பதிவு செய்த நாள்
01
ஜூன்
2016
10:06
திருத்தணி: நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், பூட்டப்பட்டிருந்த திருத்தணி முருகன் கோவில் குளம், நேற்று திறக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலின் சரவணபொய்கை குளம், திடீரென முன் அறிவிப்பின்றி, ஏழு கேட்களும் பூ ட்டப்பட்டன. இதனால், காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் மற்றும் மொட்டை அடிக்கும் பக்தர்கள் சரவணபொய்கையில் புனித நீராடியும், காவடிகள் கழுவி பூஜை நடத்த முடியாமலும் அவதிப்பட்டனர். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தில் தங்களது நேர்த்தி கடனை தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்தான செய்தி, நமது நாளிதழில் படத்துடன் நேற்று வெளியானதையடுத்து, கோவில் நிர்வாகம், சரவண பொய்கையின் ஒரு கேட் திறக்கப்பட்டு, பக்தர்கள் குளத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், குளத்தின் படிகளில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றும் பணியில், கோவில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குளம் மீண்டும் திறக்கப்பட்டதால், பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனையும், புனித நீராடியும் மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர். சரவணபொய்கை குளம் மீண்டும் திறக்கப்பட்டதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருக்குளம் பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.