பதிவு செய்த நாள்
31
மே
2016
11:05
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வேதவல்லி தாயாருக்கு இன்று முதல் தங்க தாமரைகளால் அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை நடத்தப்படுகிறது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள ÷ வதவல்லி தாயாருக்கு சேவார்த்திகளால், 108 தங்கத்தாமரை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 106 தாமரைகள் வெள்ளி யால் தயாரிக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டு உள்ளது. இரண்டு தாமரை தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. திருமலையில் ஏழுமலையானுக்கு நடக்கும் அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை போல், இங்கும் செய்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது. புதிய அமைச்சரவை பதவியேற்பிற்குப் பின், இந்து சமய அற நிலையத்துறை இந்த அர்ச்சனைக்கு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, வேதவல்லி தாயாருக்கு அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சேவார்த்திகளால் செய்து கொடுக்கப்பட்ட 108 தங்கத்தாமரைகளால், வேதவல்லி தாயாருக்கு அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை, செவ்வாய்தோறும் மாலை, 4:00 மணி முதல் இரவு, 7:30 மணி வரை நடக்கும். முதன் முறையாக, இந்த அர்ச்சனை இன்று நடக்கிறது. இதில், பங்கேற்க கட்டணம், 300 ரூபாய். அர்ச்சனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்’ என்றார். – நமது நிருபர் –