பதிவு செய்த நாள்
16
ஜூன்
2016
02:06
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேரோட்டவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆரூரா...தியாகேசா... என, கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்க கோவில்.இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேரோட்டம். இத்தேர் ஆசியாவிலேயே மிக பெரியது. கடந்த 2010ல், தேரோட்டம் நடைபெற்றது.அதன்பின்,தேர் சீரமைப்புக்காக தேரோட்டம் நிறுத்தப்பட்டது. தேர் சீரமைப்பு பணி முடிந்து,கடந்த ஆண்டு அக்.,26ல், ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.ஆழித்தேரானது, இருபத்தி நான்கரை அடி நீளம்,ஒன்றரை அடி உயரம் கொண்ட இரண்டு அச்சுகளில்,9 அடி விட்டமும்,ஒன்றரை அடி அகலம் உடைய நான்கு இரும்பு சக்கரங்களின் மேல் கலை சிற்பங்களுடன் அமைந்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம்,96 அடி,எடை,300 டன் ஆகும்.
ஆழிதேரோட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம்,26ம் தேதி தியாகராஜசுவாமி,யதாஸ்தானத்தில் இருந்து,ஆயிரக்கால் மண்டபம் என்ற தேவாசிரிய மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, தினமும் தியாகராஜசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கடந்த 14ம்தேதி இரவு அஜபா நடனத்துடன் தேருக்கு தியாகராஜசுவாமி எழுந்தருளினார். அத்துடன்,விநாயகர்,சுப்ரமணியர் ஆகிய இரு சுவாமிகளும் தனித்தனி தேருக்கு எழுந்தருளினர். நேற்று காலை விநாயகர்,சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது.இரண்டு நாட்கள் சிறப்பு பூஜைகளுக்குபின்,இன்று (ஜூன் 16ல்) காலை,7:45 மணிக்கு ஆழித்தேர் ஓட்டத்தை கலெக்டர் மதிவாணன் வடம்பிடித்து துவக்கி வைத்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துவர பின்புறம் புல்டோசர் இயந்திரம் கொண்டு தேர் தள்ளப்பட்டது. நிலையடியில் இருந்து கிளம்பிய ஆழித்தேர், கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக வலம் வந்தது. வழிநெடுகிலும், ஆரூரா... தியாகேசா ... என,ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தியாகராஜசுவாமியை வழிபட்டனர். தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்கு பின்,அம்பாள் தேர்,சண்டிகேஸ்வரர் தேர்கள் வலம் வந்தன. இன்று (ஜூன் 16ல்) இரவு 7:00 மணியளவில் நிலையடிக்கு தேர் வந்தடையும். தேரோட்டத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.திருவாரூர் நகரில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.