பதிவு செய்த நாள்
31
மே
2016
11:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் சரவணபொய்கை குளத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டியதால், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கையில் பக்தர்கள் புனித நீராடிய பின், மலைக் கோவிலுக்கு சென்று மூலவரை தரிசிப்பர்.கிருத்திகை, ஆடிக்கிருத்திகை ஆகிய நாட்களில் காவடிகள் எடுத்துவரும் பக்தர்கள், சரவணபொய்கையில் நீராடி, காவடிகளை கழுவி பூஜை செய்த பின், மலைக் கோவிலுக்கு சென்று காவடிகள் செலுத்துவர்.
மொட்டை அடிக்கும் பக்தர்கள், குளத்தில் குளித்த பின், மலைக்கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடனை தீர்ப்பர். சிறப்பு வாய்ந்த சரவணபொய்கையை இரு மாதங்களுக்கு முன், முன் அறிவிப்பு இல்லாமல் கோவில் நிர்வாகம், குளத்தின் ஏழு கதவுகளையும் பூட்டியது. இதனால், காவடிகள், மொட்டை அடிக்கும் பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். மாதம்தோறும் கிருத்திகைக்கு, நாங்கள் குடும்பத்துடன் முருகன் கோவிலுக்கு வந்து தரிசிப்போம். முன்னதாக, திருக்குளத்தில் புனித நீராடிய பின்னர் தான், படிகள் வழியாக நடந்து செல்வோம். திருக்குளம் பூட்டப்பட்டதால், புனித நீராட முடியவில்லை. ஆர்.செல்லம்மாள், கே.கே., நகர், சென்னை.
பக்தர்கள் குளத்தில் குளிக்கும்போது, இறப்பு ஏற்படுவதை தடுக்க, கோவில் குளத்தில் யாரும் இறங்காத வண்ணம், சுற்றுச்சுவர் அமைத்து, கதவுகளுக்கு பூட்டு போட்டு பூட்ட வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆகையால் தான் திருக்குளம் பூட்டப்பட்டது.பழனி, மேலாளர், திருக்கோவில், திருத்தணி.