*நான் என்னும் தலைக்கனம் அழியும்போது தான் வாழ்க்கையில் எல்லா தொந்தரவுகளும் முடிவு பெறும். அந்த தலைக்கனம் அழியும் போது கடவுள் தோன்றி விடுவார். *உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக வாழ்வது கூடாது. சொல்லும், செயலுக்கும் ஒற்றுமை காண்பதே நல்ல மனிதனுக்குரிய அடையாளம். *மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின் எல்லா உயிர்களுக்கும் அதிபதியான கடவுளைப் பற்றி அறியும் அறிவு கிடைத்து விடும். *கடவுளின் கருணைக் காற்று எப்போதும் நம் மீது வீசிக் கொண்டிருக்கிறது. மனமாகிய படகின் பாயை மட்டும் விரித்து விட்டால் வாழ்க்கை என்னும் கடலில் தைரியமாக முன்னேறிச் செல்லலாம். *தாயை நம்பும் குழந்தை போல அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கடவுளை வழிபட்டால் அவரை நேரில் காணும் பாக்கியம் உண்டாகும். *கீழான ஆசைகள் மனதில் எழுவதை எண்ணி வருந்த வேண்டாம். கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் மனதிலுள்ள பலவீனமான எண்ணங்களில் இருந்து முற்றிலும் விடுபட முடியும். *படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகில் இருப்பது கூடாது. அதுபோல உலகில் வாசம் செய்தாலும், உலக ஆசைகள் மனதிற்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். *தனியாக இருக்கும் சமயத்திலும் யாருடைய மனம் பாவம் செய்ய அஞ்சுகிறதோ அவனே உண்மையான தர்மவான். அவன் கடவுளின் அன்பிற்கு உரியவனாகி விட்டான் என்று பொருள். *சிப்பிக்கு மதிப்பில்லாவிட்டாலும், அதுவே முத்தின் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. அதுபோல சடங்கு, சம்பிரதாயங்கள் மனிதன் கடவுளை அடைவதற்குத் துணை புரிகின்றன. *வீட்டில் குடியிருப்பவன் விழிப்புடன் இருந்தால் திருடன் கொள்ளையடிக்க முடிவதில்லை. எண்ணத்தில் விழிப்பு இருந்தால் மனதைக் கொள்ளையடிக்க தீய சக்திகள் அஞ்சி நிற்கும். *கோபம் கூடவே கூடாது. கோபம் ஏற்படும் போது அறிவு, தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்ளும். இதனால் பகுத்தறியும் திறன் இல்லாமல் போய் விடும். *கடவுளின் திருநாமத்தை மனம் ஒன்றி ஜெபித்தாலே போதும். பாவம் செய்யும் எண்ணம் மறைந்து விடும். எண்ணம், சொல், செயல் மூன்றும் துõய்மை பெறும். *நினைத்தவுடன் ஒருநாளில் யாருக்கும் ஞானம் வந்து விடுவதில்லை. மரத்தில் பூத்த பூ, கனியாக மாறுவது போல காலம் என்னும் அரிய சக்தியே ஒருவனைப் பக்குவப்படுத்துகிறது. *வெளியுலகத்திற்கு தெரியாது என்று எண்ணி யாருக்கும் துரோகம் நினைக்காதீர். மனசாட்சியை மதித்து நடந்தால் நிச்சயமாக வாழ்வில் வெற்றி உண்டாகும். *தாய்க்கும், தந்தைக்கும் மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். அவர்களைத் திருப்திபடுத்தாமல் தீர்த்த யாத்திரை செல்வதும், தான தர்மம் செய்வதும் பயனற்றதாகும். (மகான் ராமகிருஷ்ணர்)