நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2016 06:06
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா (11ம் தேதி)காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருநெல்வேலியில் நடுநாயகமாக விளங்கும் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆனித்திருவிழா பிரசித்திபெற்றது. தமிழகத்தில் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்துார் தேர்களைப்போல மிகப்பெரிய சுவாமி தேரினை கொண்ட சிவாலயமாகும்.
இங்கு ஆனித்திருவிழா இன்று (11ம் தேதி) காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமி சன்னதிக்கு முன்பாக உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிசேக, தீபாராதனைகள் நடந்தது.பஞ்சவாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆனித்திருவிழாவையொட்டி பத்து நாட்கள் திருநெல்வேலி மாநகரம் களைகட்டிவிடுகிறது. தினமும் காலையும் மாலையும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா மேற்கொள்கின்றனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம் வரும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணியவில் சுவாமியும், அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளுவர். தேரோட்டத்தையொட்டி நெல்லையப்பர் கோயில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் 10 நாட்களிலும் இரவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர் ஆனித்தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகராட்சி திடலில் அரசுப்பொருட்காட்சி நடக்கிறது.