோடுஇருந் தவர்பொற் கழல்
உற்ற போதுடன் ஏத்தி உணருமே.

தெளிவுரை : பாம்பு, பூக்கள், வன்னிப் பத்திரம் ஆகியவற்றை நீண்டு விளங்கும் சடை முடியில் வைத்த சிவபெருமான், காழியில் உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவர். அப் பெருமானுடைய பொன் போன்ற சிறப்புடைய கழலை, அதற்கு உரிய மலர்களால் தூவிப் போற்றி வழிபட்டும், தியானம் செய்தும் நல்லருள் பாங்கினை உணர்ந்து கொள்வீராக.

459. நலியும் குற்றமும் நம்முடல் நோய்வினை
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யார்அடி போற்றுமே.

தெளிவுரை : மனத்தின்வழி உண்டாகும் குற்றமும், உடலின்கண் நேரும் பிணியும், நம்மை வருத்தாது விலக வேண்டுமாயின், வேள்வி புரிந்து துன்பத்தை நீக்கவல்ல அந்தணர்கள் விளங்கும், காழியில் வீற்றிருக்கும் கங்கை தரித்த செஞ்சடை உடைய சிவபெருமான் திருவடியைப் போற்றுக.

460. பெண்ணொர் கூறினர் பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாயஅடிகள் சரிதையே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; பேய்க் கணங்கள் சூழ நின்று ஆடுபவர்; பண்ணுடன் பொருந்திய பாடல்களைப் பாடும் திருவேடத்தைக் கொண்டவர்; மூன்று கண்களை உடையவர். இவை யாவும் காழியில் வீற்றிருக்கும் அண்ணலாகிய அப்பெருமானின் புகழ் விளங்கும் தன்மையதாகும்.

461. பற்று மானும்மழுவும் அழகுற
முற்றும் ஊர்திரிந்து பலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுள்
பெற்றம் ஏறது உகந்தார் பெருமையே.

தெளிவுரை : திருக்கரத்தில் பற்றி மேவும் மானும் மழுவும் அழகுற விளங்க, ஊர்தொறும் திரிந்து பலி ஏற்க விழையும் ஈசன், வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்த மறையவர்கள் விளங்குகின்ற காழிப்பதியில், இடப வாகனத்தில் உகந்து அமர்ந்திருப்பவர். இது அப்பெருமானுக்குரிய பெருமை ஆகும்.

462. எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
அடர்த்து உகந்தருள் செய்தவர் காழியுள்
கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.

தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த் தெடுத்த இராவணனுடைய முடியும் தோளும் நெரியுமாறு அடர்த்தி அருளும் செய்த சிவபெருமான், வண்ணக் கொடிகளும் தோரணங்களும் விளங்குகின்ற காழியின் திருக்கோயிலில் உமாதேவியை உடனாகக் கொண்டு இன்புற வீற்றிருப்பவர் ஆவார்.

463.காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
மாலும் நான்முகன் றானும் வனப்புற
ஒல மிட்டுமுன் தேடி உணர்கிலாச்
சீலம் கொண்டவன் ஊர்திகழ் காழியே.

தெளிவுரை : காலனின் உயிரை வீழ்த்திய ஈசனின் திருவடியைத் திருமாலும் நான்முகனும் வனப்புறும் தோற்றத்தினராய்த் தேடியும் காணாதவர் ஆயினர். அத்தகைய சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருக்கும் ஊரானது, பெருமையுடன் திகழும் காழியாகும்.

464. உருவ நீத்தவர் தாமும் உறுதுவர்
தருவல் ஆடையி னாரும் தகவிலர்
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி யேஅடைந்து உய்ம்மினே.

தெளிவுரை : ஆடைகளைப் புறக்கணித்தும் சேர்த்தும் விளங்கும் சமணரும் சாக்கியரும் தகைமையற்றவர்கள். உமக்கு நல்ல செயல் கை கூடுதல் வேண்டுமானால், காழியுள் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடியை அடைந்து, வழிபட்டு உய்தி பெறுமின்.

465. கானல் வந்துல வும்கடற் காழியுள்
ஈனம்இல்லி இணையடி ஏத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மானம் ஆக்கும் மகிழ்ந்துரை செய்யவே.

தெளிவுரை : கடற்கரைச் சோலையில் குளிர்க் காற்று வீசும் காழியுள், எத்தன்மையான குறையும் இல்லாத பரம் பொருளாகிய ஈசன் வீற்றிருக்க, அப்பெருமானின் திருவடியை ஏத்திடும் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகமானது பெருமை உடையதாகும். இதனை மகிழ்ந்து உரைப்பீராக.

திருச்சிற்றம்பலம்

 
மேலும் மூன்றாம் திருமறை »
temple news
302. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர் ... மேலும்
 
temple news
348. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் திருச்சிற்றம்பலம் 967. ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனல்கங்கையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar