பதிவு செய்த நாள்
31
மே
2016
12:05
காத்மாண்டு: மானசரோவருக்கு சென்றுள்ள, 500க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள், நேபாளத்தில் நிலவும் மோசமான வானிலையால், வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இமயமலையில் அமைந்துள்ள, சிவபெருமான் வாழுமிடமாக கருதப்படும், கயிலாயம் – மானசரோவருக்கு, ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள், இந்தியாவிலிருந்து செல்கின்றனர். இவர்கள், நேபாளம் வழியாக, கயிலாயத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தனியார் சுற்றுலா நிறுவனங்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றன. கடந்த மாதம், மானசரோவர் யாத்திரை துவங்கியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, நேபாளத்தில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால், 500க்கும் அதிகமான யாத்ரீகர்கள், மேலே செல்ல முடியாமல் சிமிகோட், ஹில்சா பகுதியில் சிக்கி தவிக்கின்றனர். இதையடுத்து, அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க, நேபாளத்தில் உள்ள இந்திய துாதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் மூலம், யாத்ரீகர்களை மீட்கும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.