அயோத்தி அருகிலுள்ள ஹரிபூர் விஷ்ணு கோவிலில் திருவிழா நடந்தது. நரஹரிதாஸ் என்பவர் அங்கு தினமும் பக்தி கதைகளை சொல்லி வந்தார். ஒருநாள், தான் சொல்வதை பக்தர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதை அறிய விரும்பினார். “நான் நேற்று பாடிய கோவிந்த பட்டாபிஷேக பாடல் யாருக்காவது நினைவிருக்கிறதா? என்று கேட்டார். ஒருவரும் பதிலளிக்கவில்லை. ஆனால், ராம்போலா என்ற அனாதை சிறுவன் அந்த பாடலை ராகத்தோடு பாடி முடித்தான். நரஹரிதாஸ் அவனைத் தன் குழந்தையாக ஏற்று ஆதரவளித்தார். விளையும் பயிர் முளையிலே என்பது போல அச்சிறுவனே பிற்காலத்தில் துளசிதாசர் என்னும் பெயர் பெற்றார். புகழ் மிக்க ராமாயண காவியத்தை இந்தியில் எழுதினார்.