பதிவு செய்த நாள்
31
மே
2016
11:05
புதுடில்லி : கங்கை தீர்த்தத்திற்காக, இனி காசிக்கு போக வேண்டாம்; தபாலில் பார்சல் மூலம், வீட்டிற்கே அனுப்பி வைக்கும் சேவையை, தபால் துறை விரைவில் துவக்க திட்டமிட்டு உள்ளது. புனிதமாக கருதப்படும் கங்கை நதி தண்ணீரை, காசி போன்ற இடங்களுக்கு செல்லும் ஹிந்துக்கள் எடுத்து வருகின்றனர். இதனால், கங்கை தண்ணீரை, பார்சல் மூலம் வழங்க, தபால் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: தபால் துறையின், இ - காமர்ஸ் பிரிவு, பல்வேறு பொருட்களை மக்களுக்கு பார்சல் மூலம் கொண்டு சேர்க்கிறது. பார்சல் சேவை, தற்போது பெரியளவில் வளர்ந்து வருகிறது; வருவாய், 80 சதவீதம் உயர்ந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற இடங்களில் இருந்து, புனிதமான கங்கை நீரை எடுத்து, பார்சல் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.