பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
10:06
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே, கோதண்டராமர் கோவிலில், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் விழா நடந்தது.
ராமாயண வரலாற்றில், இலங்கை மன்னன் ராவணன் சீதையை சிறை பிடித்ததை, ராவணனின் தம்பி விபீஷணர் தவறு என கூறி, அரசவையில் இருந்து வெளியேறினார். அங்கிருந்து வான்வழியாக தனுஷ்கோடி வந்தார். அங்கு, இலங்கை சென்று, சீதையை மீட்பது குறித்து தம்பி லட்சுமணர், அனுமான், வானர சேனையுடன் ராமர் ஆலோசனை நடத்தினார். அப்போது விபீஷணர் வருவதை கண்ட லட்சுமணரும், அனுமானும், ஒற்றறிய வருவதாக சந்தேகமடைகின்றனர். உடனே ராமர், அடைக்கலம் தேடி வருவோருக்கு பாதுகாப்பு தருவதே தர்மம் எனக் கூறி, இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து, அவருக்கு புனித நீரை ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டினர். அதை நினைவுக் கூறும் விதமாக, நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர், அனுமானுடன் புறப்பாடாகி, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்ட ராமர் கோவிலில் எழுந்தருளினர். அங்கு, ராமாயண வரலாற்றை கோவில் குருக்கள் வாசித்ததும், தீபாராதனை நடத்தினர். பின், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.